இந்தியாவின் 'போக்குவரத்து உயிர்நாடியான' இரயில்வேயை, இந்தியா எவ்வாறு நவீனமயமாக்கி வருகிறது? -கண்ணன் கே

இந்தியா 2047-ஆம் ஆண்டிற்குள் ஒரு வளர்ந்த நாடாக உருவெடுப்பதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்திய இரயில்வே துறை வெறும் சாதாரணப் போக்குவரத்து சேவையாக மட்டும் இல்லாமல், வேகம், தரம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு கொண்ட ஒரு நவீன அமைப்பாக மாறி வருகிறது. வந்தே பாரத் இரயில்கள், அதிவேக இரயில் பாதைகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான மேம்படுத்தப்பட்ட இரயில் போக்குவரத்துத் தொடர்பு போன்ற திட்டங்கள், இந்திய இரயில்வே துறை ஒரு புதிய நவீனமயமாக்கல் என்கிற நிலையை அடைந்துள்ளதைக் காட்டுகின்றன.


அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு,  பிரதம மந்திரி கதி சக்தி தேசிய பெருந்திட்டத்தின்கீழ் (PM Gati Shakti National Master Plan) இந்திய இரயில்வே விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2025–26-ஆம் நிதியாண்டில், ₹1.53 லட்சம் கோடி மதிப்பிலான 100 இரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டங்கள் புதிய பாதைகளை அமைத்தல், தண்டவாளங்களை இரட்டிப்பாக்குதல், பல வழிப்பாதைகளை உருவாக்குதல் மற்றும் இதர பணிகளை உள்ளடக்கி, 6,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாதனை அளவிலான விரிவாக்கத்தைக் கொண்டுள்ளன. இந்திய ரயில்வேயை பாதுகாப்பு, வேகம் மற்றும் சேவை ஆகியவற்றில் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது.


இந்தச் சூழலில், இந்திய ரயில்வே துறையின் பரிணாம வளர்ச்சி, முக்கியமான உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.


இந்திய ரயில்வே துறையின் பரிணாம வளர்ச்சி


ஆங்கிலேயர் ஆட்சியால் இந்தியாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த பங்களிப்பாகக் கருதப்படும் இந்திய இரயில்வே, ஒன்றரை நூற்றாண்டிற்கும் மேலாக "நாட்டின் போக்குவரத்து உயிர்நாடியாக" விளங்கி வருகிறது. இது இந்தியாவை சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஒரு ஒருங்கிணைந்த நாடாக மாற்றியுள்ளது.



இந்தியாவின் முதல் பயணிகள் இரயில் 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி போரி பந்தர் (Bori Bunder) முதல் தானே (Thane) வரை 34 கி.மீ தூரம் இயக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரையிலான அதன் வளர்ச்சியை மூன்று முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கலாம்:


சுதந்திரத்திற்கு முந்தைய காலம் (1853–1947): இக்காலக்கட்டம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியது. இந்திய வளங்களை காலனித்துவ ஆட்சியாளர்கள் சுரண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த ரயில்வே வலைப்பின்னல், பின்னாளில் தேசிய உணர்வு வளர மிக முக்கியமானதாக மாறியது. இது சுதந்திரப் போராட்டத்திற்காக மக்களைத் திரட்டும் ஒரு ஊடகமாகச் செயல்பட்டதுடன், மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்திக்கவும் வழிவகை செய்தது.


சுதந்திரத்திற்குப் பிந்தைய விரிவாக்கக் காலம் (1947-2014): சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய ரயில்வே ஒரு தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் பயணித்தது. இதில் முக்கியமாக குறைந்த கட்டணம் மற்றும் அனைவருக்கும் கிடைக்கும் வசதி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் ரயில்வே பாதைகள் விரிவாக்கப்பட்டது. இது சமூக-பொருளாதார ஒருங்கிணைப்பிற்கு உறுதுணையாக இருந்ததுடன், நாட்டின் பெரிய நகரங்களை அனைவரும் எளிதாகச் சென்றடைய வேண்டும் என்ற சமூகக் கடமையையும் நிறைவேற்றியது.


இருப்பினும், காலப்போக்கில், ரயில்களில் அதிகப்படியான போக்குவரத்து, நெரிசல் மிகுந்த தண்டவாளங்கள், பழமையான உட்கட்டமைப்பு மற்றும் இந்திய இரயில்வேக்கும் உலகளாவிய தரத்திற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி ஆகியவை நவீனமயமாக்கலை ஒரு அவசியமான தேவையாக மாற்றிவிட்டன.


மாற்றத்தின் காலம் (2014 முதல் தற்போது வரை): கடந்த பத்தாண்டுகளில், தரமான போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது வெறும் தண்டவாள விரிவாக்கத்தோடு நின்றுவிடாமல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயணிகளின் வசதி ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்துள்ளது.


இந்தக் காலகட்டத்தில் 'தண்டவாளப் பிரிப்பு' என்ற உத்தி பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மெதுவாகச் செல்லும் சரக்கு ரயில்களை அதற்கென ஒதுக்கப்பட்ட தனிப் பாதைகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம், பயணிகள் ரயில்கள் விரைவாகச் செல்ல வழிவகை செய்யப்படுகிறது. மேலும், பழைய ரயில்களை மாற்றுவது மற்றும் 'வந்தே பாரத்' போன்ற அதிநவீன ரயில்களை அறிமுகப்படுத்துவது போன்றவையும் அடங்கும்.


மற்ற முக்கிய முன்னேற்றங்கள்


2017-ஆம் ஆண்டில், விவேக் தேப்ராய் தலைமையிலான நிதி ஆயோக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பல ஆண்டுகளாகத் தனியாகத் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. அதற்குப் பதிலாக, ரயில்வே நிதிநிலை அறிக்கையைப் பொது நிதிநிலைத் திட்டத்துடன் ஒன்றாக இணைத்தது.


– நெடுஞ்சாலைகள், இரயில்வே மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றிற்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டமிடலை எளிதாக்குவதே இந்த இணைப்பின் நோக்கமாகும்.


– இந்த நடவடிக்கையானது, மானியங்கள் போன்ற வருவாய் செலவினங்களிலிருந்து, மூலதனச் செலவினங்களுக்கு மாறுவதைக் குறிக்கிறது. இதன் மூலம், இந்திய இரயில்வேயை ஒரு நீண்டகாலச் சொத்தாகக் கருதி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பல மடங்கு பெருக்கும் அதன் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.


வந்தே பாரத் முதல் அமிர்த பாரத் வரை


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள், இந்திய இரயில்வேயின் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவை, நவீன வசதிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக குளிர்சாதன இரயில்கள் ஆகும். இதில் பயணிகளுக்கான உயர்தர வசதிகள் மற்றும் 'Kavach'  (தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரயில்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடியவை ஆகும். 


பகல் நேர பயணங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் (Vande Bharat) ரயில்கள், தற்போது தரமான இரவு நேரப் பயணங்களுக்காக 'Sleeper' (படுக்கை வசதி) ரயில்களாகவும் தொடங்கப்பட்டுள்ளன. விமானப் பயணத்திற்கு நிகரான ஒரு உயர்தர மாற்றாக இதனை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில், ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் உள்ள ஹவுராவிலிருந்து கௌஹாத்திக்குத் தொடங்கி வைக்கப்பட்டது.


2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம் (Amrit Bharat Station Scheme (ABSS)) என்பது ரயில்வே துறையின் மற்றொரு குறிப்பிடத்தக்க நவீனமயமாக்கல் நடவடிக்கையாகும். ஒரு பயணியின் பயணம் தொடங்கும் இடமான ரயில் நிலையத்திலிருந்தே நவீனமயமாக்கல் தொடங்க வேண்டும் என்ற கருத்தை இது பிரதிபலிக்கிறது. உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைகளை நீக்குவதற்காக, குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள 1300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், அந்தப் பகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கொண்டு வரப்பட்ட ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ (One Station One Product) விற்பனை அங்காடிகள், இப்போது அம்ருத் பாரத் நிலையத் திட்டத்துடன் (ABSS) இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களை நகரின் முக்கிய மையங்களாக மாற்றுவது, 'போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி' (TOD) என்ற கொள்கையைச் செயல்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். இதன் மூலம், இந்தியாவில் போக்குவரத்து மையங்களைச் சுற்றி காணப்படும் நகர்ப்புறச் சிதைவைத் தடுத்து, நகரப் புதுப்பிப்பை  வேகப்படுத்துவதே நோக்கமாக உள்ளது.




அதிவேக ரயில் திட்டம்


இரயில்கள் மற்றும் இரயில் நிலையங்களைத் தவிர, நவீனமயமாக்கல் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் 'புல்லட் இரயில்' (Bullet Train) திட்டம் மற்றும் 2026-27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஏழு புதிய அதிவேக இரயில் வழித்தடங்கள் ஆகும். அந்த வழித்தடங்கள் பின்வருமாறு:


1. மும்பை-புனே


2. புனே-ஹைதராபாத்


3. ஹைதராபாத்-பெங்களூரு


4. ஹைதராபாத்-சென்னை


5. சென்னை-பெங்களூரு


6. டெல்லி-வாரணாசி


7. வாரணாசி-சிலிகுரி


முக்கியமான பொருளாதார, தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப மையங்களுக்கு இடையேயான பயணநேரத்தைக் கணிசமாகக் குறைப்பதற்காக, சுமார் 4000 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய 'வைர நாற்கரப் பாதை' (Diamond Quadrilateral) எனும் அதிவேக இரயில் திட்டத்தை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களையும் வளர்ச்சி மையங்களையும் இணைக்கும் இந்தத் திட்டத்திற்கான திட்டமிடல் பணிகள் 2014-15-ஆம் ஆண்டுக்கான இரயில்வே நிதிநிலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டன.


சுமார் ₹1,08,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் (Mumbai-Ahmedabad High Speed Rail (MAHSR)) திட்டம், இந்தியாவின் இந்த தொலைநோக்குப் பார்வையின் மையப்புள்ளியாக உள்ளது. ஜப்பான் அரசின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டம், இந்தியாவின் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ‘Slab Track System’ எனப்படும் நவீன தண்டவாள முறை, மேம்பட்ட நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் பிரத்யேக கான்கிரீட் மேம்பாலங்கள் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.


இந்தத் திட்டங்கள், வணிகரீதியான தொடர்புகளுக்கு சாதாரண ரயில்களின் வேகம் இனி போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களை மணிக்கு 300 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் இணைப்பதன் மூலம், ஜப்பானின் 'ஷின்கான்சென்' (Shinkansen) புல்லட் ரயில் திட்டத்தைப் போல, இது பொருளாதார வளர்ச்சியில் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த அதிவேக ரயில் திட்டமானது, நவீன காலத்தில் நேரமானது பணத்தைப் போலவே எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை அங்கீகரிக்கிறது. அதிவேக ரயில் என்பது வசதி படைத்தவர்களுக்கான ஆடம்பரம் மட்டுமல்ல; அது ஒரு முக்கியமான பொருளாதாரக் கருவியாகும். 


வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைத்தல்


நவீனமயமாக்கலின் மற்றொரு முக்கிய அம்சம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதாகும். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை ரயில், சாலை மற்றும் வான்வழிப் பாதைகள் வழியாகத் தேசிய வலையமைப்புகளுடன் இணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐசாலை (Aizawl) இணைக்கும் புதிய பைரபி-சைராங் (Bairabi-Sairang) ரயில் பாதை மற்றும் இம்பால், கோஹிமா ஆகிய இடங்களுக்கு நடைபெற்று வரும் ரயில் விரிவாக்கப் பணிகள், 'மலைப்பகுதி பொறியியல்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரு புதிய ஒருங்கிணைப்பைக் குறிக்கின்றன.


வடகிழக்கு பிராந்தியத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் நிலநடுக்க அபாயங்களைச் சமாளிக்க, இந்தத் திட்டம் நீண்ட சுரங்கப்பாதைகள் மற்றும் உயரமான தூண்களைக் கொண்ட பாலங்களை அதிகளவில் பயன்படுத்துகிறது. வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களில் நான்காவதாக ஐசால் (Aizawl) இரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பால், கோஹிமா மற்றும் காங்டாக் ஆகிய நகரங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணைக்கப்பட உள்ளன. ஷில்லாங்கை இணைப்பதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் போக்குவரத்து வசதியால் சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் எளிதாகவும், மலிவாகவும் மாறும் என்றும் இது அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பெரியளவில் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவையும் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியையும் இணைக்கும் வகையில், பாக் ஜலசந்தியின் குறுக்கே 2.07 கி.மீ தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்தாக உயரும் கடல் பாலம் (Vertical Lift Sea Bridge) ஆகும். கடினமான நிலப்பரப்புகளை இணைக்கும் இந்தியாவின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தத் திட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.


இதுவரை இணைப்பு வசதி இல்லாத பகுதிகளுக்கு ரயில் சேவையை வழங்கும் இந்த நடவடிக்கைகள், வெறும் ரயில்வே விரிவாக்கம் மட்டுமல்ல என்றும் இவை நாட்டின் கடைக்கோடி எல்லைப் பகுதிகளையும் நாட்டின் பொருளாதாரத்தோடு இணைப்பதற்கான முக்கியமான முயற்சிகளாகும். இதன்மூலம் நவீனமயமாக்கப்பட்ட ரயில்வே அமைப்பின் நன்மைகள் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. மேலும், போக்குவரத்து இணைப்பு வசதி இல்லாத காரணத்தினால் எந்தவொரு பகுதியும் வளர்ச்சியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.


பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் இடையே சமநிலை தேவை


இருப்பினும், பயணிகள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் தற்போதைய தண்டவாள அமைப்பில் சில சிக்கல்கள் உள்ளன. பயணிகள் ரயில்களும் சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தைப் பகிர்ந்து கொள்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறைந்த அளவிலான பாதையை இரண்டு வகை ரயில்களும் பயன்படுத்துவதால், இரண்டுமே தாமதமாகின்றன.


இரயில் போக்குவரத்தைப் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்கு இரயில் நிலையங்களை மேம்படுத்துவதும், இரயில்களில் வசதிகளைப் பெருக்குவதும் அவசியமானதுதான். இருப்பினும், நேரம் என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த நவீன காலத்தில், வேகம் குறைவாக இருப்பதை வெறும் வசதிகளைக் கொண்டு மட்டும் ஈடுசெய்துவிட முடியாது. வந்தே பாரத் மற்றும் வரவிருக்கும் அதிவேக இரயில் பாதைகள் போன்ற முயற்சிகளும், ஒட்டுமொத்த நவீனமயமாக்கல் திட்டங்களும் வெற்றிபெற வேண்டுமானால், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு திறமையான சமநிலையை உருவாக்குவது அவசியமாகிறது.


இந்த மாற்றத்திற்கான சரியான வழி என்பது, இவ்விரண்டு போக்குவரத்து சேவைகளையும் அவற்றின் செயல்பாட்டிற்கு ஏற்ப தனித்தனியாகப் பிரிப்பதில் தான் உள்ளது. பயணிகள் விரைவாகப் பயணம் செய்வதற்குப் பாதையைச் சீரமைக்க, அதிக எடையுள்ள சரக்கு போக்குவரத்தை பிரத்யேக சரக்கு வழித்தடங்களுக்கு (Dedicated Freight Corridors) மாற்ற வேண்டும். இவ்வாறு அமைப்பைப் பிரிப்பதன் மூலம், பயணிகள் இரயிலின் வேகம் மற்றும் சரக்கு போக்குவரத்தின் திறன் ஆகிய இரண்டையுமே எவ்விதப் பாதிப்பும் இன்றி உறுதி செய்ய முடியும்.


Original Link: How India is modernising railways, the ‘transport lifeline of the nation’


Share:

நாணய மதிப்பு வீழ்ச்சி என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடியின்போது, அந்த நாட்டின் பண மதிப்பு மட்டுமே அனைத்துப் பாதிப்புகளையும் தாங்கும் ஒரு "அதிர்வு தாங்கியாக" இருக்க வேண்டும் என்று வணிகவாத சிந்தனை கொண்ட சிலர் நம்புகின்றனர். மற்றவர்களோ, ஒரு நாட்டின் பண மதிப்பை வேண்டுமென்றே குறைப்பதன் மூலம், ஏற்றுமதியை அதிகரித்து உலகளாவிய சந்தைப் போட்டியாளர்களை வீழ்த்தலாம் என்றும், இது வளமான பொருளாதாரத்தை அடைய ஒரு சுலபமான வழி என்றும் கருதுகின்றனர்.


• வரலாறும் பொருளாதாரக் கோட்பாடுகளும் உணர்த்துவது என்னவென்றால், ஒரு நாட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைவது என்பது தற்காலிகமான ஒன்றாக இல்லாமல் நீண்டகாலத்திற்குத் தொடரும்போது, அதனால் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்காமல் போய்விடும். ஏற்றுமதிக்கான அந்த "போட்டித்திறன்" விரைவாகக் குறைந்து, இறுதியில் பணவீக்கத்தையும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளில் நஷ்டத்தையுமே மிச்சம் விட்டுச் செல்லும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


• பணமதிப்பு வீழ்ச்சியின் ஈர்ப்பு அதன் எளிமையில் அடங்கியுள்ளது. இது ஒரு நாட்டின் பொருட்களை வெளிநாட்டினருக்கு மலிவானதாக மாற்றுகிறது. இருப்பினும், இது பெரும்பாலும் ஒரு 'ஃபாஸ்டியன் பேரத்தைப்' (Faustian bargain) போன்றது. அதாவது, ஒரு தற்காலிக லாபத்திற்காகப் பின்னாளில் பெரும் இழப்பைச் சந்திக்கும் ஒப்பந்தம் ஆகும். பல வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் உண்மை நிலை என்னவென்றால், நாணய மதிப்பு வீழ்ச்சியடைவது ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சியைத் தருவதில்லை. மாறாக, அது மக்களின் வாங்கும் சக்தியையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் கடுமையாகப் பாதிக்கிறது.



• அடிப்படைப் பொருளாதாரக் காரணிகளைவிட, ஒரு நாட்டின் பணமதிப்பு ஏன் மிக வேகமாகவும் அதிகமாகவும் வீழ்ச்சியடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள, ரூடி டார்ன்புஷ் என்பவரின் "Overshooting Model" ஒரு விளக்கத்தை அளிக்கிறது. பொருட்களின் விலைகள் மெதுவாகவே மாறும் (மந்தமானவை), ஆனால் நிதிச்சந்தைகள் மிக வேகமாக மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் நீர்மத்தன்மை கொண்டவை என்றும் விளக்கமளித்துள்ளார். இதன் காரணமாக, பொருளாதாரச் சமநிலையைப் பேணுவதற்காக, குறுகியகாலத்தில் அந்நியச் செலாவணி மாற்று விகிதங்கள் மிகக் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.


Overshooting Model - பணவியல் கொள்கையில் மாற்றம் ஏற்படும்போது, நாணய மாற்று விகிதம் தற்காலிகமாக மாற்றமடைகிறது. பின்னர், படிப்படியாக அதன் நீண்டகால சமநிலைக்கு (long-run equilibrium) திரும்புவதைத்தான் "overshooting" என்கிறோம்.


• ஒரு மத்திய வங்கி தனது நிதிக் கொள்கையை விரிவாக்க முறைக்கு மாற்றும்போது, அந்த நாட்டின் நாணய மதிப்பு நேரடியாக அதன் புதிய நீண்டகால விலையை அடைந்துவிடாது என்கின்றனர். அது முதலில் அந்த அளவைவிட மிகக் கடுமையாகக் கீழே சரிந்து, பிறகு மெதுவாக மீண்டும் உயரும். ஏற்கனவே முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவாக உள்ள ஒரு நாட்டில், இத்தகைய மாற்றம் அந்த நாட்டைவிட்டு மூலதனம் வெளியேறுவதற்கு வழிவகுக்கும் என்றும் இது ஒரு தீய சுழற்சியாக மாறிப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்கின்றனர்.


• இந்தப் போராட்டம் முண்டெல்-பிளெமிங் மாதிரி (Mundell-Fleming Model) மூலம் விளக்கப்படுகிறது. இது "சாத்தியமற்ற மும்மை நிலை" (Impossible Trinity) என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாடு ஒரே நேரத்தில் இந்த மூன்றையும் கொண்டிருக்க முடியாது என்பதை விளக்குகிறது. நிலையான மாற்று விகிதம், தடையற்ற மூலதனப் புழக்கம், மற்றும் ஒரு சுதந்திரமான பணவியல் கொள்கை ஆகியனவாகும். தற்போது நிலவுவதைப் போல நாட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சியடையும்போது, சந்தை விசைக்கு எதிராக அதிகாரிகள் செயல்பட முயன்றால் அவர்கள் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்வார்கள். நாணய மதிப்பைப் பாதுகாக்க வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கும் என்றும் ஒருவேளை நாணய மதிப்பைக் குறைய அனுமதித்தால், அது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா?


• இந்தியப் பொருளாதாரமும் ரூபாயின் மதிப்பும் இதற்கு முன்பே கடுமையான நாணய நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, 2008–09-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி (Global Financial Crisis) மற்றும் 2013-ஆம் ஆண்டில் நடந்த 'Taper Tantrum' ஆகிய நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். இவ்வளவு பெரிய சவால்களையும் கடந்து இந்தியா முன்பைவிட வலிமையாக மீண்டு வந்துள்ளது. உலகளாவிய நிதி நெருக்கடிக்கு பிறகு, பல நாடுகள் தங்களது பொருளாதார மீட்சியை வேகப்படுத்துவதற்காக, தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



Taper Tantrum : அமெரிக்க மத்திய வங்கி தான் வழங்கி வந்த நிதி உதவியைக் குறைக்கப்போவதாக அறிவித்தபோது, இந்தியப் சந்தையிலிருந்து முதலீடுகள் வெளியேறியதால் ஏற்பட்ட ஒரு பதற்றமான சூழல்.



• 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பணப்பரிமாற்ற நிலுவையில் (Balance of Payments (BoP)) பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது. 2026-ஆம் நிதியாண்டிலும் இது தொடர வாய்ப்புள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே வெளிநாட்டு வரிசை முதலீடுகள் (Foreign Portfolio Investment (FPI)) சாதகமாக இருந்தன. மேலும், 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிகர அந்நிய நேரடி முதலீட்டு (Net Foreign Direct Investment) வரத்து எதிர்மறையாகவே உள்ளது. இதன் விளைவாக, நடப்புக் கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit (CAD)) குறைவாக இருந்தபோதிலும், அதைச் சமாளிப்பதற்கான நிதி கிடைப்பது கடினமாகி வருகிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பின்மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


• நிதியியல்ரீதியான நடவடிக்கைகள் (எண்ணெய் விலை நிர்ணயத்தில் மாற்றங்கள் மற்றும் மானியச் சீர்திருத்தங்கள் போன்றவை) மற்றும் பரந்த அளவிலான கொள்கை மாற்றங்கள் (எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், மின் விநியோகத்தை சீரமைத்தல், மின்சாரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வருதல் போன்றவை) தற்போது அவசியமாகத் தேவைப்படுகின்றன.


• லாபத்தை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு செல்லும் போக்கு (Profit Repatriation) அதிகரிப்பதாலும், அதன் விளைவாக நிகர நேரடி அந்நிய முதலீடு குறைவதாலும், இந்தியா புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், நிலையான கொள்கைகளை உறுதிப்படுத்துதல், கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவை அவசியமாகிறது.


Original Link: What is Currency depreciation?


Share:

இந்தியாவில் பருவமழையை எல் நினோ எவ்வாறு பாதிக்கிறது? - பிரியா குமாரி சுக்லா



முக்கிய அம்சங்கள்:


• இந்தியாவின் ஓராண்டு மழையளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மழை, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதப் பருவமழைக்காலத்திலேயே பெய்கிறது. இதில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் அதிகப்படியான மழை பொழிகிறது. இந்த மழையானது நாட்டின் பெரும்பாலான விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது மட்டுமின்றி, குடிநீர் விநியோகம், நீர்மின் உற்பத்தி மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் மிக அவசியமானதாகும். ஒருவேளை மழைப்பொழிவு குறைந்தால், அது பயிர் உற்பத்தி, மின் உற்பத்தி, கிராமப்புற வருமானம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கும் என்கின்றனர்.


• பருவமழை தொடங்குவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) வழங்கும் இந்த ஆரம்பகால முன்னறிவிப்பு, இத்தகைய எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய அரசாங்கங்களுக்கு உதவுகிறது.


• இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள இந்த ஆண்டிற்கான முதல் நீண்டகால முன்னறிவிப்பின்படி, இந்தியா முழுவதும் பெய்யும் பருவமழையின் அளவு சராசரியாக 92 சதவீதம் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால சராசரி அளவு (Long Period Average (LPA)) என்பது 1971-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதப் பருவமழைக் காலத்தில் பெய்த மழையின் சராசரி அளவாகும். இது 87 சென்டிமீட்டர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


• இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் குறைவான மழைப்பொழிவு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த மிகச் சிறந்த மழைக்காலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளிலுமே, இந்தியா தனது நீண்டகால சராசரி மழைப்பொழிவில் (LPA) 108 சதவீதத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.


• சில நேரங்களில், எல் நினோ (El Niño) நிலவும் ஆண்டுகளில்கூட இந்தியா நல்ல பருவமழையைப் பெறுகிறது. உதாரணமாக, 1997-ஆம் ஆண்டு எல் நினோ பாதிப்பு இருந்தபோதிலும், 100%-க்கும் அதிகமான மழையைப் பெற்றது. அதேபோல், 2023-ஆம் ஆண்டும் ஒரு எல் நினோ ஆண்டாக இருந்தபோதும், 95% மழைப்பொழிவு பதிவானது. இருப்பினும், எல் நினோ பாதிப்பு இருக்கும் காலங்களில் இந்தியாவில் மழையின் அளவு குறையவே வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


• இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்  மாதத்தில் அந்த ஆண்டிற்கான முதல் பருவமழை முன்னறிவிப்பை வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து, மே மாதத்தில் இரண்டாவது முன்னறிவிப்பையும்  வெளியிடுகிறது.  இதில் நாட்டின் எந்தெந்தப் பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் மற்றும் ஒவ்வொரு மாதமும் மழைப்பொழிவு எவ்வாறு இருக்கும் என்பது போன்ற விரிவான தகவல்களையும் வழங்குகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• எல் நினோ தெற்கு அலைவு (El Niño Southern Oscillation (ENSO)) என்பது தென் அமெரிக்காவிற்கு அருகிலுள்ள கிழக்கு பசிபிக் பெருங்கடல் அவ்வப்போது வெப்பமடைவதையோ அல்லது குளிர்ச்சியடைவதையோ குறிப்பதாகும். இது உலகளாவிய வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இதன் மிக முக்கியமான தாக்கம் பருவமழை (Monsoon) பொழிவில் காணப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வழக்கத்தைவிட அதிகமாக வெப்பமடையும் எல் நினோ (El Niño) காலக்கட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தில் பெய்யும் மழையின் அளவு குறைகிறது.


• எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் கடல் மட்டத்தின் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பதைக் குறிக்கிறது. இது இந்தியாவில் பருவமழை குறைவதற்குக் காரணமாக அமைகிறது. இதற்கு நேர்மாறான 'லா நினா' (La Niña) காலக்கட்டத்தில், அதே பகுதியில் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாகக் குளிர்ச்சியடையும் என்றும் இது இந்தியாவில் பருவமழைப் பொழிவை அதிகரிக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. இவை தவிர, கடல் நீர் வெப்பநிலை சராசரியாக இருக்கும் நிலையை 'நடுநிலைத் தன்மை' (Neutral phase) என்று குறிப்பிடுகின்றனர். இந்த மூன்று நிலைகளையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ‘எல் நினோ தெற்கு அலைவு (El Niño Southern Oscillation (ENSO))’ என்றும் குறிப்பிடுகின்றனர்.




Original Link: How El Nino impacts monsoon in India? 


Share:

பாக்சைட் : அதன் பரவல், பயன்பாடுகள் மற்றும் ஒடிசாவில் பழங்குடியினரின் எதிர்ப்பு. -ரோஷ்னி யாதவ்

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் பாக்சைட் சுரங்கத் திட்டம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்கள், இந்தக் கனிமத்தை மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் பாக்சைட்டின் கலவை மற்றும் பரவல் என்ன? அலுமினிய உற்பத்தியில் அது என்ன பங்கு வகிக்கிறது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளது.


தற்போதைய செய்தி


சில நாட்களுக்கு முன்னர், ஒடிசாவின் ராயகடா மாவட்டத்திலுள்ள காஷிபூருக்கு அருகே, பழங்குடியின கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று 40 காவலர்களும் 25 கிராம மக்களும் காயமடைந்தனர். இந்த வன்முறைக்கு, சிஜிமாலி பாக்சைட் சுரங்கத்திற்குச் செல்லும் 3 கிலோமீட்டர் நீளமுள்ள அணுகுசாலை அமைக்கும் பணி  மேற்கொள்ளப்பட்டதே முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


வனவாசிகளின் சாலைக்கு எதிரான எதிர்ப்பு, 2023ஆம் ஆண்டு சுரங்கம் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு ஏலம் மூலம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து, பாக்சைட் திட்டத்திற்கு எதிராக அவர்களின் நீண்டகாலமாக அடங்கியிருந்த அதிருப்தியை பிரதிபலிக்கிறது. இந்த சூழலில், பாக்சைட்டைப் பற்றி – அதன் கலவை, பரவல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றைப் பார்ப்போம்.


முக்கிய   அம்சங்கள்:


1. பாக்சைட் என்பது ஒரு அலுமினியம் நிறைந்த பாறை ஆகும். இதில் நீரேற்றப்பட்ட அலுமினியம் ஆக்சைடு முக்கிய அங்கமாகவும், இரும்பு ஆக்சைடு, சிலிக்கா மற்றும் டைட்டானியா ஆகியவை சிறிய அங்கங்களாகவும் பல்வேறு விகிதங்களில் உள்ளன.


2. பாக்சைட் தாதுவில் இரும்பு ஆக்சைடு ஹீமடைட் அல்லது கோய்தைட்  வடிவில் காணப்படுகிறது. சிலிகா களிமண் (clay) மற்றும் சுதந்திர குவார்ட்ஸ்   வடிவில் உள்ளது. டைட்டேனியா லீகோக்சீன் அல்லது ரூடைல் வடிவில் காணப்படுகிறது.


3. பாக்சைட் என்பது அலுமினியத்தின் முக்கியத் தாதுவாகும். அலுமினியம், நவீனத் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான இரும்பு அல்லாத உலோகங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இது தீக்களிமண் மற்றும் வேதியியல் தொழில்களுக்கு  பயன்படும் ஒரு  முக்கியத்  தாதுவும் ஆகும்.


பாக்சைட்டின் பரவல் (Distribution of Bauxite)


1. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2023-ன் படி, மாநில வாரியாக, நாட்டின் பாக்சைட் வளத்தில் ஒடிசா மட்டும் 41% பங்களிக்கிறது. அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் (20%), ஆந்திரப் பிரதேசம் (12%), குஜராத் (8%), ஜார்க்கண்ட் (6%), மகாராஷ்டிரா (5%) மற்றும் மத்தியப் பிரதேசம் (4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


2. முக்கிய பாக்சைட் வளங்கள் ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிழக்குக் கடற்கரை பாக்சைட் பகுதிகளில் அதிகமாக உள்ளன. குறிப்பாக, 2022 மற்றும் 23-ஆம் ஆண்டுகளில், ஒடிசா மொத்த உற்பத்தியில் 73% பங்களித்து. ஒடிசா முக்கிய பாக்சைட் உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவெடுத்தது.

3. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2023-ன் படி, உலக பாக்சைட் இருப்பு 31 பில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாக்சைட் இருப்பு கினியா (24%), வியட்நாம் (19%), ஆஸ்திரேலியா (16%), பிரேசில் (9%), ஜமைக்கா (6%), இந்தோனேசியா (3%) மற்றும் சீனா, இந்தியா & ரஷ்யா (தலா 2%) ஆகிய நாடுகளில் அமைந்துள்ளது.


4. BGS உலக கனிம உற்பத்தி, 2018-2022 அறிக்கையின்படி, கினியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து மொத்த உற்பத்தியில்  51% (கினியா 26% மற்றும் ஆஸ்திரேலியா 25%) என்ற அளவில் தங்களது பங்களிப்பை வழங்குகின்றன. இரண்டு நாடுகளும் முன்னணி உற்பத்தியாளர்களாக உள்ளன. இதனைத் தொடர்ந்து சீனா (19%), பிரேசில் (9%), இந்தோனேசியா (7%) மற்றும் இந்தியா (6%) ஆகிய நாடுகள் உள்ளன.

பாக்சைட்டின் பயன்கள்


1. பாக்சைட் முதன்மையாக 'பேயர் செயல்முறை' (Bayer process) வாயிலாக அலுமினாவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியத் தொழில் துறையானது, குறைந்தது 40% அலுமினியம் ஆக்சைடு (Al2O3) கொண்ட பாக்சைட்டையே பயன்படுத்துகிறது. இருப்பினும், காஸ்டிக் சோடாவில் கரையும் தன்மை மற்றும் சிலிக்கா அற்ற நிலை போன்ற பிற பண்புகளைப் பொறுத்து, ஏற்ற கலவையின் மூலம்  சிறிதளவு தரம் குறைந்த வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன.


2. எஃகுத் தொழிலில், ஃபுளோரைட்டிற்குப் பதிலாக பாக்சைட் கசடு திருத்தியாகப் (slag corrector) பயன்படுத்தப்படுகிறது.


அலுமினியம்


1. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரும்பு அல்லாத உலோகம் அலுமினியம் ஆகும். இது அதிக கடத்துத்திறன், எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடிய தன்மை மற்றும் அதிக அளவு எதிர்ப்புத்திறன் போன்ற பல பண்புகளைக் கொண்டிருப்பதால், பரந்த அளவிலான பயன்பாடுகளைச் சாத்தியமாக்குகிறது.


2. பூமியின் மேலோட்டில் மிகவும் அதிகமாகக் காணப்படும் உலோகம் அலுமினியம் ஆகும். (எடையின் அடிப்படையில், இது பூமியின் மேலோட்டில் 8% ஆகும்). மேலும், ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கானுக்குப் பிறகு, 3-வது மிகவும் பொதுவான கனிமம் ஆகும்.


3. இந்தியாவில் உள்ள அலுமினியத் தொழில், உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்தியாவின் வளமான பாக்சைட் கனிம வளம், உலகம் முழுவதும் உள்ள மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்தத்துறைக்கு ஒரு போட்டித்  தன்மையை வழங்குகிறது.


4. பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினா (Alumina) சுத்திகரிக்கப்பட்டு அலுமினியம் தயாரிக்கப் பயன்படுகிறது. அலுமினியம் சோடா கேன்கள் முதல் விமானங்கள் வரை அனைத்தையும் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


அலுமினா (Alumina)


பாக்சைட்டிலிருந்து அலுமினா உற்பத்தி செய்யப்படுகிறது. 3 முதல் 3.5 டன் பாக்சைட்டிலிருந்து ஒரு டன் அலுமினாவும், இரண்டு டன் அலுமினாவிலிருந்து சுமார் ஒரு டன் அலுமினியமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியில் மிகவும் அதிகமாகக் காணப்படும் உலோகம் மற்றும் மூன்றாவது பொதுவான கனிமம் அலுமினியம் ஆகும்.


பூமியின் மேலோட்டில் எடையின் அடிப்படையில் 8% அலுமினியம் உள்ளது. இதுவே உலகில் மிகவும் அதிகமாகக் காணப்படும் உலோகமாகவும், ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கானுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக மூன்றாவது மிகவும் பொதுவான தனிமமாகவும் திகழ்கிறது. எஃகுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் 2-வது உலோகம் அலுமினியம் ஆகும். மேலும், எஃகு மற்றும்  நெகிழியை விட இது சுற்றுச்சூழலுக்கு  ஏற்றதாகவும் உள்ளது.


6. இது பொதியிடல், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணுவியல் மற்றும் போக்குவரத்து போன்ற பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது விண்வெளித் தொழில்துறையிலும், இலகு உலோகம் தேவைப்படும் பிற தொழில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மின்சக்திப் பரிமாற்றம், இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளில் இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.


7. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2023-ன் படி, இந்தியாவில் அலுமினிய நுகர்வை அதிகரிக்கக்கூடிய முக்கியத் துறைகள் ஆட்டோமொபைல், மின்சாரம், மின்னணுவியல், ரயில்வே, விண்வெளி மற்றும் பாதுகாப்பு கட்டுமானம், சூரிய ஆற்றல் மற்றும் அலுமினிய பொதியிடல் ஆகியவை ஆகும்.


8. 2022-ல், சீனா உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இருந்தது. இது உலக அலுமினிய உற்பத்தியில் 57% பங்களிப்பையும், உலக நுகர்வில் 55% பங்களிப்பையும் வழங்கியது.


9.  முக்கியமாக, அலுமினியத்துக்கு சில குறைபாடுகளும் உள்ளன. இதன் இழுவை வலிமை மற்றும் இயந்திரப்படுத்தும் திறன் மிதமான அளவில் மட்டுமே உள்ளது. இதனால், பல இறுதி பயன்பாட்டு துறைகளில் இதை நேரடியாக பயன்படுத்துவதில் சில வரம்புகள் உள்ளன. ஆனால், எடை குறைவாகவும் மற்றும் சிறந்த வலிமை கொண்டதனால், எஃகு மற்றும் இரும்பு போன்ற பொருட்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாக உள்ளது.


Original Link: Bauxite in Focus— Distribution, uses, and tribal opposition in Odisha.


Share:

நுகர்வோர் விலைக் குறியீடு, மொத்த விலைக் குறியீடு மற்றும் பணவீக்கம் பற்றி.. -குஷ்பூ குமாரி

நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படையில் கணக்கிடப்பட்ட மார்ச் மாத பணவீக்க விகிதம் 3.4%-ஆக உள்ளது. இது பிப்ரவரி மாத 3.21% அளவிலிருந்து சிறிய அதிகரிப்பாகும். நுகர்வோர் விலைக் குறியீடு (CPI), மொத்த விலைக் குறியீட்டிலிருந்து (Wholesale Price Index (WPI)) எவ்வாறு வேறுபடுகிறது? எட்டு முக்கியத் துறைத் தொழில்களின் குறியீடு (Index of Eight Core Sector Industries) பற்றி இங்கே :


தற்போதைய செய்தி :


நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், மார்ச் மாதத்தில் 3.4 சதவீதமாக  அதிகரித்தது. மேற்கு ஆசியப் போரின் தாக்கம் மிகச் சில குறிப்பிட்ட பகுதிகளிலும், மிகக் குறைந்த அளவிலுமே உணரப்பட்டதே இதற்கு காரணம் என்று, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) திங்களன்று வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.


நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) 3.4% என்ற அளவில் உள்ளது. இது பிப்ரவரி மாதத்தின் 3.21%-ஐ விட சிறிய அதிகரிப்பாகும். இருப்பினும், உணவுப் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தின் 3.47%-லிருந்து அதிகரித்தது, 3.87% என்ற விகிதத்தில் வேகமாகஅதிகரித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


பணவீக்கம் (Inflation) மற்றும் வாழ்க்கைச் செலவில் அது ஏற்படுத்தும் தாக்கம்


1. பணவீக்கம் (Inflation) என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை நிலை உயரும் விகிதத்தைக் குறிக்கிறது. இது பணத்தின் வாங்கும் சக்தியையோ அல்லது உண்மையான வருமானத்தையோ குறைக்கிறது. வேறுவிதமாகக் கூறுவதானால், பணவீக்கம் அதிகரிக்கும்போது, ​​ஒவ்வொரு நாணய அலகும் முன்பு இருந்ததைவிடக் குறைவான பொருட்கள் மற்றும் சேவைகளையே வாங்க முடியும்.


2. அதிகரித்து வரும் பணவீக்கம், குடும்பங்களின், குறைந்த வருமானம் அல்லது நிலையான வருமானம் கொண்ட குடும்பங்களின் நிதி நிலைமையைப் பாதிக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும்போது, ​​அதே பெயரளவு வருமானத்தில் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு குறைகிறது. இதனால் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு பாதிக்கப்படுகிறது.


3. பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும்போது உண்மையான வட்டி விகிதங்களும் பாதிக்கப்படுகின்றன. உண்மையான வட்டி விகிதம் (Real interest rate) என்பது, பெயரளவு வட்டி விகிதத்திலிருந்து பணவீக்க விகிதத்தை கழித்துப் பெறப்படும் மதிப்பாகும். பெயரளவு வட்டி விகிதம் 10 சதவீதமாகவும், பணவீக்கம் 8 சதவீதமாகவும் இருந்தால், உண்மையான வட்டி 2 சதவீதமாக இருக்கும்.


உண்மையான வட்டி = பெயரளவு வட்டி விகிதம் — பணவீக்க விகிதம்


பணவீக்கம் அதிகரிக்கும்போது உண்மையான வட்டி விகிதம் குறைகிறது. இதனால், பணத்தின் மதிப்பு  அதிகரிக்காது என்பதால் மக்கள் சேமிப்பதில் ஆர்வம் குறையக்கூடும். 


நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மொத்த விலைக் குறியீட்டிலிருந்து (WPI) எவ்வாறு வேறுபடுகிறது?


1. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நுகர்வோர் வாங்கும் நூற்றுக்கணக்கான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம், கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிட்டு அளவிடும் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) பணவீக்கம் நாட்டின் முக்கியமான பொருளாதார குறியீடாகத் திகழ்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயிக்கும் வட்டி விகிதங்களின் அளவை இது நேரடியாக பாதிக்கிறது.

பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் ((CPI x+1 – CPI x )/CPI x ))*100 ஆகும்.


நுகர்வோர் விலைக் குறியீடு x = தொடக்க/அடிப்படை ஆண்டான x-ல் CPI-இன் மதிப்பு ஆகும்.


2. பிப்ரவரி மாதத்தில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), 2012-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக மாற்றி, 2024-ஆம் ஆண்டைப் புதுப்பித்த அடிப்படை ஆண்டுடன் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டை  வெளியிட்டது. 2024 தொடர், முன்பு இருந்த 6 பிரிவுகளைக் கொண்ட அமைப்பை மாற்றியுள்ளது. அந்த பழைய பிரிவுகள் பின்வருமாறு: உணவு மற்றும் பானங்கள் பான், புகையிலை மற்றும் மயக்கப்பொருட்கள் உடை மற்றும் காலணி, வீடு, எரிபொருள் மற்றும் ஒளி, பிற கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகள் ஆகும். இது போன்று இருந்த அமைப்பை தற்போதைய 2024-ஆம் ஆண்டு புதிய தொடர் மாற்றியுள்ளது.


3. நுகர்வோர் விலைக் குறியீடு 2024-ல், 358 பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு உள்ளது. இது முந்தைய தொகுப்பைவிட 59 பொருட்கள் மற்றும் சேவைகளைவிட அதிகமான அளவாகும். செலவினமானது படிநிலையின் முதல் மட்டத்தில் 12 பிரிவுகளாகவும், 43 குழுக்களாகவும், 92 வகுப்புகளாகவும், 162 துணை வகைகளாகவும் மற்றும் 358 இனங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வீட்டுவசதி செலவினத்தை (rural housing consumption) முழுமையாக சேர்பதற்காக, முதல்முறையாக கிராமப்புற வீட்டு வாடகை இதில் சேர்க்கப்பட்டுள்ளது.


4. மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)): நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) சில்லறை சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களை (வரிகள் உட்பட அதிகபட்ச சில்லறை விலைகள் (maximum retail prices(MRP)) அளவிடும் அதே வேளையில், மொத்த விலைக் குறியீடு (WPI) மொத்த சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களை அளவிடுகிறது. உதாரணமாக, வெங்காயம் போன்ற ஒரு பொருளின் விலை, அது மொத்த சந்தையிலிருந்து வாங்கப்படுகிறதா அல்லது சில்லறை சந்தையிலிருந்து வாங்கப்படுகிறதா என்பதைப் பொறுத்து மாறுபடும்.


5. நுகர்வோர் விலைக் குறியீட்டு, அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள் வேளாண்மை மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் வகைப்படுகின்றன. மேலும், மொத்த விலைக் குறியீட்டு (WPI) அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) ஒருங்கிணைக்கப்படுகின்றன.


கூறுகள்

எடை (சதவிகிதத்தில்)

முதன்மை கட்டுரைகள்

22.62

எரிபொருள் மற்றும் சக்தி

13.15

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்

64.23


6. மொத்த விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படை ஆண்டு 2011 மற்றும் 2012 ஆகும். மொத்த விலை என்ற கருத்தாக்கம், இதுவரை உள்நாட்டுச் சந்தையில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கும் பொதுவான கருத்தைக் கொண்டிருந்தது. மொத்த விலைக் குறியீட்டின் எடைகள், சம்பந்தப்பட்ட பொருட்களின் மதிப்புக் கூட்டல் அல்லது இறுதிப் பயன்பாட்டிற்கான பங்களிப்புடன் நேரடியாக பொருந்தவில்லை. இதில் மொத்தம் 697 பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இவை பொதுவாக மூன்று முக்கிய கூறுகளாக (components) வகைப்படுத்தப்பட்டுள்ளன.

7. கவனிக்கத் தவறக்கூடாத ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சேவைகளின் விலை மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளளதாகும். உதாரணமாக, முடி திருத்துதல் அல்லது வங்கிப் பரிவர்த்தனை போன்றவற்றை — மொத்த விலைக் குறியீடு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நுகர்வோர் விலைக் குறியீடு  அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.


8. போக்குவரத்து, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை, தனிநபர் பராமரிப்பு போன்ற சேவைகளின் விலை கணிசமாக உயர்ந்தால், சில்லறைப் பணவீக்கம் அதிகரிக்கும், ஆனால் மொத்த விலைப் பணவீக்கத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.


8  முக்கியத் துறைத் தொழில்களின் குறியீடு


1. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின்கீழ் உள்ள பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 8 முக்கியத் தொழில்களின் குறியீட்டை (Index of Eight Core Industries (ICI)) வெளியிடுகிறது. பிப்ரவரி 2025-ல் இருந்த குறியீட்டுடன் ஒப்பிடும்போது, ​​பிப்ரவரி 2026-ல் இது 2.3 சதவீதம் (தற்காலிகமாக) அதிகரித்துள்ளது. இதன் அடிப்படை ஆண்டு 2011 மற்றும் 2012 ஆகும்.


2. முக்கியத் துறைத் தொழில்களின் குறியீடு ஆனது நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கியத் தொழில்களின் உற்பத்தியின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்திறனை அளவிடுகிறது.



3. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்படி, தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (Index of Industrial Production (IIP)) சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் எடையில் 8 முக்கியத் தொழில்கள் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் 28.04 சதவீதத்துடன் அதிகபட்ச எடையைக் கொண்டுள்ளன.


4. இந்த எட்டு துறைகள் பொருளாதாரம் செயல்பட தேவையான அடிப்படை மற்றும் இடைநிலை (basic & intermediate) துறைகள் ஆகும். அதனால், இந்த துறைகளின் வளர்ச்சியைப் பார்க்கும் போது, நாட்டின் பொருளாதார நிலையை அடிப்படையாக புரிந்துகொள்ளலாம். வேறுவிதமாகக் கூறினால், இந்த 8 தொழில்களும் போதுமான வேகத்தில் வளரவில்லை என்றால், பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளும் வளராது.



Original Link: CPI vs WPI and Inflation.


Share:

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மாநிலங்களுக்கு இடையே மறுபகிர்வு செய்ய ஒன்றிய அரசு முன்மொழிகிறது. - வர்கீஸ் கே. ஜார்ஜ், ஷோபனா கே. நாயர்


அரசாங்கமானது அரசியலமைப்புத் திருத்த மசோதா (Constitution Amendment Bill) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) ஆகியவற்றின் வரைவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தென் மாநிலங்களின் மக்களவை இடங்களின் பங்கு குறையும் மற்றும் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 இடங்கள் வரை உயர்த்த இம்மசோதாக்கள் முன்மொழிகின்றன.


மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்த மசோதா (Constitution Amendment Bill) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) ஆகியவற்றின் வரைவுகளில் உள்ள முன்மொழிவுகள் சட்டமாக இயற்றப்பட்டால், கடந்த சில பத்தாண்டுகளாகத் தங்கள் மக்கள்தொகையை கவனமாகக் கட்டுப்படுத்தி வைத்துள்ள மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவப் பங்கு குறையும் நிலை ஏற்படலாம்.

மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதையே இம்மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறும் அரசாங்கமானது, 'அரசியலமைப்பு (131-வது) திருத்த மசோதா' (Constitution (131st) Amendment Bill) மற்றும் 'தொகுதி மறுவரையறை மசோதா' (Delimitation Bill) ஆகியவற்றை விவாதிப்பதற்காக, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 16, 2026 வியாழக்கிழமை அன்று மீண்டும் கூடவுள்ளது.


மறைமுகமான தொகுதி மறுவரையறை


2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே, எவ்விதக் கலந்தாலோசனையும் இன்றி மாநிலங்களுக்கு இடையிலான மக்களவை இடங்களை மறுபகிர்வு செய்யும் திட்டத்தை வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த, பெண்கள் இட ஒதுக்கீட்டை ஒரு முகமூடியாக அரசாங்கம் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. "இந்த மறைமுகமான தொகுதி மறுவரையறை முயற்சியை நாங்கள் எதிர்ப்போம். மேலும், பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள் 100% ஆதரவு அளிக்கிறோம், அதேபோல் மக்களவை மற்றும் சட்டமன்றங்களின் தற்போதைய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குள்ளேயே இந்த பெண்கள் இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்," என்று காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். "மாநிலங்களுக்கு இடையிலான இடப்பங்கீட்டு விகிதங்கள் மாற்றமின்றித் தொடரும் என்று அரசாங்கம் பலமுறை அளித்த உறுதிமொழியைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூட, தற்போதைய முன்மொழிவுகளில் இடம்பெறவில்லை" என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த முன்மொழிவுகள், இடப் பங்கீட்டு முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று மிகத் திட்டவட்டமாக வலியுறுத்துகின்றன. இந்த நோக்கம், அரசியலமைப்புத் திருத்த மசோதாவின் "நோக்கங்கள் மற்றும் காரணங்கள்" குறித்த விளக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்கம் பின்வருமாறு குறிப்பிடுவதாவது, "1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் இடங்களை முடக்கி வைத்திருந்த நடவடிக்கை ஒரு முக்கியக் கொள்கை நோக்கத்தை நிறைவேற்றிய போதிலும், அதன் பிறகு நாட்டின் மக்கள்தொகை சார்ந்த அமைப்பில் (demographic profile) கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் மாநிலங்களுக்குள்ளான குறிப்பிடத்தக்க மக்கள்தொகை இடப்பெயர்வுகள் உட்பட, சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இம்மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன."


தொகுதி மறுவரையறை மசோதாவின் வரைவு பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது. "சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில், மக்களவையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மறுசீரமைப்பது இக்குழுவின் (ஆணையத்தின்) கடமையாகும்."


இந்த முன்மொழிவுகள் சட்டமாக இயற்றப்பட்டால், இந்தி பேசும் மாநிலங்களின் மக்களவை இடங்களின் பங்கு தற்போதைய 38.1 சதவீதத்திலிருந்து 43.1 சதவீதமாக உயரக்கூடும். அதேவேளையில், தென் மாநிலங்களின் இடங்களின் பங்கு 24.3 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாகக் குறையும்.


தற்போதைய அரசியலமைப்பு நடைமுறையின்படி, மக்களவை இடங்கள் மாநிலங்களுக்கு இடையே 1971-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் 2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. "2026-ம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தொடர்புடைய விவரங்கள் வெளியிடப்படும் வரை" இந்த நடைமுறை தொடர்ந்து நீடிக்கும் என்று அரசியலமைப்பின் 82-வது விதி (Article 82) குறிப்பிடுகிறது.


முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தச் சட்டம், மேற்கூறிய விதியை முழுமையாக நீக்கிவிடுகிறது. "பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த மசோதாக்கள், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் இந்தியாவிற்கு எழுதப்பட்ட ஒரு மரண சாசனத்திற்கு ஒப்பானவை," என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கருத்து தெரிவித்தார்.


இம்மசோதாக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் மாநிலங்களுக்கிடையே மக்களவை இடங்களை மறுபகிர்வு செய்யவும், தற்போதுள்ள 550 இடங்கள் என்ற உச்சவரம்பை நீக்கி, மக்களவையின் மொத்த இடங்களை அதிகபட்சமாக 850-ஆக (மாநிலங்களுக்கு 815 மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு 35) உயர்த்தவும், அதேவேளையில், பெண்களுக்கென 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழிகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் 81 மற்றும் 82-வது பிரிவுகளில் இடம்பெற்றுள்ள, மக்களவை இடங்களை மறுசீரமைப்பதற்கான தற்காலிகத் தடையானது (freeze), 2001-ம் ஆண்டில் அப்போதைய பாஜக பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் முன்னின்று உருவாக்கிய அரசியலின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தின் வாயிலாக இந்த ஒப்பந்தம் சட்டவடிவம் பெற்றது. தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை நீக்கிவிட்டு, சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் (தற்போதைய நிலையில், அது 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பாகும்) அடிப்படையில் மக்களவை இடங்களை உடனடியாக மறுபகிர்வு செய்ய முன்மொழிகிறது.


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு மறுசீரமைப்புத் தடையை 2026-ம் ஆண்டிற்குப் பிறகும் மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. அக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இந்தியாவின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ நிலையை உடனடியாக மறுவரையறை செய்வதற்கான நாடாளுமன்ற ஒப்புதலையும் மத்திய அரசு தற்போது கோருகிறது.


“நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு இன்னும் 36 மணி நேரமே உள்ள நிலையில், பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எந்தவொரு அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடத்தப்படாமலும், இந்த மசோதாக்களை நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாமலும், அரசாங்கம் தனது விருப்பங்களை நாட்டின் மீது தன்னிச்சையாகத் திணிக்க முயற்சிக்கிறது. இதற்கும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மாறாக, பாஜக-வின் 2029 தேர்தல் திட்டங்களுக்கான தொகுதி மறுவரையறை குறித்து  அமைந்திருப்பதாக உள்ளது” என்று சிங்வி கூறினார்.


அதேவேளையில், அனுமதிக்கப்பட்ட 815 இடங்களும் முழுமையாக ஒதுக்கப்படுவதாகக் கொண்டால், அனைத்துப் பெரிய மாநிலங்களுக்கும் மக்களவையில் சில கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றபோதிலும், சில மாநிலங்களின் பிரதிநிதித்துவ வலிமை வியத்தகு முறையில் அதிகரிக்கும். 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை விநியோகத்தின் அடிப்படையில் இந்த 815 இடங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டால், உத்தரப்பிரதேச மாநிலம் தனது தற்போதைய 80 இடங்களுடன் கூடுதலாக 58 இடங்களைப் பெற்றுக்கொள்ளும். அதேவேளையில், கேரள மாநிலம் வெறும் மூன்று இடங்களை மட்டுமே கூடுதலாகப் பெற்று, அதன் எண்ணிக்கை 20-லிருந்து 23-ஆக உயரும்.


மக்களவையில் உத்தரப்பிரதேசத்தின் பங்கு 14.73 சதவீதத்திலிருந்து 16.24 சதவீதமாக உயரக்கூடும். அதேசமயம், கேரளத்தின் பங்கு 3.68 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகக் குறையும். பீகார் மாநிலம் தனது தற்போதைய 40 இடங்களிலிருந்து (7.37%) 72 இடங்களாகவும் (8.47%), மகாராஷ்டிரா 48-லிருந்து 78-ஆகவும், தமிழ்நாடு 39-லிருந்து 50-ஆகவும் உயரும் எனினும், தமிழ்நாட்டின் தற்போதைய பங்கு விகிதம் 7.18 சதவீதத்திலிருந்து 5.88 சதவீதமாகக் குறையும்.


Original Link: Centre moots inter-State redistribution of Lok Sabha seats based on 2011 Census.


Share:

ஆண்டுதோறும் ₹1.55 லட்சம் கோடி மதிப்பிலான உணவு வீணடிக்கப்படுகிறது. -ஏ.எஸ். மிட்டல்

ஒரு பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதும், ஒரு பில்லியன் மக்கள் பசியால் வாடுவதும் பொதுவாக இது ஒரு முரண்பாடு மட்டுமல்ல, அது திறமையின்மைக்கும் அக்கறையின்மைக்கும் எதிரான ஒரு குற்றச்சாட்டாக உள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று, உலகம் சர்வதேச கழிவின்மை தினத்தைக் (International Day of Zero Waste) கடைபிடிக்கிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘உணவு வீணாவது (food waste)’ ஆகும். இது காலத்திற்கு ஏற்றது மட்டுமல்லாமல், நம் காலத்தின் மிகவும் வேதனையான முரண்பாடுகளில் ஒன்றான, கோடிக்கணக்கான மக்கள் பசியுடன் உறங்கச் செல்லும்போதும், உலகம் முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவும்போதும் மலைபோல் குவிந்து கிடக்கும் உணவு வீணாவதற்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் ஒரு அவசர அழைப்பாக கருதப்படுகிறது. இந்தியாவில், வீணடிக்கப்படும் இந்த உணவானது, விடியலுக்கு முன்பே எழுந்து பயிர்களைப் பராமரிக்கும் விவசாயிகளின் விளைபொருளும், இந்தத் தொழிலாளர்களில் பலரால் தங்களுக்கு முறையான உணவுகூட வாங்கமுடியாத தொழிலாளியின் கடின உழைப்பும் ஆகும். அவர் விளைபொருட்களைப் பண்ணைகளிலிருந்து சந்தைகளுக்கு விளைபொருளை கொண்டுசெல்ல கையாளப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme(UNEP)) 2024-ம் ஆண்டுக்கான உணவு விரயக் குறியீட்டு அறிக்கையின்படி (Food Waste Index Report), உலகமானது 1.05 பில்லியன் டன் உணவை வீணடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதில், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புக் கிடங்குகளின் போதாமை மற்றும் வீடுகளின் பங்களிப்பு 60%-ஆகவும், உணவுச் சேவைகளின் பங்களிப்பு 28%-ஆகவும், சில்லறை வர்த்தகத்தின் பங்களிப்பு 12%-ஆகவும் உள்ளது. இந்தப் பிரச்சனை தனிநபர்களின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்த உணவு இழப்பின் அளவானது, விநியோகச் சங்கிலிகளில் புதைந்துள்ள அமைப்புரீதியான திறமையின்மைகள், கொள்கையில் ஏற்படும் தோல்விகள் மற்றும் பெரும்பாலும் செழிப்பாக இருப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையாக உணவை வீணாக்குவதை மக்கள் இயல்பான ஒன்றாகப் பார்க்க வைத்துவிட்டன.


இருப்பினும், செழிப்பு என்பது அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை. சுமார் 783 மில்லியன் மக்கள் இன்னும் பசியை எதிர்கொள்கின்றனர். மேலும், 3.1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஆரோக்கியமான உணவை வாங்க இயலாத நிலையில் உள்ளனர். அறுவடைக்குப் பிந்தைய பயிர் இழப்பு மற்றும் உணவு வீணாவதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். ஒரு பில்லியன் டன் உணவு வீணாவதும், ஒரு பில்லியன் பசியால் வாடும் வயிறுகளும் ஒருங்கே இருப்பது ஒரு முரண்பாடு மட்டுமல்ல. இது திறமையின்மையையும், அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகிறது.


உலகளாவிய சூழலில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மிகவும் சங்கடமானதாகவும் உள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) அறிக்கையின்படி, ஆண்டுக்கு ₹1.55 லட்சம் கோடி மதிப்புள்ள, அறுவடைக்குப் பிந்தைய 78 முதல் 80 மில்லியன் டன் பயிர்களும் உணவும் வீணாக்கப்படுவதால், வீணான உணவின் மதிப்பில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 108 மில்லியன் டன் உணவை வீணடிக்கும் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா ஆண்டுக்கு 24.7 மில்லியன் டன் உணவை வீணாக்குகிறது. இது 'பூஜ்ஜியக் கழிவு' (zero waste) எனும் நெறிமுறையான 'மொட்டைனை' (Mottainai) கலாச்சாரத்திற்காக நீண்டகாலமாகப் போற்றப்படும் ஜப்பான், ஆண்டுக்கு வெறும் 5.2 மில்லியன் டன் உணவுக் கழிவுகளை மட்டுமே உருவாக்குகிறது.


தனிநபர் நிலைமையும் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் தனிநபர் வீட்டு உணவு வீணாவது ஆண்டுக்கு 55 கிலோவாக உள்ளது. இது அமெரிக்காவில் 73 கிலோவாகவும், ஜெர்மனியில் 75 கிலோவாகவும் இருப்பதைவிடக் குறைவு. இருப்பினும், இந்தியாவின் நிலைமையை தனித்துவமான அளவில் சோகமாக்குவது என்னவென்றால், உலகளாவிய பசி குறியீட்டில் (Global Hunger Index) 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. மேலும், சுமார் 194 மில்லியன் மக்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. உணவு வீணாவது ஒரு புள்ளிவிவரம் மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைக்காத உணவைக் குறிக்கிறது.


பஞ்சாப் மாநிலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கப் போதுமான உணவை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், இந்த உணவின் பெரும் பகுதி மக்களின் தட்டுகளைச் சென்றடைவதற்கு முன்பே வீணாகிறது. உற்பத்தியைப் பாதிக்கும் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் சேமிப்பு, விநியோகத்தில் உள்ள அபாயகரமான அளவிலான திறமையின்மைகள் ஆகியவற்றால், மாநிலத்தில் உணவு இழப்பும் வீணாவதும் ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. பஞ்சாபில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள், அவை உண்ணப்படுவதற்கு முன்பே சுமார் 20%-ஆக உள்ளன. 2019 மற்றும் 2024-க்கு இடையில், பஞ்சாபில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India (FCI)) சேமிப்புக் கிடங்குகளில் மட்டும் 8,200 டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்கள் வீணாவது, இந்தியாவிலேயே மிக அதிகமானதாகக் குறிப்ப்பிடுகிறது.


பஞ்சாபில் வேளாண் மேம்பாட்டுக்கான பணிக்குழு குறித்த நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி, அறுவடைக்குப் பிந்தைய கையாளுதலில் பல சிக்கல்கள் உள்ளன.  போதுமான மூடிய சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாமை, குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பில் போதுமான முதலீடின்மை, சரியான நேரத்தில் இயந்திரமயமாக்கலுக்கான ஆதரவு இல்லாமை மற்றும் தரம் பிரித்தல், தரப்படுத்துதல், அறிவியல்பூர்வமான தொகுப்பு முறைகள் ஆகியவற்றின் பற்றாக்குறை ஆகும். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பெரும் தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


உணவு வீணாவது என்பது வெறும் மனித துயரம் மட்டுமல்ல, அது ஒரு சூழலியல் பிரச்சனை ஆகும். உணவு இழப்பு மற்றும் வீணாவது, உலகளாவிய வருடாந்திர பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 8-10% பங்களிக்கிறது. உணவு வீணாவதை ஒரு நாடாகக் கருதினால், அது சீனா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் மூன்றாவது நாடாக இருக்கும். குப்பைக் கிடங்குகளில் உணவு மக்கும்போது, ​​மீத்தேன் வாயு வெளியிடப்படுகிறது. இது CO₂-ஐவிட பல மடங்கு அதிக வெப்பமாக்கும் ஆற்றல் கொண்ட ஒரு பசுமை இல்ல வாயு ஆகும்.


நாம் வீணடிக்கும் உணவு, பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கக்கூடியது. வீணாகும் ஒவ்வொரு வாய் அரிசியும் நீர், நிலம், எரிபொருள் மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பு ஆகியவற்றின் இழப்பாகும். ஒரு கிலோகிராம் அரிசி உற்பத்தி செய்ய சுமார் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அந்த அரிசி வீணாகும்போது, தண்ணீரும் வீணாகிறது. குறிப்பாக, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் பஞ்சாபில் இது மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், உணவு இழப்பு மற்றும் வீணாவதை தேசிய காலநிலைத் திட்டங்களில் சேர்ப்பது அவசரத் தேவையாகும்.


உணவு இழப்பைக் குறைப்பது என்பது அறுவடைக்குப் பிறகு பயிர்களைக் கையாள்வது அல்லது மீதமுள்ள உணவை நிர்வகிப்பது மட்டுமல்ல. அது, பொறுப்பான சேமிப்பு மற்றும் நுகர்வு மூலம் உணவை நாம் மதிக்கும் மற்றும் போற்றும் விதத்தை மறுபரிசீலனை செய்வதாகும்.


உணவு வீணாவதை முடிவுக்குக் கொண்டுவர, மனித மாண்பை மையமாகக் கொண்டு, அமைப்புகள், ஊக்கங்கள் மற்றும் விழுமியங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியம். இதற்கான நம்பகமான, மனிதாபிமானமான மற்றும் நீடித்த ஐந்து வழிகள் உள்ளன. அவை,


1. குளிர்பதனச் சங்கிலியை உருவாக்கி இழப்புகளைக் குறைக்கவும் : அமெரிக்கா 65% மற்றும் சீனா 23% பதப்படுத்துவதோடு ஒப்பிடுகையில், இந்தியா தனது விளைபொருட்களில் சுமார் 8%-ஐ மட்டுமே பதப்படுத்துகிறது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு தேசிய குளிர்பதனச் சங்கிலித் திட்டமானது, ஒரு விருப்ப முதலீடாகக் கருதப்படாமல், உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பாகக் கருதப்பட வேண்டும்.


2. உணவு வீணாக்குதலுக்கு எதிராகச் சட்டம் இயற்றுங்கள், பகிர்வதற்குச் சட்டம் இயற்றுங்கள் : பல ஐரோப்பிய நாடுகள், விற்கப்படாத ஆனால் உண்ணக்கூடிய உணவைப் பல்பொருள் அங்காடிகள் அழிப்பதைச் சட்டவிரோதமாக்கியுள்ளன. அதற்குப் பதிலாக, அதனை உணவு வங்கிகளுக்கு நன்கொடையாக வழங்குவதைக் கட்டாயமாக்கியுள்ளன. இந்தியாவில், உபரி உணவை மறுவிநியோகம் செய்ய ஒரு தேசியச் சட்டம் இயற்ற கவனம் செலுத்த வேண்டும். அச்சட்டத்தின் ஆதரவுடன், உணவு வீணாக்குவதற்குப் பதிலாக, நன்கொடை வழங்கும் வணிக நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.


3. ஆரம்பத்திலேயே விவசாயிக்கு அதிகாரம் அளித்தல் : அறுவடைக்குப் பிந்தைய இழப்பு பண்ணை மட்டத்திலிருந்தே தொடங்குகிறது. விவசாய-உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இயந்திரமயமாக்கப்பட்ட உலர்த்தும் கருவிகள், காற்றுப்புகாத சேமிப்புப் பைகள் மற்றும் நகரும் குளிர்பதன நிலையங்கள் வழங்கப்பட வேண்டும். கொறித்துண்ணிகளின் சேதம் மற்றும் பூச்சித் தொல்லைக்கு ஆளாகக்கூடிய, நுண்துளைகள் கொண்ட சணல் சாக்குகளில் தானியங்களைச் சேமிக்கக் கோரும் சணல் பொதிப் பொருட்கள் சட்டம் (Packaging Materials Act), நவீன காற்றுப்புகாத தீர்வுகளை அனுமதிக்கும் வகையில் அவசரமாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.


4. உணவு வீணாவதைக் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள், சேமிப்பைப் பலனளிப்பதாக மாற்றுங்கள் : இந்தியாவில் தற்போது சில்லறை மற்றும் விருந்தோம்பல் நிலையில் உணவு வீணாவதைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த தேசிய தரவுத்தளம் எதுவும் இல்லை. பெரிய உணவு வணிகங்கள், திருமண உணவு வழங்குநர்கள் மற்றும் நிறுவன சமையலறைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உணவு வீணாவதைக் குறியீட்டு வழிமுறையின் அடிப்படையில், கட்டாய உணவு வீணாவதை அளவிடுதல் மற்றும் பொது அறிக்கையிடல் மூலம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.


5. ‘அன்னத்தை (உணவை)’ புனிதமாகப் போற்றும் நெறியை மீட்டெடுங்கள் : இந்தத் துணைக்கண்டத்தில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரமும், உணவைப் போற்றத்தக்க ஒன்றாகக் கருதி வந்துள்ளது. அது பெரும்பாலும் புனிதமானதாகக் கருதப்பட்டது. இதன் பொருள், “அன்ன பிரம்மம்”, உணவு கடவுளுக்குச் சமம் என்று போற்றப்பட்டுள்ளது. இந்தக் கருத்து வெறும் பாரம்பரியம் அல்லது கடந்தகால நினைவுகளைப் பற்றியது மட்டுமல்ல. இதுவரையில் வகுக்கப்பட்டதிலேயே மிகவும் நீடித்த உணவுத் தத்துவம் இதுவே. பள்ளிகள், சமூகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இந்த நெறியை, மத போதனையாக அல்லாமல் ஒரு குடிமைப் பொறுப்பாக மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். விழிப்புணர்விலிருந்து கூட்டு நடவடிக்கைக்கு நகர்ந்து, உணவு வீணாவதைக் குறைப்பதை ஒரு பொதுவான தேசிய முன்னுரிமையாக மாற்றுவோம்.

ஏ.எஸ். மிட்டல், பஞ்சாப் பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், சோனாலிகா ஐடிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.


Original Link: Food worth ₹1.55 lakh crore wasted annually.


Share: