சட்ட அமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட மந்தநிலை -சஷி தரூர்

ஒரு சாதாரண மனிதருக்கு, சட்டரீதியான செயல்முறை என்பது, தீர்வுக்கான தெளிவான எல்லையின்றி நேரமும், பணமும் காணாமல் போகும் ஒரு கருந்துளை போலத் தோன்றுகிறது.


நமது சட்ட அமைப்பின் சிக்கலான பாதைகளில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, நீதிமன்றம் என்பது பெரும்பாலும் நம்பிக்கை குறைந்துவரும் ஓர் இடமாகவே உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, வழக்குப் பட்டியல்களில் வெளிப்படையான வேகத்துடன் முன்னேறும்போது, சராசரி குடிமகனோ, தலைமுறைகள் வரை நீடிக்கக்கூடிய ஒத்திவைப்புகள் மற்றும் நடைமுறைத் தடைகளின் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார். "நீதி தாமதமானால், அது மறுக்கப்பட்டதற்குச் சமம்" என்ற சொற்றொடர் இனி வெறும் எச்சரிக்கை அல்ல, மாறாக அதுவே ஒரு வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாகிவிட்ட ஒரு நிலையை நாம் அடைந்துவிட்டோம்.


இப்போது, ​​கவனம் மாறவேண்டும். அது, தீர்ப்பை வழங்கும் நீதிபதியிடமிருந்து கவனத்தை விலக்கி, குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மக்கள் பக்கம் திருப்ப வேண்டிய நேரம் இது. இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தத்தின் அவசரம் என்பது வழக்கறிஞர்களுக்கான ஒரு தொழில்முறை அக்கறையோ அல்லது கல்வியாளர்களுக்கான ஒரு கோட்பாட்டுப் பயிற்சியோ அல்ல, இது ஒரு அடிப்படை மனித உரிமையின் நெருக்கடியாகும். இது அரசு தனது நியாய வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை முழுமையாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.


வேதனை தரும் காத்திருப்பு


சாதாரண மக்களின் முக்கியப் புகார், நிலுவையில் உள்ள வழக்குகளின் பெரும் சுமையாகும். இந்தச் சுமைதாங்க முடியாததாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. தற்போது ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நமது நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக, இந்த அமைப்பு தனக்குத்தானே எதிராகச் செயல்படுகிறது. ஒரு சாமானிய மனிதனுக்கு, சட்ட செயல்முறை என்பது, தீர்வுக்கான தெளிவான எல்லையின்றி நேரமும் பணமும் காணாமல் போகும் ஒரு கருந்துளை போலத் தோன்றுகிறது. இந்த நிலுவை, சட்டத்தை மீறுபவர்களுக்குத் தைரியமூட்டுகிறது மற்றும் சட்டத்தை மதிப்பவர்களைச் சோர்வடையச் செய்கிறது. ஒரு நிலத்தகராறு தீர்க்கப்பட 20 ஆண்டுகள் ஆகும் போது, சொத்தின் மதிப்பைவிட சட்டக் கட்டணங்களுக்காக அதிகமாகச் செலவழித்த வெற்றியாளர், அந்த வெற்றியை பெரும்பாலும் வெற்று வெற்றியாகவே காண்கிறார்.


இந்திய சட்ட அமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட மந்தநிலை, நீதிக்கான தேடலை ஒரு சகிப்புத்தன்மைச் சோதனையாக மாற்றியுள்ளது. இது "செயல்முறையே தண்டனை" என்ற கடுமையான கருத்துக்கு வழிவகுக்கிறது. பல தேவையற்ற நடைமுறைத் தடைகளும், அடிக்கடி மற்றும் பெரும்பாலும் அர்த்தமற்ற முறையில் வழக்குகளை ஒத்திவைக்கும் கலாச்சாரமும், ஒரு தீர்ப்பு எட்டப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை திறம்படப் பறித்து, வழக்குகளைப் பல பத்தாண்டுகளுக்குத் தேக்கநிலையில் வைத்திருக்கும் ஒரு நிலையை உருவாக்குகின்றன. இந்த அமைப்புரீதியான தோல்வியானது, கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தனிநபர்கள் இறுதியில் விடுவிக்கப்பட்டு, இழப்பீடு ஏதுமின்றி தங்கள் வாழ்க்கை சிதைந்து, வாழ்வின் பொன்னான ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கக்கூடும்.


சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) போன்ற கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின்றியும் பிணை கிடைப்பதற்கான வாய்ப்பின்றியும் நெரிசல் மிகுந்த சிறைகளில் சிக்கித் தவிப்பது குறிப்பாக மனசாட்சியற்ற செயலாகும். ஏனெனில், மேலோட்டமான ஆதாரங்களின் அளவுகோல், சிறைவாசத்தை விதிவிலக்காக அல்லாமல் விதியாகவே ஆக்கிவிடுகிறது. சுதந்திரம் குறித்த அரசியலமைப்பு வாக்குறுதியை நிலைநிறுத்த, நீதித்துறை விரைவாகத் தெளிவான, கட்டாய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். அந்த வழிகாட்டுதல்கள், அரசு ஒரு அர்த்தமுள்ள விசாரணையைத் தொடங்க வேண்டும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கவேண்டும் என்ற உறுதியான காலக்கெடு ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் நிர்ணயிக்க வேண்டும்.


இந்த மாற்றத்திற்கு 21-ம் நூற்றாண்டை முழுமையாகத் தழுவுவது அவசியமாகிறது. நீண்டகாலமாக, நமது நீதிமன்றங்கள் காலனித்துவ காலத்தில் உறைந்து போனது போல இயங்கி வருகின்றன. மலை போன்ற காகிதக் கோப்புகளையும், விசாரணைக்கான புதிய தேதியைக் கேட்பதற்காகவே நூற்றுக்கணக்கான மைல்கள் பயணிக்க வேண்டிய வழக்காடுகளின் நேரடி வருகையையும் அவை சார்ந்திருந்தன. நாம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும், பொருட்களை வாங்கும், மற்றும் தொடர்பு கொள்ளும் முறைகளை மாற்றியமைத்துள்ள டிஜிட்டல் புரட்சி, இப்போது நீதித்துறையையும் வெல்ல வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த வழக்கு மேலாண்மை ஆகியவை ஆடம்பரப் பொருட்கள் அல்ல, மாறாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கலைப்பதற்கு அவசியமான கருவிகளாகும். வழக்கமான நிர்வாகத் தாக்கல் பணிகளை செயற்கை நுண்ணறிவு கையாள்வது, தாமதங்களைக் கண்டறிவது, மற்றும் சட்ட ஆராய்ச்சியில்கூட உதவுவது போன்ற ஒரு அமைப்பை கற்பனை செய்து பாருங்கள். இது, நீதிபதிகள் தங்கள் மன ஆற்றலை வழக்கின் மிக முக்கியமான பகுதிகளில் முழுமையாகச் செலுத்த வழிவகுக்கும்.



அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தன்மைக்கான தேவை


இருப்பினும், ஒரு விரைவு நீதிமன்றம் என்பது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் நமக்கு அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நீதிமன்றமும் தேவைப்படுகிறது. சட்டத்தின் மீதான குடிமக்களின் நம்பிக்கை, அதை விளக்கும் நபர்களில் தங்களைப் பிரதிபலிப்பதாக அவர்கள் காண்கிறார்களா என்பதோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ளது. நீதித்துறை ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட “பழைய சிறுவர்களின் கூடாரம்” (old boys’ club) என்று நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அங்கு, பெண்களுக்கும் விளிம்புநிலை சமூகங்களுக்கும் உள்ள கண்ணுக்குத் தெரியாத தடையானது அப்படியே நீடிக்கிறது. மேலும், பல நீதிபதிகள் முந்தைய தலைமுறை நீதிபதிகளின் உறவினர்களாகவே உள்ளனர். உண்மையான சீர்திருத்தம் என்பது, இந்தத் தடைகளை உடைத்து, நீதித்துறையானது இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதாகும். இது அடையாள அரசியல் பற்றியது அல்ல, இது நீதித்துறையின் தரம் பற்றியது. ஒரு பன்முக மக்கள்தொகையின் வாழ்வியல் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு நீதித்துறையால், நுணுக்கமான மற்றும் அனுதாபமான தீர்ப்புகளை வழங்க முடியும். ஒரு பெண்ணோ அல்லது வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரோ தீர்ப்பு வழங்க அமரும்போது, அவர் சட்டத்தை வளப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டு வருகிறார். மேலும், அது இந்திய சமூகத்தின் நுணுக்கங்களுக்கு ஏற்ப சட்டத்தை மேலும் பதிலளிக்கக்கூடியதாக மாற்றுகிறது.


நீதிமன்றத்தின் அமைப்புக்கு அப்பால், செலவு செய்ய முடியாத தன்மை என்ற பெரும் சிக்கலும் உள்ளது. அதன் தற்போதைய வடிவத்தில், நீதி என்பது ஒரு ஆடம்பரப் பொருளாக உள்ளது. திறமையான வழக்கறிஞரை நியமிப்பதற்கான செலவும், நீண்டகால வழக்குகளின் இதர செலவுகளும், மக்களின் கணிசமான பகுதியினரை திறம்பட விலக்கிவிடுகின்றன. இந்தியா தனது சட்ட உதவி அமைப்பை முழுமையாக சீர்திருத்தி, பணக்காரர்களுக்குக் கிடைக்கும் பிரதிநிதித்துவத்திற்கு இணையான தரத்தை ஏழைகளுக்கும் வழங்கும் ஒரு உயர்தர நிறுவனமாக அதை மாற்ற வேண்டும். அரசால் உணவையும் கல்வியையும் வழங்க முடியுமானால், ஒரு குடிமகன் தனது வாழ்வையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளையும் அது வழங்க வேண்டும்.


மேலும், நமது உச்சநீதிமன்றங்கள் புவியியல்ரீதியாக மையப்படுத்தப்பட்டிருப்பது கடந்த காலத்தின் ஒரு எச்சமாகவே உள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மனுதாரர் இறுதி மேல்முறையீட்டிற்காக தலைநகருக்குப் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தேவையற்ற சுமையாகும். பிராந்திய அமர்வுகள் அல்லது உச்சநீதிமன்றத்திற்கான மேலும் வலுவான காணொளிக் காட்சி விசாரணை முறை, மிக உயர்ந்த மட்டத்திலான நீதியை ஒரு தொலைதூரக் கனவாக இல்லாமல் உள்ளூர் யதார்த்தமாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும்.


இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அடிப்படை சீர்திருத்தத்தின் நம்பிக்கை உள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதுகாத்தல், மக்களுக்கு அச்சமற்ற நடுவராகச் செயல்படும், அதிகாரத்தில் இருப்பவர்களைத் தயக்கமின்றிப் பொறுப்பேற்கச் செய்யும் ஒரு நீதித்துறை தேவை. இந்தச் சுதந்திரமே ஒரு செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இருப்பினும், சுதந்திரத்தைப் பொறுப்புணர்வு பற்றாக்குறையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. முக்கிய வழக்குகளை நேரலையில் ஒளிபரப்புதல் மற்றும் நீதித்துறை நியமனங்களுக்கான தெளிவான அளவுகோல்கள் போன்றவற்றின் மூலம் இந்தச் செயல்முறையைத் திறப்பதன் மூலம், நீதிமன்றம் மக்களுடன் தனக்கிருக்கும் 'சமூக ஒப்பந்தத்தை' மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.


ஒரு அமைப்புரீதியான முழுமையான சீரமைப்பு


நாடு, நீதித்துறை சீர்திருத்தத்தை சிறிய, படிப்படியான மாற்றங்களின் தொடராகக் கருதுவதை நிறுத்தி, அதை ஒரு தேசிய அவசரநிலையாகக் கருதத் தொடங்க வேண்டும். தற்போதைய நிலைமை, ஒவ்வொரு நாளும் சட்டத்தின் ஆட்சியை சுரண்டிக்கொண்டிருக்கும் ஒரு மெதுவான பேரழிவாகும். மக்கள் பிரம்மாண்டமான பேச்சுகளையோ அல்லது சடங்குரீதியான வாக்குறுதிகளையோ எதிர்பார்க்கவில்லை, அவர்கள் செயல்படக்கூடிய, வேகமான மற்றும் நியாயமான ஒரு அமைப்பையே எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு சட்டரீதியான கருத்து வேறுபாட்டையும் ஒரு மரணப் போராட்டமாகக் கருதும் பகைமை மனப்பான்மை கொண்ட கலாச்சாரத்திலிருந்து விலகி, தீர்வு காணும் கலாச்சாரத்தை நோக்கி நாம் நகர வேண்டும். சட்டப் புத்தகத்தில் தேர்ச்சி பெறுவது போலவே கணினித் திரையிலும் தேர்ச்சி பெற்ற நீதிபதிகளும், கட்டணத்தை நீட்டிப்பதைவிட ஒரு வழக்கை முடித்து வைப்பதை மதிக்கும் ஒரு சட்டத் தொழிலும் நமக்குத் தேவை.


‘வளர்ந்த இந்தியா’ 2047-ஐ நோக்கி நாம் நகரும்போது, ஒரு தேசமாக நமது வெற்றியின் அளவுகோல் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது நமது தொழில்நுட்பத் திறமை மட்டுமல்ல, நமது நீதிமன்றங்களில் நீதியை நாடும் நபரை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதுதான். நாம் சீர்திருத்தம் செய்யத் தவறினால், சட்டம் என்பது பலவீனர்களுக்கான கேடயமாக இல்லாமல், வலிமை வாய்ந்தவர்களின் கருவியாக மட்டுமே பார்க்கப்படும் ஒரு எதிர்காலத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும்.


ஆனால் நாம் வெற்றி பெற்றால், நீதியின் தராசு இறுதியாக சமநிலைப்படுத்தப்படும் ஒரு அமைப்பை நம்மால் உருவாக்க முடியும். அதன்மூலம், ஒரே நாளில் கிடைத்திருக்க வேண்டிய ஒரு உண்மைக்காக, எந்தவொரு இந்தியரும் மீண்டும் ஒருபோதும் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிசெய்யலாம். விவாதிப்பதற்கான காலம் கடந்துவிட்டது, குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மாற்றத்திற்கான நேரம் இதுவே.


சசி தரூர், திருவனந்தபுரம் (மக்களவை) தொகுதியின் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ஆவார். இவர், சமீபத்தில் வெளியான ‘இந்து மதத்தை மறுவரையறை செய்த ஞானி: ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை, பாடங்கள் மற்றும் மரபு’ உட்பட 28 புத்தகங்களை எழுதிய, விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் ஆவார்.


Oiginal link:

The institutionalised sluggishness of the legal system 


Share:

இந்தியாவின் கிராமப்புற மாதிரிகளானவை வளர்ச்சி சார்ந்த இராஜதந்திரத்தை வடிவமைக்கின்றன. - வேதா வைத்தியநாதன்

 சமீப ஆண்டுகளில், ஆப்பிரிக்க அரசாங்கங்கள் பலவும், இந்திய சுய உதவிக் குழு (Self-Help Group (SHG)) அடிப்படையிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை ஆராயத் தொடங்கியுள்ளன.


2011-ம் ஆண்டில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியா 'தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம்' (National Rural Livelihood Mission (NRLM)) என்ற திட்டத்தைத் தொடங்கியபோது, ​​ஒரு லட்சிய நோக்கத்துடன் அதை முன்னெடுத்தது. அதாவது, கிராமப்புறக் குடும்பங்கள் சுயதொழில், நிதிசார் உள்ளடக்கம் மற்றும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகளையும் நிலையான வாழ்வாதாரங்களையும் பெறுவதற்கு உதவுவதன் வாயிலாக, பன்முகத்தன்மை கொண்ட வறுமையை ஒழிப்பதே இதன் நோக்கமாகும்.


தற்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டத்தின் தீவிரம், நிலைத்தன்மை மற்றும் விளைவுகள் ஆகியவை, இதைத் தொடக்கத்தில் முன்னெடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் விடவும் வெகுவாக வளர்ந்துள்ளது. சுயஉதவிக்குழுக்களில் (SHGs) உறுப்பினர்களாக உள்ள 2 கோடிக்கும் அதிகமான பெண்கள், தலா ₹1,00,000-க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். மேலும், 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளில் பெண் வங்கித் தொடர்பாளர்கள் (banking correspondents) சேவையாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, 5 கோடிக்கும் அதிகமான பெண்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுள்ளனர். இது 2018-ம் ஆண்டிலிருந்து பெண் தொழிலாளர் பங்கேற்பை கணிசமாக உயர்த்தியுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) திட்டமானது இந்தியாவின் எல்லைகளைக் கடந்து, 'உலகளாவிய தெற்கு' (Global South) நாடுகளிலும், குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் கிராமப்புற வாழ்வாதார முயற்சிகளுக்கு வழிகாட்டியாக வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த இராஜதந்திரத்தை இது நுட்பமான முறையில் வடிவமைத்து வருகிறது.


இந்தியாவின் அமைதியான மாற்றம்


தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) சாதனைகளின் தீவிரம் பிரமிக்க வைப்பதாக உள்ளது. 2025-ம் ஆண்டின் நடுப்பகுதி நிலவரப்படி, இத்திட்டம் 742 மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறதுடன், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது, 90 லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவிக்குழுக்களை ஒருங்கிணைத்துள்ளது, ₹51,368 கோடி அளவிலான மூலதன உதவியை வழங்கியுள்ளது. மேலும், ₹12 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய விரிவாக்கம், இத்திட்டத்தின் வீச்சிலும் சரி, பெண்களை மையமாகக் கொண்ட அதன் அணுகுமுறையிலும் சரி, இதுவரையில்லாத ஒரு விரிவான வளர்ச்சியை இது எட்டியுள்ளது. 2026-27-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ₹19,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், இத்திட்டத்தின் வளர்ச்சிப் பாதை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கிராமப்புற வறுமை ஒழிப்புக்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமாக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தை (NRLM) மற்ற திட்டங்களிலிருந்து தனித்துக்காட்டுவது அதன் பரந்து விரிந்த செயல்பாடுகள் மட்டுமல்ல, அது உருவாக்கியுள்ள சூழலமைப்பும் (ecosystem) ஒரு முக்கிய காரணம் ஆகும். இது கிராமம், தொகுப்பு மற்றும் வட்டார அளவுகளில் ஒருங்கிணைந்த சமூக நிறுவனங்களை இது உருவாக்கியுள்ளது. கடைக்கோடி மக்களுக்குச் சேவைகளை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் சமூக அடிப்படையிலான பணியாளர் குழுக்களை இது அமைத்துள்ளது. மேலும், கிராமப்புறப் பெண்களை முறைசார்ந்த நிதி அமைப்புகளுடன் முழுமையாக இணைத்துள்ளது. சமூக ஒருங்கிணைப்பு, நிறுவனக் கட்டமைப்பு, கடன் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகளாவிய வளர்ச்சி நடைமுறைகளில் இத்திட்டத்தை ஒரு தனித்துவமான மற்றும் நீடித்த முன்னெடுப்பாக மாற்றியுள்ளது.




எல்லைகளுக்கு அப்பால்


வளர்ச்சித் துறையில் ஏற்படும் புதுமைகள், உள்ளூர் அரசியல் பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் அரசின் திறன்களால் வடிவமைக்கப்படுவதால், அவை அரிதாகவே எல்லைகளை எளிதில் கடந்து செல்கின்றன. இருப்பினும், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) வடிவமைப்பு வழக்கத்திற்கு மாறாக எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாகத் தோன்றுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பெருகிவரும் எண்ணிக்கையிலான ஆப்பிரிக்க அரசாங்கங்கள், இந்திய சுய உதவிக் குழு அடிப்படையிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை ஆராயத் தொடங்கியுள்ளன. எத்தியோப்பியா, தான்சானியா, மலாவி, கென்யா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் இந்தியாவிற்கு விரிவான ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டுள்ளன. அவை தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) விளைவுகளை மட்டுமல்லாமல், அது செயல்படுவதற்கான செயல்பாட்டு வழிமுறைகளையும் ஆய்வு செய்தன. இந்தியா எவ்வாறு சுய உதவிக் குழுக்களைப் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வரை விரிவுபடுத்தியது, வங்கிகளுடனான கடன் இணைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன, சமூகங்கள் எவ்வாறு கூட்டமைப்புகளாகத் திரட்டப்பட்டன, பயிற்சி பெற்ற பணியாளர்கள் எவ்வாறு பெருமளவில் பணியமர்த்தப்பட்டனர் மற்றும் பொறுப்புணர்வும் நிதி ஒழுக்கமும் இந்த அமைப்பில் எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். இந்த ஆர்வத்தின் எழுச்சி, உலகளாவிய தெற்கு நாடுகள் வளர்ச்சி சிந்தனையில் ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த நாடுகள் இனி மேற்கத்திய மாதிரிகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை. மாறாக, அவை ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்கின்றன. அவை தங்களின் சொந்தச் சூழல்களுக்கும் உள்ளூர் யதார்த்தங்களுக்கும் பொருந்தக்கூடிய தீர்வுகளில் கவனம் செலுத்துகின்றன.


ஆப்பிரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல காரணங்களுக்காக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தால் (NRLM) ஈர்க்கப்படுகிறார்கள். முதலாவதாக, பெண்களின் கூட்டு அதிகாரமளித்தல் (women’s collective empowerment) மீதான அதன் கவனம், ஆப்பிரிக்கா முழுவதும் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுடன் வலுவாக ஒத்துப்போகிறது. ஒன்றுதிரட்டப்பட்ட சேமிப்புகள், பல கற்றல் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான கடன் ஒழுக்கம் ஆகியவற்றின்மீது கட்டமைக்கப்பட்ட சுய உதவிக் குழு மாதிரியானது, பெண்களின் அமைப்புகளை வலுப்படுத்த ஒரு கட்டமைக்கப்பட்ட அதே சமயம் தளர்வான வழியை வழங்குகிறது. இரண்டாவதாக, தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) கட்டமைப்பு செலவு குறைந்ததாகும், இது பெரும் மூலதன முதலீட்டைச் சார்ந்திருக்காமல், சமூகம் சார்ந்த செயல்முறைகள் மற்றும் பணியாளர் அமைப்புகளை நம்பியுள்ளது. இது, வளப் பற்றாக்குறை உள்ள அரசாங்கங்கள்கூட இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அனுமதிக்கிறது. மூன்றாவதாக, வாழ்வாதாரப் பன்முகப்படுத்தலும் குறுந்தொழில் உருவாக்கமும் மிக முக்கியமானதாக இருக்கும் ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள பெரிய முறைசாரா பொருளாதாரங்களின் யதார்த்தங்களுடன் இந்த மாதிரி நன்கு ஒத்துப்போகிறது. இறுதியாக, இந்த மாதிரி வெறும் ஒரு திட்டமாக இல்லாமல், ஒரு நிறுவனத்தை உருவாக்கும் அணுகுமுறையாக இருப்பதால் இந்த நாடுகளை ஈர்க்கிறது. இது உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது, பொறுப்புடைமையை மேம்படுத்துகிறது மற்றும் நீண்டகால சமூகத் திறனை உருவாக்குகிறது.


இந்தியாவின் வளர்ந்துவரும் வளர்ச்சி ராஜதந்திரம்


இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பு, வரலாற்றுரீதியாக திறன் மேம்பாடு, சலுகை நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) பரவலானது ஒரு தெளிவான பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியா இப்போது தனது சொந்த வளர்ச்சி அனுபவத்தில் வேரூன்றிய சமூகத் துறை நிறுவனங்களை ஏற்றுமதி செய்கிறது. இத்தகைய நிறுவன மாதிரிகள், அதிகார அமைப்புகள், செயல்படுத்தும் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையே நீடித்த இணைப்புகளை உருவாக்கி, சர்வதேச ஈடுபாட்டிற்கு ஒரு தனித்துவமான வழியை வழங்குகின்றன. டிஜிட்டல் ஆளுகை, வேளாண்மை மற்றும் நிதிக் கட்டமைப்பு ஒத்துழைப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. வளங்களை மட்டும் பகிராமல், அறிவையும் நிறுவன நடைமுறைகளையும் பரப்புவதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டுப் புத்தாக்கங்கள் எவ்வாறு தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வடிவமைக்கின்றன என்பதை தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) ஒரு உதாரணத்தை விளக்குகிறது. இந்த உத்வேகத்தை மேலும் வலுப்படுத்த, மாநில வாழ்வாதாரத் திட்டங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஆப்பிரிக்க அரசாங்கங்களை இணைக்கும் ஒரு பிரத்யேக கிராமப்புற வாழ்வாதார அறிவுப் பரிமாற்றத் தளம் மூலம், இந்தியா தனது கிராமப்புற வாழ்வாதார அறிவைப் பகிர்வதை நிறுவனமயமாக்கலாம். இது விரிவாக்கப்பட்ட பயிற்சி, நீண்டகால ஆய்வு உதவித்தொகைகள், களப்பயணங்கள் மற்றும் கூட்டு முன்னோடித் திட்டங்கள் ஆகியவை சுய உதவிக் குழு அடிப்படையிலான முயற்சிகளை உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும்.


தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) என்பது இனி இந்தியாவின் கிராமப்புற மாற்றத்திற்கான கதை மட்டுமல்ல. ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து அதிகரித்துவரும் ஆர்வம், இந்தியா தனது எல்லைகளுக்கு அப்பால் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் தீர்வுகளை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு புதிய முன்மாதிரியை வடிவமைக்கிறது.


வேதா வைத்தியநாதன், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் ஆய்வாளர்.


Original link:


Share: