இந்திரா காந்தி பூட்டோவைச் சந்தித்தபோது : சிம்லா ஒப்பந்தம் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை எவ்வாறு வடிவமைத்தது மற்றும் வரையறுத்தது? -நிகிதா மோத்தா

 50 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் ஒரு முக்கிய அங்கமாக சிம்லா ஒப்பந்தம் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது. இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) நிறுத்தி வைத்தபோது, ​​சிம்லா ஒப்பந்தத்திற்கும் அவ்வாறே செய்வதாக பாகிஸ்தான் கூறியது.


1972-ஆம் ஆண்டு ஜூன் மாதம், திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே பிரதமர் இந்திரா காந்தி சிம்லா வந்து சேர்ந்தார். சந்திப்பு நடைபெறும் அறைகள் குறைபாடற்ற நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர் புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனிலிருந்து அலங்காரப் பொருட்களையும் தளவாடங்களையும் கொண்டு வந்திருந்தார்.


பாகிஸ்தான் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ மற்றும் அவரது மகள் பெனசீர் ஆகியோருடன் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் விளைவாக, 1972 ஜூலை 2 அன்று சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.


50 ஆண்டுகளுக்கும் மேலாகியும், அந்த ஒப்பந்தம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. இருப்பினும், அது கையெழுத்திடப்பட்டது இந்தியா-பாகிஸ்தான் உறவுகளின் பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணமாகவே உள்ளது. கடந்த ஆண்டு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை "நிறுத்தி வைத்தபோது", பாகிஸ்தான், "சிம்லா ஒப்பந்தம் உட்பட, இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையைப் பயன்படுத்தும்" என்று கூறியது.


சிம்லா ஒப்பந்தத்திற்கான பாதை வங்காளதேசத்தின் வழியாக அமைந்தது.


கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் உருவாவதற்கு வழிவகுத்த 1971-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் பின்விளைவுகளிலிருந்து சிம்லா ஒப்பந்தம் உருவானது. இந்தியாவின் இராணுவத் தலையீடு தீர்க்கமானதாக நிரூபிக்கப்பட்டு, தெற்காசியாவின் புவிசார் அரசியல் சூழலையே மாற்றி அமைத்தது.


போருக்குப் பிறகு, பிரதமர் இந்திரா காந்தியும், அதிபர் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ இருவரும் அமைதி நிறைந்த ஒரு புதிய காலகட்டத்தைத் தொடங்க விரும்புவதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தனர். 1972, ஜூன் 28 அன்று, அவ்விரு தலைவர்களும் மலைப்பிரதேசமான சிம்லாவில் சந்தித்துப் பேசினர்.


நல்லிணக்கம் (reconciliation) என்ற பொதுவான இலக்கைக் கொண்டிருந்தாலும், இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டிருந்தன.


1971 போரில் வெற்றி பெற்ற இந்தியா, இராணுவ பலத்தைப் பயன்படுத்தி, இந்தியாவுக்குச் சாதகமான நிபந்தனைகளின் பேரில் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண பிரதமர் இந்திரா காந்தி முயன்றார்.


இதற்கு மாறாக, பாகிஸ்தான் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ சுமார் 93,000 பாகிஸ்தானியப் போர்க் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதிலும், போரின்போது இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிட்டத்தட்ட 5,000 சதுர மைல் நிலப்பரப்பைத் திரும்பப் பெறுவதிலும் முதன்மையாகக் கவனம் செலுத்தினார். எழுத்தாளர் ஃபைசல் கோசா, The Making of Martyrs in India, Pakistan & Bangladesh என்ற தனது நூலில், பாகிஸ்தானின் கொள்கைகளை இந்தியா சந்தேகத்துடனேயே பார்த்ததாக ஆசிரியர் ஃபைசல் கோசா விளக்குகிறார். சீன-இந்திய மோதலின்போது பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள், சீனாவுடனான அதன் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு மற்றும் 1965-ம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் ஆகியவை இதற்குக் காரணங்களாகும். அயூப் கானின் ஆட்சியின்போது பாகிஸ்தான்-சீனா இடையிலான கூட்டுறவை உருவாக்கியதில் பூட்டோ முக்கியப் பங்காற்றினார் என்று கோசா குறிப்பிடுகிறார்.


சிம்லா விமான நிலையத்தில் ரஷ்ய எம்-8 (M-8) ஹெலிகாப்டரிலிருந்து பூட்டோ இறங்கியபோது, ​​இந்திரா காந்தி அவரை நேரில் வரவேற்றதோடு சிம்லா உச்சிமாநாடு தொடங்கியது. பல ஆண்டுகளாக நிலவிய பகைமைக்கு மத்தியிலும், இரு தலைவர்களும் கைகுலுக்கி, பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தினர்.


இருப்பினும், இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதுக்குழுக்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் பயனற்றதாக அமைந்தன. எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல், இருதரப்பு ரீதியாகவே நடத்தப்பட வேண்டும் என்று இந்திரா காந்தி வலியுறுத்தினார். மேலும், ஜம்மு & காஷ்மீரில் தற்போதுள்ள போர்நிறுத்தக் கோட்டை (existing ceasefire line) ஒரு நிரந்தர சர்வதேச எல்லையாக மாற்றவும் அவர் முன்மொழிந்தார். இதற்குப் பதிலாக, காஷ்மீர் பகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, போரின்போது இந்தியா கைப்பற்றிய ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளையும் மீட்டுக் கொடுக்க அவர் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.


உள்நாட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக, பூட்டோ இந்த முன்மொழிவுகளை, குறிப்பாக காஷ்மீர் தொடர்பானவற்றை நிராகரித்தார். கோசா குறிப்பிடுவதுபோல, “காஷ்மீர் விவகாரத்தில் ஒரு திட்டவட்டமான முடிவை எடுப்பதற்கு பூட்டோ மிக நெருக்கமாக இருந்த தருணமானது, ‘அமைதிக்கான ஒரு எல்லைக்கோடு இருக்கட்டும், மக்கள் வந்து செல்லட்டும், அதற்காக நாம் சண்டையிட வேண்டாம்’ என்று அவர் கூறியதுதான்.”


ஜூலை 2 ஒப்பந்தம்


ஒரு தேக்கநிலைக்குப் பிறகு, இந்திரா காந்தியுடன் தனிப்பட்ட முறையில் (நேருக்கு நேர்) சந்திப்பு ஒன்றை நடத்த பூட்டோ முன்மொழிந்தார். அவரும் அந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். தங்கள் குழுவினரை விட்டுவிட்டு, அந்த இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறிய அறைக்குச் சென்றனர். இந்திரா காந்தியும் பூட்டோவும் சந்தித்து, தங்கள் தூதுக்குழுக்களுடன் கலந்தாலோசனைக்காகப் பிரிந்து சென்று, மீண்டும் கூடியபோது, ​​அவர்களது உதவியாளர்கள் தனித்தனி அறைகளில் காத்திருந்தனர். 1972 ஜூலை 2 அன்று, ஒரு தீர்க்கமான சந்திப்பு திட்டமிடப்பட்டது, அது சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) கையெழுத்திடப்பட்டதோடு நிறைவடைந்தது.


இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, “இரு நாடுகளும் தங்களது கருத்து வேறுபாடுகளை இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ அல்லது தங்களுக்குள் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட வேறு ஏதேனும் அமைதியான வழியிலோ தீர்த்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்றுக்கு இறுதித் தீர்வு காணப்படும்வரை, எந்தத் தரப்பும் தன்னிச்சையாக நிலைமையை மாற்றக்கூடாது. மேலும், அமைதியான மற்றும் நல்லிணக்கமான உறவுகளைப் பேணுவதற்குப் பாதகமான எந்தவொரு செயலையும் ஏற்பாடு செய்வதையோ, உதவுவதையோ அல்லது ஊக்குவிப்பதையோ இரு தரப்பினரும் தடுக்க வேண்டும்...” என்று அறிவித்தது.


இரு நாடுகளும் ஒப்புதல் அளித்த 30 நாட்களுக்குள், இந்தியா ஆக்கிரமித்துள்ள 5,000 சதுர மைல் பாகிஸ்தான் பாலைவன நிலத்திலிருந்து இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் நிறுவியதாக கோசா குறிப்பிடுகிறார். “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை என்னவென்றால், 1971 டிசம்பர் 17 முதல் ஜம்மு & காஷ்மீரில் இருந்து வந்த போர்நிறுத்தக் கோட்டை (ceasefire line), இரு தரப்பினரின் நிலைப்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இரு தரப்பினராலும் மதிக்கப்படும் ஒரு முறையான ‘கட்டுப்பாட்டுக் கோடாக’ (Line of Control(LoC)) மாற்றுவதே ஆகும்”.


விமர்சகர்களின் கருத்துகள்


காஷ்மீரில் மக்கள் வாக்கெடுப்பு (plebiscite) நடத்துவது குறித்து சிம்லா ஒப்பந்தத்தில் எந்தக் குறிப்பும் இல்லை என்று கோசா (Khosa) குறிப்பிடுகிறார். அதேபோல், 93,000 பாகிஸ்தானியப் போர்க்கைதிகள் (Pakistani prisoners of war (POW)) குறித்தும் அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்குக் காரணம், பேச்சுவார்த்தை கூட்டத்தில் வங்காளதேசம் இல்லாமல் அவற்றைப் பற்றி விவாதிக்க இந்திரா காந்தி மறுத்ததே ஆகும்.” மாறாக, இந்திரா காந்தி மற்றும் வங்காளதேசம்  தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொள்ளும் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் இந்தப் பிரச்சினைகள் கையாளப்படும் என்று பூட்டோ உறுதியளித்தார்.


இருப்பினும், பூட்டோவைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் சில நன்மைகளையும் அளித்தது. போரின்போது இந்தியா கைப்பற்றியிருந்த சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளைத் திரும்பப் பெற இந்தியா ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, போர்க்கைதிகள் விவகாரத்திற்கு "இன்ஷா அல்லாஹ் (கடவுளின் விருப்பப்படி), நாம் ஒரு தீர்வைக் காண்பதில் வெற்றி பெறுவோம்" என்று பாகிஸ்தான் மக்களிடம் பூட்டோ உறுதியளித்தார். மேலும், "எங்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள், எங்கள் நிலப்பகுதியைக் கைப்பற்றாதவர்கள் மற்றும் எங்கள் போர்க்கைதிகளைத் தங்கள் வசம் வைத்திருக்காதவர்களுடன் நாங்கள் நட்புறவுடனும் அமைதியுடனும் இருப்போம்" என்றும் அவர் அறிவித்தார். இருப்பினும், கோசா குறிப்பிடுவதாவது, “அவர்களின் சிறைவாசம், பூட்டோவின் கொள்கைகளின் ஒரு கசப்பான, தொடர்ந்து குறிப்பிடப்படும் தோல்வியாகவே இருந்தது.”


புதிதாக சுதந்திரம் பெற்ற வங்காளதேச நாட்டை பாகிஸ்தான் அங்கீகரித்தது குறித்தும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த விடுபடல் பாகிஸ்தானுக்குள் சந்தேகங்களை வலுப்படுத்தியது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டைப் பூட்டோ ரகசியமாக விட்டுக் கொடுத்துவிட்டதாக அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும், வங்காளதேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரிக்க அவர் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.


இந்தியாவைப் பொறுத்தவரை, கோசா குறிப்பிடுவதாவது "சிம்லா ஒப்பந்தம் இந்திராவின் தரப்பில் ஒரு பெரிய தவறான முடிவாக அமைந்தது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். காஷ்மீரில் போர்நிறுத்தக் கோட்டை ‘கட்டுப்பாட்டுக் கோடாக’ (line of control) மாற்றுவதற்கான பூட்டோ கடைசி நேரத்தில் எடுத்த முடிவின் காரணமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அவர்கள் நம்புகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும், அவர் தன்னை உண்மையாக ‘நம்ப வேண்டும்’ என்றும் பூட்டோவின் மூலம் இந்திராவுக்கு தொடர்ந்து உறுதியளித்தார் என்றும் வாதிடப்படுகிறது”. பூட்டோவின் உறுதிமொழிகளில் இந்திரா காந்தி அதீத நம்பிக்கை வைத்ததற்காக பலர் அவரைக் குறை கூறுகின்றனர்.


வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன், 1971: A Global History of the Creation of Bangladesh என்ற தனது நூலில், தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தானை "சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில்" நடத்த அவர் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தார் என்று வாதிடுகிறார். இந்த ஒப்பந்தம், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பாக இருதரப்பு உறவை நிறுவியது மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டுக் கோடு (LoC) படிப்படியாக ஒரு சர்வதேச எல்லையின் "தன்மைகளைப்" பெறும் சாத்தியத்தையும் உருவாக்கியது. இது காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வழிவகுத்தது.


இருப்பினும், இது ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை. வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் குறிப்பிடுகையில், “ஆனால் விஷயங்கள் அப்படி அமையவில்லை. பூட்டோ அவர்களின் புரிந்துணர்விலிருந்து விரைவாகப் பின்வாங்கி, பாரம்பரியமான இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்குத் திரும்பினார். 1974-ம் ஆண்டின் நடுப்பகுதியில், பூட்டோவிடமோ அல்லது இந்திரா காந்தியிடமோ ஒரு நீடித்த தீர்வை உருவாக்குவதற்கான அரசியல் விருப்பமோ அல்லது மூலதனமோ இருக்கவில்லை” என்று கூறுகிறார்.




அதன் தாக்கம்


ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, 1999-ம் ஆண்டு கார்கில் போர், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் தொடர்ந்து நிகழும் மோதல்கள் உள்ளிட்டவற்றால், நீடித்த அமைதிக்கான அந்த ஒப்பந்தத்தின் வாக்குறுதி பலமுறை சோதிக்கப்பட்டது. தாஷ்கண்ட் பிரகடனம்-1966 (Tashkent Declaration), லாகூர் பிரகடனம்-1999 (Lahore Declaration) மற்றும் ஆக்ரா உச்சிமாநாடு-2001 (Agra Summit) உள்ளிட்ட அடுத்தடுத்த இராஜதந்திரரீதியாக முயற்சிகள் அமைதியைக் கொண்டுவரத் தவறிவிட்டன.


Original articles : When Indira met Bhutto : How Simla Agreement shaped, and limited, India-Pakistan ties. -Nikita Mohta

Share:

டெலிகிராம் செயலி போதைப்பொருள் வலையமைப்புகள் முதல் நிடாசீன்கள் (Nitazenes) வரை : போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் -2025 (NCB)-ன் ஆண்டு அறிக்கை வெளிப்படுத்துவது என்ன?. -ரோஷ்னி யாதவ்

 டெலிகிராம் மற்றும் பிற மறைகுறியாக்கப்பட்ட (encrypted) செயலிகள் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) ஆண்டு அறிக்கை என்ன கூறுகிறது? உலகளாவிய போதைப்பொருள் சூழல் எவ்வாறு மாறியுள்ளது? புதிதாக உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் யாவை? மேலும், மரண பிறைவளையமானது (Death Crescent) பொண் பிறைவளையம் என்றும் மற்றும் மரண முக்கோணமானது பொன் முக்கோணம் (Death (Golden) Triangle) என்றும் அழைக்கப்படுகிறது. இவை என்ன? 


தற்போதைய நிகழ்வு :


சமீபத்தில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, ‘போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த தொலைநோக்கு ஆவணம் 2026-2029’ (Vision Document on Drug Control) மற்றும் ‘போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியக  (Narcotics Control Bureau(NCB)) ஆண்டு அறிக்கை-2025’ ஆகியவற்றை வெளியிட்டார். இந்த ஆண்டு அறிக்கையின் முக்கிய அம்சங்களையும், மரண (பொன் பிறைவளையம்) (Death/Golden Crescent) மற்றும் மரண (பொன் முக்கோணம்) (Death/Golden Triangle) ஆகிய கருத்துருக்களையும் தெரிந்து கொள்வோம்.


போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம்  (NCB) ஆண்டு அறிக்கை-2025-ன் முக்கிய சிறப்பம்சங்கள்


1. கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான அதிகபட்ச கைதுகள் : இந்த அறிக்கையின்படி, 2025-ம் ஆண்டில் இந்தியாவில் போதைப்பொருள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.


2024-ல் 1,22,224-ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை, 2025-ல் 1,83,675 ஆக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். மேலும், 2024-ல் 531-ஆக இருந்த தடுப்புக் காவல் உத்தரவுகளின் எண்ணிக்கை, 2025-ல் 810-ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறியது.


2. மறைகுறியாக்கப்பட்ட செயலிகள் (Encrypted Apps) போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய வழிகளாக மாறியுள்ளன : டெலிகிராம் (Telegram), வாட்சப் (WhatsApp) மற்றும் சிக்னல் (Signal) போன்ற மறைகுறியாக்கம் செய்யப்பட்ட செய்திப் பரிமாற்றத் தளங்கள், இந்தியா உட்பட உலகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய வழிகளாக மாறியுள்ளன. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம்  (NCB) 2025 ஆண்டு அறிக்கையின்படி, இந்த மூன்றில், டெலிகிராம் போதைப்பொருள் தொடர்பான விளம்பரங்களுக்கான ஒரு முக்கியத் தளமாக உருவெடுத்துள்ளது.


3. சட்டவிரோத அபினின் (Opium) முக்கிய ஆதாரம் மியான்மர் : நாட்டின், உயர்மட்ட போதைப்பொருள் சட்ட அமலாக்க அமைப்பின் அறிக்கை, மியான்மரிலிருந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்குச் செல்லும் ஒரு கடத்தல் பாதையை ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் குறிப்பிட்டுள்ளதுடன், அப்பகுதியில் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகம் ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதுடன் தொடர்புடையது என்றும் எச்சரித்துள்ளது.


“தலிபான்கள் பாப்பி (poppy) சாகுபடிக்கு விதித்த தடையின் பின்விளைவுகள் மற்றும் மோதல், பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில் மியான்மரில் பாப்பி (poppy) சாகுபடி தொடர்ந்து விரிவடைந்து வருவதன் காரணமாக, சட்டவிரோத அபினி உற்பத்தியில் முன்னணி ஆதாரமாக மியான்மர் இப்போது ஆப்கானிஸ்தானை முந்தியுள்ளது,” என்று இந்த அறிக்கை கூறியது.


4. சட்டவிரோத சாகுபடிக்கு எதிரான நடவடிக்கைகள் : சட்டவிரோத சாகுபடிக்கு எதிரான முக்கிய நடவடிக்கை குறித்தும் அமலாக்க முகமைகள் தெரிவித்துள்ளன. “அழிக்கப்பட்ட சட்டவிரோத பாப்பி சாகுபடிப் பரப்பளவு, 2024-ல் அழிக்கப்பட்ட 22,512 ஏக்கரைவிட கிட்டத்தட்ட இருமடங்காக, 2025-ல் 42,282 ஏக்கராக வெகுவாக அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது. அழிக்கப்பட்ட சட்டவிரோத கஞ்சா சாகுபடிப் பரப்பளவும், ஒரு வருடத்திற்கு முன்பு 34,018 ஏக்கராக இருந்த நிலையில் இருந்து, 38,193 ஏக்கராக அதிகரித்துள்ளது,” என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


அறிக்கையின்படி, 2023-ம் ஆண்டில் உலகளவில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து செயற்கை போதைப்பொருட்களிலும் கிட்டத்தட்ட பாதி ஆம்பெடமைன் வகை ஊக்கமருந்துகளாக (amphetamine-type stimulants (ATS)) இருந்தன. மேலும் மெத்தம்பெடமைன் (methamphetamine) மற்றும் ஆம்பெடமைன் (amphetamine) ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் பொருட்களாகத் தொடர்ந்தன.


மெக்சிகோ, மியான்மர், ஆப்கானிஸ்தான், செக்கியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட மையங்களில் மெத்தம்பெட்டமைன் (methamphetamine) உற்பத்தி தொடர்ந்து குவிந்துள்ளதாகவும், அதே வேளையில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அண்டை நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் கடத்தல் முறைகள் விரிவடைந்து வருவதாகவும் இந்த அறிக்கை மேலும் கூறியது.


5. எளிதில் ஊடுருவக்கூடிய எல்லையின் சவால் : “(இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான) எளிதில் ஊடுருவக்கூடிய எல்லையும், தடையற்ற நடமாட்டக் கொள்கையும் (Free Movement Regime (FMR)) ஆட்கடத்தலை எளிதாக்குகின்றன, உள்ளூர் போதைப்பழக்கத்தை மோசமாக்குகின்றன, மேலும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு நிதியளிக்கின்றன,” என்று இந்த அறிக்கை கூறியது.


6. போதைப்பொருள் தொடர்பான மாறிவரும் உலகளாவிய சூழல் : அதீத வீரியம் கொண்ட செயற்கை ஓபியாய்டுகளின் (synthetic opioids) அதிகரிப்பு மற்றும் வரலாறு காணாத கொக்கைன் உற்பத்தி (cocaine production) சாதனை அளவை எட்டியிருப்பது, வேகமாக மாறிவரும் உலகளாவிய போதைப்பொருள் சூழலால் இந்தியா பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.


7. உருவாகிவரும் இரண்டு அச்சுறுத்தல்கள் : உடனடி கவனம் தேவைப்படும் இரண்டு புதிய அச்சுறுத்தல்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஹெராயினை (heroin) விட 500 மடங்கு அதிக வீரியம் கொண்டதாகக் கூறப்படும் நிடாசீன்கள் (nitazenes) எனப்படும் ஒருவகை செயற்கை ஓபியாய்டுகளின் (synthetic opioids) பரவல், மற்றும் இடைவழிப் பொருளாதாரங்கள் முழுவதும் போதைப்பொருள் கடத்தலுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக்கும் இடையிலான வளர்ந்து வரும் தொடர்பாகும்.


உலக போதைப்பொருள் அறிக்கை 2025-ன் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?


1. ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (United Nations Office on Drugs and Crime (UNODC)), உலகெங்கிலும் உள்ள போதைப்பொருள் போக்குகள் மற்றும் முறைகள் குறித்த அறிவியல் பூர்வமான மற்றும் பாரபட்சமற்ற கண்ணோட்டத்தை வழங்கும் உலக போதைப்பொருள் அறிக்கையை வெளியிட்டது.


2. “உலகளாவிய நிலையற்றத் தன்மை, உலக போதைப்பொருள் பிரச்சனையின் சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்புச் செலவுகளை மேலும் அதிகரிக்கிறது” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, 2013-ல் 5.2 சதவீதமாக இருந்த போதைப்பொருள் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில், 2023-ல் 316 மில்லியன் மக்கள் (மது மற்றும் புகையிலை தவிர்த்து) போதைப்பொருளைப் பயன்படுத்தினர். இது 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் ஆறு சதவீதமாகும்.


3. 244 மில்லியன் பயனாளர்களுடன் கஞ்சா மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஓபியாய்டுகள்-Opioids (61 மில்லியன்), ஆம்பெடமைன்கள்-Amphetamines (30.7 மில்லியன்), கொக்கைன்-Cocaine (25 மில்லியன்) மற்றும் எக்ஸ்டஸி-Ecstasy (21 மில்லியன்) ஆகியவை இருந்தன. கடுமையான சூழல், நிலையற்ற தன்மை மற்றும் மோதல்களிலிருந்து தப்பி ஓடும் பாதிக்கப்படக்கூடிய புதிய மக்கள் குழுக்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.


4. போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில், இயலாமை மற்றும் அகால மரணங்கள் (disability-adjusted life years (DALY)) காரணமாக கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மரணங்களும், 2.8 கோடி ஆரோக்கியமான ஆயுட்கால இழப்புகளும் ஏற்பட்டன. 2023-ம் ஆண்டில், போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் உள்ளவர்களில் 12 பேரில் ஒருவர் மட்டுமே ஏதேனும் ஒரு வகையான போதைப்பொருள் சிகிச்சையைப் பெற்றிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


5. பிராந்தியம் வாரியாக, கஞ்சா பயன்பாட்டில் உலகில் மிகப்பெரிய பாலின இடைவெளி (gender gap) ஆசியாவில் அதிகளவில் உள்ளதாக என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. கடந்த ஆண்டில் கஞ்சா பயன்படுத்திய ஒவ்வொரு 100 பேரில் 90 பேர் ஆண்கள் ஆவர். மேலும், உலகளவில் ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்துவோரின் மிகப்பெரிய எண்ணிக்கையையும் (2022-ல் 5.2 மில்லியன்) மற்றும் அவர்களில், எச்.ஐ.வி (615,000 பேர்) மற்றும் ஹெபடைடிஸ் சி (2.8 மில்லியன்) பாதிப்புடன் வாழ்பவர்களின் எண்ணிக்கையையும் ஆசியா கொண்டுள்ளது.


'மரண பிறைவளையம்' (Death Crescent) மற்றும் 'மரண முக்கோணம்' (Death Triangle) என்றால் என்ன?**


1. ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகத்தின் (UNODC) கூற்றுப்படி, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடைபெறும் இரண்டு முக்கியப் பகுதிகள் “பொன் பிறைவளையம்” (Golden Crescent) மற்றும் “பொன் முக்கோணம்” (Golden Triangle) ஆகும்.


2. பொன் பிறைவளையம் (Golden Crescent) என்பது ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சட்டவிரோத அபின் உற்பத்திப் பகுதிகளை உள்ளடக்கியது மற்றும் “பொன் முக்கோணம்” (Golden Triangle) மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸை உள்ளடக்கியது.


3. “இந்தியா, ‘மரணப் பிறைவளையம்’ (Death Crescent) மற்றும் ‘மரண முக்கோணம்’ (Death Triangle) ஆகியவற்றுக்கு இடையில் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக ஹெராயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் நாட்டிற்குள் வெள்ளமெனப் பாய்கின்றன. இந்த போதைப்பொருட்களுக்கான உலகின் தேவையில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இந்த இரண்டு பகுதிகளிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தியா மற்ற நாடுகளுக்கு ஒரு பெரிய சந்தையாகவும், அதேசமயம் ஒரு இடைவழிப் பாதையாகவும் விளங்குகிறது,” என்று ராகேஷ் அஸ்தானா எழுதியிருந்தார்.


4. 2023-ஆம் ஆண்டில், ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு’ குறித்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், “முன்னதான போதைப்பொருள் கடத்தலின் முக்கியப் பகுதிகள் ‘தங்க முக்கோணம்’ மற்றும் ‘தங்கப் பிறைவளையம்’ என்று அழைக்கப்பட்டன. ஆனால், இந்திய அரசு சர்வதேச அளவில் அதனை ‘மரண முக்கோணம்’ மற்றும் ‘மரணப் பிறைவளையம்’ என்று பெயரிட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. இந்த அணுகுமுறை, போதைப்பொருளுக்கு எதிரான நமது போராட்டத்தின் திசையையும் தீவிரத்தையும் காட்டுகிறது” என்று கூறினார்.


முக்கியமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள்


1. ஆபரேஷன் கிரிஸ்டல் ஃபோர்ட்ரஸ் (Operation Crystal Fortress) : இந்த நடவடிக்கை, மெத்தம்பெட்டமைனைக் குறிக்கும் “கிரிஸ்டல்” (Crystal) என்ற வார்த்தையையும், அது மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட பகுதியைக் குறிக்கும் “ஃபோர்ட்ரஸ்” (Fortress) என்ற வார்த்தையையும் இணைத்து அதன் பெயரைப் பெற்றது. மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) அதன் வெள்ளை, படிகம் போன்ற தோற்றம் மற்றும் உச்ச கேளிக்கைகளில் அதற்கு உள்ள அதிக தேவை காரணமாக, மெத்தாம்பெட்டமைன் "ஐஸ்" போதைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது.


2. நீக்கும் நடவடிக்கை (Operation WeedOut) : இந்தியாவுக்குள் ஹைட்ரோபோனிக் (hydroponic) கஞ்சாவைக் கடத்தும் ஒரு கும்பலை ஒழிப்பதற்காக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence (DRI)) “வீட்அவுட்” (WeedOut) என்ற குறியீட்டுப் பெயரில் அகில இந்திய அளவிலான ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) என்பது நிதி அமைச்சகத்தின்கீழ் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் ழ் (Central Board of Indirect Taxes & Customs (CBIC)) செயல்படும் ஒரு முதன்மையான புலனாய்வு மற்றும் அமலாக்க முகமையாகும். போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சர்வதேச வர்த்தகம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது இதன் முக்கியப் பணியாகும்.


3. ஆபரேஷன் சமுத்திரகுப்த் (Operation Samudragupt) : ஜனவரி 2022-ல் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சமுத்திரகுப்த், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (Indian Ocean Region (IOR)) போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியக் கடற்படை மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (Narcotics Control Bureau (NCB)) இணைந்து மேற்கொண்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.


4. ஆபரேஷன் நார்கோஸ் (Operation NARCOS) : ஜூன் 2022-ல், இரயில்களில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection Force (RPF)) ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தச் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களைக் குறிவைப்பதற்காக, இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) இரயில்களில் தனது சோதனைகளைத் தீவிரப்படுத்தியதுடன், போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போதைப்பொருள் அதிகம் காணப்படும் இடங்களையும் அடையாளம் கண்டது.


Original articles : From Telegram Drug Networks to Nitazenes: What the NCB Annual Report 2025 reveals. -Roshni Yadav

Share:

பாதுகாப்பான, நீடித்த சாலை வலையமைப்பை உருவாக்க தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் இந்தியாவிற்கு எவ்வாறு உதவுகின்றன? -கண்ணன் கே

 நவீன நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் ஒரு முக்கிய அம்சம், அதிக வளங்களைச் சார்ந்திருக்கும் 'சாம்பல் நிறக் கட்டமைப்பு' (grey infrastructure) முறையிலிருந்து, நிலையான 'பசுமைச் சாலைகள்' (Green Roads) முறைக்கு மாறுவதாகும். கடுமையான பொதுப் பாதுகாப்பு நடைமுறைகளுடன், பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய (climate-resilient) பொறியியல் முறைகளை ஊக்குவிக்க இந்தியா எவ்வாறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது?


2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைய இந்தியா தனது நெடுஞ்சாலைக் கட்டமைப்பை வேகமாக விரிவுபடுத்தி வரும் நிலையில், உட்கட்டமைப்பு நவீனமயமாக்கலின் வரையறையும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அடிப்படை விரிவாக்கத்தைத் தாண்டிப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.


நவீனமயமாக்கல் என்பது இனி பல வழித்தடங்களைக் கொண்ட சாலைகளை அமைப்பதையோ அல்லது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையோ மட்டும் குறிப்பதாகப் பார்க்கப்பட போவதில்லை. மாறாக, மனித உயிர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் சாலைக் கட்டமைப்பின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையை உறுதி செய்வதையும்  நோக்கமாக கொண்டுள்ளது.


அதற்கேற்ப, இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு நவீனமயமாக்கலானது இது போன்ற முக்கிய அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.


பாதுகாப்பு தொடர்பான கவலைகள்


இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு  விரிவடைந்த நிலையில் உள்ளதால், அதற்கேற்ப பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. சாலைப் பாதுகாப்பு இல்லாத சூழல் என்பது ஒரு அமைதியான தேசிய அவசரநிலையாக மாறியுள்ளது. உலகளாவிய வாகன பயன்ப்பாட்டில் 1 சதவீதம் மட்டுமே இந்தியா கொண்டிருந்தாலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 11 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இது போன்ற அதிக உயிரிழப்பு விகிதத்திற்கு, சாலை உள்கட்டமைப்பில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளும், மனிதர்களின் பாதுகாப்பற்ற செயல்பாடுகளும் முக்கியக் காரணிகளாக  உள்ளன.


1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தை (Motor Vehicles Act) முறையாக அமல்படுத்தாததால், அதிவேகம், ஒழுங்கற்ற வழித்தடம் மற்றும் அதிக சுமை ஏற்றி இயங்கும் வணிக வாகனங்கள் போன்ற விதிமீறல்கள் தடுக்கப்படாமல் தொடர்கின்றன. இதன் விளைவாக, நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பிற்கு கடுமையான அபாயங்கள் ஏற்படுகின்றன. தரமற்ற சாலைப் பொறியியல், சாலைகளின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் சரியாகக் குறியிடப்படாத இணைப்பு (Merging) பாதைகள் ஆகியவை, அடிக்கடி விபத்துகள் நிகழும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய அபாயகரமான இடங்களான "அபாய பகுதிகள்" (Black Spots) உருவாகுவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.


சாலை கட்டுமானத்திற்காக தார் கலவைகளை இடும் விரைவான தார் பயன்பாட்டில் கொள்கை அதிக கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்த அபாயப் பகுதிகளை முறையாகக் கண்டறிந்து அவற்றை பொறியியல்ரீதியாகச் சீரமைக்கும் பணிகள் போதிய அளவில்  முன்னேற்றம் அடையவில்லை. இதன் விளைவாக, அதிவேக விரைவுச் சாலைகள் (Expressways) பாதுகாப்பான பயணப் பாதைகளாக இல்லாமல், அதிக விபத்து அபாயம் நிறைந்த வழித்தடங்களாக மாறியுள்ளன.


இந்த சமநிலையின்மை, திட்டமிடலில் உள்ள ஒரு கட்டமைப்புச் சிக்கலைப் காட்டுகிறது. சாலைகளை அமைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், சாலைகளையும் போக்குவரத்தையும் திறம்படத் தணிக்கை செய்யவும், பராமரிக்கவும், ஒழுங்குபடுத்தவும் தேவையான வசதிகள் இதில் இடம் பெறவில்லை.




தொழில்நுட்பத் தலையீடுகள்: V2V வழியாக “பேசும் கார்கள்”க்கு மாறுதல்


மனிதர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட அமலாக்க முறைகளின் வரம்புகளையும், சாலையில் ஏற்படும் ஆபத்தை கவனித்து அதற்கு நடவடிக்கை எடுக்க ஓட்டுநர் எடுத்துக்கொள்ளும் நேரம் குறைபாடுகளை சரி செய்வதற்காக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI)), நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை (Intelligent Transport Systems (ITS)) ஒருங்கிணைப்பதன் மூலம் முக்கிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.


இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பதிலளிக்கும் நேரத்தைக் குறைக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கிய விரைவுச் சாலைகள் முழுவதும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (Advanced Traffic Management Systems (ATMS)) உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சிசிடிவி கேமராக்கள், வாகன வேகத்தைக் கண்டறியும் அமைப்புகள், நிகழ்நேர தகவல் மின்னணு அறிவிப்பு பலகைகள் (Variable Message Signs (VMS)), தானியங்கி விபத்து மற்றும் அவசரநிலையை கண்டறியும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.


மேலும், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நிகழ்நேரத்தில் (real-time) நேரடியாகத் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் முக்கியப் புதுமையான 'வாகனங்களுக்கு இடையிலான தொடர்பு' (Vehicle-to-Vehicle (V2V)) தொழில்நுட்பம், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக வயர்லெஸ் தகவல் பரிமாற்றக் கருவிகளைப் (Dedicated On-board Wireless Units) பயன்படுத்தி, வாகனத்தின் வேகம், துல்லியமான இருப்பிடம், பிரேக் செயல்பாட்டு நிலை  போன்ற முக்கிய தகவல்களை அருகிலுள்ள மற்ற வாகனங்களுடன் தொடர்ந்து பரிமாறிக் கொள்கிறது. இதன் மூலம், அதிவேக விரைவுச் சாலைகளில் 'கூட்டு விழிப்புணர்வு' (cooperative awareness) சார்ந்த ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது.


இந்தத் தொழில்நுட்பம் மனிதப் பிழையால் ஏற்படும் விபத்துக்களைப் அதிக அளவில் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பனிமூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அல்லது கனமழையின் போது, ​​சாலையோரத்தில் மறைந்திருக்கும் அபாயங்கள் அல்லது முன்னால் செல்லும் வாகனங்கள் திடீரென நிறுத்தம் செய்வது குறித்து ஓட்டுநர்களுக்கு எச்சரிப்பதன் மூலம், வாகனங்களுக்கு இடையிலான  தொடர்பு (V2V) தொழில்நுட்பத்தால் 360-டிகிரி ஓட்டுநரின் பார்வைக்கு தெரியாத  பகுதிகள் குறித்த விழிப்புணர்வை வழங்க முடியும்.


 வாகனங்களுக்கு இடையிலான தொடர்பு தொழில்நுட்பம், சில வினாடிகளுக்கு முன்பே ஆபத்து குறித்த எச்சரிக்கையை வழங்குவதன் மூலம், அதிவேகத்தில் ஏற்படும் பின்புற மோதல் விபத்துகளையும் (Rear-end Collisions), பல வாகனங்கள் தொடர்ச்சியாக மோதும் விபத்துகளையும் (Multi-vehicle Pile-ups) தடுக்கிறது. இதன் மூலம், வாகனங்கள் வெறும் செயலற்றவையாக இல்லாமல், உடனுக்குடன் செயல்படும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாதுகாப்பு வலையமைப்புகளாக (Responsive, Interconnected Safety Networks) மாறுகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, விபத்து நடந்த பிறகு காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அபராதம் விதிப்பது போன்ற நிலைப்பாட்டிலிருந்து, மனிதப் பிழைகளைத் தடுக்கும் முன்கூட்டிய தலையீடுகளை நோக்கிய அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்தைக் காட்டுகிறது.


சாலைப் பாதுகாப்பிற்கான நீதித்துறை அங்கீகாரம்


தொழில்நுட்பப் கண்டுபிடிப்புகளுடன் இணைந்து, நீதித்துறையின் தலையீடும் சாலைப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. சாலைப் போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து நிலவும் சவால்களை உணர்ந்து, சாலைப் பாதுகாப்பை அரசியலமைப்புச் சார்ந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக வரையறுக்க நீதித்துறை பலமுறை தலையிட்டுள்ளது. 1989-ஆம் ஆண்டு பர்மானந்த் கட்டாரா v. யூனியன் ஆஃப் இந்தியா (Parmanand Katara v. Union of India) வழக்கில், உச்சநீதிமன்றம், "பாதுகாப்பாகப் பயணம் செய்யும் உரிமை" (Right to Safe Travel) என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள "வாழ்வுரிமை" (Right to Life) என்பதன் ஒரு பகுதியாகும் என்று தீர்ப்பளித்தது.


உச்சநீதிமன்றத்தின் தலையீடுகள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிக்கு உத்தரவாதம் அளித்தல் மற்றும் மாநில சாலைப் பாதுகாப்புக் குழுக்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தன. 2025-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் மோட்டார் வாகனச் சட்டத்தின் 138(1A) மற்றும் 210-D பிரிவுகளின்கீழ், பாதுகாப்பான நடைபாதைகள் மற்றும் பொதுச் சாலைகளுக்கான உரிமையை ஒரு அரசியலமைப்பு அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது.


பிரிவு 138(1A) பொதுச் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் மற்றும் இயந்திர சக்தியால் இயக்கப்படாத  வாகனங்களின் (non-mechanically propelled vehicles) போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் அதே வேளையில், பிரிவு 210-D தேசிய நெடுஞ்சாலைகள் அல்லாத பிற சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான தரநிலைகளை வகுக்கக் கட்டாயப்படுத்துகிறது.


2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சாலை விபத்துகளில் இருந்து பயணிகளின் பாதுகாப்பும், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான உரிமையும், அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் உள்ள வாழ்வதற்கான அடிப்படை  உரிமையின் (fundamental right to life) ஒரு பகுதியாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


நீதித்துறைத் தலையீடுகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு நிர்வாகம்


அரசியலமைப்பின் 142-வது பிரிவின்கீழ் தனக்கு வழங்கப்பட்ட  அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட பொறியியல் குறைபாடு உள்ள பகுதிகளைச் சரிசெய்வதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) காலக்கெடு விதிப்பது உள்ளிட்ட நெடுஞ்சாலை மேலாண்மை தொடர்பான விவாகரங்களில் கட்டுப்படுத்தும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.


நீதித்துறைத் தலையீடுகளின் விளைவாக, சிறப்புச் சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் (safety councils) உருவாக்கப்பட்டுள்ளன. வேகக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில போக்குவரத்து அதிகாரிகள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதிசெய்யும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.


இது போன்ற நீதித்துறைத் தலையீடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் வரம்பையும் விரிவுபடுத்தியுள்ளன. வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பான மற்றும் ஆபத்துகளற்ற பயணம் மேற்கொள்ளும் உரிமையும் (Right to Safe, Hazard-Free Travel) பிரிவு 21-ன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாலை வடிவமைப்பு, பராமரிப்பு, போக்குவரத்து மேலாண்மை, பயணிகளின் வசதி போன்ற சாலை வலையமைப்பில் உள்ள குறைபாடுகள், கட்டுமான அல்லது பராமரிப்புத் தோல்விகளாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக, அவை குடிமக்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்புக்கான அரசியலமைப்புச் சட்ட உரிமையை நேரடியாக மீறும் செயல்களாக கருதப்படுகின்றன.


பசுமை மற்றும் நிலையான பொறியியல்


நவீன நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சம், வளங்களை அதிகம் பயன்படுத்தும் 'சாம்பல்நிற உள்கட்டமைப்பிலிருந்து' (கடினமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள்) நிலையான 'பசுமைச் சாலைகளுக்கு' (Green Roads) மாறுவதாகும்.


இந்த மாற்றம் இனி வெறும் இலட்சியமாக மட்டும் இல்லாமல், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், சாலை உட்கட்டமைப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க வேண்டிய அவசியத்தாலும் உருவான கட்டாயத் தேவையாக மாறியுள்ளது. அதன்படி, இந்தியா சாலை கட்டுமானத்தில் வட்டப் பொருளாதாரத்தின் (கழிவுகளை அகற்றி, இயற்கைச் சூழல் அமைப்புகளைப் புதுப்பிக்கும் ஒரு அமைப்பு) கொள்கைகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளது.


சுரங்கக்கற்கள் மற்றும் ஆற்று மணல் போன்ற புதிய இயற்கை மூலம் கிடைக்கும் மொத்தப் பொருட்களின் நுகர்வைக் குறைக்கும் வகையில், நெடுஞ்சாலை கட்டுமானத்தில் தார் கலவைகளில் கழிவு நெகிழி, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்து வரும் சாம்பல் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதை சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை (MoRTH) கட்டாயமாக்கியுள்ளது.


மேலும், இந்த முயற்சியின் மூலம், பல மில்லியன் டன் தொழில்துறைக் கழிவுகள் குப்பைமேடுகளில் (Landfills) கொட்டப்படுவது தடுக்கப்படும், சாலைகளின் நீர் எதிர்ப்புத் திறனை  மேம்படுத்தி, சாலை மேற்பரப்பின் நீடித்த தன்மையையும் (Durability) அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


நெடுஞ்சாலை நிலைத்தன்மை குறித்த உலகளாவிய  கண்டுபிடிப்புகள்


இந்த பசுமை மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, நெடுஞ்சாலைகள் ஆற்றல் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை மறுவடிவமைக்கும் உலகளாவிய அளவுகோல்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஆராய்ந்து வருகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்க சில உதாரணங்கள் பின்வருமாறு::


1. நெதர்லாந்தின் சூரியச் சாலைகள்  முயற்சியின் மூலம், இது அருகிலுள்ள மின்கட்டமைப்புகளுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக, ஒளிமின் அழுத்த செல்களை (photovoltaic cells) நேரடியாகச் சாலை மேற்பரப்புகளில் ஒருங்கிணைக்கிறது.


2. ஜெர்மனியின் மின்-நெடுஞ்சாலை அமைப்பில், சாலையின் மேற்பகுதியில் மின்சார கம்பிகள் (Overhead Catenary Power Lines) நிறுவப்படுகின்றன. கனரக வணிக வாகனங்களின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள மேல்மின் கம்பியிலிருந்து மின்சாரத்தைப் பெறும் இணைப்புக் கருவி (Pantograph), இந்த மின்கம்பிகளிலிருந்து தொடர்ந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்கிறது. இதனால், அதிக போக்குவரத்து கொண்ட நெடுஞ்சாலைகளில் டீசல் எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலை குறைக்கப்படுகிறது.


3. ஸ்வீடன், மின்மயமாக்கப்பட்ட சாலைகளை உருவாக்கியுள்ளது. இந்தச்சாலைகளில், வணிக மின்சார வாகனங்கள் பயணித்துக்கொண்டே இருக்கும் போது, வயர்லெஸ் முறையில் தானாகவே மின்கலன்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதனால், வாகனங்களில் மிகப் பெரிய திறன் கொண்ட மின்கலன்களை (Massive Vehicle Batteries) பொருத்த வேண்டியதன் தேவை குறைகிறது. 


4. மின்சார வாகனங்களுக்கான பயண தூரக் கவலையை குறைப்பதற்காக, நார்வேயின் மின்சார வாகன நெடுஞ்சாலைச் சூழல் அமைப்புகளில், ஒவ்வொரு சில கிலோமீட்டருக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஓய்வுப் பகுதிகளில் அதிகத் திறன் கொண்ட மின்னேற்றும் வலையமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.


இந்த எடுத்துக்காட்டுகள் நிலையான நெடுஞ்சாலைக் கட்டமைப்பு குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, ஒரு முழுமையான கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன.


முன்னால் உள்ள பாதை


லட்சியமிக்க உட்கட்டமைப்பு இலக்குகளுக்கும், நிலையான மற்றும் பாதுகாப்பான விளைவுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு, பருவநிலை மாற்றங்களைத் தாங்கும் பொறியியலைக், கடுமையான பொதுப் பாதுகாப்பு அமலாக்கத்துடன் ஒருங்கிணைக்கும் ஒரு பயனுள்ள முழுமையான கட்டமைப்பை இந்தியா பின்பற்ற வேண்டும்.


சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய உத்தியின் அடித்தளத் தூண்களாக விளங்கும் சாலைப் பாதுகாப்பின் 4 அம்சங்களைத் திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் இதை அடைய முடியும்: 


1. பொறியியல்: மனிதர்களால் ஏற்படும் தவறுகளைக் குறைக்கும் வகையில், சாலை கட்டுமானத்திற்கு முன்பே சாலைகளின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து, பாதுகாப்பான சாலைகளை உருவாக்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள், நெகிழிக் கழிவுகள் மற்றும் பிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களின் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும்.


2. அமல்படுத்துதல்: தானியங்கி வேகக் கேமராக்கள், சரக்குகளுக்கான நகரும் வாகன எடை உணர்விகள் மற்றும் கட்டமைப்பு அல்லது போக்குவரத்து விதிமீறல்களுக்கான கடுமையான தண்டனைகள் அல்லது போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.


3. கல்வி: ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைகளை நிர்வாக நடைமுறையாக இல்லாமல், கடுமையான, பாதுகாப்பு சார்ந்த பயிற்சித் திட்டங்களாக மேம்படுத்தும் முறையாக மாற்ற வேண்டும்.


4. அவசர சிகிச்சை: ஒரு விபத்துக்குப் பிறகு, அந்த முக்கியமான ‘கோல்டன் ஹவர்’ (golden hour) மருத்துவக் கவனிப்பை உறுதி செய்வதற்காக, முக்கிய வழித்தடங்களில் பரவலாக்கப்பட்ட முதலுதவி மற்றும் மருத்துவப் பராமரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும்.


தனித்தனி திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து, கட்டுப்பாடான குறைந்தபட்ச விலை (Least-Cost (L1)) ஏலமுறையிலிருந்து, குறைந்த செலவிலான மூலதனச் செலவினத்தைவிட நீண்டகால நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தேர்வு (Quality and Cost-Based Selection (QCBS)) முறைக்கு கொள்முதலை மாற்றும் ஒரு ஒருங்கிணைந்த வாழ்க்கைச் சுழற்சி நிர்வாகக் கட்டமைப்புக்கு மாற வேண்டிய தேவையும் உள்ளது.


இவ்வாறு, பாதுகாப்பு மற்றும் சூழலியல் சார்ந்த துறைகளில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியலைத் திறமையாக பயன்படுத்துவதன் மூலம், தேசிய வளர்ச்சியை சீரான முறையில் முன்னெடுக்கும் ஒரு சாலைக் கட்டமைப்பை இந்தியாவால் உருவாக்க முடியும்.


Original articles : How technological innovations help India build safe, sustainable road network?. -Kannan K

Share:

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமைக்கான அரசியலமைப்பு அடிப்படை என்ன? - பிரியா குமாரி சுக்லா

 அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் மாதம் 30-ஆம் தேதி ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தார்மீகமாக வழங்கப்படும் குடியுரிமையை (Birthright citizenship) சட்டவிரோதமானது என அறிவித்த டிரம்ப் நிர்வாகத்தின் நிர்வாக உத்தரவு, அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஒரு குழந்தையின் பெற்றோர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருந்தாலும்கூட, அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டின் 14-வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி (Fourteenth Amendment) அமெரிக்கக் குடிமக்களே என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• 6-3 என்ற நீதிபதிகளின் பெரும்பான்மைத் தீர்ப்பில், அத்தகைய குழந்தைகள் அமெரிக்காவின் சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்ற அரசாங்கத்தின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்த நிர்வாக உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பின் 'குடியுரிமைப் பிரிவை' (Citizenship Clause) மீறுவதாகவும், உச்சநீதிமன்றத்தின் நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளுக்கு முரணாக இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.


• இந்தத் தீர்ப்பு, அமெரிக்க அதிபரின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான குடியேற்றக் கொள்கைத் திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சட்டரீதியான பின்னடைவுகளில் ஒன்றாகும். மேலும், 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வரும், பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தையும் இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.



• இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, டிரம்ப் இந்த முடிவை நமது நாட்டிற்கு மிகவும் மோசமானது என்று கூறினார். மேலும், பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தனது அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றம் நினைத்தால் ஒரு சாதாரணச் சட்டத்தின் மூலம் இந்த நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்துவிட முடியும் என்றும் தவறாகக் குறிப்பிட்டார்.


உங்களுக்குத் தெரியுமா?


• அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற மற்றும் அதன் சட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும், அமெரிக்காவின் குடிமக்களும், அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்களும் ஆவர் என்றும் அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தம் கூறுகிறது.


• அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு 1868-ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திருத்தம், முன்பு அடிமைகளாக இருந்தவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டது.


அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதற்கே இந்த விதி வழிவகை செய்கிறது என்று நீதிமன்றங்கள் நீண்டகாலமாக விளக்கம் அளித்து வருகின்றன. எனினும், இதில் நீண்டகாலமாக இரண்டு விதிவிலக்குகள் உள்ளன:


— வேறு நாட்டிற்கு விசுவாசமாக இருக்கும் வெளிநாட்டுத் தூதர்களின் குழந்தைகள்.


— போர்க் காலங்களில் அமெரிக்காவிற்குள் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் எதிரிகள்.


• அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்பே,                    ஒரு மண்ணில் பிறப்பதன் மூலமாகவே குடியுரிமை பெறும் உரிமை நடைமுறையில் இருந்தது. இது 'மண்ணின் உரிமை' (jus soli) என்ற ஆங்கிலேயப் பொதுச் சட்டக் கொள்கையிலிருந்து உருவானதாகும். இக்கொள்கையின்படி, ஒரு குழந்தைக்கு அவனது பெற்றோரின் குடியுரிமையைக் கணக்கில் கொள்ளாமல், அக்குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறது என்பதன் அடிப்படையிலேயே குடியுரிமை வழங்கப்படுகிறது.


• பெற்றோரின் குடியுரிமை நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் அந்நாட்டின் 14-வது அரசியலமைப்பு திருத்தம் குடியுரிமை வழங்குவதை உறுதி செய்கிறது என்பதை ஜூன் மாதம் 30-ஆம் தேதி வழங்கிய தனது தீர்ப்பில், அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.


• தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கி வாழும் தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடாது என்ற புதிய நிர்வாக உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் 14-வது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, இத்தகைய பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்காவின் "சட்ட வரம்பிற்கு உட்பட்டவர்கள்" அல்ல என்றும், எனவே அவர்களுக்குக் குடியுரிமை பெற தகுதியில்லை என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அளித்த தனது முதல் பேட்டியில் டிரம்ப், நாம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகிலேயே இந்த மாதிரியான சட்டத்தைக் கொண்டுள்ள ஒரே நாடு அமெரிக்கா மட்டும்தான், என்று கூறியிருந்தார்.


அந்தக் கூற்று தவறானது. தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள குறைந்தபட்சம் 37 பிற நாடுகள், தங்களது மண்ணில் பிறக்கும் யாருக்கும், அவர்களது பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், நிபந்தனையற்ற குடியுரிமையை வழங்குகின்றன. ஆனால், இந்தியா இந்த நிபந்தனையற்ற பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையைப் பின்பற்றுவதில்லை; அதேபோல் பல ஐரோப்பிய நாடுகளும் இதனைப் பின்பற்றுவதில்லை.


• இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள் எதிர்கொண்ட மிக முக்கியமான சவால்களில் ஒன்று, 'பிறப்புரிமை குடியுரிமை' (Birthright citizenship) பற்றிய பிரச்சனை ஆகும். அதாவது, ஒரு நாட்டின் குடியுரிமை என்பது ஒரு நபர் அந்த நாட்டில் பிறந்ததன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமா அல்லது அவரது வம்சாவளி அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அரசியலமைப்பு நிர்ணய சபையின் சில உறுப்பினர்கள், குறிப்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினரான பி. எஸ். தேஷ்முக் போன்றவர்கள், பிறந்ததன் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை எதிர்த்தனர். அவ்வாறு வழங்கினால், அது இந்திய குடியுரிமையை உலகிலேயே மிக மலிவான ஒன்றாக மாற்றிவிடும் என்று வாதிட்டனர்.


• இருப்பினும், பி. ஆர். அம்பேத்கர் மற்றும் சர்தார் வல்லாபாய் படேல் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள், பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை ஆதரித்தனர். அவர்களின் இந்தக் கருத்து அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பின் 5-வது பிரிவு, இந்த அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு நபரும் இந்தியாவின் குடிமகனாகக் கருதப்படுவார் என்று கூறுகிறது.


• பின்னர், நாடாளுமன்றம் 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், ஜனவரி மாதம் 26-ஆம் தேதி, 1950-ஆம் ஆண்டு அன்றோ அல்லது அதற்குப் பிறகோ இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது. இதற்கு இரண்டு விதிவிலக்குகள் மட்டுமே இருந்தன: இந்தியக் குடிமகனாக இல்லாத ஒரு வெளிநாட்டுத் தூதரக அதிகாரியின் குழந்தையாகப் பிறந்தவர்கள். எதிரி நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு பகுதியில், எதிரி நாட்டின் குடிமகனுக்குக் குழந்தையாகப் பிறந்தவர்கள். இந்த இரு தரப்பினருக்கு மட்டுமே பிறப்பின் அடிப்படையிலான இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட்டது.


Original articles : What are the constitutional basis of birthright citizenship in the United States? -Priya Kumari Shukla

Share:

புதிய வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026: வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? --ஆஞ்சல் மகஸைன்

 ஒன்றிய அரசு, 1952-ஆம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்குப் பதிலாக, 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026' (Employees’ Provident Funds Scheme, 2026) என்ற புதிய திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, 'சமூக பாதுகாப்புச் சட்டம், 2020'-ஐ (Code on Social Security, 2020) நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். இந்தப் புதிய திட்டம் ஜூன் மாதம் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


ஓய்வூதிய நிதி அமைப்பான 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு' (EPFO), பணத்தை முன்கூட்டியே எடுப்பது மற்றும் பணம் எடுக்கும் பிரிவுகளை முறைப்படுத்துவது குறித்து சமீபத்தில் எடுத்த முடிவுகள் இந்த புதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, சட்டப்பூர்வ ஊதிய வரம்பிற்கு மேல் கட்டாயமாக மற்றும் விருப்பத்தின் பேரில் செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்புகள் குறித்தும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ஒப்பந்ததாரரை நியமிக்கும் முக்கிய நிறுவனம் (Principal employer) என்ற கருத்து இந்தத் திட்டத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய தொழிலாளர் சட்டங்களின் விதிகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டுள்ளது.


இப்புதிய திட்டத்தின்படி (EPF Scheme, 2026), ஒரு நிறுவனம் தன்னிடம் நேரடியாக வேலை செய்யும் ஊழியருக்கோ அல்லது ஒரு ஒப்பந்ததாரர் மூலமாக (சுயமாகப் பதிவு செய்யப்படாத ஒப்பந்ததாரர்) வேலை செய்யும் ஊழியருக்கோ, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் ஊழியரின் பங்களிப்பு ஆகிய இரண்டையும், அதற்கான நிர்வாகக் கட்டணங்களுடன் சேர்த்து, ஒவ்வொரு மாதமும் முடிந்த 15 நாட்களுக்குள் முதலில் செலுத்திவிட வேண்டும்.


ஒருவேளை, ஒப்பந்ததாரரே நேரடியாக வருங்கால வைப்பு நிதி தொகையைச் செலுத்தும்பட்சத்தில், அத்தொகை சரியாகச் செலுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் இறுதிப் பொறுப்பு ஒப்பந்ததாரரை நியமிக்கும் முக்கிய நிறுவனத்திடமே உள்ளது.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026-ல் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?


அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) பணத்தை எடுப்பதற்கான (Withdrawal) விதிமுறைகளில் பல முக்கிய மாற்றங்களை அறிவித்தது. இதன்படி, பணம் எடுப்பதற்கான பிரிவுகள் 13-லிருந்து மூன்றாகக் குறைத்து முறைப்படுத்தப்பட்டுள்ளன — 1) அத்தியாவசியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்); 2) வீட்டிற்குரிய தேவைகள்; மற்றும் 3) சிறப்புச் சூழ்நிலைகள். அத்துடன் கணக்கில் 25% குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த புதிய வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026 (EPF Scheme, 2026) அந்த மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இதன்படி, ஒரு நபர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேர்ந்து மொத்தம் 12 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, தனக்கோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர் எடுக்க தகுதியான தொகையில் 100% வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.


பயன்பாட்டிற்குத் தகுதியான 100% உறுப்பினர் இருப்புத்தொகை என்பது, கணக்கில் உள்ள மொத்தப் பணத்தில் 75%-ஐத் திரும்பப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கும். ஏனெனில், 25% தொகையைக் கணக்கில் கட்டாயக் குறைந்தபட்ச இருப்பாக வைத்திருக்க வேண்டும். வேலை இல்லாமல் ஒரு வருடம் தொடர்ந்து இருக்கும்பட்சத்தில், கணக்கில் உள்ள முழு 100% தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.


உறுப்பினர்கள் தங்களது சொந்தப் படிப்புக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் படிப்புக்கோ, இந்த நிதியத்தில் சேர்ந்து மொத்தம் 12 மாதங்கள் முடிந்தபிறகு பணத்தை எடுக்கலாம். இவ்வாறு படிப்பிற்காகப் பகுதித்தொகையாக எடுப்பது (Partial withdrawal) அவர்களது ஒட்டுமொத்த உறுப்பினர் காலத்தில் 10 முறைகளுக்கு மேல் மிகக் கூடாது. தங்களது சொந்தத் திருமணத்திற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் திருமணத்திற்கோ, தகுதியான உறுப்பினர் இருப்பில் இருந்து 100% வரை பணத்தை எடுக்க முடியும்; ஆனால், திருமணத்திற்காகப் பகுதித் தொகையாக எடுப்பது நிதியத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர் காலத்தில் 5 முறைகளுக்கு மேல் மிகக் கூடாது.


வீடுசார்ந்த தேவைகளுக்காக, ஒரு உறுப்பினர் ஒரு புதிய அடுக்குமாடி வீடு அல்லது தனி வீடு வாங்குவதற்கும்; வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதற்கும்; வீடு கட்டுவதற்கும்; வீடு அல்லது நிலம் வாங்குவதற்காக வாங்கிய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும்; ஏற்கனவே உள்ள வீடு அல்லது அடுக்குமாடி வீட்டைப் புதுப்பிப்பதற்கும் அல்லது கூடுதல் வசதிகள் செய்வதற்கும் பகுதித்தொகையாகப் பணம் எடுக்க அனுமதிக்கப்படலாம். இதற்கு, நிதியத்தில் மொத்தம் 12 மாதங்கள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் மற்றும் எடுக்கப்படும் தொகை மொத்த நிதியில் 75% வரை மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன. மேலும், இந்த வீடு சார்ந்த தேவைகளுக்காகப் பகுதித் தொகையாகப் பணம் எடுப்பது 5 முறைகளுக்கு மேல் மிகக் கூடாது.


உடல்நலக்குறைவு, கல்வி மற்றும் திருமணம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், அதேபோல வீடு கட்டுதல்/வாங்குதல் மற்றும் பிற குறிப்பிட்ட சிறப்புச் சூழ்நிலைகளுக்காகவும், எளிமையாக்கப்பட்ட விதிகளின்கீழ் உறுப்பினர்கள் தங்களது நிதியிலிருந்து ஒரு பகுதிப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும்; மேலும், அந்த நிதியத்திற்கு அவர்கள் வழங்கிய ஒட்டுமொத்தப் பங்களிப்பில் குறைந்தபட்சம் 25% தொகையைத் தங்களது கணக்கில் வைத்திருக்க வேண்டும், என்று ‘Ernst & Young India’ நிறுவனத்தின் மனிதவள மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் சிறப்புப் பிரிவின் பங்குதாரர் புனீத் குப்தா தெரிவித்தார்.


2026-ஆம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் எந்தெந்த விஷயங்கள் மாற்றமில்லாமல் அப்படியே தொடர்கின்றன?


முந்தைய திட்டத்தில் இருந்த பங்களிப்பு விகிதமே இந்தப் புதிய திட்டத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. அதாவது, பெரும்பாலான நிறுவனங்களுக்கு 12%-ஆகவும், குறிப்பிட்ட சில அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 10%-ஆகவும் இருக்கும். சட்டப்பூர்வ ஊதிய வரம்பு வரை மட்டுமே இந்த பங்களிப்புகள் கட்டாயமானவை ஆகும்.


2026-ஆம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்படி, நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய இருதரப்பினருமே தங்களது ஊதியத்தில் 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பாக வழங்க வேண்டும். ஒரு தொழிலாளியின் ஊதியம் சட்டப்பூர்வ ஊதிய வரம்பைவிட அதிகமாக இருந்தால், அந்த வரம்பு வரை மட்டுமே கட்டாயப் பங்களிப்பு கணக்கிடப்படும் என்று இத்திட்டம் தெளிவாகக் கூறுகிறது, என குப்தா தெரிவித்தார். இருப்பினும், தொழிலாளர்கள் விரும்பினால் இந்த ஊதிய வரம்பிற்கு மேல் உள்ள தொகைக்கோ அல்லது              12 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்திலோ தங்களது சுயவிருப்பப் பங்களிப்பை வழங்கலாம். இதற்கு இணையாக நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை உயர்த்திக் கொள்ள முன்வரலாம் என்றும் கூறினார்.


புதிய திட்டம் தெளிவாகக் கூறுவது என்னவென்றால், ஊழியர்கள் தங்களின் சட்டப்பூர்வ உச்சவரம்பிற்கு மேலான ஊதியத் தொகைக்கோ அல்லது 12 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்திலோ தங்களது விருப்பத்தின் பேரில் பங்களிக்க முடியும்; மேலும், நிறுவனங்களும் இந்த கூடுதல் பங்களிப்பிற்கு இணையாகத் தங்களின் பங்களிப்பை வழங்க முன்வரலாம். ஊழியர்கள் உச்சவரம்பிற்கு மேலான ஊதியத் தொகைக்கோ அல்லது 12 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்திலோ தங்களின் விருப்பத்தின் பேரில் பங்களிக்க முடியும். மேலும், நிறுவனங்களும் அதற்கு இணையான பங்களிப்பை வழங்க முடிவு செய்யலாம். இந்த விருப்பப் பங்களிப்புகளைப் பின்நாட்களில் ஊழியரோ அல்லது நிறுவனமோ குறைத்துக் கொள்ளவோ அல்லது முழுமையாக நிறுத்திக்கொள்ளவோ முடியும். இது முன்பு இருந்த அதே நடைமுறைதான். புதிய திட்டத்தில் எந்தவொரு புதிய கட்டாய விதிகளும் அறிமுகப்படுத்தப்படவில்லை, என்றும் தெரிவிக்கின்றனர்.


புதிய விதியின்படி, ஊழியர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களின் கூடுதல் விருப்பக் காலமுறை வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பை எப்போது வேண்டுமானாலும் குறைத்துக்கொள்ளவோ அல்லது முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளவோ அனுமதி வழங்கப்படுகிறது. இது ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியச் சேமிப்பைத் திட்டமிடுவதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. மேலும், ஊழியர்களின் கைக்குக் கிடைக்கும் நிகர ஊதியத்தை (Take-home pay) அதிகரிக்கவும் உதவுகிறது. இருப்பினும், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் செய்யும் கூடுதல் விருப்பப் பங்களிப்புத் தொகைக்கான நிர்வாகக் கட்டணங்களைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026 (EPF Scheme, 2026), குறிப்பிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பு கட்டாயம் என்ற விதியைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறது. மேலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952-ன்கீழ் உறுப்பினர்களாக இருந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், புதிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026-ன் கீழும் தானாகவே உறுப்பினர்களாகத் தொடருவார்கள் என்றும் குறிப்பிடுகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொதுவாக, இருநாடுகளுக்கு இடையே சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் இல்லாதபட்சத்தில், அவர்கள் தங்களது 58 வயதில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மட்டுமே தங்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேமிப்புத் தொகையை முழுமையாகப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Original articles : New EPF Scheme, 2026: What changes for provident fund subscribers -Aanchal Magazine

Share: