டெலிகிராம் செயலி போதைப்பொருள் வலையமைப்புகள் முதல் நிடாசீன்கள் (Nitazenes) வரை : போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் -2025 (NCB)-ன் ஆண்டு அறிக்கை வெளிப்படுத்துவது என்ன?. -ரோஷ்னி யாதவ்

 டெலிகிராம் மற்றும் பிற மறைகுறியாக்கப்பட்ட (encrypted) செயலிகள் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) ஆண்டு அறிக்கை என்ன கூறுகிறது? உலகளாவிய போதைப்பொருள் சூழல் எவ்வாறு மாறியுள்ளது? புதிதாக உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் யாவை? மேலும், மரண பிறைவளையமானது (Death Crescent) பொண் பிறைவளையம் என்றும் மற்றும் மரண முக்கோணமானது பொன் முக்கோணம் (Death (Golden) Triangle) என்றும் அழைக்கப்படுகிறது. இவை என்ன? 


தற்போதைய நிகழ்வு :


சமீபத்தில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, ‘போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த தொலைநோக்கு ஆவணம் 2026-2029’ (Vision Document on Drug Control) மற்றும் ‘போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியக  (Narcotics Control Bureau(NCB)) ஆண்டு அறிக்கை-2025’ ஆகியவற்றை வெளியிட்டார். இந்த ஆண்டு அறிக்கையின் முக்கிய அம்சங்களையும், மரண (பொன் பிறைவளையம்) (Death/Golden Crescent) மற்றும் மரண (பொன் முக்கோணம்) (Death/Golden Triangle) ஆகிய கருத்துருக்களையும் தெரிந்து கொள்வோம்.


போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம்  (NCB) ஆண்டு அறிக்கை-2025-ன் முக்கிய சிறப்பம்சங்கள்


1. கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான அதிகபட்ச கைதுகள் : இந்த அறிக்கையின்படி, 2025-ம் ஆண்டில் இந்தியாவில் போதைப்பொருள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.


2024-ல் 1,22,224-ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை, 2025-ல் 1,83,675 ஆக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். மேலும், 2024-ல் 531-ஆக இருந்த தடுப்புக் காவல் உத்தரவுகளின் எண்ணிக்கை, 2025-ல் 810-ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறியது.


2. மறைகுறியாக்கப்பட்ட செயலிகள் (Encrypted Apps) போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய வழிகளாக மாறியுள்ளன : டெலிகிராம் (Telegram), வாட்சப் (WhatsApp) மற்றும் சிக்னல் (Signal) போன்ற மறைகுறியாக்கம் செய்யப்பட்ட செய்திப் பரிமாற்றத் தளங்கள், இந்தியா உட்பட உலகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய வழிகளாக மாறியுள்ளன. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம்  (NCB) 2025 ஆண்டு அறிக்கையின்படி, இந்த மூன்றில், டெலிகிராம் போதைப்பொருள் தொடர்பான விளம்பரங்களுக்கான ஒரு முக்கியத் தளமாக உருவெடுத்துள்ளது.


3. சட்டவிரோத அபினின் (Opium) முக்கிய ஆதாரம் மியான்மர் : நாட்டின், உயர்மட்ட போதைப்பொருள் சட்ட அமலாக்க அமைப்பின் அறிக்கை, மியான்மரிலிருந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்குச் செல்லும் ஒரு கடத்தல் பாதையை ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் குறிப்பிட்டுள்ளதுடன், அப்பகுதியில் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகம் ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதுடன் தொடர்புடையது என்றும் எச்சரித்துள்ளது.


“தலிபான்கள் பாப்பி (poppy) சாகுபடிக்கு விதித்த தடையின் பின்விளைவுகள் மற்றும் மோதல், பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில் மியான்மரில் பாப்பி (poppy) சாகுபடி தொடர்ந்து விரிவடைந்து வருவதன் காரணமாக, சட்டவிரோத அபினி உற்பத்தியில் முன்னணி ஆதாரமாக மியான்மர் இப்போது ஆப்கானிஸ்தானை முந்தியுள்ளது,” என்று இந்த அறிக்கை கூறியது.


4. சட்டவிரோத சாகுபடிக்கு எதிரான நடவடிக்கைகள் : சட்டவிரோத சாகுபடிக்கு எதிரான முக்கிய நடவடிக்கை குறித்தும் அமலாக்க முகமைகள் தெரிவித்துள்ளன. “அழிக்கப்பட்ட சட்டவிரோத பாப்பி சாகுபடிப் பரப்பளவு, 2024-ல் அழிக்கப்பட்ட 22,512 ஏக்கரைவிட கிட்டத்தட்ட இருமடங்காக, 2025-ல் 42,282 ஏக்கராக வெகுவாக அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது. அழிக்கப்பட்ட சட்டவிரோத கஞ்சா சாகுபடிப் பரப்பளவும், ஒரு வருடத்திற்கு முன்பு 34,018 ஏக்கராக இருந்த நிலையில் இருந்து, 38,193 ஏக்கராக அதிகரித்துள்ளது,” என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


அறிக்கையின்படி, 2023-ம் ஆண்டில் உலகளவில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து செயற்கை போதைப்பொருட்களிலும் கிட்டத்தட்ட பாதி ஆம்பெடமைன் வகை ஊக்கமருந்துகளாக (amphetamine-type stimulants (ATS)) இருந்தன. மேலும் மெத்தம்பெடமைன் (methamphetamine) மற்றும் ஆம்பெடமைன் (amphetamine) ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் பொருட்களாகத் தொடர்ந்தன.


மெக்சிகோ, மியான்மர், ஆப்கானிஸ்தான், செக்கியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட மையங்களில் மெத்தம்பெட்டமைன் (methamphetamine) உற்பத்தி தொடர்ந்து குவிந்துள்ளதாகவும், அதே வேளையில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அண்டை நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் கடத்தல் முறைகள் விரிவடைந்து வருவதாகவும் இந்த அறிக்கை மேலும் கூறியது.


5. எளிதில் ஊடுருவக்கூடிய எல்லையின் சவால் : “(இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான) எளிதில் ஊடுருவக்கூடிய எல்லையும், தடையற்ற நடமாட்டக் கொள்கையும் (Free Movement Regime (FMR)) ஆட்கடத்தலை எளிதாக்குகின்றன, உள்ளூர் போதைப்பழக்கத்தை மோசமாக்குகின்றன, மேலும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு நிதியளிக்கின்றன,” என்று இந்த அறிக்கை கூறியது.


6. போதைப்பொருள் தொடர்பான மாறிவரும் உலகளாவிய சூழல் : அதீத வீரியம் கொண்ட செயற்கை ஓபியாய்டுகளின் (synthetic opioids) அதிகரிப்பு மற்றும் வரலாறு காணாத கொக்கைன் உற்பத்தி (cocaine production) சாதனை அளவை எட்டியிருப்பது, வேகமாக மாறிவரும் உலகளாவிய போதைப்பொருள் சூழலால் இந்தியா பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.


7. உருவாகிவரும் இரண்டு அச்சுறுத்தல்கள் : உடனடி கவனம் தேவைப்படும் இரண்டு புதிய அச்சுறுத்தல்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஹெராயினை (heroin) விட 500 மடங்கு அதிக வீரியம் கொண்டதாகக் கூறப்படும் நிடாசீன்கள் (nitazenes) எனப்படும் ஒருவகை செயற்கை ஓபியாய்டுகளின் (synthetic opioids) பரவல், மற்றும் இடைவழிப் பொருளாதாரங்கள் முழுவதும் போதைப்பொருள் கடத்தலுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக்கும் இடையிலான வளர்ந்து வரும் தொடர்பாகும்.


உலக போதைப்பொருள் அறிக்கை 2025-ன் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?


1. ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (United Nations Office on Drugs and Crime (UNODC)), உலகெங்கிலும் உள்ள போதைப்பொருள் போக்குகள் மற்றும் முறைகள் குறித்த அறிவியல் பூர்வமான மற்றும் பாரபட்சமற்ற கண்ணோட்டத்தை வழங்கும் உலக போதைப்பொருள் அறிக்கையை வெளியிட்டது.


2. “உலகளாவிய நிலையற்றத் தன்மை, உலக போதைப்பொருள் பிரச்சனையின் சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்புச் செலவுகளை மேலும் அதிகரிக்கிறது” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, 2013-ல் 5.2 சதவீதமாக இருந்த போதைப்பொருள் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில், 2023-ல் 316 மில்லியன் மக்கள் (மது மற்றும் புகையிலை தவிர்த்து) போதைப்பொருளைப் பயன்படுத்தினர். இது 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் ஆறு சதவீதமாகும்.


3. 244 மில்லியன் பயனாளர்களுடன் கஞ்சா மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஓபியாய்டுகள்-Opioids (61 மில்லியன்), ஆம்பெடமைன்கள்-Amphetamines (30.7 மில்லியன்), கொக்கைன்-Cocaine (25 மில்லியன்) மற்றும் எக்ஸ்டஸி-Ecstasy (21 மில்லியன்) ஆகியவை இருந்தன. கடுமையான சூழல், நிலையற்ற தன்மை மற்றும் மோதல்களிலிருந்து தப்பி ஓடும் பாதிக்கப்படக்கூடிய புதிய மக்கள் குழுக்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.


4. போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில், இயலாமை மற்றும் அகால மரணங்கள் (disability-adjusted life years (DALY)) காரணமாக கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மரணங்களும், 2.8 கோடி ஆரோக்கியமான ஆயுட்கால இழப்புகளும் ஏற்பட்டன. 2023-ம் ஆண்டில், போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் உள்ளவர்களில் 12 பேரில் ஒருவர் மட்டுமே ஏதேனும் ஒரு வகையான போதைப்பொருள் சிகிச்சையைப் பெற்றிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


5. பிராந்தியம் வாரியாக, கஞ்சா பயன்பாட்டில் உலகில் மிகப்பெரிய பாலின இடைவெளி (gender gap) ஆசியாவில் அதிகளவில் உள்ளதாக என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. கடந்த ஆண்டில் கஞ்சா பயன்படுத்திய ஒவ்வொரு 100 பேரில் 90 பேர் ஆண்கள் ஆவர். மேலும், உலகளவில் ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்துவோரின் மிகப்பெரிய எண்ணிக்கையையும் (2022-ல் 5.2 மில்லியன்) மற்றும் அவர்களில், எச்.ஐ.வி (615,000 பேர்) மற்றும் ஹெபடைடிஸ் சி (2.8 மில்லியன்) பாதிப்புடன் வாழ்பவர்களின் எண்ணிக்கையையும் ஆசியா கொண்டுள்ளது.


'மரண பிறைவளையம்' (Death Crescent) மற்றும் 'மரண முக்கோணம்' (Death Triangle) என்றால் என்ன?**


1. ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகத்தின் (UNODC) கூற்றுப்படி, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடைபெறும் இரண்டு முக்கியப் பகுதிகள் “பொன் பிறைவளையம்” (Golden Crescent) மற்றும் “பொன் முக்கோணம்” (Golden Triangle) ஆகும்.


2. பொன் பிறைவளையம் (Golden Crescent) என்பது ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சட்டவிரோத அபின் உற்பத்திப் பகுதிகளை உள்ளடக்கியது மற்றும் “பொன் முக்கோணம்” (Golden Triangle) மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸை உள்ளடக்கியது.


3. “இந்தியா, ‘மரணப் பிறைவளையம்’ (Death Crescent) மற்றும் ‘மரண முக்கோணம்’ (Death Triangle) ஆகியவற்றுக்கு இடையில் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக ஹெராயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் நாட்டிற்குள் வெள்ளமெனப் பாய்கின்றன. இந்த போதைப்பொருட்களுக்கான உலகின் தேவையில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இந்த இரண்டு பகுதிகளிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தியா மற்ற நாடுகளுக்கு ஒரு பெரிய சந்தையாகவும், அதேசமயம் ஒரு இடைவழிப் பாதையாகவும் விளங்குகிறது,” என்று ராகேஷ் அஸ்தானா எழுதியிருந்தார்.


4. 2023-ஆம் ஆண்டில், ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு’ குறித்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், “முன்னதான போதைப்பொருள் கடத்தலின் முக்கியப் பகுதிகள் ‘தங்க முக்கோணம்’ மற்றும் ‘தங்கப் பிறைவளையம்’ என்று அழைக்கப்பட்டன. ஆனால், இந்திய அரசு சர்வதேச அளவில் அதனை ‘மரண முக்கோணம்’ மற்றும் ‘மரணப் பிறைவளையம்’ என்று பெயரிட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. இந்த அணுகுமுறை, போதைப்பொருளுக்கு எதிரான நமது போராட்டத்தின் திசையையும் தீவிரத்தையும் காட்டுகிறது” என்று கூறினார்.


முக்கியமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள்


1. ஆபரேஷன் கிரிஸ்டல் ஃபோர்ட்ரஸ் (Operation Crystal Fortress) : இந்த நடவடிக்கை, மெத்தம்பெட்டமைனைக் குறிக்கும் “கிரிஸ்டல்” (Crystal) என்ற வார்த்தையையும், அது மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட பகுதியைக் குறிக்கும் “ஃபோர்ட்ரஸ்” (Fortress) என்ற வார்த்தையையும் இணைத்து அதன் பெயரைப் பெற்றது. மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) அதன் வெள்ளை, படிகம் போன்ற தோற்றம் மற்றும் உச்ச கேளிக்கைகளில் அதற்கு உள்ள அதிக தேவை காரணமாக, மெத்தாம்பெட்டமைன் "ஐஸ்" போதைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது.


2. நீக்கும் நடவடிக்கை (Operation WeedOut) : இந்தியாவுக்குள் ஹைட்ரோபோனிக் (hydroponic) கஞ்சாவைக் கடத்தும் ஒரு கும்பலை ஒழிப்பதற்காக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence (DRI)) “வீட்அவுட்” (WeedOut) என்ற குறியீட்டுப் பெயரில் அகில இந்திய அளவிலான ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) என்பது நிதி அமைச்சகத்தின்கீழ் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் ழ் (Central Board of Indirect Taxes & Customs (CBIC)) செயல்படும் ஒரு முதன்மையான புலனாய்வு மற்றும் அமலாக்க முகமையாகும். போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சர்வதேச வர்த்தகம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது இதன் முக்கியப் பணியாகும்.


3. ஆபரேஷன் சமுத்திரகுப்த் (Operation Samudragupt) : ஜனவரி 2022-ல் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சமுத்திரகுப்த், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (Indian Ocean Region (IOR)) போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியக் கடற்படை மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (Narcotics Control Bureau (NCB)) இணைந்து மேற்கொண்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.


4. ஆபரேஷன் நார்கோஸ் (Operation NARCOS) : ஜூன் 2022-ல், இரயில்களில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection Force (RPF)) ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தச் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களைக் குறிவைப்பதற்காக, இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) இரயில்களில் தனது சோதனைகளைத் தீவிரப்படுத்தியதுடன், போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போதைப்பொருள் அதிகம் காணப்படும் இடங்களையும் அடையாளம் கண்டது.


Original articles : From Telegram Drug Networks to Nitazenes: What the NCB Annual Report 2025 reveals. -Roshni Yadav

Share: