சாத்தியக்கூறுக்கான திட்டமிடல்.

போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால், மத்திய அரசு ஒரு பெரும் சவாலை எதிர்கொள்ளும்.


நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலிருந்து ₹1 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிலைப்படுத்தல் நிதியை உருவாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, மூன்றாவது வாரத்தில் இருக்கும் போரின் தாக்கம் குறித்த பல்வேறு சூழ்நிலைகளை நிதி அமைச்சகம் வகுத்து, அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதும் ஒரு சிறப்பான செயலாகும். முதலாவதாக, இன்னும் ஓரிரு வாரங்களில் 2026 நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த நிதியானது பண வரவுகள் மற்றும் அமைச்சகங்களின் செலவிடப்படாத ஒதுக்கீடுகள் (அல்லது சேமிப்புகள்) ஆகியவற்றையும் இது பயன்படுத்திக்கொள்ளும்.


சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ₹2.8 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் மானியக் கோரிக்கையின் ஒரு பகுதியாக இந்த நிதி திகழ்கிறது. கூடுதலாக வழங்கப்படும் ₹1.8 லட்சம் கோடியானது, பாதுகாப்புத் துறை செலவினங்களைத் தவிர, உணவுக்கான மானியத்தை (பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ் ₹23,641 கோடி) மற்றும் உரத்திற்கான மானியத்தை (₹19,230 கோடி) அதிகரிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உர மானியத்திற்கான கூடுதல் ஒதுக்கீடு, போரின் காரணாமாக ஏற்படும் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக இருக்கலாம். அதேசமயம், வாழ்வாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காக உணவு மானியம் அதிகரிக்கப்பட்டிருக்கலாம். இந்த போர் சூழலானது பொருளாதாரத்தை எதிர்பாராத வழிகளில் பாதிக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது என்பதையே இத்தகைய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.


யதார்த்தமான மதிப்பீட்டை மேற்கொள்ளும் விதமாக, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், நிதி மீதான நிலைக்குழுவின் முன் பல்வேறு சாத்தியமான சூழ்நிலைகளை முன்வைத்துள்ளார். அக்குழுவின் அறிக்கை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 130 டாலராக நீடித்தால், சில்லறைப் பணவீக்கம் 5.5 சதவீதமாக உயரும் என்றும், இந்த நிதியாண்டில் 7.4 சதவீதமாக உள்ள உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2027 நிதியாண்டில் 6.4 சதவீதமாகக் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit (CAD)) தற்போதைய 1.2 சதவீதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதமாகவும், நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாகவும் அதிகரிக்கும். இருப்பினும், ஒரு பீப்பாய் விலை 90 டாலராக நீடித்தால், 7-7.4 சதவிகித வளர்ச்சி, 2 சதவிகித பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-1.2 சதவிகித நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீத அளவிலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் ஏற்படும் கடுமையான உயர்வு, பணவியல் அதிகாரிகளுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தும். இறக்குமதிகள் அதிகரிக்கும் அதே வேளையில், வெளிநாட்டிலிருந்து வரும் பணம், முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் மீதான தாக்கத்தின் காரணமாக இது நிகழக்கூடும். எனினும், கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 90 டாலர் வரை உயர்ந்தாலும், அதன் சுமையை நுகர்வோர் மீது சுமத்தாமல் மத்திய அரசால் அதனைச் சமாளிக்க முடியும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வின் தாக்கத்தை ஈடுசெய்யும் ஒரு 'தாங்கியாக' (cushion) குறிப்பிட்ட நிதியம் செயல்பட முடியும்.


இந்தப் போர், தேக்கநிலை-பணவீக்கத் தாக்கத்தை (stagflationary impact) ஏற்படுத்தும். தொழில்துறை எண்ணெய் மற்றும் எரிவாயுப் பயனாளர்களுக்கான பொருட்களின் விலை உயர்வைத் தவிர, உள்ளீடுகள் மற்றும் இடைநிலைப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். பொதுவாக, ஏற்றுமதியாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), உலகப் பொருளாதார மந்தநிலைகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் செயல்பாட்டு மூலதன நிதியில் ஏற்படும் இடையூறுகளால் பாதிக்கப்படலாம். எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்துவதைத் தவிர, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் கையாண்ட உத்திகளைப் பின்பற்றி, மத்திய அரசு ஒரு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். விலைகளை நிலைப்படுத்தவும் கடன் ஆதரவை வழங்கவும் தேவைப்பட்டால் நிதியத்தின் மூலதனத்தை அதிகரிக்கலாம். பணவியல் கொள்கை முடிந்தவரை நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். நல்ல பேரியல் பொருளாதாரக் காரணிகளும் கையிருப்பும் இருப்பதால், நாடு அதற்குத் தயாராக இருந்தாலும்கூட, மிக மோசமான நிலை ஏற்படாமல் இருக்கலாம் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.

                           


Original Link: Scenario planning.


Share:

இந்தியத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் 'தொழில்' (Industry) என்பது எதைக் குறிக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க உள்ளது. -வினீத் பல்லா

'தொழில்' (industry) என்பதன் வரையறையானது, எந்தப் பணியிடங்கள் சட்டத்தின் கீழ் வருகின்றன என்பதையும், அதன் விளைவாக, ஊதியம், வேலை நேரம், வேலைநிறுத்தங்கள் மற்றும் தன்னிச்சையான பணிநீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான உயர் அளவிலான சட்டப்பூர்வப் பாதுகாப்பிற்கு எந்த பணியாளர்கள் தகுதியுடையவர்கள் என்பதையும் தீர்மானிக்கிறது.


இந்தியச் சட்டத்தின்கீழ் "தொழில்" (industry) என்பது சரியாக எதைக் குறிக்கிறது? என்ற பல பத்தாண்டுகள் பழமையான சட்ட விவாதத்திற்கு நீதிமன்றம் ஒரு தீர்வு காண, உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்த வாரம் வாதங்களைக் கேட்டு வருகிறது.


இந்தக் கேள்விக்கான பதிலானது, இந்தியாவின் தொழிலாளர் சட்ட அமைப்பில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னர் 1947-ம் ஆண்டின் தொழிலாளர் தகராறு சட்டத்தின் (Industrial Disputes Act) கீழும், தற்போது அதற்குப் பதிலாக வரவிருக்கும் 2020-ம் ஆண்டின் தொழில்துறை உறவுகள் குறியீட்டின் (Industrial Relations Code) கீழும் உள்ள "தொழில்" என்பதன் வரையறையானது, எந்தெந்தப் பணியிடங்கள் இந்த சட்டத்தின் கீழ் வருகின்றன என்பதையும், அதன் விளைவாக, ஊதியம், வேலை நேரம், வேலைநிறுத்தங்கள் மற்றும் தன்னிச்சையான பணிநீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்ட பிற விஷயங்களில் எந்தெந்த பணியாளர்கள் உயர் அளவிலான சட்டப்பூர்வப் பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள் என்பதையும் தீர்மானிக்கிறது.


இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இந்த அமர்வில், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, பி.எஸ். நரசிம்ம, தீபங்கர் தத்தா, உஜ்ஜல் புயான், எஸ்.சி. சர்மா, ஜாய்மால்யா பாக்சி, அலோக் ஆராதே மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இச்சொல்லை விரிவாக விளக்கிய 1978-ம் ஆண்டின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பை இது மறுபரிசீலனை செய்யும். அதன் விளைவாக, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நலத்துறைகள்கூட தொழிலாளர் தகராறு சட்டத்தின் (Industrial Disputes Act) கீழ் கொண்டுவரப்பட்டன.


1978-ம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு


தற்போதைய சட்டநடைமுறையின் தொடக்கமானது, 1978-ம் ஆண்டில் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் vs ஏ. ராஜப்பா வழக்கில் (Bangalore Water Supply and Sewerage Board vs A Rajappa) உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பில் அமைந்துள்ளது.


இந்தத் தீர்ப்புக்கு முன்பு, பாரம்பரிய இலாப நோக்கம் இல்லாத நிறுவனங்களைத் தொழில்களாக வகைப்படுத்த முடியுமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மையும், முரண்பட்ட நீதித்துறை கருத்துக்களும் நிலவியது. நீதிபதி வி. ஆர். கிருஷ்ண ஐயர் எழுதிய பெரும்பான்மைக் கருத்தில், நீதிமன்றம் மிகவும் விரிவான, "தொழிலாளர் சார்ந்த" அணுகுமுறையைக் கையாண்டது.


ஒரு தொழிலை அடையாளம் காண, "மும்முனைச் சோதனை" (triple test) என்று அறியப்பட்ட ஒன்றை நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. இந்தச் சோதனையின்படி, மூன்று நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் ஒரு நிறுவனம் தொழிலாகத் தகுதி பெறும் என்று குறிப்பிட்டது. அவை,


1. ஒரு முறையான செயல்பாடு இருக்க வேண்டும்.


2. அந்தச் செயல்பாடு, முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும்.


3. அந்தச் செயல்பாடு, மனிதர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் பொருட்கள் அல்லது சேவைகளின் உற்பத்தி அல்லது விநியோகத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


இலாப நோக்கம் ஒரு பொருட்டல்ல என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், ஒரு நிறுவனம் தொழில்துறையா என்பதைத் தீர்மானிப்பதற்கு மூலதன முதலீடு இல்லாதது பொருத்தமற்றது என்றும் அது கூறியுள்ளது.


நீதிமன்றம் இந்தச் சோதனையைப் பயன்படுத்தியபோது, அது ஒரு பரந்த விளக்கத்தை அளித்தது. அதில் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், அறப்பணி அமைப்புகள், மற்றும் சில மாநில நலத்திட்டங்கள் கூட தொழில்துறைகளாகத் தகுதிபெறுகின்றன என்று அது தீர்ப்பளித்தது. ஒரு நிறுவனம் பல செயல்பாடுகளை மேற்கொண்டால், அதன் முக்கிய அல்லது முதன்மைச் செயல்பாடே சட்டத்தின்கீழ் அதன் நிலையைத் தீர்மானிக்கும் என்று கூறி, நீதிமன்றம் ஒரு "முதன்மையான தன்மை" (dominant nature) சோதனையையும் முன்வைத்தது.


இருப்பினும், இந்தத் தீர்ப்பு ஒருமனதாக இருக்கவில்லை. இதில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தனர். ஒரு தொழில்துறையின் வரையறையானது, வணிகரீதியாக முறையாக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். மேலும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தாராளமயத் தொழில்கள் முதன்மையாக தனிப்பட்ட அறிவுத்திறனைச் சார்ந்துள்ளன என்றும், இந்தத் தொழில்களைத் தொழில்களாகக் கருதுவதற்கு அவற்றின் ஊழியர்களின் பங்களிப்பு வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


சட்டமன்றத்தின் செயலற்றத் தன்மை, நீதித்துறைக் குழப்பம்


1978-ம் ஆண்டு தீர்ப்பு, தொழிலாளர் உரிமைகளின் வரம்பை கணிசமாக விரிவுபடுத்தியது. ஆனால், அது தொழிலாளர் நீதிமன்றங்களில் "வழக்குகளின் கூடுதல்" (docket explosion) என்று பிற்கால நீதிமன்ற அமர்வுகள் வழக்குகள் விவரித்த ஒரு நிலைக்கும் வழிவகுத்தது.


அந்தத் தீர்ப்புக்குப் பதிலளிக்கும் விதமாக, நாடாளுமன்றம் 1982-ம் ஆண்டில் தொழில்துறை தகராறுகள் (திருத்த) சட்டத்தை (Industrial Disputes (Amendment) Act) இயற்றி, "தொழில்" என்ற சொல்லின் வரையறையை தடுக்க முயன்றது. இந்தத் திருத்தம், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் இறையாண்மை சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட பல வகை நடவடிக்கைகளை குறிப்பாக விலக்கியது.


இருப்பினும், அரசாங்கம் இந்த குறிப்பிட்ட விதியை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், அது நடைமுறைக்கு வரவில்லை. விலக்கப்பட்ட துறைகளின் ஊழியர்கள் தங்கள் பணியிடத் தகராறுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு மாற்று சட்ட அமைப்பு எதுவும் உருவாக்கப்படாததால், திருத்தப்பட்ட வரையறையை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு 2005-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் விளக்கியது. இதன் விளைவாக, 1978-ம் ஆண்டில் கொடுக்கப்பட்ட பரந்த வரையறை தொடர்ந்து நடைமுறையில் இருந்தது.


பின்னர், வெவ்வேறு உச்சநீதிமன்ற அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கின. உதாரணமாக, 1996-ல், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மகாராஷ்டிராவின் வனத்துறையானது ஒரு தொழில்துறை என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், 2001-ல், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கு முற்றிலும் எதிரான கருத்தைக் கொண்டு, குஜராத்தில் உள்ள அதே துறை ஒரு தொழில்துறை அல்ல என்று தீர்ப்பளித்தது.


ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கான பயணம்


இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக, உத்தரப் பிரதேச அரசு vs ஜெய் பிர் சிங் வழக்கில் (State of UP vs Jai Bir Singh), 2005-ம் ஆண்டில் இந்த விவகாரம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.


அந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1978-ம் ஆண்டு தீர்ப்பு குறித்துத் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தியதுடன், "தொழில்" என்பதற்கு மிக விரிவான விளக்கம் அளிப்பது "தனியார் நிறுவனங்களுக்குத் தடையாக" அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டது. முதலாளிகளோ அல்லது ஊழியர்களோ "ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செலுத்தாதவாறு" தொழில்துறைச் சட்டம் விளக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமர்வு குறிப்பிட்டது.


அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்டச் செயல்பாடுகளை, தொழில்துறைச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமா என்றும் அந்த நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. 1978-ம் ஆண்டு தீர்ப்பு ஏழு நீதிபதிகளால் வழங்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தை ஒரு பெரிய அமர்வுக்குப் பரிந்துரைத்தது. 2017-ம் ஆண்டில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கைத் தீர்ப்பதற்காக ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.


நீதிமன்றம் தற்போது எதை முடிவு செய்யவுள்ளது?


பிப்ரவரி 16 அன்று, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்புக்காக மூன்று பரந்த முக்கிய விவகாரங்களை வகுத்தது.


முதலாவதாக, 1978-ல் நீதிபதி கிருஷ்ண ஐயரால் வகுக்கப்பட்ட "மும்முனைச் சோதனை" (triple test) சரியான சட்டமாக இன்னும் நீடிக்கிறதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இதனுடன், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத 1982 திருத்தச் சட்டம் மற்றும் பல தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாத புதிய தொழில்துறை உறவுகள் குறியீடு (new Industrial Relations Code) ஆகியவற்றின் சட்டரீதியான தாக்கத்தையும் இந்த அமர்வு மதிப்பிடும்.


இரண்டாவதாக, அரசுத் துறைகளால் மேற்கொள்ளப்படும் சமூக நலச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை தொழில்துறை நடவடிக்கைகளாகக் கருத முடியுமா என்பதை இந்த அமர்வு தீர்மானிக்கும்.


மூன்றாவதாக, அரசின் "இறையாண்மைச் செயல்பாடு" (sovereign function) என்பது எதைக் குறிக்கிறது என்பதை நீதிமன்றம் தெளிவாக வரையறுக்கும். பொதுவாக, இறையாண்மைச் செயல்பாடுகள் என்பது பாரம்பரியமாக, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல், பாதுகாப்பு மற்றும் சட்டமன்றப் பணிகள் போன்ற ஒரு அரசாங்கத்தின் முக்கிய, பிறருக்கு மாற்ற இயலாத கடமைகளையே குறிக்கின்றன. இத்தகைய செயல்பாடுகள், "தொழில்துறை" (industry) என்ற சொல்லின் வரம்பிற்கு முற்றிலும் அப்பாற்பட்டவையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.


Original Link: Supreme Court to decide what counts as an ‘industry’ under Indian labour law.


Share:

சந்தேகத்தின் நெறிமுறைகள் : செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு அமைப்புகளுக்கு ஏன் நன்னெறிகளுக்கான ஒரு ‘UPI போன்ற திருப்புமுனை’ தேவைப்படுகிறது? - அவ்தேஷ் குமார்

முக அங்கீகாரம் (facial recognition) மற்றும் தேசிய தரவுத்தளங்கள் ஒன்றிணையும் நிலையில், இந்தியாவின் விளிம்புநிலைச் சமூகத்தினர் (marginalised communities), தங்கள் தரவுகள் மீது நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும் ஒரு புதிய “ஆழ் மறை அரசு” (Deep State) அமைப்பை எதிர்கொள்கின்றனர்.


    "ஆழ் மறை அரசு" (Deep State) என்பது, ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு வெளியே, இராணுவம், உளவுத்துறை மற்றும் அதிகாரத்துவ அமைப்புகளால் இயக்கப்படும் ஒரு மறைமுகமான ஆட்சியை அல்லது செல்வாக்கை குறிக்கிறது.


இந்தியாவில், மக்கள், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவை அனைவருக்கும் “அதிகபட்ச பலன்களை” (maximum benefits) வழங்கும் பயன்பாட்டுவாதக் கொள்கையின் (utilitarian principle) அடிப்படையில் இயங்கி வருகின்றன. இருப்பினும், அண்மைக்காலமாக, கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள், உத்திகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவை ஜனநாயகத்தையும், ‘டிஜிட்டல் இந்தியாவின்’ (Digital India) அனைவரையும் உள்ளடக்கிய நோக்கத்தையும் சீர்குலைத்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், தெருக்களில் உள்ள முகங்களை ஸ்கேன் செய்து சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிப்பு (CCTV) கேமராக்கள் மூலம் அடையாளம் காணவும், ஜூன் 2026-க்குள் டெல்லியின் அனைத்துப் பகுதிகளிலும் அதிநவீன ‘ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் கணினி மையத்தை’ (Command, Control, Communication, and Computer Centre (C4I)) செயல்படுத்தப்போவதாக டெல்லி காவல்துறை அறிவித்தது.


இதற்காக, டெல்லி காவல்துறையானது ஒரு இஸ்ரேலிய மென்பொருள் அமைப்பிலிருந்து உத்வேகம் பெற்றது. இந்த அமைப்பு (வெளியிலும் உள்ளேயும் கேமராக்கள், முழுமையான தரவு மற்றும் கணினி வசதிகள், மற்றும் காவல்துறை இயக்குபவர்களைக் கொண்ட ஒரு கண்காணிப்பு வாகனம்) 2018-ம் ஆண்டிலிருந்து வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லிப் பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தொடக்கத்தில், காணாமல் போன மற்றும் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கவே இது பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அதன்பின்னர் இதன் பயன்பாடு விரிவடைந்துள்ளது. 2019-ம் ஆண்டில் ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்தின்போதும், 2020 மற்றும் 2022-ல் ஜஹாங்கிர்புரி உட்பட வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்களின்போதும், மற்றும் 2023-ம் ஆண்டின் குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போதும் இது பயன்படுத்தப்பட்டது.


இது ஒரு தற்காலிக தீர்வாகக் கருதப்பட்டது. தற்போது, மிக விரைவிலேயே ஒரு இயல்பான நடைமுறையாக மாறி வருகிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட சில பகுதிகள் மற்றும் மக்கள், ஒருவித ‘ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும்’ (ghettoisation) நிலையை எதிர்கொள்கின்றனர். சிசிடிவி மற்றும் வெப்கேம்கள் போன்ற கண்காணிப்புக் கருவிகள் இந்தப் போக்கிற்கு பங்களிக்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் (குறிப்பாக, மொபைல் செயலிகள் மற்றும் மென்பொருள்கள் மூலம் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து பதிவு செய்யும் தொழில்நுட்பங்கள்) ஆகியவை மேம்பட்ட முறையில் இந்தச் செயல்முறையை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.


தரவு என்பது வலுவான அரசியல் தன்மை கொண்டது


முன்பு இஸ்ரேலிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்டு வந்ததைப் போலவே, C4I அமைப்பும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் இ-கட்டணம் (e-challan), தொலைத்தொடர்பு (telecom), வங்கிப் பதிவுகள் (banking records) உள்ளிட்ட தேசிய தரவுத்தள முகமைகளுடன் இணைந்து செயல்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அரசு முகமைகளிடமிருந்து ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட தரவுகளுடன், நேரடிப் பதிவின் மூலமும் ஒரு நபரின் அடையாளம் பகுப்பாய்வு செய்யப்படும். குறிப்பாக, வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியில், இந்தத் தொழில்நுட்பத்திற்கு அளிக்கப்பட்ட தரவுகள் இனி C4I-க்காகப் பயன்படுத்தப்படும். நேரடித் தரவு மற்றும் தேசிய முகமைகளின் பதிவுகளின் அடிப்படையில் 60 சதவிகிதம் பொருத்தம் இருந்தால், அந்த நபர் ஒரு சிறு குற்றத்தைச் செய்து, அந்த வழக்கு நீதித்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், அவர் ஒரு "சாத்தியமான அச்சுறுத்தலாக" (potential threat) கருதப்படுவார். துரதிர்ஷ்டவசமாக, ஒரு நீதிமன்றத் தள்ளுபடியுடன் இந்த தரவுகள் முடிந்துவிடுவதில்லை. பதிவுகள் தானாகவே நீக்கப்படுவதில்லை. அதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையை அணுக வேண்டும். நீண்டகால அடிப்படையில், இந்தத் தரவுகள் மக்களைப் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.


அமெரிக்காவில் உள்ள சிறுபான்மையினரைப் போலவே, பாரபட்சமான தரவுகள் (biased data) மற்றும் முன்முடிவுகள் (preconceived notion) காரணமாக விளிம்புநிலை சமூகங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் என்று செயற்கை நுண்ணறிவு மற்றும் சட்டப் பேராசிரியர் இஃபோமா அஜுன்வா குறிப்பிடுகிறார். இந்த பாரபட்சமான செயலானது நேர்காணல்களிலும் தெளிவாகத் தெரிந்தது. இந்த அமைப்புகள், மனித மேலாளர்களின் பாரபட்சமான பார்வைகளால் பாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆட்சேர்ப்பு செயல்முறைகள், ஒரு புகழ்பெற்ற பள்ளி அல்லது கல்லூரியின் பெயர் போன்ற சில முக்கிய சொற்கள் விடுபட்டிருந்ததால், தனிபட்டவிவரக் குறிப்புகளைத் தேர்வு செய்யவில்லை. அரசியல் விஞ்ஞானி பார்த்தா சாட்டர்ஜி, அத்தகையவர்களை "உரிமை கோரும் குடிமக்கள்" (entitled citizens) என்று குறிப்பிடுகிறார். அவர்களுக்கு உரிமைகள் இருந்தாலும், அவர்கள் "முறையான குடிமக்களாக" (proper citizens) அங்கீகரிக்கப்படாமல், அவர்கள் அரசின் இரக்கத்தில் வாழ்கிறார்கள். மேலும், அவர்கள் ஒருபோதும் "சட்டபூர்வமான குடியுரிமை" (legitimate citizenship) பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை. எனவே, நிதித்துறையில் நாம் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) அறிமுகப்படுத்தியதைப் போல, பல சரிபார்ப்புகளைக் கொண்ட "பொறுப்பான தொழில்நுட்பங்கள்" (responsible technologies) நமக்குத் தேவை. சட்டம் மற்றும் ஒழுங்குத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அதே கவனமான முறையில் விரிவுபடுத்த முடியுமா? என்பதுதான் கேள்வி.


இடம், வாழ்வாதாரம் மற்றும் அடையாளம்


டெல்லியானது, புலம்பெயர்ந்த மக்கள்தொகைக்கு பெயர் பெற்றது. அவர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவுகளிலிருந்து வருகிறார்கள். 2022–23-ஆம் ஆண்டுக்கான டெல்லி பொருளாதார ஆய்வின்படி, வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் கட்டுமானம், உற்பத்தி, சில்லறை வணிகம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் பணிபுரிகின்றனர்.


டெல்லியின் சேவைப் பொருளாதாரத்தில், குறைந்த ஊதியம் பெறும் உள்நாட்டு அழைப்பு மையம் வேலைகளுக்குக் (call centre jobs) கூட, தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் விண்ணப்பதாரர்களின் வசிப்பிட முகவரிகளைச் சரிபார்த்து, காவல்துறை சரிபார்ப்பைக் கோருகின்றன. இது சில சமயங்களில் “லஞ்சம்” வாங்குவதற்கான சாத்தியக்கூறுக்கு வழிவகுக்கிறது. உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate (NOC)) பெறுவதற்காக தனிநபர்கள் பணம் செலுத்தக்கூடும். அஜுன்வா இந்தச் செயல்முறையை “மறைமுகப் பாரபட்சங்கள்” (hidden biases) என்று குறிப்பிடுகிறார். மேலும், கண்காணிப்பு அறிஞர் டேவிட் லயன் இதை மனிதப் பாரபட்சத்தின் காரணமாக நிகழும் “சமூகப் பிரிப்பு” (social sorting) என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆட்சேர்ப்பு இன்னும் அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இது விலை உயர்ந்ததாகவும், தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படுவதாலும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறக்கூடும். ஒவ்வொரு வேலைத் துறையிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது.


தரவுகளும் தொழில்நுட்பங்களும், குறிப்பாக கண்காணிப்பு அடிப்படையிலான தொழில்நுட்பங்கள், சில மக்களையும் சமூகங்களையும் “இரண்டாம் தரக் குடிமக்களாக” (second-class citizens) மாற்றி வருகின்றன. தொழில்நுட்பங்கள் ஒரு “ஆழ் மறை அரசு" (Deep State) போலச் செயல்படுகின்றன. இதன் விளைவாக, சமூகத்தின் நலிந்த பிரிவினர் அதிக “சந்தேகத்திற்குரியவர்களாக” மாறி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக ஆதிக்கமுள்ள சாதி மற்றும் வர்க்கக் குழுக்களால் வடிவமைக்கப்பட்ட, வரலாற்றுரீதியான, பாரபட்சமான தரவுகளுக்குப் பதிலாக, விரிவான தரவுகளால் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டால், டிஜிட்டல் இந்தியா அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவாக இருக்க முடியும்.


இக்கட்டுரையின் ஆசிரியர், லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனத்தின் உதவிப் பேராசிரியராக உள்ளார்.


Original Link: Algorithms of suspicion: Why AI surveillance systems need a ‘UPI moment’ for ethics.


Share:

2021-2025 காலகட்டத்தில் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்த நாடுகள் - ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி


ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Stockholm International Peace Research Institute (SIPRI)) சமீபத்திய அறிக்கையின்படி, 2021 முதல் 2025-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாடுகளுக்கிடையே நடைபெற்ற முக்கிய ஆயுதப் பரிமாற்றங்களின் உலகளாவிய அளவு, அதற்கு முந்தைய ஐந்தாண்டு காலகட்டத்தைவிட (2016–20) 9.2 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது. மேலும், இந்த இரண்டு காலகட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத இறக்குமதியானது மூன்று மடங்கிற்கும் மேலாக (210 சதவீதம்) அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தச்சூழலில், அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களையும், இந்தியா குறித்து அது தெரிவித்துள்ள தகவல்களையும் அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. 2021 முதல் 2025-ஆம் ஆண்டு காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களின் சர்வதேசப் பரிமாற்ற அளவு, 2016–20-ஆம் ஆண்டு காலகட்டத்தைவிட 9.2 சதவீதம் அதிகமாக இருந்தது. இது 2011–15 காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

2. 2021 முதல் 2025-ஆம் ஆண்டு காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களை விநியோகிக்கும் நாடுகளாக 66 நாடுகளை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) அடையாளம் கண்டுள்ளது. இக்காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களை விநியோகித்த முதல் ஐந்து பெரிய நாடுகள்: அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகும். இந்த ஐந்து நாடுகளும் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 70 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன.

3. 2016–20 மற்றும் 2021–25 ஆகிய காலகட்டங்களுக்கு இடையே, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனாவின் ஆயுத ஏற்றுமதிகள் அதிகரித்தன. அதே வேளையில், ரஷ்யாவின் ஏற்றுமதிகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. 2016–20 முதல் 2021–25 வரை, அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி 27 சதவீதம் அதிகரித்தன; இதன் மூலம், மொத்த உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா 42 சதவீதப் பங்கை எட்டியுள்ளது.Knowledge Nugget | Trends in International Arms Transfers 2025: Key highlights of SIPRI report for UPSC Exam


4. 2021–25 காலகட்டத்தில், ரஷ்யா உலகின் 3-வது மிகப்பெரிய ஆயுத விநியோக நாடாக இருந்தது. உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அதன் பங்கு, 2016–20 காலகட்டத்தில் இருந்த 21 சதவீதத்திலிருந்து, 2021–25 காலகட்டத்தில் 6.8 சதவீதமாகக் குறைந்தது. இந்த  இரண்டு காலகட்டங்களுக்கு இடையே, உலகின் முதல் 10 நாடுகளில், குறைந்த (–64%) ஆயுத ஏற்றுமதி கொண்ட ஒரே நாடு ரஷ்யாவாகும்.


Knowledge Nugget | Trends in International Arms Transfers 2025: Key highlights of SIPRI report for UPSC Exam

5. 2021–25-ஆம் ஆண்டு காலகட்டத்தில், முக்கிய ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டவர்களாக 162 நாடுகளையும் 4 அரசு சாரா ஆயுதக் குழுக்களையும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) அடையாளம் கண்டுள்ளது. இக்காலகட்டத்தில் உலகளாவிய மொத்த ஆயுத இறக்குமதியில் 35 சதவீதத்தைப் பெற்றுக்கொண்ட உக்ரைன், இந்தியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளே முக்கிய ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டு முதல் ஐந்து இடங்களை  பிடித்தன.


6. 2021–25 காலகட்டத்தில், உக்ரைன் உலகின் மிகப்பெரிய முக்கிய ஆயுத இறக்குமதியாளராகத் திகழ்ந்தது; 2016–20 காலகட்டத்தில் 0.1 சதவீதமாக இருந்த அதன் இறக்குமதிப் பங்கு, 2021–25 காலகட்டத்தில் உலகளாவிய மொத்த ஆயுத இறக்குமதியில் 9.7 சதவீதமாக உயர்ந்தது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், மொத்த ஆயுத இறக்குமதியில் உக்ரைனின் பங்கு 8.8 சதவீதமாக இருந்தது.


7. 2021–25 காலகட்டத்தில், 1960-களுக்குப் பிறகு முதன்முறையாக, உலகளாவிய மொத்த ஆயுத இறக்குமதியில் மிகப்பெரிய பங்கை (33 சதவீதம்) கொண்ட பிராந்தியமாக ஐரோப்பா திகழ்ந்தது. ஆசியா மற்றும் ஓசியானியா (31 சதவீதம்) அடுத்த மிகப்பெரிய பகுதியாக இருந்தது; அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு (26 சதவீதம்), அமெரிக்கக் கண்டங்கள் (5.6 சதவீதம்) மற்றும் ஆப்பிரிக்கா (4.3 சதவீதம்) வருகின்றன.


இந்தியாவின் உலகளாவிய நிலை (Global position of India)

1. 2021–25-ஆம் ஆண்டு காலகட்டத்தில், உலகளாவிய மொத்த ஆயுத இறக்குமதியில் 8.2 சதவீதப் பங்கைக் கொண்டு, இந்தியா உலகின் 2-வது மிகப்பெரிய ஆயுத இறக்குமதி கொண்ட  நாடாகத்  இருந்தது.

2. 2016–20 மற்றும் 2021–25 ஆகிய காலகட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4.0 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு, இந்தியா தனக்கான ஆயுதங்களைத் தானே வடிவமைத்து உற்பத்தி செய்யும் திறன் வளர்ந்து வருவதும் ஒரு  காரணமாகும்.

3. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா தனது ஆயுத தொடர்புகளை ரஷ்யாவிலிருந்து பெறாமல், மேற்கு நாடுகளான பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நோக்கி நகர்ந்துள்ளது.

4. இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 2011–15-ல் 70% இருந்து, 2016–20-ல் 51% ஆகவும், 2021–25-ல் 40% ஆகவும் குறைந்துள்ளது.

5. 2021–25 காலகட்டத்தில் இந்தியாவிற்கு ஆயுதங்களை விநியோகித்த முதல் மூன்று நாடுகள் முறையே ரஷ்யா (40%), பிரான்ஸ் (29%) மற்றும் இஸ்ரேல் (15%) ஆகும்.

                               உங்களுக்குத் தெரியுமா?

                      2021–25 காலப்பகுதியில், பாகிஸ்தான் உலகளவில் முக்கிய ஆயுதங்களை பெறும் நாடுகளில் 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. அந்த நாடு 2016–20-ல் 10-வது இடத்திலிருந்து உயர்ந்துள்ளது. இந்த இரண்டு காலப்பகுதிகளுக்கிடையில் அதன் ஆயுத இறக்குமதி 66% அதிகரித்துள்ளது. 2021–25ல், உலகளாவிய ஆயுத இறக்குமதியில் பாகிஸ்தானின் பங்கு 4.2% ஆக இருந்தது. இதில், அதன் இறக்குமதியின் 80% சீனாவிலிருந்து வந்தது; இது 2016–20-ல் இருந்த 73%-லிருந்து ஏற்பட்ட அதிகரித்ததாகும்.


ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) என்றால் என்ன?

1. 1966-ல் நிறுவப்பட்ட SIPRI, மோதல், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான சர்வதேச நிறுவனம் ஆகும். இது கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு, பொதுத் தகவல்களின் அடிப்படையில் தரவுகள், பகுப்பாய்வுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.

2. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஆயுத பரிமாற்றங்களுக்கான புள்ளிவிவரங்கள், SIPRI வரையறைப்படி முக்கிய ஆயுதங்களின் உண்மையான விநியோகங்களை அடிப்படையாகக் கொண்டவை. சர்வதேச அளவில் முக்கிய ஆயுத பரிமாற்றங்களின் அளவை அளவிட SIPRI, போக்கு குறியீட்டு மதிப்பு (Trend-Indicator Value (TIV)) எனப்படும் பொதுவான அளவைப்  பயன்படுத்துகிறது.


Original Link: Largest arms importing and exporting countries (2021–2025)


Share:

'Sea Dragon முதல் MILAN வரை: முக்கியப் இராணுவப் பயிற்சிகளின் தொகுப்பு - ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி


மார்ச் மாதம் முழுவதும் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படைத் தளத்தில் நடைபெறும் 2026-ஆம் ஆண்டு Sea Dragon பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்கிறது. இப்பயிற்சியானது, பல்வேறு நட்புநாடுகளின் கடல்சார் படைகளை ஒன்றிணைத்துள்ளது. இச்சூழலில், இப்பயிற்சி குறித்தும், சில நாட்களுக்கு முன்னர் செய்திகளில் இடம்பெற்ற பிற பாதுகாப்புப் பயிற்சிகள் குறித்தும் அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. மார்ச் மாதம் முழுவதும் நடைபெறும் 2026-ஆம் ஆண்டு Sea Dragon  பயிற்சியானது, அமெரிக்கக் கடற்படையின் தலைமையில் நடைபெறும் பன்னாட்டு தேசிய நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் (Anti-Submarine Warfare (ASW)) பயிற்சியாகும். இதில் இந்தியக் கடற்படை, ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் ராயல் நியூசிலாந்து விமானப்படை ஆகியவை பங்கேற்கின்றன.


2. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பங்கேற்கும் நாடுகளின் நேசப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சிறந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் திறன்களுக்கான புரிதலை மேம்படுத்தவும் இந்தப் பன்னாட்டு தேசியப் பயிற்சி நடத்தப்படுகிறது.


3. பங்கேற்பாளர்கள் வேகம், துல்லியம் மற்றும் ஒருங்கிணைந்த பணி நிறைவேற்றுதல் மூலம் சோதிக்கப்படுவார்கள். இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் (ASW) திறன் வலுப்பெற்று, நட்பு படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படும்.


இந்தியாவின் சமீபத்திய கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சிகள்


1. மிலன் (MILAN 2026): இந்திய கடற்படையின் Exercise MILAN 2026 எனும் 13-வது பதிப்பு, 2026 பிப்ரவரி 25-ஆம் தேதி, விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் இந்தியாவின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான INS Vikrant-ல் நடைபெற்ற நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. ‘நட்பு, ஒத்துழைப்பு, கூட்டாண்மை’ (Camaraderie, Cooperation, Collaboration) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு மற்ற நாடுகள் பங்கேற்றன. இதில் 42 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள், 29 விமானங்கள் கலந்து கொண்டன.


2. மலபார் கடற்படைப் பயிற்சி (Malabar Naval Exercise): இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள், தங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கத்துடன் (bolster interoperability), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வட பசிபிக் பகுதியிலுள்ள குவாமில் நடைபெற்ற வருடாந்திர 'மலபார்' கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றன.


3. யுத் அபியாஸ் 2025 (Yudh Abhyas 2025): இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வருடாந்திரக் கூட்டு இராணுவப் பயிற்சியான 'யுத் அபிஸ்ன்’ 21-வது பதிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் 14 வரை அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வெய்ன்ரைட் தளத்தில் நடைபெற்றது. படையினர் ஹெலிகாப்டர் வழித் தாக்குதல் நடவடிக்கைகள், கண்காணிப்புச் சாதனங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகளின் பயன்பாடு, பாறை ஏறும் கலை, மலைப்பகுதிப் போர் உத்திகள், காயமடைந்தோரை வெளியேற்றுதல், போர்க்கால மருத்துவ உதவி, மற்றும் பீரங்கிப்படை, விமானப்படை மற்றும் மின்னணுப் போர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ராஜதந்திரப்  பயிற்சிகளை மேற்கொண்டனர்.


4. வருணா பயிற்சி (Varuna Exercise): இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சி, 2025-ஆம் ஆண்டு மார்ச் 19 முதல் 22 வரை கோவா கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. கடல்சார் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய மற்றும் பிரெஞ்சு கடற்படைகளை ஒன்றிணைக்கும் ஆழமான இணைப்புகளுக்கு இது ஒரு வலிமையான சான்றாகத் இருந்து வருகிறது. 'சக்தி' (Shakti) என்பது இந்தியா மற்றும் பிரான்சின் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்


5. தர்ம பாதுகாவலன் (Dharma Guardian): இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 6-வது கூட்டு இராணுவப் பயிற்சி, ஜப்பானில் உள்ள கிழக்கு ஃபுஜி பயிற்சிப் பகுதியில் நிறைவடைந்தது. இது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மாறி மாறி நடத்தப்படும் ஆண்டு நிகழ்வாகும். தர்ம பாதுகாவலன் பயிற்சியின் 5-வது பதிப்பு 2024-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்றது. இரு நாடுகளும் பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான உறுதியைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும், சுதந்திரமான, திறந்த மற்றும் அனைவர் பங்களிப்பும் உள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரே நோக்கத்தையும் கொண்டுள்ளன. இந்தப் பயிற்சி, உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.


6. டஸ்ட்லிக் (Dustlik): இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான ‘Dustlik’-ன் 6-வது பதிப்பு, 2025 ஏப்ரல் 16 முதல் 28 வரை புனேவில் உள்ள அவுந்தில் வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் (Foreign Training Node (FTN)) நடைபெற்று வருகிறது.  இந்தப் பயிற்சியின் நோக்கம், இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தி, பல்வேறு சூழல்கள் மற்றும் நிலப்பரப்புகளில் கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திறன்களை உயர்த்துவதாகும்.


7. செயல்பாட்டுப் பயிற்சி (Passage Exercise): இந்தியக் கடற்படையின் ‘மறைந்திருத்தல்’ (stealth) ரக போர்க்கப்பலான INS Tabar, ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் P-8I கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை, ஜூன் 9 மற்றும் 10, 2025 ஆகிய தேதிகளில் வடக்கு அரபிக்கடலில், ஐக்கிய இராச்சியத்தின் ‘Carrier Strike Group’-உடன் இணைந்து ஒரு ‘செயல்பாட்டுப் பயிற்சியில்’ (PASSEX) பங்கேற்றன. இந்த கூட்டுப் பயிற்சி, இந்திய கடற்படை மற்றும் ராயல் கடற்படை இடையேயான அதிகரித்துவரும் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது. மேலும், கடல் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைந்த உறுதிப்பாடு மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளை இது வெளிக் காட்டுகிறது.

8. நாடோடி யானை (Nomadic Elephant): இந்தியா மற்றும் மங்கோலியா இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் 17-வது பதிப்பான ‘நாடோடி யானை’, மங்கோலியாவின் உலான்பாதர் (Ulaanbaatar) நகரில், மே 31 முதல் ஜூன் 13, 2025 வரை நடைபெறுகிறது. இது இந்தியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இந்தப் பயிற்சியின் 2024-ஆம் ஆண்டுப் பதிப்பு மேகாலயாவின் உம்ரோய் பகுதியில் நடத்தப்பட்டது.


9. மித்ர சக்தி (Mitra Shakti): இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் 10-வது பதிப்பான ‘மித்ர சக்தி’, மதுரு ஓயா பகுதியில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில், ஆகஸ்ட் 12 முதல் 25, 2024 வரை நடத்தப்பட்டது. ‘மித்ர சக்தி’ என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திரப் பயிற்சியாகும்.


வாயு சக்தி (Vayu Shakti) பயிற்சி


1. ‘வாயு சக்தி’ பயிற்சியின் செயல்விளக்கமானது, இந்திய விமானப்படையின் செயல்பாட்டு தயார் நிலை, துல்லியத் தாக்குதல் திறன் மற்றும் நிஜ உலகத்திற்கு நெருக்கமான போர்நிலை சூழலில் பல்வேறு துறைகளில் செயல்படும் திறனை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


2. இந்திய விமானப்படை (IAF), போக்ரான் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் நடத்தப்பட்ட மாதிரி தாக்குதல்கள் மூலம் Operation Sindoor-ல் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சில காட்சிகளை வெளிப்படுத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் முறைகளை வெளிக்காட்டும் வகையில், ஜாகுவார் மற்றும் மிராஜ் போர் விமானங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கின.


Original Link: From Sea Dragon to MILAN: Mapping key defence exercises.


Share:

இந்தியாவின் புதிய கார்பன் வரவுத் திட்டம் குறித்த தெளிவற்ற நிலை -ஏ.என். கணேசமூர்த்தி

இந்தத் திட்டம், தொழில்துறை மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்கள் இரண்டிலும் தெளிவான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.


2026-ஆம் ஆண்டு ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தில் கார்பன் வரவு (Carbon Credit) திட்டத்திற்காக ₹20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெளியான முக்கிய கொள்கை அறிவிப்பு, தற்போது மக்களிடையே குழப்பத்தையும் பல்வேறு கருத்துக்களையும் உருவாக்கியுள்ளது. கனரகத் தொழிற்சாலைகளுக்கான தெளிவான அரசுத் திட்டத்திற்கும், இது வேளாண் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரமாக அமையும் என்கிற வளரும் கருத்திற்கும் இடையே ஒரு முரண்பாடு நிலவுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு என்பது தொழிற்சாலைகளில் கார்பனைப் பிடித்து, பயன்படுத்தி மற்றும் சேமிக்கும் தொழில்நுட்பமான (Carbon Capture, Utilization, and Storage (CCUS)) முறையை மேம்படுத்துவதற்காகவா? அல்லது நிலையான விவசாய முறைகள் மூலம் வேளாண் தொழிலாளர்கள் கார்பன் வரவு வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டமா? என்பதுதான் முதன்மையான கேள்வியாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இது தொழிற்சாலைகளுக்கான (CCUS) திட்டம் என்றே குறிப்பிடுகின்றன, ஆனால் பல ஊடகச் செய்திகள் இது வேளாண் தொழிலாளர்களுக்கானது எனத் தெரிவித்து வருகின்றன.


கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage (CCUS)) என்பது எளிதில் குறைக்க முடியாத மாசுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளை மையமாகக் கொண்டது என்பதே இதன் முதல் விளக்கம் ஆகும். 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology (DST) வெளியிட்ட "கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வழிமுறை" (R&D Roadmap for CCUS) என்ற ஆவணமே இந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு முக்கிய அடிப்படையாகும். இந்த ஆவணம் மின்சாரம், எஃகு, சிமெண்ட், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இரசாயனங்கள் போன்ற இலக்கு துறைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்தத் தொழிற்சாலைகளின் உமிழ்வுகள் அதிக செறிவூட்டப்பட்டவை, அளவிடக்கூடியவை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் மட்டும் எளிதில் குறைக்க முடியாதவை என்பதால் இவை "கடினமானவை" என அழைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடைப் பிடித்து, மீண்டும் பயன்படுத்த அல்லது பூமிக்கடியில் சேமித்து வைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்காக ஐந்து ஆண்டுகளில் ₹20,000 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


பட்டியலில் இல்லை


கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilization, and Storage (CCUS)) துறைகளின் பட்டியலில் விவசாயம் குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெறவில்லை. பசுமை இல்ல வாயுக்களின் (Greenhouse Gases) ஆதாரமாக விவசாயத்தை இந்த வழிகாட்டி திட்டவரைவு அங்கீகரித்தாலும், அது வெறும் கணக்கீட்டுப் பதிவிற்காக மட்டுமே செய்யப்படுகிறது. பண்ணை உமிழ்வுகள் பரவலாகவும், உயிரியல் சார்ந்ததாகவும் இருப்பதோடு, கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பிடிப்பதற்கு ஏற்றதாக இல்லாததாலும், விவசாயம் இதிலிருந்து தெளிவாக விலக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, புதிய தொழிற்சாலை உமிழ்வுகளைத் தடுக்கும் கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பத்தையும், வளிமண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றும் 'கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம்' (Carbon Dioxide Removal (CDR)) முறையையும் இந்த வரைபடம் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதில் மண் கார்பன் சேமிப்பு, ‘Biochar’ மற்றும் வன விவசாயம் போன்ற நடைமுறைகள் மூலம் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


அதேநேரத்தில், வேளாண் தொழிலாளர்களைப் பருவநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வழங்கும் முக்கிய நபர்களாகச் சித்தரிக்கும் மற்றொரு கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்தத் திட்டவரைவு பெரும்பாலும் தொழில்துறை சார்ந்ததாக இருந்தபோதிலும், ஊடகங்கள் மற்றும் சமூக விவாதங்களின்படி, அரசாங்கத்தின் நிதிநிலைத் திட்ட ஆதரவு வேளாண் தொழிலாளர்கள் மீளுருவாக்கம் செய்யும் விவசாய முறைகளை மேற்கொண்டு கார்பன் சந்தைகளில் (Carbon markets) இணைய உதவும் என்றும், இதன் மூலம் விவசாய நிலங்கள் பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்யும் தீர்வுகளாக மாறும் என்றும் நம்பப்படுகிறது.


குழப்பத்தின் அடிப்படை காரணம்


இந்த விளக்கமானது இரண்டு வெவ்வேறு கருத்துக்களை ஒன்றிணைத்துக் குழப்பிக் கொள்வதுபோல் தோன்றுகிறது. நிதிநிலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு  (CCUS) நிதியானது தொழிற்சாலைகளில் வெளியாகும் கார்பனைப் பிடிப்பதற்கானது. ஆனால், இந்தியாவின் தன்னார்வ கார்பன் சந்தை (Voluntary Carbon Market) என்பது முற்றிலும் வேறுபட்டது. இதில் விவசாயம் மற்றும் வனத்துறை சார்ந்த திட்டங்கள் ஏற்கனவே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாங்குபவர்களுக்கு கார்பன் வரவுகளை (Carbon Credits) வழங்கத் தொடங்கிவிட்டன. வேளாண் தொழிலாளர்களுக்கு ஆதரவான கருத்தைக் கொண்டவர்கள், இயற்கை சார்ந்த கார்பன் வரவுகளுக்கான அதிகரித்து வரும் தேவையைக் குறிப்பிடுகின்றனர். சில தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுத் திட்டங்கள், மண்ணின் கார்பன் அளவை மேம்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்கும் வேளாண் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் மாதிரிகளை ஏற்கனவே சோதித்து வருகின்றன. நிதிநிலைத் திட்டத்தில் "கார்பன் வரவுத் திட்டம்" என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டதே இந்தக் குழப்பத்திற்குக் காரணமாக இருக்கலாம், இருப்பினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (Department of Science and Technology (DST)) வரைவுத்திட்டத்தின்படி அதன் விரிவான திட்டம் தொழில்துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.


விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்தக் குழப்பமானது ஒரு தகவல் தொடர்பு இடைவெளியையும், சிறந்த கொள்கை உருவாக்கத்திற்கான வாய்ப்பையும் காட்டுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை Department of Science and Technology (DST) தயாரித்த வரைபடம் தொழில்நுட்பரீதியாக வலுவான மற்றும் குறிப்பிட்ட துறைகளுக்கான ஆவணமாக இருந்தாலும், நிதி ஒதுக்கீட்டில் (Budget) பொதுவாகப் பயன்படுத்தப்படும் "Carbon Credit" என்ற வார்த்தையை உபயோகித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விவசாய கார்பன் வரவுகள் குறித்து விவாதிக்கும்போது "திட்டம்" (Programme) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டது, வேளாண் தொழிலாளர்களுக்கான நிதி உதவி பெறும் ஒரு திட்டத்தை அனைவரும் எதிர்பார்க்க வழிவகுத்தது. விவசாய அமைச்சகம் நீண்டகாலமாக மண்வளம் மற்றும் காலநிலைக்கேற்ற விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால் இந்த எதிர்பார்ப்பு நியாயமானதுதான் என்கின்றனர். ஒரு முறையான கார்பன் விவசாயத் திட்டம் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைந்தாலும், அதற்குத் தனியான கொள்கை, நிதி மற்றும் அமைப்புகள் தேவை. இது அதிக செலவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டம் தொடர்பான முயற்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது.


எதிர்பார்ப்புகளைச் சரியாகக் கையாளுவதற்கு அரசாங்கம் இந்த வேறுபாட்டைத் தெளிவாக விளக்க வேண்டும். குறிப்பாக, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையைக் குறைப்பதற்கு ₹20,000 கோடி மதிப்பிலான கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டம் மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்துறை மிக முக்கியமானது என்றாலும், இந்தியாவின் மொத்தக் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு வெளியேற்றத்தில் சுமார் கால் பகுதியை அதுவே உருவாக்குகிறது. எனவே, இந்தியா தனது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை அடைவதற்கு இந்தத் திட்டத்தின் வெற்றி அவசியமாகிறது. 


அதேநேரத்தில், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கார்பன் வரவுகள் (காற்றில் உள்ள கரியமில வாயுவை குறைப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை ஊக்கத்தொகை) குறித்த வலுவான கருத்துருவாக்கம் ஒரு பெரிய இணையான வாய்ப்பைக் காட்டுகிறது. இந்தியாவின் பரந்த விவசாய நிலங்கள் கார்பனை உறிஞ்சுவதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன. விவசாயத்திற்காக ஒரு நம்பகமான உள்நாட்டு கார்பன் சந்தையை உருவாக்க, தனித்துவமான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கை கொண்டு வரப்பட்டால், அது வேளாண் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கி, மிகப்பெரிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை தேவை.


தற்போதைய விவாதங்கள் இந்தியாவின் காலநிலை உத்தியில் (climate strategy) ஒரு முக்கியமான தருணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 2026-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்டத்தில், கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பம் மூலம் தொழில்துறை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க ₹20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'வேளாண் தொழிலாளர்களுக்கான கார்பன் வரவு' (farmer carbon credit) என்ற யோசனைக்கு இந்த நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றாலும், இது தன்னார்வ கார்பன் சந்தையில் அதிகரித்து வரும் ஆர்வத்தையும், இதற்கென ஒரு தனி கொள்கையின் அவசியத்தையும் காட்டுகிறது. வருங்காலத்தில், அரசாங்கம் தொழில்துறை மற்றும் விவசாயம் ஆகிய இந்த இரண்டு முக்கிய துறைகளையும் தெளிவாகப் பிரித்து, அதே நேரத்தில் இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் அளித்து முன்னேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. தற்போதைய குழப்பம் இவை இரண்டையும் ஒன்றாகக் கலப்பதாலேயே ஏற்படுகிறது. இருப்பினும், ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை தேவை என்பதை இது உணர்த்துகிறது.


அர்கல்குட் என்.கணேஷமூர்த்தி, தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) மற்றும் இந்திய மண் அறிவியல் சங்கத்தின் (ISSS) கௌரவ உறுப்பினர் (Fellow) ஆவார். பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIHR) முன்னாள் மேனாள் விஞ்ஞானி (Emeritus Scientist) ஆவார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர்.



Original Link: A bit of a blur over India’s new carbon credit plan 


Share:

சராவதி நீர்மின் திட்டம்: எரிசக்தி மாற்றத்திற்காக கொடுக்கப்படும் விலை. - ஜி. டி. சதீஷ்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையவுள்ள நீர்மின் திட்டத்திற்கு (hydroelectric project) எதிரான போராட்டங்கள் இப்பொழுது புதிய வேகமெடுத்துள்ளன.


இந்த மாத தொடக்கத்தில், சராவதி நீரேற்ற மின் திட்டத்திற்காக (Sharavathi Pumped Storage Hydroelectric Project) வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கியமான பல்லுயிர் பெருக்க மண்டலமான 'சராவதி சிங்கவால் குரங்கு வனவிலங்கு சரணாலயத்தில்' இத்திட்டத்தை செயல்படுத்த மாநில வனவிலங்கு வாரியம் அளித்த அனுமதியை எதிர்த்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நீதிமன்ற உத்தரவு, 2017-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை எதிர்த்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.


கர்நாடக மின் கழகம் (Karnataka Power Corporation Limited (KPCL)) சராவதி நதிப் பள்ளத்தாக்கில் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த நதி அரபிக்கடலை அடைவதற்கு முன்னதாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வழியாக சுமார் 130 கி.மீ தூரம் பாய்கிறது. ஏற்கனவே இந்த நதியின் குறுக்கே நான்கு முக்கிய மின் நிலையங்கள் செயல்பட்டு வருவதால், இது அந்த மாநிலத்தின் முதன்மையான நீர்மின் ஆதாரமாக (hydropower source) விளங்கி வருகிறது.


கர்நாடக மின் கழகம் (KPCL), ஒரு நாளைக்கு 18,000 மெகாவாட் வரை உயரும் உச்சகட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தத் திட்டத்தின் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருள் (non-fossil fuel) திறனை 50 சதவீதமாக  உயர்த்த வேண்டும் என்ற இலக்கோடு, மத்திய மின்சார ஆணையம் (Central Electricity Authority (CEA)) தூய்மையான எரிசக்திக்கு மாறப் பரிந்துரைத்துள்ளதால் இத்திட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இருப்பினும், இத்திட்டத்திற்கான செலவு 2017-ஆம் ஆண்டில் சுமார் ₹4,800 கோடியாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட ₹10,240 கோடியாக அதிகரித்துள்ளது.


மேலும், இந்தத் திட்டம் மாநில வனவிலங்கு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய வனவிலங்கு வாரியத்திடமிருந்து (National Board for Wildlife (NBWL)) கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்றிருந்தாலும், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (Forest and Environmental Clearances) இறுதி அனுமதிகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவே கூறப்படுகிறது.


சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகள்


கர்நாடக மாநில வனவிலங்கு வாரியம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில நிபந்தனைகளுடன் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. தொடக்கத்தில், கர்நாடக மின் கழகம் (KPCL) இந்தத் திட்டத்திற்காக 16,000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை 7,000 முதல் 8,000 மரங்களாகக் குறைக்க வேண்டும் என்று வாரியம் பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஷிவமொக்கா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர்வாசிகள், விவசாய அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் இதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல கூட்டங்களை நடத்தியுள்ள அவர்கள், இத்திட்டத்தினால் காடுகளுக்கும், அப்பகுதிக்கே உரிய 'சிங்கவால் குரங்கு' (Lion-tailed Macaque) போன்ற அழிந்துவரும் நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளனர். சமீபகாலங்களில் பெய்த கனமழையின் போது நிலச்சரிவுகளை நேரில் கண்ட இப்பகுதி மக்கள், சுரங்கப்பாதை அமைப்பது தங்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர். மேலும், மின்சாரக் கம்பிகள் அமைப்பதற்காக கூடுதல் காடுகள் அழிக்கப்படலாம் என்ற கவலையும் அவர்களுக்கு உள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் அகிலேஷ் சிப்ளி உள்ளிட்ட மனுதாரர்கள், வனப்பகுதி அல்லாத செயல்பாடுகளைத் தடை செய்யும் சட்டங்களை இத்திட்டம் மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.


மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (Ministry of Environment, Forest and Climate Change (MoEF)) மண்டல அலுவலகத்தில் வனத்துறை துணை ஆய்வாளர் ஜெனரலாகப் பணிபுரியும் பிரனீதா பால் சமர்ப்பித்த கள ஆய்வு அறிக்கை, இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்கின்றனர். புதிய சாலைகளை அமைப்பதும், தற்போதுள்ள சாலைகளை அகலப்படுத்துவதும் பசுமை மாறா சதுப்பு நிலக்காடுகளை முற்றிலுமாக அழித்துவிடும் என்றும், மரங்களை வெட்டுவது சிங்கம் போன்ற வால் கொண்ட குரங்குகள் (lion-tailed macaques) மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அறிக்கையைத் தங்கள் வாதங்களுக்கு மிக முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.


பொதுமக்களிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு,  கர்நாடகா மின் கழகம் (KPCL) பிரதிநிதிகள், அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில் ஷிமோகா மற்றும் உத்தர கன்னடா ஆகிய பகுதிகளின் சில இடங்களில் இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசுவதற்காகக் கூட்டங்களை நடத்தினர். இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும் என்று ஒரு குழு அதிகாரி மக்களைச் சமாதானப்படுத்த முயன்றார். மேலும், எரிசக்தி உற்பத்திக்காக நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தி, இந்தத் திட்டம் மிகவும் அவசியமானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


தொடர்ச்சியான போராட்டம்


இருப்பினும், கர்நாடகா மின்கழகத்தின் முயற்சிகள் போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கடும் எதிர்ப்பு நிலவிய காரணத்தால், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEF) அந்த இடத்தை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அனுப்பியது. அந்த நிபுணர் குழு அளித்த அறிக்கையில், இந்தத் திட்டத்தால் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச நன்மைகளைவிட, அதனால் ஏற்படப்போகும் சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல், சூழலியல் மற்றும் சமூக பாதிப்புகளே மிக அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.


சட்டரீதியான பின்னடைவுகளும், நிபுணர் குழுவின் எதிர்மறையான அறிக்கையும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பவர்களுக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மின் கழகம் நீதிமன்றத்திலும், தேசிய வனவிலங்கு வாரியத்திலும் (NBWL) மேற்கொள்ளப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். 


Original Link: Sharavathi Hydroelectric Project: The cost of energy transition 


Share: