முக அங்கீகாரம் (facial recognition) மற்றும் தேசிய தரவுத்தளங்கள் ஒன்றிணையும் நிலையில், இந்தியாவின் விளிம்புநிலைச் சமூகத்தினர் (marginalised communities), தங்கள் தரவுகள் மீது நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும் ஒரு புதிய “ஆழ் மறை அரசு” (Deep State) அமைப்பை எதிர்கொள்கின்றனர்.
இந்தியாவில், மக்கள், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவை அனைவருக்கும் “அதிகபட்ச பலன்களை” (maximum benefits) வழங்கும் பயன்பாட்டுவாதக் கொள்கையின் (utilitarian principle) அடிப்படையில் இயங்கி வருகின்றன. இருப்பினும், அண்மைக்காலமாக, கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள், உத்திகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவை ஜனநாயகத்தையும், ‘டிஜிட்டல் இந்தியாவின்’ (Digital India) அனைவரையும் உள்ளடக்கிய நோக்கத்தையும் சீர்குலைத்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், தெருக்களில் உள்ள முகங்களை ஸ்கேன் செய்து சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிப்பு (CCTV) கேமராக்கள் மூலம் அடையாளம் காணவும், ஜூன் 2026-க்குள் டெல்லியின் அனைத்துப் பகுதிகளிலும் அதிநவீன ‘ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் கணினி மையத்தை’ (Command, Control, Communication, and Computer Centre (C4I)) செயல்படுத்தப்போவதாக டெல்லி காவல்துறை அறிவித்தது.
இதற்காக, டெல்லி காவல்துறையானது ஒரு இஸ்ரேலிய மென்பொருள் அமைப்பிலிருந்து உத்வேகம் பெற்றது. இந்த அமைப்பு (வெளியிலும் உள்ளேயும் கேமராக்கள், முழுமையான தரவு மற்றும் கணினி வசதிகள், மற்றும் காவல்துறை இயக்குபவர்களைக் கொண்ட ஒரு கண்காணிப்பு வாகனம்) 2018-ம் ஆண்டிலிருந்து வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லிப் பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தொடக்கத்தில், காணாமல் போன மற்றும் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கவே இது பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அதன்பின்னர் இதன் பயன்பாடு விரிவடைந்துள்ளது. 2019-ம் ஆண்டில் ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்தின்போதும், 2020 மற்றும் 2022-ல் ஜஹாங்கிர்புரி உட்பட வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்களின்போதும், மற்றும் 2023-ம் ஆண்டின் குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போதும் இது பயன்படுத்தப்பட்டது.
இது ஒரு தற்காலிக தீர்வாகக் கருதப்பட்டது. தற்போது, மிக விரைவிலேயே ஒரு இயல்பான நடைமுறையாக மாறி வருகிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட சில பகுதிகள் மற்றும் மக்கள், ஒருவித ‘ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும்’ (ghettoisation) நிலையை எதிர்கொள்கின்றனர். சிசிடிவி மற்றும் வெப்கேம்கள் போன்ற கண்காணிப்புக் கருவிகள் இந்தப் போக்கிற்கு பங்களிக்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் (குறிப்பாக, மொபைல் செயலிகள் மற்றும் மென்பொருள்கள் மூலம் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து பதிவு செய்யும் தொழில்நுட்பங்கள்) ஆகியவை மேம்பட்ட முறையில் இந்தச் செயல்முறையை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.
தரவு என்பது வலுவான அரசியல் தன்மை கொண்டது
முன்பு இஸ்ரேலிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்டு வந்ததைப் போலவே, C4I அமைப்பும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் இ-கட்டணம் (e-challan), தொலைத்தொடர்பு (telecom), வங்கிப் பதிவுகள் (banking records) உள்ளிட்ட தேசிய தரவுத்தள முகமைகளுடன் இணைந்து செயல்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அரசு முகமைகளிடமிருந்து ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட தரவுகளுடன், நேரடிப் பதிவின் மூலமும் ஒரு நபரின் அடையாளம் பகுப்பாய்வு செய்யப்படும். குறிப்பாக, வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியில், இந்தத் தொழில்நுட்பத்திற்கு அளிக்கப்பட்ட தரவுகள் இனி C4I-க்காகப் பயன்படுத்தப்படும். நேரடித் தரவு மற்றும் தேசிய முகமைகளின் பதிவுகளின் அடிப்படையில் 60 சதவிகிதம் பொருத்தம் இருந்தால், அந்த நபர் ஒரு சிறு குற்றத்தைச் செய்து, அந்த வழக்கு நீதித்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், அவர் ஒரு "சாத்தியமான அச்சுறுத்தலாக" (potential threat) கருதப்படுவார். துரதிர்ஷ்டவசமாக, ஒரு நீதிமன்றத் தள்ளுபடியுடன் இந்த தரவுகள் முடிந்துவிடுவதில்லை. பதிவுகள் தானாகவே நீக்கப்படுவதில்லை. அதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையை அணுக வேண்டும். நீண்டகால அடிப்படையில், இந்தத் தரவுகள் மக்களைப் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அமெரிக்காவில் உள்ள சிறுபான்மையினரைப் போலவே, பாரபட்சமான தரவுகள் (biased data) மற்றும் முன்முடிவுகள் (preconceived notion) காரணமாக விளிம்புநிலை சமூகங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் என்று செயற்கை நுண்ணறிவு மற்றும் சட்டப் பேராசிரியர் இஃபோமா அஜுன்வா குறிப்பிடுகிறார். இந்த பாரபட்சமான செயலானது நேர்காணல்களிலும் தெளிவாகத் தெரிந்தது. இந்த அமைப்புகள், மனித மேலாளர்களின் பாரபட்சமான பார்வைகளால் பாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆட்சேர்ப்பு செயல்முறைகள், ஒரு புகழ்பெற்ற பள்ளி அல்லது கல்லூரியின் பெயர் போன்ற சில முக்கிய சொற்கள் விடுபட்டிருந்ததால், தனிபட்டவிவரக் குறிப்புகளைத் தேர்வு செய்யவில்லை. அரசியல் விஞ்ஞானி பார்த்தா சாட்டர்ஜி, அத்தகையவர்களை "உரிமை கோரும் குடிமக்கள்" (entitled citizens) என்று குறிப்பிடுகிறார். அவர்களுக்கு உரிமைகள் இருந்தாலும், அவர்கள் "முறையான குடிமக்களாக" (proper citizens) அங்கீகரிக்கப்படாமல், அவர்கள் அரசின் இரக்கத்தில் வாழ்கிறார்கள். மேலும், அவர்கள் ஒருபோதும் "சட்டபூர்வமான குடியுரிமை" (legitimate citizenship) பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை. எனவே, நிதித்துறையில் நாம் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) அறிமுகப்படுத்தியதைப் போல, பல சரிபார்ப்புகளைக் கொண்ட "பொறுப்பான தொழில்நுட்பங்கள்" (responsible technologies) நமக்குத் தேவை. சட்டம் மற்றும் ஒழுங்குத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அதே கவனமான முறையில் விரிவுபடுத்த முடியுமா? என்பதுதான் கேள்வி.
இடம், வாழ்வாதாரம் மற்றும் அடையாளம்
டெல்லியானது, புலம்பெயர்ந்த மக்கள்தொகைக்கு பெயர் பெற்றது. அவர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவுகளிலிருந்து வருகிறார்கள். 2022–23-ஆம் ஆண்டுக்கான டெல்லி பொருளாதார ஆய்வின்படி, வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் கட்டுமானம், உற்பத்தி, சில்லறை வணிகம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் பணிபுரிகின்றனர்.
டெல்லியின் சேவைப் பொருளாதாரத்தில், குறைந்த ஊதியம் பெறும் உள்நாட்டு அழைப்பு மையம் வேலைகளுக்குக் (call centre jobs) கூட, தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் விண்ணப்பதாரர்களின் வசிப்பிட முகவரிகளைச் சரிபார்த்து, காவல்துறை சரிபார்ப்பைக் கோருகின்றன. இது சில சமயங்களில் “லஞ்சம்” வாங்குவதற்கான சாத்தியக்கூறுக்கு வழிவகுக்கிறது. உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate (NOC)) பெறுவதற்காக தனிநபர்கள் பணம் செலுத்தக்கூடும். அஜுன்வா இந்தச் செயல்முறையை “மறைமுகப் பாரபட்சங்கள்” (hidden biases) என்று குறிப்பிடுகிறார். மேலும், கண்காணிப்பு அறிஞர் டேவிட் லயன் இதை மனிதப் பாரபட்சத்தின் காரணமாக நிகழும் “சமூகப் பிரிப்பு” (social sorting) என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆட்சேர்ப்பு இன்னும் அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இது விலை உயர்ந்ததாகவும், தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படுவதாலும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறக்கூடும். ஒவ்வொரு வேலைத் துறையிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது.
தரவுகளும் தொழில்நுட்பங்களும், குறிப்பாக கண்காணிப்பு அடிப்படையிலான தொழில்நுட்பங்கள், சில மக்களையும் சமூகங்களையும் “இரண்டாம் தரக் குடிமக்களாக” (second-class citizens) மாற்றி வருகின்றன. தொழில்நுட்பங்கள் ஒரு “ஆழ் மறை அரசு" (Deep State) போலச் செயல்படுகின்றன. இதன் விளைவாக, சமூகத்தின் நலிந்த பிரிவினர் அதிக “சந்தேகத்திற்குரியவர்களாக” மாறி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக ஆதிக்கமுள்ள சாதி மற்றும் வர்க்கக் குழுக்களால் வடிவமைக்கப்பட்ட, வரலாற்றுரீதியான, பாரபட்சமான தரவுகளுக்குப் பதிலாக, விரிவான தரவுகளால் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டால், டிஜிட்டல் இந்தியா அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவாக இருக்க முடியும்.
இக்கட்டுரையின் ஆசிரியர், லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனத்தின் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
Original Link: Algorithms of suspicion: Why AI surveillance systems need a ‘UPI moment’ for ethics.