இந்தியாவின் புதிய கார்பன் வரவுத் திட்டம் குறித்த தெளிவற்ற நிலை -ஏ.என். கணேசமூர்த்தி

இந்தத் திட்டம், தொழில்துறை மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்கள் இரண்டிலும் தெளிவான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.


2026-ஆம் ஆண்டு ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தில் கார்பன் வரவு (Carbon Credit) திட்டத்திற்காக ₹20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெளியான முக்கிய கொள்கை அறிவிப்பு, தற்போது மக்களிடையே குழப்பத்தையும் பல்வேறு கருத்துக்களையும் உருவாக்கியுள்ளது. கனரகத் தொழிற்சாலைகளுக்கான தெளிவான அரசுத் திட்டத்திற்கும், இது வேளாண் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரமாக அமையும் என்கிற வளரும் கருத்திற்கும் இடையே ஒரு முரண்பாடு நிலவுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு என்பது தொழிற்சாலைகளில் கார்பனைப் பிடித்து, பயன்படுத்தி மற்றும் சேமிக்கும் தொழில்நுட்பமான (Carbon Capture, Utilization, and Storage (CCUS)) முறையை மேம்படுத்துவதற்காகவா? அல்லது நிலையான விவசாய முறைகள் மூலம் வேளாண் தொழிலாளர்கள் கார்பன் வரவு வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டமா? என்பதுதான் முதன்மையான கேள்வியாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இது தொழிற்சாலைகளுக்கான (CCUS) திட்டம் என்றே குறிப்பிடுகின்றன, ஆனால் பல ஊடகச் செய்திகள் இது வேளாண் தொழிலாளர்களுக்கானது எனத் தெரிவித்து வருகின்றன.


கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage (CCUS)) என்பது எளிதில் குறைக்க முடியாத மாசுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளை மையமாகக் கொண்டது என்பதே இதன் முதல் விளக்கம் ஆகும். 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology (DST) வெளியிட்ட "கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வழிமுறை" (R&D Roadmap for CCUS) என்ற ஆவணமே இந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு முக்கிய அடிப்படையாகும். இந்த ஆவணம் மின்சாரம், எஃகு, சிமெண்ட், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இரசாயனங்கள் போன்ற இலக்கு துறைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்தத் தொழிற்சாலைகளின் உமிழ்வுகள் அதிக செறிவூட்டப்பட்டவை, அளவிடக்கூடியவை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் மட்டும் எளிதில் குறைக்க முடியாதவை என்பதால் இவை "கடினமானவை" என அழைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடைப் பிடித்து, மீண்டும் பயன்படுத்த அல்லது பூமிக்கடியில் சேமித்து வைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்காக ஐந்து ஆண்டுகளில் ₹20,000 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


பட்டியலில் இல்லை


கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilization, and Storage (CCUS)) துறைகளின் பட்டியலில் விவசாயம் குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெறவில்லை. பசுமை இல்ல வாயுக்களின் (Greenhouse Gases) ஆதாரமாக விவசாயத்தை இந்த வழிகாட்டி திட்டவரைவு அங்கீகரித்தாலும், அது வெறும் கணக்கீட்டுப் பதிவிற்காக மட்டுமே செய்யப்படுகிறது. பண்ணை உமிழ்வுகள் பரவலாகவும், உயிரியல் சார்ந்ததாகவும் இருப்பதோடு, கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பிடிப்பதற்கு ஏற்றதாக இல்லாததாலும், விவசாயம் இதிலிருந்து தெளிவாக விலக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, புதிய தொழிற்சாலை உமிழ்வுகளைத் தடுக்கும் கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பத்தையும், வளிமண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றும் 'கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம்' (Carbon Dioxide Removal (CDR)) முறையையும் இந்த வரைபடம் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதில் மண் கார்பன் சேமிப்பு, ‘Biochar’ மற்றும் வன விவசாயம் போன்ற நடைமுறைகள் மூலம் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


அதேநேரத்தில், வேளாண் தொழிலாளர்களைப் பருவநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வழங்கும் முக்கிய நபர்களாகச் சித்தரிக்கும் மற்றொரு கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்தத் திட்டவரைவு பெரும்பாலும் தொழில்துறை சார்ந்ததாக இருந்தபோதிலும், ஊடகங்கள் மற்றும் சமூக விவாதங்களின்படி, அரசாங்கத்தின் நிதிநிலைத் திட்ட ஆதரவு வேளாண் தொழிலாளர்கள் மீளுருவாக்கம் செய்யும் விவசாய முறைகளை மேற்கொண்டு கார்பன் சந்தைகளில் (Carbon markets) இணைய உதவும் என்றும், இதன் மூலம் விவசாய நிலங்கள் பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்யும் தீர்வுகளாக மாறும் என்றும் நம்பப்படுகிறது.


குழப்பத்தின் அடிப்படை காரணம்


இந்த விளக்கமானது இரண்டு வெவ்வேறு கருத்துக்களை ஒன்றிணைத்துக் குழப்பிக் கொள்வதுபோல் தோன்றுகிறது. நிதிநிலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு  (CCUS) நிதியானது தொழிற்சாலைகளில் வெளியாகும் கார்பனைப் பிடிப்பதற்கானது. ஆனால், இந்தியாவின் தன்னார்வ கார்பன் சந்தை (Voluntary Carbon Market) என்பது முற்றிலும் வேறுபட்டது. இதில் விவசாயம் மற்றும் வனத்துறை சார்ந்த திட்டங்கள் ஏற்கனவே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாங்குபவர்களுக்கு கார்பன் வரவுகளை (Carbon Credits) வழங்கத் தொடங்கிவிட்டன. வேளாண் தொழிலாளர்களுக்கு ஆதரவான கருத்தைக் கொண்டவர்கள், இயற்கை சார்ந்த கார்பன் வரவுகளுக்கான அதிகரித்து வரும் தேவையைக் குறிப்பிடுகின்றனர். சில தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுத் திட்டங்கள், மண்ணின் கார்பன் அளவை மேம்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்கும் வேளாண் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் மாதிரிகளை ஏற்கனவே சோதித்து வருகின்றன. நிதிநிலைத் திட்டத்தில் "கார்பன் வரவுத் திட்டம்" என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டதே இந்தக் குழப்பத்திற்குக் காரணமாக இருக்கலாம், இருப்பினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (Department of Science and Technology (DST)) வரைவுத்திட்டத்தின்படி அதன் விரிவான திட்டம் தொழில்துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.


விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்தக் குழப்பமானது ஒரு தகவல் தொடர்பு இடைவெளியையும், சிறந்த கொள்கை உருவாக்கத்திற்கான வாய்ப்பையும் காட்டுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை Department of Science and Technology (DST) தயாரித்த வரைபடம் தொழில்நுட்பரீதியாக வலுவான மற்றும் குறிப்பிட்ட துறைகளுக்கான ஆவணமாக இருந்தாலும், நிதி ஒதுக்கீட்டில் (Budget) பொதுவாகப் பயன்படுத்தப்படும் "Carbon Credit" என்ற வார்த்தையை உபயோகித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விவசாய கார்பன் வரவுகள் குறித்து விவாதிக்கும்போது "திட்டம்" (Programme) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டது, வேளாண் தொழிலாளர்களுக்கான நிதி உதவி பெறும் ஒரு திட்டத்தை அனைவரும் எதிர்பார்க்க வழிவகுத்தது. விவசாய அமைச்சகம் நீண்டகாலமாக மண்வளம் மற்றும் காலநிலைக்கேற்ற விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால் இந்த எதிர்பார்ப்பு நியாயமானதுதான் என்கின்றனர். ஒரு முறையான கார்பன் விவசாயத் திட்டம் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைந்தாலும், அதற்குத் தனியான கொள்கை, நிதி மற்றும் அமைப்புகள் தேவை. இது அதிக செலவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டம் தொடர்பான முயற்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது.


எதிர்பார்ப்புகளைச் சரியாகக் கையாளுவதற்கு அரசாங்கம் இந்த வேறுபாட்டைத் தெளிவாக விளக்க வேண்டும். குறிப்பாக, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையைக் குறைப்பதற்கு ₹20,000 கோடி மதிப்பிலான கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டம் மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்துறை மிக முக்கியமானது என்றாலும், இந்தியாவின் மொத்தக் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு வெளியேற்றத்தில் சுமார் கால் பகுதியை அதுவே உருவாக்குகிறது. எனவே, இந்தியா தனது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை அடைவதற்கு இந்தத் திட்டத்தின் வெற்றி அவசியமாகிறது. 


அதேநேரத்தில், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கார்பன் வரவுகள் (காற்றில் உள்ள கரியமில வாயுவை குறைப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை ஊக்கத்தொகை) குறித்த வலுவான கருத்துருவாக்கம் ஒரு பெரிய இணையான வாய்ப்பைக் காட்டுகிறது. இந்தியாவின் பரந்த விவசாய நிலங்கள் கார்பனை உறிஞ்சுவதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன. விவசாயத்திற்காக ஒரு நம்பகமான உள்நாட்டு கார்பன் சந்தையை உருவாக்க, தனித்துவமான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கை கொண்டு வரப்பட்டால், அது வேளாண் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கி, மிகப்பெரிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை தேவை.


தற்போதைய விவாதங்கள் இந்தியாவின் காலநிலை உத்தியில் (climate strategy) ஒரு முக்கியமான தருணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 2026-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்டத்தில், கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பம் மூலம் தொழில்துறை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க ₹20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'வேளாண் தொழிலாளர்களுக்கான கார்பன் வரவு' (farmer carbon credit) என்ற யோசனைக்கு இந்த நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றாலும், இது தன்னார்வ கார்பன் சந்தையில் அதிகரித்து வரும் ஆர்வத்தையும், இதற்கென ஒரு தனி கொள்கையின் அவசியத்தையும் காட்டுகிறது. வருங்காலத்தில், அரசாங்கம் தொழில்துறை மற்றும் விவசாயம் ஆகிய இந்த இரண்டு முக்கிய துறைகளையும் தெளிவாகப் பிரித்து, அதே நேரத்தில் இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் அளித்து முன்னேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. தற்போதைய குழப்பம் இவை இரண்டையும் ஒன்றாகக் கலப்பதாலேயே ஏற்படுகிறது. இருப்பினும், ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை தேவை என்பதை இது உணர்த்துகிறது.


அர்கல்குட் என்.கணேஷமூர்த்தி, தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) மற்றும் இந்திய மண் அறிவியல் சங்கத்தின் (ISSS) கௌரவ உறுப்பினர் (Fellow) ஆவார். பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIHR) முன்னாள் மேனாள் விஞ்ஞானி (Emeritus Scientist) ஆவார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர்.



Original Link: A bit of a blur over India’s new carbon credit plan 


Share: