சாத்தியக்கூறுக்கான திட்டமிடல்.

போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால், மத்திய அரசு ஒரு பெரும் சவாலை எதிர்கொள்ளும்.


நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலிருந்து ₹1 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிலைப்படுத்தல் நிதியை உருவாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, மூன்றாவது வாரத்தில் இருக்கும் போரின் தாக்கம் குறித்த பல்வேறு சூழ்நிலைகளை நிதி அமைச்சகம் வகுத்து, அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதும் ஒரு சிறப்பான செயலாகும். முதலாவதாக, இன்னும் ஓரிரு வாரங்களில் 2026 நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த நிதியானது பண வரவுகள் மற்றும் அமைச்சகங்களின் செலவிடப்படாத ஒதுக்கீடுகள் (அல்லது சேமிப்புகள்) ஆகியவற்றையும் இது பயன்படுத்திக்கொள்ளும்.


சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ₹2.8 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் மானியக் கோரிக்கையின் ஒரு பகுதியாக இந்த நிதி திகழ்கிறது. கூடுதலாக வழங்கப்படும் ₹1.8 லட்சம் கோடியானது, பாதுகாப்புத் துறை செலவினங்களைத் தவிர, உணவுக்கான மானியத்தை (பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ் ₹23,641 கோடி) மற்றும் உரத்திற்கான மானியத்தை (₹19,230 கோடி) அதிகரிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உர மானியத்திற்கான கூடுதல் ஒதுக்கீடு, போரின் காரணாமாக ஏற்படும் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக இருக்கலாம். அதேசமயம், வாழ்வாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காக உணவு மானியம் அதிகரிக்கப்பட்டிருக்கலாம். இந்த போர் சூழலானது பொருளாதாரத்தை எதிர்பாராத வழிகளில் பாதிக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது என்பதையே இத்தகைய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.


யதார்த்தமான மதிப்பீட்டை மேற்கொள்ளும் விதமாக, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், நிதி மீதான நிலைக்குழுவின் முன் பல்வேறு சாத்தியமான சூழ்நிலைகளை முன்வைத்துள்ளார். அக்குழுவின் அறிக்கை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 130 டாலராக நீடித்தால், சில்லறைப் பணவீக்கம் 5.5 சதவீதமாக உயரும் என்றும், இந்த நிதியாண்டில் 7.4 சதவீதமாக உள்ள உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2027 நிதியாண்டில் 6.4 சதவீதமாகக் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit (CAD)) தற்போதைய 1.2 சதவீதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதமாகவும், நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாகவும் அதிகரிக்கும். இருப்பினும், ஒரு பீப்பாய் விலை 90 டாலராக நீடித்தால், 7-7.4 சதவிகித வளர்ச்சி, 2 சதவிகித பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-1.2 சதவிகித நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீத அளவிலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் ஏற்படும் கடுமையான உயர்வு, பணவியல் அதிகாரிகளுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தும். இறக்குமதிகள் அதிகரிக்கும் அதே வேளையில், வெளிநாட்டிலிருந்து வரும் பணம், முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் மீதான தாக்கத்தின் காரணமாக இது நிகழக்கூடும். எனினும், கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 90 டாலர் வரை உயர்ந்தாலும், அதன் சுமையை நுகர்வோர் மீது சுமத்தாமல் மத்திய அரசால் அதனைச் சமாளிக்க முடியும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வின் தாக்கத்தை ஈடுசெய்யும் ஒரு 'தாங்கியாக' (cushion) குறிப்பிட்ட நிதியம் செயல்பட முடியும்.


இந்தப் போர், தேக்கநிலை-பணவீக்கத் தாக்கத்தை (stagflationary impact) ஏற்படுத்தும். தொழில்துறை எண்ணெய் மற்றும் எரிவாயுப் பயனாளர்களுக்கான பொருட்களின் விலை உயர்வைத் தவிர, உள்ளீடுகள் மற்றும் இடைநிலைப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். பொதுவாக, ஏற்றுமதியாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), உலகப் பொருளாதார மந்தநிலைகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் செயல்பாட்டு மூலதன நிதியில் ஏற்படும் இடையூறுகளால் பாதிக்கப்படலாம். எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்துவதைத் தவிர, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் கையாண்ட உத்திகளைப் பின்பற்றி, மத்திய அரசு ஒரு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். விலைகளை நிலைப்படுத்தவும் கடன் ஆதரவை வழங்கவும் தேவைப்பட்டால் நிதியத்தின் மூலதனத்தை அதிகரிக்கலாம். பணவியல் கொள்கை முடிந்தவரை நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். நல்ல பேரியல் பொருளாதாரக் காரணிகளும் கையிருப்பும் இருப்பதால், நாடு அதற்குத் தயாராக இருந்தாலும்கூட, மிக மோசமான நிலை ஏற்படாமல் இருக்கலாம் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.

                           


Original Link: Scenario planning.


Share: