'மெட்ராஸ்' என்ற மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என்று மாற்றியபோது ஏற்பட்ட அரசியல் பரபரப்பு - டி. ராமகிருஷ்ணன்

1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி, 'தைப்பொங்கல்' திருநாளை முன்னிட்டு இந்த புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.


2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி, கேரளாவின் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (Communist Party of India (Marxist) (CPI(M))) தலைமையிலான அரசு சமர்ப்பித்த அம்மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் அழைக்கப்படும் "கேரளம்" என்று மாற்றுவதற்கான கோரிக்கைக்கு, பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. இது போன்ற ஒரு மாற்றம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது; அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, "மெட்ராஸ்" மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.


இராஜதந்திரி மற்றும் எழுத்தாளருமான ஆர். கண்ணன் தனது 'The DMK Years' என்ற புத்தகத்தில் "சிலிர்ப்பூட்டும் தருணம்" (moment of frisson) என்று குறிப்பிட்ட அந்த நிகழ்வு, ஜூலை மாதம் 18-ஆம் தேதி, 1967-ஆம் ஆண்டு அரங்கேறியது. தமிழகத்தில் 20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த நான்கு மாதங்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. அன்றுதான் தமிழக சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


1961-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே, காங்கிரஸ் அரசாங்கம் சட்ட மேலவை மற்றும் சட்டப்பேரவையில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அதிகாரப்பூர்வ தமிழ் வழித் தொடர்புகளில் "சென்னை" என்ற பெயர் மாநிலத்தின் தலைநகரைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மாநிலத்தைக் குறிக்க "தமிழ்நாடு" என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், அப்போதைய தொழில் துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் மாநிலத்தைக் குறிப்பிடும்போது "தமிழ்நாடு" என்றே குறிப்பிட்டிருந்தார்.


இருப்பினும், இந்தப் பெயர் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அதிகம் அறியப்படாத பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு நாளன்று, அன்றைய முதல்வர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமைச் செயலகத்தில் "தமிழக அரசு - தலைமைச் செயலகம்" என்ற புதிய நியான் மின்விளக்குப் பலகையைத் திறந்து வைத்து, இந்தப் பெயர் மாற்றும் நடைமுறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.


பிற மொழியினருக்கு உதவும் வகையில் பெயர் பலகைகளில் ஆங்கிலத்திற்கு இரண்டாம் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அப்போதைய கல்வி அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் பரிந்துரைத்தார். இந்த மாற்றம் தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் குறித்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் கனவை நனவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், "தமிழகம்" என்ற சொல் பண்டைய இலக்கண நூல்களில் இல்லை என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் மு. கருணாநிதி, இச்சொல் சிலப்பதிகார காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார் என்று 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி வெளியான 'தி இந்து' நாளிதழில் ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு வருடத்திற்குப் பிறகு, பெயர் மாற்றம் தொடர்பான சட்டவரைவை (Draft Bill) மத்திய அரசு கருத்து கேட்பதற்காக திமுக அரசுக்கு அனுப்பி வைத்தது. தொடக்கத்தில், தமிழில் மாநிலத்தின் பெயர் "தமிழ்நாடு" என்பதற்குப் பதிலாக "தமிழ்நாட்" (Tamil Nad) என்று இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இருப்பினும், முன்னாள் கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) அவர்களின் ஆலோசனையின் பேரில், அதன் எழுத்துக்கூட்டு "தமிழ்நாடு" (Tamil Nadu) என மாற்றப்பட்டது. இதனை ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி, 1968-ஆம் ஆண்டு அப்போதைய சட்டத்துறை அமைச்சர் எஸ். மாதவன் அவர்கள் உறுதிப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஏழு மாதங்களுக்குப் பிறகு, மெட்ராஸ் மாநிலத்தின் பெயர் மாற்ற மசோதா மக்களவையில் விவாதத்திற்கும் ஒப்புதலுக்கும் வந்தபோது எதிர்பாராத பல திருப்பங்கள் நிகழ்ந்தன. நவம்பர் மாதம் 21-ஆம் தேதி மதியம் 3:18 மணிக்கு, துணை சபாநாயகர் ரகுநாத் கேசவ் காடில்கர், மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவானை மசோதாவைத் தாக்கல் செய்ய அழைத்தார், ஆனால் அவர் அங்கு இல்லை; அவருக்குக்கீழ் பணிபுரியும் அமைச்சர்களும் அவையில் இல்லை. அமைச்சர்களின் இந்த வருகையின்மையை துணை சபாநாயகர் அதிகாரப்பூர்வ பதிவுகளில் பதிவு செய்தார். அப்போது, சேலம் தொகுதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் க.ராஜாராம், தென்காசி தொகுதி காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகம் இந்த மசோதாவைத் தாக்கல் செய்யட்டும் எனப் பரிந்துரைத்தார். மற்றொரு திமுக உறுப்பினரான வெ. கிருஷ்ணமூர்த்தி (நெய்வேலி/நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி), மசோதாவைத் தாக்கல் செய்யக்கூட அமைச்சர்கள் அவையில் இல்லையே என்று இந்தச் சூழலைக் கடுமையாக விமர்சித்தார்.


பம்பாய் மத்திய தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் சட்டப் பேராசிரியருமான ஆர்.டி. பண்டாரே, சட்ட அமைச்சர் பி. கோவிந்த மேனன் இந்த மசோதாவைத் தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றார். இருப்பினும், சட்ட அமைச்சர் வேறொருவருக்காகப் பணியாற்ற விரும்புவதாகத் தனக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதாதவரை இதனை அனுமதிக்க முடியாது என்று துணை சபாநாயகர் பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மசோதாவை நகர்த்த முன்வந்தபோது, காடில்கர் அவையை ஒத்திவைத்தார்.


சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவை மீண்டும் கூடியபோது, ஒடிசாவின் பாலசோர் தொகுதியைச் சேர்ந்த பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சமரேந்திர குந்து (இவர் பின்னர் 1977-79 ஜனதா அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்), அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்தார். அமைச்சர்கள் எவ்விதத் தயாரிப்பும் இன்றி வந்திருப்பதும், அவையை முறையாக மதிக்காமல் இருப்பதும் அவமானம் என்று சாடினார். அவர்களைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கோரியபோது, மக்களவையில் கடும் கூச்சலும் குறுக்கீடுகளும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


அப்போது, ஹிரேந்திரநாத் முகர்ஜி (கொல்கத்தா–வடகிழக்கு) என்று அழைக்கப்படும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான ஹிரேன் முகர்ஜி அவர்கள் உரையாற்றி, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். 1952-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தனது நீண்டகால அனுபவத்தில் இது போன்ற ஒரு சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பாக மத்திய சட்டமன்றத்தோடு தொடர்புடைய ஒருவரிடம் தான் ஆலோசித்ததாகவும், இதற்கு முன்னுதாரணம் ஏதும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியதாகவும் முகர்ஜி தெரிவித்தார்.


"மெட்ராஸ் மாகாணத்தை" "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றக்கோரி எழுந்த கோரிக்கையின் பின்னணி


சபை ஒத்திவைக்கப்பட்ட துணைச் சபாநாயகரின் முடிவைக் குறிப்பிட்ட அந்த அனுபவம் வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவர், இது அரசாங்கத்தின் அரசியல் கருத்துக்களுக்கு எதிரானதல்ல, மாறாக அதன் செயல்பாட்டு முறையிலுள்ள அதிருப்தியையே காட்டுவதாகக் கூறினார். மேட்டூர் தொகுதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கந்தப்பன் பேசுகையில், அந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நேரத்தில் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் யாரும் அவையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு மற்றும் சட்டத்துறைக்கான இணை அமைச்சர்களும் மற்ற அமைச்சர்களும் அங்கு இருந்தபோதிலும், மசோதா அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருவேளை விருப்பம் இருக்குமானால், அதை விவாதத்திற்கு எடுப்பதில் அவர்களுக்கு என்ன தடை இருந்தது?” என்று கேள்வி எழுப்பினார்.


நாடாளுமன்றத்தில் மீண்டும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டபோது சமரேந்திர குந்து அவர்கள், அவையை மிகவும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் நடத்தியதற்காக அனைத்து மத்திய அமைச்சர்களுமே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் நாடாளுமன்றத்தின்மீது சற்றும் அக்கறை காட்டாதது தமக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்களும் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கமும் அவையின் தனிச்சலுகைகளையும் உரிமைகளையும் முழுமையாகத் தங்கள் வசப்படுத்திக்கொண்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.


இந்திரா காந்தியை கடுமையாக விமர்சிப்பதில் பெயர்பெற்ற கோத்ரா தொகுதி பிரதிநிதி பிலூ மோடி (Piloo Mody), காங்கிரஸ் அரசாங்கத்தைத் தீவிரமாகச் சாடினார். காலப்போக்கில் நாட்டில் ஒரு சர்வாதிகாரப் போக்கு உருவாகியுள்ளதாகவும், நாடாளுமன்றம் அதன் முதன்மையான அதிகார மையமாகத் திகழ்வதற்குப் பதிலாக வெறும் அரசாங்கத்தின் கருவியாக மாற்றப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அரசாங்கம் நாடாளுமன்ற விவாதங்களைப் புறக்கணிப்பதோடு, நாடாளுமன்றத்திடம் இருந்து அதிகாரத்தைப் பெறுவதற்குப் பதிலாக, தன்னை அதற்கு அப்பாற்பட்ட தனி அமைப்பாகக் கருதுவதாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், 1967-ஆம் ஆண்டில் எஸ். கே. பாட்டிலை வீழ்த்தி ‘Giant Killer’ என்று புகழ்பெற்ற பம்பாய் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், சம்யுக்த சோசலிசக் கட்சியின் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், இது தொடர்பாக உரிமை மீறல் அறிவிப்பாணை (Breach of Privilege) ஒன்றைச் சமர்ப்பித்தார், ஆனால் அது அவையின் தலைவரால் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


சவான் அவர்கள் மாநிலங்களவையில் இருந்த காரணத்தினால்தான், இந்த மசோதாவை முதன்முதலில் தாக்கல் செய்யவேண்டிய நேரத்தில் அவரால் அவையில் இருக்க முடியாமல் போனது என்று விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவையில் இல்லாதது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் சுபாக் சிங் மற்றும் உள்துறை இணை அமைச்சர் வி.சி. சுக்லா ஆகியோர் மன்னிப்பு கோரினர். இந்த அமைச்சர்களின் வருகையின்மையை ஒரு "பிழை" (lapse) என்று குறிப்பிட்ட சிங், "இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று சபையில் உறுதியளித்தார்.


1956-ஆம் ஆண்டிலேயே மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டாலும், அப்போது அந்த முடிவு கைவிடப்பட்டதாக சுக்லா தெரிவித்தார். பின்னர், ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி, 1961-ஆம் ஆண்டு, இனிவரும் காலங்களில் அனைத்து அதிகாரப்பூர்வ தமிழ் வழித் தொடர்புகளிலும் "மெட்ராஸ் மாகாணம்" என்பதற்குப் பதிலாக "தமிழ்நாடு" என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. இந்த சட்ட மசோதாவின் பின்னணியை விளக்கிய சுக்லா, அரசாங்கம் சட்டமன்றத்தின் விருப்பத்தையே பின்பற்றியதாகக் கூறியதோடு, இது தொடர்பாக கண்டப்பன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் "துரதிர்ஷ்டவசமானவை" என்றும் குறிப்பிட்டார்.


மேனன் அவர்கள், ஒரு அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பதிலாக ஒரு சாதாரண சட்டத்தின் மூலமாகவே ஏன் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விளக்கினார். 1967-ஆம் ஆண்டு ஐ.சி. கோலக் நாத் மற்றும் பஞ்சாப் மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் (I.C. Golak Nath vs. State of Punjab case) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் குறிப்பிட்ட சட்ட அமைச்சர், "மெட்ராஸ்" என்ற பெயர் "தமிழ்நாடு" என்று மட்டுமே மாற்றப்படுவதாகவும், இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 31A-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் குறைக்கவோ அல்லது பாதிக்கவோ செய்யாது என்றும் தெளிவுபடுத்தினார்.


முரசொலி மாறன் (திமுக), இந்த மசோதாவிற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில், கடந்த 15 ஆண்டுகளாகத் தங்கள் மாநில மக்கள் "தங்களது நீண்டகால வரலாறு மற்றும் மொழியின் செழுமையான பாரம்பரியத்தால் புனிதமடைந்த ஒரு பெயரைத் தங்கள் மாநிலத்திற்குச் சூட்ட வேண்டும்" என்று விரும்பி வந்ததாகக் குறிப்பிட்டார்.


நவம்பர் மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற அந்த சட்டமசோதா மீதான விவாதத்தின்போது பேசிய சவான், முந்தைய நாள் விவாதத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய அவர், ஆலோசனைகளின் போது முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் மற்றொரு 'இசைநயமிக்க' பெயரைப் பரிந்துரைத்ததாகவும், ஆனால் "அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய" ஒரு பெயரையே தேர்ந்தெடுக்குமாறு தாம் அவரைச் சம்மதிக்க வைத்ததாகவும் அவையினரிடம் தெரிவித்தார். மேலும், ஒரு தமிழ் அறிஞர் தனது வேண்டுகோளுக்கு ஏற்ப சுமார் 15 நிமிடங்கள் தமிழில் உரையாற்றியதை நினைவுகூர்ந்த சவான், தமிழ் மிகவும் இனிமையான மற்றும் இசைநயமிக்க மொழி என்று புகழாரம் சூட்டினார். இந்தப் பெயர் மாற்றத்தை தேசியப் பெருமிதத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், இந்தப் புதிய பெயர் அந்த மாநிலத்தை தேசிய ஒருமைப்பாட்டிற்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர உதவும் என்றும் குறிப்பிட்டார்.


மறுநாள் 'தி இந்து' நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, மத்திய போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சரான டாக்டர் வி.கே.ஆர்.வி. ராவ் அந்த விவாதத்தில் பங்கேற்று இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. அப்போது அவர், தமிழ்நாட்டில் இந்தி மொழி ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெறுவதை மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுங்கட்சி உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இந்தச் செய்தித்தாள், 1968-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி வெளியிட்ட தலையங்கத்தில், ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யும் சட்டத்திற்கு மக்களவை ஒருமனதாக ஆதரவு அளித்ததைச் சுட்டிக்காட்டியதோடு, மாநிலம் தனக்கான பெயரைத் தேர்ந்தெடுப்பதை வெளியார் யாரும் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி, சென்னை அரசு எஸ்டேட்டில் உள்ள அப்போதைய சிறுவர் திரையரங்கில் (பின்னர் கலைவாணர் அரங்கம் என மறுபெயரிடப்பட்டது) மாநிலப் பெயர் மாற்ற விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் அண்ணாதுரை, அந்நிகழ்வில்தான் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றினார். டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி, 1968-ஆம் ஆண்டு நாளிதழில் வெளியான  செய்தியின்படி, அவர் பேசத் தொடங்கியபோது மக்கள் எழுந்து நின்று அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.  அப்போது "தமிழர்கள் தமிழர்களாக வாழ" வழிவகை செய்யவும், அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் மாநிலத்திற்குத் தேவையான அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரவும் வலியுறுத்தியாதாகக் கூறப்படுகிறது.


டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மாநிலங்களவையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி, தைப்பொங்கல் திருநாளில், 'தமிழ்நாடு' என்ற புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.


Original Link: An uproar that marked the State’s name change from ‘Madras’ to ‘Tamil Nadu’ 


Share: