துபாயில் பெய்த கனமழைக்கு காரணம் என்ன? -அலிந்த் சௌஹான்

 வறண்ட, அரேபிய தீபகற்ப நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்வது என்பது வழக்கத்திற்க்கு மாறானது. இருப்பினும், குளிர்கால மாதங்களில் கனமழை பொழிவு எப்போதாவது இப்பகுதியில் நிகழ்கின்றன. இந்த முறை என்ன நடந்தது? 


ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates (UAE)) திங்கள்கிழமை ஏப்ரல் 15 நள்ளிரவு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஒருவர் பலியானார். வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சேதம் ஏற்பட்டது. துபாயில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 


அரசின் வாம் (WAM) செய்தி நிறுவனத்தின் செய்தியின்படி, துபாயில் பெய்த மழையானது ஒரு வரலாற்று வானிலை நிகழ்வாகும்.  1949-ல் பெய்த கனமழையைவிட இந்த முறை அதிக அளவு மழை பெய்துள்ளது - இந்த மழைப்பொழிவு, 1971-ல் ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்படுவதற்கு முன்பு நிகழ்ந்தது.


வறண்ட அரேபிய தீபகற்ப நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்வது என்பது வழக்கத்திறு மாறானது. இருப்பினும், குளிர்கால மாதங்களில் கனமழை பொழிவு எப்போதாவது இப்பகுதியில் நிகழ்கின்றன.  


என்ன நடந்தது, ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வளவு அதிக மழைப் பொழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்பதை இங்கே பார்க்கலாம்.


என்ன நடந்தது?


இடியுடன் கூடிய மழைப்பொழிவு திங்கள்கிழமை 15.04.2024 இரவு தொடங்கியது மற்றும் செவ்வாய்க்கிழமை 16.04.2024 மாலை வரை 142 மில்லிமீட்டர் மி.மீ மழையை பாலைவன நகரமான துபாயில் கொட்டியது. வழக்கமாக, ஒன்றரை ஆண்டுகளில் இந்த அளவுக்கு மழை பெய்யும். 2023-ம் ஆண்டில் 80 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பதிவு செய்த உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சராசரியாக ஆண்டுக்கு 94.7 மில்லிமீட்டர் மழை பெய்யும். 


கனமழை காரணமாக விமானங்கள் திருப்பி விடப்பட்டதாலும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் விமான போக்குவரத்து தடைபட்டது. விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 25 நிமிடங்களுக்கு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் கனமழை ஓய்ந்தாலும், புதன்கிழமை வரை இடையூறுகள் தொடர்ந்தன என்று தெரிவித்தனர்.


அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய, பெயர் குறிப்பிட விரும்பாத  ஒரு தம்பதியர்,  விமான நிலையத்தின் நிலைமையை முழுமையான முடக்கம் என்று குறிப்பிட்டனர்.   “ஒரு டாக்ஸி கூட கிடைக்கவில்லை, மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். விமான நிலையத்தில் மக்கள் தூங்குகிறார்கள்” என்று அந்த நபர் கூறினார்.


துபாய் முழுவதும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது மற்றும் வாகனங்கள் சாலையோரங்களில் அடித்து செல்லப்பட்டன. துபாய் மால் (Dubai Mall), மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates) போன்ற பிரபல ஷாப்பிங் இடங்களும் வெள்ளத்தில் மூழ்கின. தண்ணீரை வெளியேற்றுவதற்காக டேங்கர் லாரிகள் அனுப்பப்பட்டன.


துபாயிலிருந்து கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘அல் ஐன்’ (Al Ain) நகரில் 254 மிமீ மழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள புஜைராவில் (Fujairah) செவ்வாய்க்கிழமை 145 மி.மீ மழை பெய்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்பட்டன. துபாயில், அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவித்துள்ளது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அண்டை நாடான ஓமனிலும் கடுமையான மழை பெய்தது,  “இதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 10 பள்ளி குழந்தைகள் பலியாயினர் என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


கனமழைக்கு காரணம் என்ன?


அரேபிய தீபகற்பத்தை கடந்து ஓமன் வளைகுடாவை கடக்கும் புயல் அமைப்புதான் இந்த கனமழைக்கு முக்கிய காரணம்.


ஏ.பி. செய்தி நிறுவனத்தின் மற்றொரு செய்தியின்படி, மேக விதைப்பு (cloud-seeding) மூலம் மழையை அதிகப்படுத்தியிருக்கலாம், ”மேகங்களில் உப்பு கலவைகளை தெளிக்கும் செயல்முறை மேகத்தின் ஒடுக்கம் மற்றும் இறுதியில் மழையை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளது.


  வானியல் ஆய்வுக்கான தேசிய மையத்தின் வானிலை ஆய்வாளர்கள், “மழைக்கு முன் 6 முதல் 7 மேக விதைப்பு விமானங்கள் பறந்தன” என்று கூறியதைக் பல அறிக்கைகள் மேற்கோள் காட்டியுள்ளது.


காலநிலை மாற்றம் இந்த நிகழ்விற்கு காரணமா?  


சில வல்லுநர்கள், அதிகரிக்கும் உலகளாவிய  வெப்பநிலையும் காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர். அதிக வெப்பநிலை நிலத்திலிருந்து மட்டுமல்ல, பெருங்கடல்கள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்தும் நீரை ஆவியாக்குகிறது. அதாவது, வெப்பமான வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும்.  சராசரி வெப்பநிலையில் ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும், வளிமண்டலம் சுமார் 7% அதிக ஈரப்பதத்தை வைத்திருக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது புயல்களை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. ஏனெனில், இது மழைப்பொழிவின் அளவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இது இறுதியில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தும்.


இந்தியாவின் தார் பாலைவனம் மற்றும் ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், காலநிலை மாற்றம் இந்தப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது.


1850-ல் இருந்து பூமியின் சராசரி புவி வெப்பம் குறைந்தது 1.1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 60 ஆண்டுகளில் வெப்பநிலை கிட்டத்தட்ட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. தொழில்துறை புரட்சிக்குப் பின்னர் வெப்பத்தைப் பிடிக்கும் பசுமை இல்ல வாயு (greenhouse gas (GHG)) உமிழ்வுகளின் அதிகரிப்பால் வெப்பநிலை அதிகரிப்பு முக்கியமாக ஏற்படுகிறது.


இருப்பினும், எந்தவொரு குறிப்பிட்ட தீவிர வானிலை நிகழ்வையும் காலநிலை மாற்றத்திற்குக் காரணம் கூறுவது மிகவும் கடினம். எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) போன்ற இயற்கை காலநிலை மாறுபாட்டின் வடிவங்கள் போன்ற பல காரணிகள் இத்தகைய நிகழ்வுகளுக்கு பங்களிக்கின்றன.




Original article:

Share:

திருநங்கைகள் பிச்சை எடுப்பதைத் தடுப்பது கொடூரமானது மற்றும் சட்டத்துக்கு புறம்பானது -ரோஹின் பட்

 திருநங்கைகள் பிச்சை எடுப்பதை தடைசெய்வது என்பது காலனித்துவ காலத்திலிருந்து வந்த பழைய கருத்துகளுடன் வேரூன்றியுள்ளது. ஆனால், இந்த கருத்துக்கள் அரசியலமைப்பைப் பின்பற்றும் ஜனநாயக நாட்டில் பொருந்தாது.


ஏப்ரல் 10 ஆம் தேதி குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) பிரிவு 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம், புனே காவல்துறை ஆணையர் (Pune police commissioner) அமிதேஷ் குமார், போக்குவரத்து சிக்னல்கள், தனியார் குடியிருப்புகள் மற்றும் பிற பொது இடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் திருநங்கைகள் பிச்சை எடுக்க தடை விதித்தார். திருநங்கைகள் பொதுவாக குறிப்பிட்ட காலங்களில் இது போன்ற சில இடங்களில் பணம் கேட்கும் வழக்கமாக வைத்துள்ளனர். ஏனென்றால், உலகம் பெரும்பாலும் அவர்களை நட்பாக நடத்துவதில்லை. 


காவல்துறை ஆணையர் குமார் அவர்கள், கடந்த ஆண்டு நாக்பூரில் அங்கு பணியமர்த்தப்பட்டபோது இதேபோன்ற தடையை விதித்தார். ஆரம்பத்தில், இது தற்காலிகமாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் விதிக்கப்பட்டது. ஆனால், அது ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த தடைகள் அரசியலமைப்பின் படி சட்டப்பூர்வமாக இருக்காது. மேலும், அத்தகைய தடைகள்,  ஏழைகளாக இருப்பதற்காக மக்களை தண்டிக்க விரும்பும் ஒரு பழைய பாணியிலான சிந்தனையாகத் தெரிகிறது. 


எனவே, புனே மற்றும் நாக்பூர் தடைகள் சட்டப்பூர்வமானவையா?


அத்தகைய சட்டபூர்வமான தன்மையை ஆராயும் முன், சில விஷயங்களைக் கூற வேண்டும்: முதலில், இதுபோன்ற தடைகள் மற்றும் பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் என்று கூறுவது, மேலும் களங்கத்தை உண்டாக்கும். இரண்டாவதாக, பிச்சை எடுப்பதை ஒழிப்பது ஒரு தகுதியான சமூகக் குறிக்கோளாக இருந்தாலும், அது ஆதரவான திட்டங்கள், உள்கட்டமைப்பு, மலிவு விலையில் வீடுகள் மற்றும் தங்குமிடங்களுக்கான அணுகல், கல்வி மற்றும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தல், களங்கத்தில் வேரூன்றிய தடைகளுக்குப் பதிலாக ஒரு மாற்று நடவடிக்கையாக இருக்கும்.  


 திருநங்கைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் எதிரான பாகுபாட்டைத் தடைசெய்யும் அரசியலமைப்புப் பிரிவு 15 இன் முதன்மையான மீறல் இது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

 



தற்போதுள்ள முன்னுதாரணத்திற்கு எதிராக


ஆனால், அரசியலமைப்புச் சார்ந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, உயர் நீதிமன்றங்களின் இரண்டு தீர்ப்புகள் விவாதிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. அவை, சுஹைல் ரஷித் பட் vs ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் (Suhail Rashid Bhat vs State of J&K) 2019 என்ற  ஒரு பொது நல வழக்கில் (Public Interest Litigation (PIL)) ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம், ஜம்மு & காஷ்மீர் பிச்சைக்காரர் தடுப்புச் சட்டம் (J&K Prevention of Beggary Act), 1960க்கு அரசியலமைப்புச் சவாலை எதிர்கொண்டது. "பொது இடங்களில் பிச்சைக்காரர்களின் தகவல்தொடர்பு நடவடிக்கையை தடை செய்வது அரசியலமைப்பின் 19(1)(d) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளை மீறுவதாகும் மற்றும் நிலையானது அல்ல". மேலும், பிச்சை எடுப்பதை குற்றமாகக் கருதும் சட்டங்கள் உண்மையில் வறுமையை குற்றமாக்குகின்றன. 


இரண்டாவதாக, ஹர்ஷ் மாந்தர் vs ஒன்றிய இந்தியாவில் (Harsh Mander v Union of India) 2018, டெல்லி உயர்நீதிமன்றத்தில், 1959 ஆம் ஆண்டு பாம்பே பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டம் (Bombay Prevention of Begging Act), டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு (தற்போது டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் (NCT)) நீட்டிக்கப்பட்டது. பிச்சை எடுப்பது குற்றமில்லை என்று கூறி உயர்நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்தது. இதனால், வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்கும் மோசடிகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியது. 


நீதிபதி கீதா மிட்டலின் சில வார்த்தைகள் சிலவற்றை மீண்டும் வலியுறுத்துகின்றன, “மக்கள் தெருக்களில் பிச்சை எடுப்பது அவர்கள் விருப்பத்திற்காக அல்ல, ஆனால் அது அவர்களுக்குத் தேவை என்பதற்காகத்தான். பிச்சை எடுப்பதே இவர்களின் வாழ்வாதாரத்திற்கான கடைசி வழியாக உள்ளது. இதைத் தவிர, வாழ்வதற்கு வேறு வழி இல்லை. மேலும், பிச்சை எடுப்பது ஒரு சமூக நோயின் அறிகுறியாகும், சமூக ரீதியாக உருவாக்கப்பட்ட வலையில் நபர் விழுந்துவிட்டார். பிச்சை எடுப்பதை ஒழிக்க வேண்டுமானால், பிச்சைக்காரர்களை கண்ணுக்கு தெரியாத வகையில் செயற்கையான வழிமுறைகள் போதுமானதாக இருக்காது” என்றார்.  


ஓரங்கட்டப்பட்ட குழுவை குற்றவாளியாக்குதல் 


பிச்சை எடுப்பது மட்டுமே சட்டவிரோதமானது அல்ல. திருநங்கைகளை காவல்துறையினர் எப்படி நடத்துகிறார்கள் என்ற பார்வையும் உள்ளது. இதில், திருநங்கைகள் பல நூற்றாண்டுகளாக தவறாக நடத்தப்படுகிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் நியாயமற்ற முறைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் கல்வி பெற்றாலும், அவர்கள் வேலை தேடுவதற்கு போராடுகிறார்கள். எனவே, சிலர் உயிர்வாழ்வதற்காக பிச்சை எடுக்க அல்லது பாலியல் தொழில் செய்ய வேண்டிய சூழலுக்குள் சிக்கியுள்ளனர். திருநங்கைகளை நடத்துவது மற்றும் பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டங்கள் இரண்டும் ஒரு நியாயமான சமூகத்தில் சேராத பழைய காலனித்துவ சார்புகளிலிருந்து வருகின்றன. இது பெரும்பாலும் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைக்கும், பிச்சை எடுப்பதற்கு நியாயமற்ற தண்டனைக்கும் வழிவகுக்கிறது. 


அனைவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் பணியாற்ற வேண்டும். இதன் பொருள் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பின்பற்றுவது. அதாவது, மக்கள் வாழ்வதற்கு போதுமான அளவு சம்பாதிப்பது மற்றும் நல்ல சுகாதாரத்தை அணுகுவது போன்றவை ஆகும். தனிநபர்களுக்கு இடையில் மட்டுமல்ல, வெவ்வேறு குழுக்களுக்கு இடையேயும் சமத்துவமின்மையைக் குறைக்க வேலை செய்வதையும் இது குறிக்கிறது.  


பிச்சை எடுப்பதற்கு எதிராக அரசு செயல்படுவதைப் பார்ப்பது, காவல் துறையின் மூலம் வறுமை மற்றும் குற்றங்கள் பற்றிய தரவுகள் இல்லாமல், ஒருவரின் தலையை மணலில் புதைப்பதாகும். திருநங்கைகளுக்கு உதவித்தொகை மற்றும் அவர்களுக்கு உதவ சிறப்பு வாய்ப்புகள், வேலைகளில் சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் தேவை. அவர்களுக்கான பிற ஆதரவு அமைப்புகளும் இருக்க வேண்டும். 


கட்டுரையாளர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், உயிரியல் அறவியலாளராகவும் உள்ளார்.




Original article:

Share:

காலநிலை மாற்றம் உணவு விலைகளை அதிகரிக்கிறது என்பதை இனியும் புறக்கணிக்க முடியாது - புலப்ரே பாலகிருஷ்ணன்

 உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைச் சமாளிக்க, சுற்றுச்சூழல் விவசாயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கையாள வேண்டும். இதன் பொருள், நீர் மட்டம் குறைதல், மண் வறண்டு போவது மற்றும் மண்ணின் மேல் அடுக்கு தேய்ந்து போவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இவை அனைத்தும் நேரடியாக விளைச்சலைக் குறைத்து விவசாய உற்பத்தியைக் குறைக்கின்றன


பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு பேட்டியில் 2014 முதல் பணவீக்கம் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இதில் கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான கூற்றுகள் உள்ளன. முதலாவதாக, பணவீக்கம் 2014க்கு முன்பே குறைந்து கொண்டிருந்தது. இரண்டாவதாக, 2016 க்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் மந்தமானதால், பணவீக்கத்தைக் குறைக்க பங்களித்திருக்கலாம். இறுதியாக, 2014 முதல் காலப்பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை, பணவீக்கத்தை முதல் பாதியில் குறைந்து இரண்டாவது பாதியில் அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்கு முன்னர் 2019-20 ஆம் ஆண்டில் மிக குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக இருந்தது. இது இந்த பணவீக்க காலத்தில் உள்நாட்டு காரணிகளின் பங்கைக் குறிக்கிறது.


2019 முதல் பணவீக்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உணவுப் பொருட்களின் அதிக பணவீக்கம் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில், உணவுப் பொருட்கள் ஒட்டுமொத்த பணவீக்கத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன. சில நேரங்களில் நேரடியாக 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. தொழில்துறை செலவுகள் அதிகரிப்பதன் மூலம் மறைமுக தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இது குறித்த அரசாங்கத்தின் கவலை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட்ட சமீபத்திய நடவடிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. ஏப்ரல் 1 முதல், அரிசி மற்றும் கோதுமையைக் கையாளும் மொத்த வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்கள் உணவுக்கான இருப்புகளை மறு அறிவிப்பு வரும் வரை அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து ஒரு மாற்றத்தை பரிந்துரைக்கிறது. இருப்பினும், இது தற்போதைய பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.


அரிசி மற்றும் கோதுமை வியாபாரிகள் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கருதுவது தவறு. தங்கம் அல்லது புதைபடிவ எரிபொருள்கள் போன்ற பொருட்களைப் போலல்லாமல், இவை அழிந்துபோகக்கூடிய பொருட்கள் மற்றும் வர்த்தகர்கள் அவற்றை வைத்திருக்கும் போது அவற்றின் சிதைவின் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். மேலும், பயிர்களுக்கு வருடாந்திர சுழற்சி உள்ளது. குறிப்பாக இந்தியாவில், புதிய பயிர்கள் வருவதால் அறுவடை காலத்தில் விலைகள் குறைகின்றன. எனவே, வர்த்தகர்கள் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக அதிக நேரம் பங்குகளை வைத்திருக்க விரும்பவில்லை. வானிலை மாற்றங்கள் பெரும்பாலும் இந்த சந்தையில் விலைகளை தீர்மானிக்கின்றன. இதனால், வர்த்தகர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். ஆனால், அவர்களால் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, விலைகள் விநியோகம் மற்றும் தேவையைப் பொறுத்த விவசாய சந்தைகளில் பணவீக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.


சில்லறை வர்த்தகம் பற்றி என்ன? அமெரிக்காவில் கொரோனாவுக்குப் பிறகு, பெரிய உணவு சில்லறை விற்பனையாளர்கள் விலையை உயர்த்தி, பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதன் பின்னர் அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்துள்ளது. பெரிய சில்லறை விற்பனையாளர்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். ஆனால், இது தற்போதைய விலை உயர்வை ஏற்படுத்துவதற்கு சமமானதல்ல. அமெரிக்காவில், தொற்றுநோயின் இடையூறுகளால் அதிகரித்த செலவுகளை ஈடுகட்ட அவர்கள் விலையை உயர்த்தியிருக்கலாம். இந்தியாவில், உணவு சில்லறை விற்பனையாளர்கள் இன்னும் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இங்கு, சில்லறை வணிகத்தில் சிறிய கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளன. ஆனால், பல்பொருள் அங்காடிகள் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதில்லை.


அரிசி மற்றும் கோதுமையை சேமித்து வைப்பது குறித்த அரசின் சமீபத்திய முடிவு பெரிய அளவில் உதவவில்லை. உணவில் அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்கள் அதிகம் அடங்கும். பருப்பு வகைகள், கோதுமை மற்றும் பால் போன்ற பிற பொருட்களும் பணவீக்கத்தால் அதிக விலை கொடுக்கின்றன. முதலாவதாக, தானிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவது போல் தெரிகிறது. இது மிகவும் கவனிக்கத்தக்கது. இரண்டாவதாக, ஒரு பெரிய பிரச்சினையின் விளைவுகளை நாம் காண்கிறோம்: அதாவது, புவி வெப்பமடைதல் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால், அதிகரித்து வரும் வெப்பநிலை வட இந்தியாவில் கோதுமை விளைச்சலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம்.


மேலும், 2023-24 சந்தைப்படுத்தல் ஆண்டிற்கான கோதுமை உற்பத்தியின் மதிப்பீடுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், வர்த்தக மதிப்பீடுகள் ஐந்து ஆண்டுகளில் உற்பத்தி மிகக் குறைவாக இருப்பதாகக் கூறுகின்றன. ஏற்றுமதி தடையை அரசு அமல்படுத்தலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இது உள்நாட்டு சந்தையில் அதிக அளவில் கிடைப்பதை உறுதி செய்து, பணவீக்கத்தைக் குறைக்கும். இருப்பினும், கற்பனையான ஊகத்தைத் தடுக்கும் நோக்கில், தனியார் பங்குகளைக் கண்காணித்தல் மற்றும் ஏற்றுமதித் தடைகள் ஆகிய இரண்டும் போதிய விநியோகத்தின் மையப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. கோதுமையில் கவனம் செலுத்துவதன் பயனை நாம் தெளிவாகக் காணலாம்.  நாம் உண்ணும் உணவில் கோதுமை ஒரு சிறிய பகுதியே. 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன, இது அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான உணவை நாங்கள் வளர்க்கவில்லை என்பதைக் காட்டுகிறது.


புவி வெப்பமடைதல் உலகளவில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் உணவு விலைகள் உயர்ந்துள்ளன. நிலத்தில் குறைந்த தண்ணீர், மண் வறண்டு போவது, மண் மோசமடைவது போன்ற பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும். ஏனென்றால், இந்த காரணிகளால் பயிர்களை குறைந்த அளவு உணவை உற்பத்தி செய்கின்றன. இங்கு, அதிக பயிர்களை வளர்க்க கூடுதல் நிலம் இல்லை என்பதே நிதர்சனம்.


இந்த உயர்வான மற்றும் நீடித்த உணவுப் பணவீக்கத்தின் மத்தியில், இந்திய மக்கள்தொகையில் அதிக விகிதத்தை ஆரோக்கியமான உணவுமுறையின்றி விட்டுச்செல்கிறது. இந்தியா பொருத்தமற்ற பணவீக்க எதிர்ப்புக் கொள்கையில் சிக்கியுள்ளது. ஆனால் "பணவீக்க இலக்கு" (inflation targeting) என்று அழைக்கப்படும் இதை சரிசெய்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் செயல்படவில்லை. தேவையுடன் ஒப்பிடும்போது நாம் பயன்படுத்தும் விவசாயப் பொருட்கள் போதுமான அளவில் இல்லாததால் இந்தியாவில் பணவீக்கம் ஏற்படுகிறது என்பது தெளிவாகிறது.  

   

கட்டுரையாளர் ஒரு பொருளாதார நிபுணர்.




Original article:

Share:

இந்தியாவின் மாற்று வளர்ச்சித் திட்டத்தின் படிப்பினைகள்

 எரிசக்தி மாற்றம் (energy transition), டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (digital public infrastructure) மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் (female empowerment) ஆகியவற்றில் முதலீடு செய்வது நாட்டை பசுமை மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.


சமீபத்திய இந்தியப் பயணமானது அறிவூட்டுவதாக இருந்தது. ஒரு இருண்ட உலகளாவிய கண்ணோட்டம் இருந்தபோதிலும், ஒரு பிரகாசமான உதாரணத்தைக் கண்டுபிடித்தது. பொது முதலீடுகள் பெரும்பாலும் இந்த வளர்ச்சியைத் தூண்டின. இருப்பினும், தனியார் துறையும் இந்தியாவின் எதிர்காலத்தை பாதிக்கிறது என்பது தெளிவாகிறது. உதாரணமாக, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மிகவும் அவசியம் என்பதைக் காட்டும் பெண் தொழில்முனைவோரை தமிழ்நாட்டில் சந்தித்ததன் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தில் முதலீடு செய்கின்றன.


இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், பொது மற்றும் தனியார் முயற்சிகள், புதுமை மற்றும் பின்னடைவு ஆகியவற்றுடன் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. இந்த அனுபவம் மற்ற நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தேசிய, மாநில மற்றும் உள்ளூர் - பல்வேறு நிலைகளில் பணியாற்றிய வளர்ச்சி உத்திகள் குறித்த மதிப்புமிக்க பாடங்களை இந்தியா வழங்குகிறது. வளரும் நாடுகளிடையே அறிவு பரிமாற்றத்தின் மூலம் மாற்றியமைக்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய நடைமுறை உலக தீர்வுகளுக்கான சோதனைக் களமாக இது செயல்படுகிறது. எனது பயணத்தின் போது, எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய மூன்று எடுத்துக்காட்டுகளில் கவனம் செலுத்தினேன்.


இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், இந்தியா ஆற்றல் மாற்றத்தில் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதன் மொத்த மின் உற்பத்தி திறனில் 42 சதவீதமாக உள்ளது. இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய புதுப்பிக்கத்தக்க சந்தையாகவும், உலகளாவிய சூரிய உற்பத்தி திறன்களில் 3 சதவீதத்தையும் கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் டாலர்களை புதுப்பிக்கத்தக்க வகையில் முதலீடு செய்துள்ளது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பெரிய அளவிலான பொது முதலீட்டைக் கொண்ட உலகின் ஐந்து வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் இடம் பிடித்துள்ளது. மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பசுமை ஹைட்ரஜன் (green hydrogen) உற்பத்தி செய்வதற்கும் நாடு ஆதரவு அளித்துள்ளது. 


தூய்மையான எரிசக்தியை நோக்கிய இந்தியாவின் நகர்வை முதலீட்டாளர்கள் ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கின்றனர். உலக வங்கி, இந்தியாவில் சூரிய பூங்காக்கள் (solar parks) மற்றும் கூரை சூரிய ஒளியில் (rooftop solar) சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இது வணிக முதலீட்டில் 40 மடங்கு தொகையை ஈர்த்துள்ளது. இந்தியா தனது எரிசக்தி மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்த கட்டம் பரிமாற்றம் மற்றும் சேமிப்பில் முதலீடு செய்வதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் கணிக்க முடியாத தன்மையைக் கையாள்வதை உள்ளடக்கும். போக்குவரத்தை பெரிய அளவில் மற்றும் விரைவான மின்மயமாக்கலை ஊக்குவிப்பதில் இது கவனம் செலுத்தும். கூடுதலாக, தொழில்துறை கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்களில் முதலீடுகளை இது ஊக்குவிக்கும். 

 

இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (digital public infrastructure (DPI)) முன்முயற்சியுடன் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய அடையாளச் சான்றிதழுடன், மில்லியன் கணக்கான மக்கள் இப்போது சமூக பாதுகாப்பு நிகர கட்டணங்களை அணுகலாம், வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் மற்றும் வரிசையில் நிற்காமல், பொது அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், காகிதப் படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி அரசாங்க சேவைகளைப் பெறலாம். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பயன்பாடு, மகப்பேறு சுகாதார பணப் பரிமாற்றங்களை 43 சதவீதம் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில், ரொக்கமில்லா சூழலில், டிஜிட்டல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி, தங்கள் வணிகத்தை வளர்க்கவும், நிதியை அணுகவும் செழித்து வரும் பெண் குறுந்தொழில்முனைவோரை சந்தித்தது அனுபவமாக இருந்தது. மலிவு விலையில் இணைப்பிற்கான (affordable connectivity) அணுகல் ஒரு பிரச்சினையாக இருந்தாலும், டிஜிட்டல் கண்டுபிடிப்பு கிராமப்புறங்களில் ஒரு  மாற்றத்தை கொண்டுள்ளது. இணையவழி சுகாதார ஆலோசனைகள் (online health consultations), தொலைதூர கற்றல் (remote learning), மின் வணிகம் (e-commerce) மற்றும் நிதி தொழில்நுட்பம் (fin-tech) ஆகியவற்றை செயல்படுத்துகிறது.


டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் நாடுகள் எவ்வாறு வளர்ச்சியடையலாம் என்பதையும், அனைவரையும் உள்ளடக்கவும் மற்றும் வறுமையைக் குறைக்கவும் பயன்படுத்த முடியும் என்பதை இந்தியா காட்டுகிறது. இந்தியா தனது டிஜிட்டல் பயணத்தில் கற்றுக்கொண்டதை உலக வங்கி மற்ற நாடுகளுக்கு கற்றுக்கொடுக்கிறது.


மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவான பெண்கள் பணிபுரிகின்றனர். ஆனால், மேம்படுவதற்கான சாதகமான அறிகுறிகளையும், விவசாயிகள், வணிக உரிமையாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் பாலின இடைவெளியைக் குறைக்க பணிபுரியும் அரசாங்க அதிகாரிகள் என பல பெண்களை நான் சந்தித்தேன். மேலும், தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது, நகரங்களில் பாதுகாப்பான வீட்டுவசதிக்கு ஆதரவளிக்கும் கொள்கைகள் எவ்வாறு அதிகமான பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் சேர உதவுகின்றன என்பதைக் கண்டேன். பணத்திற்கான சிறந்த அணுகலுடன், இந்த முயற்சிகள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை மொத்தத்தில் 43% ஆக உயர்த்தியுள்ளன.


தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihoods Mission), உலக வங்கியின் (World Bank) உதவியுடன், சுய உதவிக் குழுக்களை (self-help groups) உருவாக்கி லட்சக்கணக்கான கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. பெண்கள் நடத்தும் கூட்டுறவுகள் மற்றும் கிராமப்புற வணிகங்களை ஆதரிப்பதற்காக $4 பில்லியனுக்கும் அதிகமான தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த முயற்சிகளை விரிவுபடுத்தினால், அது உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த முடியும். இது மற்ற வளரும் நாடுகளில் இந்த அளவு சராசரியாக உள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சியை 1% அதிகரிக்கும் மற்றும் பல இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும்.


வெற்றிகரமான திட்டங்களை மற்ற நாடுகளுக்கு பரப்ப உலக வங்கி பணியாற்றி வரும் நிலையில், எனது சமீபத்திய இந்திய பயணம் எனக்கு மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் அதிக வருமானம் கொண்ட நாடாக மாறுவதற்கான இலக்குடன், உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

எழுத்தாளர் உலக வங்கியின் செயல்பாடுகளின் இயக்குநராக (Managing Director Operations) உள்ளார்.




Original article:

Share:

பல்வேறு சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு -ரெபேக்கா ரோஸ் வர்கீஸ், விக்னேஷ் ராதாகிருஷ்ணன்

 இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.  கல்வி மற்றும் சுகாதாரத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. 


தமிழ்நாட்டின் பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றிய ஆய்வானது, இந்த வெள்ளிக்கிழமை தேசியத் தேர்தலுக்குச் செல்லும் நிலையில், மாநிலம் காலப்போக்கில் விரிவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.  தமிழ் நாடு குழந்தைகள் நலம், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் கல்வி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுகிறது. அதன் பொருளாதாரம், குறிப்பாக உற்பத்தி, வலுவாக உள்ளது.  


2005-06, 2015-16 மற்றும் 2019-21 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சமூக குறிகாட்டிகளில் தமிழகத்தின் தரவரிசை மற்றும் மதிப்பெண்ணை அட்டவணை 1 காட்டுகிறது. 2015-16 மற்றும் 2019-21 க்கு இடையில் மாநிலத்தின் தரவரிசை எவ்வாறு மாறியது என்பதையும் இது காட்டுகிறது. தரவரிசை வடகிழக்கு மற்றும் கோவா போன்ற சிறிய மாநிலங்களை உள்ளடக்கியது. முக்கிய மாநிலங்களில் தமிழ்நாட்டின் தரவரிசை தனித்தனியாக காட்டப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2019-21 ஆம் ஆண்டில், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 80.4% பேர் மாநிலத்தில் பள்ளிக்குச் (attended school) சென்றுள்ளனர். பகுப்பாய்வு செய்யப்பட்ட அனைத்து 30 மாநிலங்களிலும், தமிழ்நாடு 11வது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், பெரிய மாநிலங்களில் மட்டும், கேரளா (1வது) மற்றும் ஹிமாச்சல் (10வது) ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு முதல் மூன்று இடங்களுக்குள் தமிழ்நாடு  உள்ளது. இரண்டு முதல் ஒன்பது வரை உள்ள மாநிலங்கள் சிறிய மாநிலங்களாக இருந்தன. 2019-21 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 20-24 வயதுடைய 12.8% பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்வதில் 13-வது இடத்தைப் (30-ல்) பிடித்தனர். காலப்போக்கில், அத்தகைய பெண்களின் சதவீதம் குறைந்தது. ஆனால் மாநிலத்தின் தரவரிசை 2005-06 இல் 9 வது இடத்தில் இருந்து 2019-21 ஆம் ஆண்டில் 13 வது இடத்திற்கு உயர்ந்தது. 2019-21 ஆம் ஆண்டில் குழந்தை இறப்பு விகிதம் (Infant mortality rate) மற்றும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பங்கு (share of stunted children) இரண்டிலும் முதல் மூன்று பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. 2005-05ல் 23வது இடத்திலிருந்து 2019-21ல் 10வது இடத்திற்கு இறக்கும் குழந்தைகளின் பங்கில் (share of wasted children) அதன் ஒப்பீட்டு தரவரிசையும் மேம்பட்டுள்ளது. எடை குறைந்த குழந்தைகளின் பங்கில் (share of underweight children) முதல் மூன்று மாநிலங்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது. உடல்நலக் காப்பீடு (health insurance) /நிதித் திட்டத்தின் (financing scheme) (%) கீழ் உள்ள எந்தவொரு உறுப்பினருடனும் உள்ள குடும்பங்களின் பங்கில், மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. இருப்பினும், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதியைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு முன்னேற்றமான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது.






 


மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) தமிழகத்தின் நிலை மேம்பட்டுள்ளது. 1990 இல், அது 16 ஆக இருந்தது. 2021 இல், இது 11 வது இடத்திற்கு உயர்ந்தது (அட்டவணை 2).


கடந்த இரண்டு பத்தாண்டுகளாக மாநிலத்தின் பொருளாதாரம்  மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. 1993-94ல் 27 மாநிலங்களில் தமிழ்நாடு எட்டாவது இடத்தைப் பிடித்தது. 2021-22ல், ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. முக்கிய மாநிலங்களில், தற்போதைய விலையில் (அட்டவணை 3) தனிநபர் நிகர  மாநில உள்நாட்டு உற்பத்தியில் (per capita net state domestic product (current prices))  மூன்றாவது இடத்தில் உள்ளது. 


மாநிலத்தின் பொருளாதாரம் உற்பத்தித் துறையை (manufacturing sector) பெரிதும் நம்பியுள்ளது. இந்தத் துறையில் தமிழகத்தின் 18.7% பணியாளர்கள் உள்ளனர். இது முக்கிய மாநிலங்களில் மூன்றாவது-அதிக சதவீதமாகும் (அட்டவணை 4). மாநிலத்தின் மொத்த மதிப்பில், உற்பத்தியின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, மாநிலம் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும், பெரிய மாநிலங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது.


உயர் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் (Gross Enrolment ratio (GER)) மாநிலம் முதலிடத்திலும், பெரிய மாநிலங்களில் மேல்நிலைப் பள்ளிக்கு (higher education)மூன்றாவது  இடத்திலும் உள்ளது. (அட்டவணை 5)

இருப்பினும், தொழில்துறை வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பகுதிகளில் தமிழ்நாடு சவால்களை எதிர்கொள்கிறது (அட்டவணை 6). தனிநபர் உற்பத்தியாகும் அபாயகரமான கழிவுகளில் (hazardous waste generated per capita) 28 மாநிலங்களில் 25வது இடத்தில் உள்ளது. மூன்று மாநிலங்கள் மட்டுமே குறைவான கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. தனிநபர் நுகரப்படும் புதைபடிவ எரிபொருட்களில் (fossil fuels consumed per capita) 30 மாநிலங்களில் 22வது இடத்தில் உள்ளது. எட்டு மாநிலங்களில் நுகர்வு குறைவாக உள்ளது. 




Original article:

Share:

விளைநிலங்களில் உள்ள மரங்களால் சிறு விவசாயிகள் எவ்வாறு பயனடைவார்கள்? -தீப்தி ஆர்.சாஸ்திரி, மிலிந்த் புயன், ரவிகாந்த் ஜி.

 சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார காரணங்களால் இந்தியாவில் உள்ள சிறு-குறு விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பில் சவால்களை எதிர்கொள்கின்றனர். 


இந்தியாவில் விவசாயம் என்பது வரலாற்று ரீதியாக பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகளை ஒருங்கிணைத்து, பலதரப்பட்ட நில பயன்பாட்டு நடைமுறையாக இருந்து வருகிறது. வேளாண் காடு வளர்ப்பு என்று பரவலாக அழைக்கப்படும் இந்த நுட்பம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் மற்றும் பசுமைப் புரட்சியால் (Green Revolution) ஈர்க்கப்பட்ட ஒற்றைப்பயிர் சாகுபடி (monocropping) முறையின் பத்தாண்டுக்குப் பிறகு மெதுவாக பிரபலமடைந்து வருகிறது.


சமீபத்தில் எங்களின் களப்பயணத்தின் போது, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடுத்தர விவசாயியான சித்ரா என்பவர், கஜா புயலால் தென்னை மரங்களை முழுவதுமாக அழித்து மண்ணை உப்பாக மாற்றிவிட்டது என்று கூறினார். அதன் பிறகு, எந்த விதமான பயிர்களை நடவு செய்வது என்று தெரியாமல் இருந்தோம். பின்னர், இவருடன் சேர்ந்து மற்ற விவசாயிகளும் அதற்கு பதிலாக பலா மற்றும் மா மரங்களை நடவு செய்ய முடிவு செய்தனர். இப்போது, அவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல லாபம் ஈட்டுகிறார்கள்.


வேளாண் காடுகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முன்னோடி முயற்சிகளின் விளைவாக இந்த மாற்றம் ஏற்பட்டது. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய வேளாண் வனவியல் கொள்கை 2014 (National Agroforestry Policy) மூலம் இந்த பகுதியில் முயற்சிகளை மேம்படுத்துகிறது. இருப்பினும், வேளாண் காடு வளர்ப்பு பெரும்பாலும் நடுத்தர அல்லது பெரிய நிலம் கொண்ட விவசாயிகளால் பின்பற்றப்படுகிறது.


சிறு விவசாயிகள் பொதுவாக மரங்களை வளர்ப்பதில்லை. ஏனெனில், அவை வளர நீண்ட நேரம் எடுக்கும். மேலும், அதற்கு அதிக ஊக்கத்தொகை அல்லது முதலீடு கிடைக்காது என்பதால், சந்தைக்கான இணைப்புகள் பலவீனமாக உள்ளன. ஆனால், விவசாயி சித்ராவின் அனுபவம் வேளாண் காடுகளின் திறனை நிரூபிக்கிறது. இது, பண்ணைகளில் அதிக மரங்களை நடவு செய்வதை ஊக்குவிப்பதற்கான ஆதரவின் அவசியத்தை பரிந்துரைக்கிறது.

தொடர் தண்ணீர் பிரச்சனை


ஐந்தாண்டு கால நீட்டிப்பால் ‘இந்தியாவின் காடுகளுக்கு வெளியே மரங்கள்’ (Trees Outside of Forests India (TOFI))   முன்முயற்சியானது, தற்போதைய நிலையில் மாற்றத்தைத் தூண்டுவதற்கான விரிவான வழிகளை மதிப்பிடுவதற்கான ஒரு முயற்சியாகும். இது சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (Agency for International Development (USAID)) மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (Ministry of Environment, Forest and Climate Change) கூட்டு முயற்சியாகும். இந்தியாவின் ’காடுகளுக்கு வெளியே மரங்கள்’ (TOFI) நம்பிக்கைக்குரிய விரிவாக்க வாய்ப்புகளை அடையாளம் கண்டு சரியான வளர்ச்சிகளை ஈடுபடுத்துவதன் மூலம் ஏழு இந்திய மாநிலங்களில் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க முயல்கிறது.


ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் வேளாண் காடுகள் மூலம்   காடுகளுக்கு வெளியிலான மரங்களின் (trees-outside-forests (TOF)) எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கான முக்கிய தடைகளை எங்கள் ஆராய்ச்சி மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகள் மூலம் கண்டறிந்துள்ளோம்.


இந்த மாநிலங்களில் உள்ள சிறு விவசாயிகள், புதிய தொழிநுட்பத்திற்கு மாறுவதற்கு போதுமான தண்ணீர் மற்றும் பணத்தைப் பெறுவது குறித்து அடிக்கடி கவலைப்படுவதைக் கண்டோம். ஆனால், இந்த பிரச்சனைகளை சரிசெய்ய வழிகள் இருப்பதாக நாம் நம்புகிறோம். 


சரியான பூர்வீக இனங்களைக் கண்டறிதல்


வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture) 2014 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வனவியல் கொள்கையை (National Agroforestry Policy) உருவாக்கியபோது தண்ணீர் கிடைப்பது, குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதை கவனித்தது. மேலும் தண்ணீரைப் பாதுகாக்க கூடுதல் நிதி தேவைப்படும் மற்றும்/அல்லது அவ்வாறு செய்வதில் கூடுதல் கடனைச் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். மேலும், மரக்கன்றுகள் வளரும் பருவத்தில் நீர் இருப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மேலும், கடினமான பாறை நிலத்தடி நீர் ஆதாரங்களைக் கொண்ட பகுதிகள் அல்லது அதிக மழை பெய்யாத இடங்கள் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் பயிர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் அது கடினமாக இருக்கும்.


இந்த சிக்கலை போக்க, பயிர்களைப் போல அதிக தண்ணீர் தேவைப்படாத மரங்களை நடவு செய்வது ஒரு தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இது எப்போது சரியான தீர்வாக அமையும் என்பதைக் கண்டறிய 'ஜல்டோல்' (Jaltol) என்ற நீர் அளவிடும் கருவியை (water-accounting tool) மாற்றியமைக்க பெங்களூரில் உள்ள வெல் ஆய்வகத்துடன் (WELL Labs) நாங்கள் இணைந்தோம். இந்த கருவி, மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது. உதாரணமாக, மத்திய கர்நாடகாவில் உள்ள சில பயிர்களைப் போல மா மரங்களுக்கும் அதிக தண்ணீர் தேவையில்லை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களுக்கு ஆண்டு முழுவதும் பயிர்களை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. 


இந்த கருவிகள் நிலத்தை மீட்டெடுக்க விரும்பும் குழுக்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் மரங்கள் மற்றும் பயிர்களின் சரியான கலவையைத் தேர்வுசெய்ய உதவுகின்றன. 

 


சரியான பூர்வீக இனங்களைக் கண்டறிதல்


உண்மையில், சரியான இடம் மற்றும் சரியான காரணத்திற்காக சரியான இனங்களைத் தேர்ந்தெடுப்பது, வாழ்வாதாரத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு வேளாண் காடுகளின் அடிப்படையாகும். இருப்பினும், பல விவசாயிகள் தாவர உண்ணும் விலங்குகளைத் தடுக்கும் வேகமாக வளரும் மரங்களை விரும்புகிறார்கள். ஆனால், இந்த மரங்கள் பெரும்பாலும் பூர்வீகமானவை அல்ல. அவை, மண்ணுக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். 


உதாரணமாக, பூர்வீகமாக இல்லாத கேசுவரினா (Casuarina) மற்றும் யூகலிப்டஸ் (eucalyptus) மரங்கள் உப்பு மண்ணை நன்கு கையாளும் மற்றும் அதிக வேலை தேவையில்லாமல் விரைவாக வளரும். ஆனால், இரண்டு இனங்களும் முதன்மையாக ஒரு ஊடுபயிராக (mono-crop block plantations) அல்லது மரம்-பயிர் கலவையாக (intercrop or a tree-crop) இல்லாமல் பெரிய ஒற்றைப்பயிர் தொகுதி தோட்டங்களாக வளர்க்கப்படுகின்றன. இது, சிறிய நில உரிமையாளர்களுக்கு இன்றியமையாததாக இருக்கும்.


வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பூர்வீக மரங்களைக் கண்டுபிடிப்பது கடினமானது. ஆனால், நில சேதத்தைத் தடுப்பதற்கும், வாழ்வாதாரத்தை சம்பாதிப்பதற்கான கூடுதல் வழிகளை வழங்குவதற்கும் இன்றியமையாதது. 'மறுசீரமைப்புக்கான பன்முகத்தன்மை' (Diversity for Restoration) போன்ற கருவிகள் உதவக்கூடும். குறிப்பிட்ட மறுசீரமைப்பு இலக்குகளுடன் பொருந்தக்கூடிய காலநிலை-எதிர்ப்பு இனங்களின் ஏற்புடைய பட்டியலை பரிந்துரைக்கிறது. இந்த கருவி விரைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அறிமுகப்படுத்தப்படும். பின்னர், மற்ற பகுதிகளுக்கான திட்டங்களும் இருக்கும்.


சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணம்


மற்ற ஆய்வுகள் ஒரு நிலையான விவசாய முறையாக வேளாண் காடுகளுக்கான பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளைப் பார்த்தன. ஆனால், உண்மையில் வேளாண் முறைகளில் இதைச் செய்வது இன்னும் சவால்களை எதிர்கொள்கிறது. அதற்கு பணம் செலுத்துவதற்கும் நல்ல சந்தைகளுடன் இணைவதற்கும் போதுமான ஆதரவு இல்லை. மேலும், அரசாங்க விதிகள் பெரும்பாலும் வெவ்வேறு நில அளவுகள் அல்லது வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள சூழலுடன் பொருந்தாது. இதன் விளைவாக, இந்தத் திட்டங்கள் இயல்பாகவே சிறு விவசாயிகளை விலக்குகின்றன. 


எடுத்துக்காட்டாக, இந்திய வன மற்றும் மரச் சான்றிதழ் திட்டம் (Indian Forest and Wood Certification Scheme) 2023, வேளாண் காடுகள் மற்றும் மர அடிப்படையிலான தயாரிப்புகள் நிலையானவை என சான்றளிக்கும், விவசாயிகள் மற்றும் தொழில்களுக்கான தகுதி அளவுகோல்களின் முழுமையான பட்டியலைக் கொண்டுள்ளது. 


ஆனால், அதன் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது சிறு விவசாயிகளுக்கு மிகவும் செலவு மிக்கதாக இருக்குமா என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. தற்போதைய அரசாங்கக் கொள்கைகள் வேளாண் காடுகளுக்கு நிதியளிக்க எவ்வாறு உதவும் என்பதையும் கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.


சுற்றுச்சூழல் வரவுகளின் புதிய யோசனை மற்றும் 'சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணம்' (payment for ecosystem services(PES)) போன்ற பழைய வழிகள் விவசாயிகளை ஊக்குவிக்கும். சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணத்தில், மகரந்தச் சேர்க்கை போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவையிலிருந்து பயனடையும் ஒரு நிறுவனம், அந்த சேவையை ஆதரிக்கும் மரங்களை பராமரிக்க ஒரு விவசாயிக்கு பணம் கொடுக்கலாம். இந்தக் கருவிகள் பொருளாதாரத்தில் இயற்கையின் மீது கவனம் செலுத்தும் யோசனையை ஆதரிக்கின்றன. ஆனால், சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை (ecosystem service) யார் விற்கிறார்கள் மற்றும் வாங்குகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட இயற்கைப் பகுதிக்கான குறிப்பிட்ட சேவைகளை நாம் முழுமையாகப் பார்க்க வேண்டும். இது ஒரு அரசியல் எல்லைக்கு மட்டும் உகந்ததல்ல. இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், மண் மற்றும் நிலத்தடி நீரை ஆரோக்கியமாக்கும் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆரோக்கியமான விவசாய முறைகளை பராமரிக்க இந்த நடைமுறைகள் முக்கியமானவை.   

   

ஒரு  வாழ்க்கை முறை 


வேளாண் காடுகள் வளர்ப்பில் இந்தியாவில் சிறு விவசாயிகளை ஈடுபடுத்த வேண்டும். ஏனெனில், அவர்கள் நாட்டின் பெரும்பாலான விவசாய நிலங்களை வைத்திருக்கிறார்கள். இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இது இப்போது கடினமாக உள்ளது. வேளாண் காடு வளர்ப்புக்கு பாதுகாப்பான நில உரிமை ஒரு முன்நிபந்தனை என்றாலும், நிலையான வேளாண் காடு வளர்ப்பின் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் போது சந்தை இணைப்புகள் மூலம் பொருளாதார நம்பகத்தன்மையை உறுதி செய்வது இந்த விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க முக்கியமானது.


வேளாண் காடுகள் பாதுகாவலர்கள் (conservationists), வேளாண் பொருளாதார வல்லுநர்கள் (agro-economists) மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் (policymakers) அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு தீர்வாக இருக்கலாம். இது சுற்றுச்சூழல் அமைப்புகள் (foster healthy ecosystems) ஆரோக்கியமாக இருக்கவும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு, குறிப்பாக சிறு உரிமையாளர்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும். 


தீப்தி ஆர்.சாஸ்திரி, மிலிந்த் பனியன், ஜி.ரவிகாந்த் ஆகியோர் பெங்களூருவில் உள்ள சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையில் (Ashoka Trust for Research in Ecology and Environment (ATREE)) TOFI முன்முயற்சியின் மூலம் பண்ணைகளில் மரங்களின் அடர்த்தியை அதிகரிப்பதற்கான சூழல் சார்ந்த வழிகளை மேம்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.




Original article:

Share:

மழை அதிர்ச்சி : 2024ஆம் ஆண்டின் பருவமழை பற்றி . . .

 இந்தியாவின் விவசாயிகள் தங்கள் பயிர்களை நடவு செய்யும் போது பருவமழையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


இந்திய வானிலை ஆய்வுமையம் (India Meteorological Department (IMD)), 2024 ஆம் ஆண்டில் பருவமழை அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.  ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழை சராசரியான 87 செ.மீ.யை விட 6% அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது, இது இந்தியாவில் இந்த மாதங்களில் வழக்கமாக பெய்யும் மழையாகும். வழக்கமாக, இந்திய வானிலை ஆய்வுமையத்தின் ஏப்ரல் மாத முன்னறிவிப்பு உபரி அல்லது பற்றாக்குறை மழையைக் கணிப்பதைத் தவிர்க்கிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க கணிப்பு. இந்தியாவில் பல தென் மாநிலங்கள் தற்போது அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகளை அனுபவித்து வருகின்றன என்றாலும், அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு நல்ல செய்தியாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த முன்னறிவிப்புடன் தொடர்புடைய கவலைகள் உள்ளன.


இந்திய வானிலை ஆய்வுமையம் "அதிகப்படியான" மழைக்கு 30% வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது, அதாவது வழக்கமான மழையில் 10% க்கும் அதிகமாக இருக்கும். "இயல்புக்கு மேல்" மழை பெய்ய 31% வாய்ப்பையும் எதிர்பார்க்களாம். இது வழக்கமான அளவின் 5% முதல் 10% வரை பெய்யும். சாதாரண மழையை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இது தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலான மழை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், பருவமழையின் இரண்டாம் பாதியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வுமையத்தின் கணிப்புகள் லா நினாவின் (La Niña) வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை, இது எல் நினோவுக்கு எதிரானது மற்றும் பெரும்பாலும் பருவமழையின் போது குறைவான மழைப்பொழிவுக்கு வழிவகுக்கிறது.


 லா நினாவிற்கு இந்தியப் பெருங்கடலின் இருமுனையும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கிழக்கு இந்தியப் பெருங்கடல் மேற்குடன் ஒப்பிடும்போது இயல்பை விட குளிர்ச்சியாக இருக்கும். இது, தென்னிந்திய மாநிலங்களுக்கு மழையைக் கொண்டுவரும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எவ்வளவு மழை எதிர்பார்க்கலாம் என்பதை இந்திய வானிலை ஆய்வுமையம் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த நேரத்தில் "நடுநிலை நிலைமைகளை"  (neutral conditions) கணித்துள்ளது, அதாவது எல் நினோ (El Niño) அல்லது லா நினா (La Niña) ஆதிக்கம் செலுத்தாது. இரண்டு மாதங்கள் வறட்சிக்கு பின் தொடரும் கனமழை விவசாயத்திற்கு பயனளிக்கும். அதே வேளையில், இது கடுமையான வெள்ளம் மற்றும் கடந்த காலத்தில் காணப்பட்டது போன்று உயிர்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.   


கேரளாவில் 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், இயற்கை பேரழிவுகளை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதைக் காட்டுகிறது. மே மாத இறுதிக்குள் இந்திய வானிலை ஆய்வுமையம் புது அறிவிப்பை வழங்கும். மாநிலங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும் மற்றும் அவற்றின் பேரிடர் தொகுதிகளிலிருந்து அவசரத் திட்டங்களை உருவாக்க வேண்டும். அவர்கள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். உறுதித் தன்மைக்காக அணைகளைச் சரிபார்க்க வேண்டும் மற்றும் அவசரகால எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள், தங்களின் நடவு செய்வதற்கு பருவமழையின் இரண்டாம் பாதி வலுவான சாத்தியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.




Original article:


Share:

வெப்ப அலையை தடுப்பதற்கான இந்தியாவின் செயல் திட்டங்கள் -கே.மூர்த்தி, சாஹில் மேத்யூ

 இந்திய வானிலை ஆய்வுத் துறை வெப்ப அலைகளை (heatwaves) எவ்வாறு வரையறுக்கிறது? வெப்ப அலையின் போது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு சிறப்பு தலையீடுகள் தேவையா? பிராந்திய வேறுபாடுகள் மற்றும் சமூக-பொருளாதார வேறுபாடுகள் பற்றி என்ன? 


கோடை வெப்பம் இந்தாண்டு அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department (IMD)) சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேற்கு மற்றும் வடகிழக்கு  மாநிலங்களின் சில பகுதிகளில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெப்ப அலை (இயல்பை விட 3.1-5 டிகிரி செல்சியஸ்) கடுமையாக உள்ளது. கிழக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு வரவிருக்கும் நாட்களில் அதிக அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அடிக்கடி வெப்ப அலைகள் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. வரவிற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக இருக்கவேண்டும். 


வெப்ப அலை (heatwave) என்றால் என்ன?


இந்திய வானிலை ஆய்வு மையம் இருக்கும் இடத்தின் அடிப்படையில் வெப்ப அலையை வரையறுக்கிறது. வெப்பநிலை சமவெளிகளில் 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்டதை, கடற்கரையில் 37 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்டதை அல்லது மலைகளில் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்டதை எட்டினால், அது வெப்ப அலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.  


வெப்ப அலை எவ்வளவு தீவிரமானது என்பது வழக்கத்தை விட எவ்வளவு வெப்பமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. இது இயல்பை விட 4.5-6.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக  இருந்தால், அது சாதாரண வெப்ப அலை. அதை விட வெப்பம் அதிகமாக இருந்தால், அது கடுமையான வெப்ப அலை.  


அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால் வெப்ப அலை (heatwave) எனவும், 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால் அது கடுமையான வெப்ப அலை (severe heatwave) என்று  அறிவிக்கப்படும். ஆனால் ஒரு பகுதியில் குறைந்தது இரண்டு இடங்களில் இது போன்ற அதிக வெப்பநிலையைப் பதிவானால் அல்லது ஒரு நிலையம் தொடர்ச்சியாக குறைந்தது இரண்டு நாட்களுக்கு அதிக வெப்பநிலையைப் பதிவானால் மட்டுமே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையிடும். 


வெப்ப அலைகளை நாம் எவ்வாறு சமாளிக்கிறோம்?


இந்தியாவில் வெப்ப அலைகள் மிகவும் கடுமையானதாகவும் அடிக்கடி வருவதாகவும் மாறி வருகின்றன. மாநிலம், மாவட்டம் மற்றும் நகரம் என பல்வேறு மட்டங்களில் உள்ள அரசாங்கங்கள் வெப்ப செயல் திட்டங்களை (heat action plans (HAPs)) உருவாக்கியுள்ளன. வெப்ப செயல் திட்டங்கள், வெப்பத்தின் மோசமான விளைவுகளுக்குத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  வெப்ப அலைகளை சமாளிக்க பல்வேறு புதிய உத்திகளை உருவாக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை 23 மாநிலங்களுக்கு வெப்ப செயல் திட்டங்களை உருவாக்க உதவுகின்றன. ஒன்றிய தரவுத்தளம் இல்லை என்றாலும், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாவட்ட அளவில் குறைந்தது 23 வெப்ப செயல் திட்டங்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.  


இந்தியாவில், வெப்ப செயல் திட்டங்கள் பொதுவாக ஒரு கட்டமைப்பை கொண்டுள்ளன. இதற்கு முன் எத்தனை வெப்ப அலைகள் ஏற்பட்டன மற்றும் கோடை வெப்பநிலையில் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலையைக் காட்டுவதன் மூலம் அவை தொடங்குகின்றன. நிலப்பரப்பு வெப்பநிலை போன்றவற்றையும் பார்க்கிறார்கள். பின்னர், எந்தெந்தப் பகுதிகள் மிகவும் ஆபத்தில் உள்ளன என்பதையும் உடனடியாக உதவி தேவைப்படுவதையும் மதிப்பிடுகிறார்கள். அதன் பிறகு, அவர்கள் வெப்ப அலைகளை சமாளிக்க ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்கள். இந்த திட்டம் வெப்ப அலைகளின் தாக்கத்தை  குறைக்க பல்வேறு வழிகளை பரிந்துரைக்கிறது. பேரிடர் மேலாண்மை, தொழிலாளர், காவல் துறை என பல்வேறு துறைகள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறது.


வெப்ப செயல் திட்டங்கள் என்ன பரிந்துரைக்கின்றன?


வெப்ப செயல் திட்டங்கள், வெப்ப அலைகளை திறம்பட நிர்வகிக்க பல்வேறு உத்திகளை பரிந்துரைக்கின்றன. வரவிருக்கும் வெப்ப அலைகள் குறித்து பொதுமக்களையும் அதிகாரிகளையும் எச்சரிக்க முன்னறிவிப்புகள் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்துவது அவற்றில் அடங்கும். வெப்ப அலைகளுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வெப்ப செயல் திட்டங்கள் பொதுக் கல்வி பிரச்சாரங்களையும் உள்ளடக்குகின்றன. கூடுதலாக, வெப்ப தங்குமிடங்கள் மற்றும் குளிரூட்டும் மையங்களை உருவாக்கவும், நீரிழப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த திட்டத்தை பரிந்துரைக்கின்றனர்.


போதுமான பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களுடன் மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை வெப்ப செயல் திட்டங்கள் வலியுறுத்துகின்றன. வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு உதவ அவர்களுக்கு போதுமான பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. நகரங்களில் மரங்களை நடுதல், குளிர்ச்சியாக இருக்க சிறப்பு கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் உட்புற வெப்பநிலையைக் குறைக்க குளிர்ந்த கூரைகளைப் பயன்படுத்துதல் போன்ற நீண்ட கால யோசனைகளையும் வெப்ப செயல் திட்டங்கள் பரிந்துரைக்கின்றன. மேலும், அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகக் குழுக்கள் மற்றும் அவசரகாலச் சேவைகள் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரும் நன்றாகச் செயல்பட வேண்டும் என்று வெப்ப செயல் திட்டங்கள் பரிந்துரைக்கின்றன.


சிக்கலை திறம்பட நிவர்த்தி செய்வதிலிருந்து வெப்ப செயல் திட்டங்களை பலவீனப்படுத்துவது எது?


வெப்ப செயல் திட்டங்கள் நல்ல வழிகாட்டுதல்கள். ஆனால், நாட்டின் வெவ்வேறு வானிலை மற்றும் சமூக-பொருளாதார சூழ்நிலைகளைப் பொருத்துவதற்கு இன்னும் நிறைய மேம்பட்ட திட்டங்கள் தேவைப்படுகின்றன.


உள்ளூர் சூழல்: தற்போது, வெப்ப அலை எப்போது ஏற்படும் என்பதை ஒரு தேசிய அளவிலான விதி தீர்மானிக்கிறது. ஆனால், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் போன்ற சிறிய பகுதிகளில் ஏற்படும் வானிலை மாற்றத்தை பற்றி நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். சில நகரங்களில் அதிக வெப்பம் இருந்தபோதிலும், அதிகாரப்பூர்வமாக வெப்ப அலைகள் இல்லை. கட்டிடங்கள், நீர் அல்லது மரங்களுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள், எவ்வளவு ஈரப்பதம் உள்ளது போன்ற விஷயங்கள் அனைத்தும் அது எவ்வளவு வெப்பமாக உணர்கிறது என்பதைப் பாதிக்கிறது. அது எப்படி உணர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இங்கு வாழும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். எனவே, ஈரப்பதமான வெப்பம் மற்றும் வறண்ட வெப்பம் மட்டுமல்ல, வழக்கத்தை விட அதிக வெப்பம் கொண்ட இரவுகளையும் உள்ளடக்கும் வகையில் வெப்ப அலை என்பதன் அர்த்தத்தை விரிவுபடுத்த வேண்டும். அதைச் செய்ய, வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும் வெப்பத்தை அளவிட ஒரு வழி தேவை. வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு வானிலை, மக்கள் மற்றும் கட்டிடங்கள் எவ்வாறு உள்ளன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். எனவே இடத்திற்கு ஏற்றவாறு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். 


சீரற்ற முறைகள்: பெரும்பாலான வெப்ப செயல் திட்டங்கள் திட்ட வளர்ச்சியின் போது பாதிப்புகள் மதிப்பீடு செய்யபடுகின்றன. ஆனால், பயன்படுத்தப்படும் முறைகள் மாறுபட்டன. வெப்ப அலைகளை கணிக்கக்கூடிய மற்றும் மக்கள் மற்றும் சொத்துக்களின் வெளிப்பாட்டை மதிப்பிடக்கூடிய வலுவான காலநிலை ஆபத்து மதிப்பீட்டிற்கு மாற வேண்டிய நேரம் இது. முன்னுரிமை மற்றும் இலக்கு திட்டங்களை உருவாக்க மீவெப்பப்பகுதி படமிடல் (hotspot mapping) தேவை. இது சாத்தியமானது, ஏனென்றால் இப்போது புவிசார் தரவுகளை (geospatial data) எளிதாக அணுக முடியும்.


பாதிக்கப்படக்கூடிய மக்கள்: குறைந்த வருமானம் கொண்ட சமூகங்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், உள்ளூர் சமூக காரணிகள் மற்றும் வெப்பத்தை மோசமாக்கும் உள்கட்டமைப்பு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட திட்டங்களில் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவின் முறைசாரா பொருளாதாரம், தள்ளுவண்டி விற்பனையாளர்கள், சாய்வாலாக்கள், வீட்டு உதவியாளர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற வேலைகளை உள்ளடக்கியது, அதன் பொருளாதாரத்தில் 90% க்கும் மேல் பிரதிநிதித்துவம் செய்கிறது. வெப்ப அலைகளை பொது சுகாதாரப் பிரச்சினையாகக் கையாள, வெவ்வேறு சமூக-பொருளாதார சூழ்நிலைகளை அங்கீகரிக்கும் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும்.


வெப்ப செயல் திட்டங்களுக்கான வள ஒதுக்கீடு உள்ளூர் முன்னுரிமைகள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களைப் பொறுத்து மாறுபடும். வெப்ப செயல் திட்டங்களுக்கு குறிப்பிட்ட வரவு செலவுத் திட்டங்களை மற்றும் நிதி வழிமுறைகளை உருவாக்க அரசாங்கங்கள், குடிமை சமூக குழுக்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களிடையே விவாதங்களை எளிதாக்குவது முக்கியம். இந்த வழிமுறைகள் முறைசாரா தொழிலாளர்களின் வருமானத்தை பாதிக்காமல் அவர்களை வெப்ப அலைகளின் போது பாதுகாக்க வேண்டும். 


 தற்போது,  வெப்ப செயல் திட்டங்கள் வரையறுக்கப்பட்ட நிதியுடன்  சுயமாக செயல்படுகின்றன. நகர்ப்புற பின்னடைவு மற்றும் காலநிலை தழுவல் ஆகியவற்றிற்கான பரந்த திட்டங்களில் அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் வளங்களை இணைப்பது நிகழலாம். இந்த ஒருங்கிணைப்பு வெப்ப செயல் திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்தலாம், தரவு சேகரிப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தலாம் மற்றும் காலப்போக்கில் அவற்றின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும்.


இறுதியாக, வெப்ப செயல் திட்டங்கள் (heat action plans (HAPs))  நீண்ட கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினாலும், அவை முக்கியமாக குளிர்ந்த கூரைகள் போன்ற கட்டிட உள்கட்டமைப்பை பயன்படுத்த  வலியுறுத்துகின்றன. பச்சை மற்றும் நீல இடங்களைப் பற்றி  பேசுகிறார்கள். வெப்ப செயல் திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்த, வெப்பமான பகுதிகளில் வெப்ப அலைகளை தடுப்பதற்கு இயற்கையை அடிப்படையாக கொண்ட திட்டங்களை உருவாக்க வேண்டும்.


இந்து கே.மூர்த்தி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தில் காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை துறைக்கு தலைமை தாங்கும் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார். 

சாஹில் மேத்யூ  Center for Study of Science, Technology and Policy (CSTEP)  இல் காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை துறையில் ஆய்வாளராக உள்ளார்.




Original article:

Share: