பள்ளி கல்வி ஒரு கலாச்சாரப் போர்க்களமாக மாறக்கூடாது.
ஜூலை 1, 2026 முதல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழித் திட்டத்தை (three-language formula) நடைமுறைப்படுத்துவதற்கான தங்கள் நிர்வாக மற்றும் தளவாடத் தயார்நிலை குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசு, சிபிஎஸ்இ மற்றும் என்சிஆர்டி ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மே 27 அன்று, சிபிஎஸ்இ-யின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களின் வாதங்களை விசாரித்தபோது, இக்கொள்கைக்கு உடனடியாகத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், இது தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள "சிரமங்கள் மற்றும் அசௌகரியங்கள்" குறித்த கவலைகள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நீதிமன்றம் இதுகுறித்த வாதங்களை விசாரிக்கவுள்ளது. தனது சர்ச்சைக்குரிய மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு சிபிஎஸ்இ-யை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அரசு செயல்படும் இந்த அலட்சியமான அணுகுமுறை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்மீது அரசுக்கு இருக்கும் முழுமையான அலட்சியத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020 (National Education Policy (NEP)) மற்றும் 'பள்ளி கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு 2023' (National Curriculum Framework for School Education(NCF-SE)) ஆகியவற்றுடன் இணக்கமாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டு, ஜூலை 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்பது கட்டாயம் என்று அறிவித்து, மே 15 அன்று சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்தியாவின் பூர்வீக மொழிகளாக (இந்திய மொழிகளாக) இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் முதல் இரண்டு மொழிகளாக இந்திய மொழிகளைத் தேர்ந்தெடுத்திருந்தால் மட்டுமே, மூன்றாவது மொழியாக பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற அயல்நாட்டு மொழிகளைக் கற்க முடியும். அவ்வாறில்லையெனில், அயல்நாட்டு மொழிகளை ஒரு விருப்பப் பாடமாக (optional subject) நான்காவது பாடமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். மாணவர்களின் சுமையைக் குறைக்கும் ஒரு சிறிய முயற்சியாக, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் (Board examination) மூன்றாவது மொழியை எழுதுவதிலிருந்து சிபிஎஸ்இ விலக்கு அளித்துள்ளது. அதற்குப் பதிலாக, பள்ளிகளே நடத்தும் அக மதிப்பீடுகள் (internal evaluations) மூலம் அம்மொழி மதிப்பிடப்படும். இருப்பினும், அந்த மதிப்பீட்டில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதிச் சான்றிதழில் இடம்பெறும்.
சில வாரங்களுக்கு முன்புதான், மூன்றாவது மொழித் தேவை 2029-30 கல்வியாண்டு வரை ஒத்திவைக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இந்த திடீர் மாற்றத்தை ஒரு அரசியல் முடிவாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கை தற்போது அரசியலமைப்புச் சட்டக் காரணங்கள் உட்பட பல காரணங்களுக்காக நீதிமன்றத்தில் எதிர்க்கப்படுகிறது. மொழி என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம் என்றும், அதை அரசால் திணிக்க முடியாது என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர். மேலும், இந்த ஆணை அமல்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை-2020, நெகிழ்வுத்தன்மையை உறுதியளிப்பதாகவும், எந்தவொரு மாணவர் மீதோ அல்லது மாநிலத்தின் மீதோ மொழித் தேவை திணிக்கப்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கை ஒரு நிர்வாகக் கொள்கை நோக்கமே தவிர, அது ஒரு சட்டம் அல்ல என்பதால், அது என்ன கூறினாலும், நாடாளுமன்றச் சட்டத்தின் ஆதரவு இல்லாமல், ஒரு நிர்வாக அமைப்பாக சிபிஎஸ்இ-க்கு இத்தகைய பரந்த கல்வி ஆணையைத் திணிக்கும் அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர். பொதுத் தேர்வுகளுக்குச் சற்று முன்பு மாணவர்கள் மீது சுமத்தப்படும் கூடுதல் அழுத்தம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவலை தெரிவித்துள்ளனர். பயிற்சி பெற்ற மொழி ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் பொருத்தமான பாடப்புத்தகங்கள் கிடைக்காதது குறித்தும் பள்ளி நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பள்ளிக் கல்வியை ஒரு கலாச்சாரப் போர்க்களமாக மாற்றுவது, மேம்பட்ட மனிதவளங்களின் உலகளாவிய மையமாக உருவெடுக்கும் இந்தியாவின் லட்சியத்திற்கு உதவவில்லை. நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு முன்பு, மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
Original article : Language decorum: On the three-language formula in CBSE schools