பழங்குடியின மக்களின் நில உரிமைகள் மற்றும் தன்னாட்சியைப் பாதுகாப்பதற்காகவே சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் (Chota Nagpur Tenancy Act (CNT Act)), சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் (Santhal Parganas Tenancy Act (SPT Act)) மற்றும் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (Provisions of the Panchayats (Extension to Scheduled Areas) Act (PESA Act)) ஆகியவை உருவாக்கப்பட்டன. இருப்பினும், ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் சுரங்கத் திட்டங்கள், சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் பலவீனமான அமலாக்கம் ஆகியவற்றின் காரணமாக நிலத் தகராறுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.
இதே காலகட்டத்தில், சுமார் 170 ஆண்டுகளுக்கும் முன்பு, தற்போதைய கிழக்கு ஜார்க்கண்டின் காடுகள் நிறைந்த 'தாமின்-இ-கோ' (Damin-i-Koh) பகுதியில் சந்தால் பழங்குடியின மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினர். 1855-ஆம் ஆண்டின் இந்த சந்தால் பழங்குடியினரின் புரட்சி (Hul) போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்கள், உயர்சாதியினர், ஜமீன்தார்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து தாங்கள் எதிர்கொண்ட பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்த மக்கள் துணிச்சலுடன் போராடினர்.
சில வரலாற்றுப் பதிவுகளின்படி ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய 'சந்தால் பழங்குடியினரின் புரட்சி' (Hul) இயக்கத்தின் ஒரு நிரந்தரமான முடிவு, 1876-ஆம் ஆண்டின் சந்தால் பர்கானா குத்தகை (SPT) சட்டம் ஆகும். பழங்குடி சமூகத்தினர் தங்களது நிலங்களை இழப்பதில் இருந்தும், கந்துவட்டிக்காரர்களின் சுரண்டல்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
பழங்குடியினரின் நிலங்களைப் பாதுகாக்கும் ஒரே சட்டம் இந்த சந்தால் பர்கானா குத்தகை (SPT) சட்டம் மட்டுமல்ல. சோட்டா நாக்பூர் குத்தகை (CNT) சட்டம் மற்றும் பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA Act) ஆகியவை இதர முக்கியமான சட்டங்கள் ஆகும்.
இந்தச் சட்டங்கள் பழங்குடியினரின் நிலங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகின்றன. இருப்பினும், இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தபோதிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலம் தொடர்பான விவகாரங்கள் இன்னும் ஒரு முக்கிய பிரச்சனையாகவே நீடித்து வருகின்றன.
சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம்
ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், பழங்குடியின மக்களின் நிலங்களை பழங்குடியினர் அல்லாத மற்றவர்களுக்கு மாற்றுவதைத் தடை செய்கிறது. இந்தச் சட்டத்தின் விதிகளின்படி மட்டுமே நிலத்தை வாரிசுரிமையாகப் பெறமுடியும். இதன் மூலம், சந்தால் (Santal) பழங்குடியினர் தங்களது நிலங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ளும் உரிமையைப் பாதுகாக்கிறது. இந்த சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம், தற்போதைய சந்தால் பர்கனா பிராந்தியத்தில் உள்ள தும்கா (Dumka), தியோகர் (Deoghar), கோடா (Godda), பாகுர் (Pakur), சாஹிப்கஞ்ச் (Sahibganj) மற்றும் ஜாம்தாரா (Jamtara) ஆகிய மாவட்டங்களுக்குப் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம்
பழங்குடியின மக்களின் போராட்டங்களின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட ஒரே ஆங்கிலேயர் கால நிலச் சீர்திருத்தச் சட்டம் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் மட்டுமல்ல. ஆங்கிலேயர்களால் 1908-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (CNT Act) என்பது 1899-ஆம் ஆண்டின் புகழ்பெற்ற பிர்சா முண்டா அவர்களின் இயக்கப் போராட்டத்தின் விளைவாக உருவானதாகும்.
இச்சட்டம், மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு ஒரே சாதிக்குள்ளும், குறிப்பிட்ட புவியியல் பகுதிகளுக்குள்ளும் நிலங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. இந்தச் சட்டம் பழங்குடியின மக்கள் மற்றும் தலித் மக்களின் நிலங்களை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஒரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்குடியின மக்களுக்கு இடையிலும், ஒரே மாவட்டத்திற்குட்பட்ட தலித் மக்களுக்கு இடையிலும் நிலங்களை மாற்றிக்கொள்ள இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
இந்தச் சட்டம் வட சோட்டாநாக்பூர், தென் சோட்டாநாக்பூர் மற்றும் பலாமு ஆகிய பிரிவுகளுக்குப் பொருந்தும். இதில் ராஞ்சி (Ranchi), ஹசாரிபாக் (Hazaribagh), பலாமு (Palamu), குந்தி (Khunti) மற்றும் கும்லா (Gumla) போன்ற முக்கிய மாவட்டங்கள் அடங்கும்.
பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம்
அரசியலமைப்பின் 9-வது பகுதியில் உள்ள பஞ்சாயத்துகள் தொடர்பான விதிகளை, பட்டியல் பழங்குடியினப் பகுதிகளுக்கும் நீட்டிப்பதற்காக 1996-ஆம் ஆண்டில் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA Act) இயற்றப்பட்டது. இச்சட்டம், பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் கிராம சபைகள் மூலமாகத் தங்களைத்தாங்களே நிர்வகித்துக்கொள்ளும் சுயாட்சி உரிமையை உறுதி செய்கிறது. மேலும், இயற்கை வளங்கள்மீது பழங்குடியின மக்களுக்கு உள்ள உரிமைகளையும் இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய பத்து மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.
இத்தகைய பாதுகாப்புச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் அதிக கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்டில், சட்ட குறைபாடுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் பலவீனமான சட்ட அமலாக்கம் காரணமாக இன்னும் நிலத் தகராறுகள் தொடர்ந்து நடந்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுரங்கத் தொழில் மற்றும் வளங்களைப் பிரித்தெடுத்தல்
சுரங்கத் தொழில் மற்றும் இயற்கை வளங்களை எடுப்பதைக் கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டங்கள் மீது ஒரு முக்கிய விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
பிரிட்டனின் பிரைட்டன் நகரில் உள்ள வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தில் (Institute of Development Studies) ஆலோசகராகப் பணிபுரியும் தீப்தி மேரி மின்ஜ் கூறுகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (Mines and Minerals (Development and Regulation) Act, 1957) மற்றும் நிலக்கரி தாங்கும் பகுதிகள் (கையகப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) சட்டம் (Coal Bearing Areas (Acquisition and Development) Act, 1957) போன்ற ஒன்றிய அரசின் சட்டங்கள், பெரும்பாலும் பொது நலன் என்ற பெயரில் பழங்குடியினரின் சட்டங்களைவிடவும் அதிக அதிகாரம் கொண்டு அவற்றை முடக்குகின்றன என்றும் கூறியுள்ளார்.
நிலச் சட்டங்கள் குறித்த கையேட்டின்படி (Handbook on Land Laws) (ஜார்க்கண்ட் நீதித்துறை அகாடமி), சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தின் (CNT Act) பிரிவு 49, தொடக்கத்தில் மத, கல்வி மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே நிலங்களை மாற்றுவதற்கு அனுமதித்தது. இருப்பினும், 1996-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம், துணை ஆணையரின் ஒப்புதலுடன் தொழில்துறை மற்றும் சுரங்கத் திட்டங்களையும் இந்தச் சட்டப்பிரிவில் சேர்க்கும் வகையில் இந்த விதி விரிவுபடுத்தப்பட்டது.
ராஞ்சியைச் சேர்ந்த சுதந்திர தேசப்பற்று மற்றும் காலனிய ஆதிக்க எதிர்ப்பு ஆராய்ச்சியாளரான ஆகிருதி லக்ரா கூறுகையில், சுரங்கத் தொழில் என்பது சுரங்கம், சுற்றுச்சூழல், காடு மற்றும் நிலக் கையகப்படுத்துதல் சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சட்டங்கள் பெரும்பாலும் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA) மற்றும் அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையின்கீழ் (Fifth Schedule) வழங்கப்படும் பாதுகாப்புகளுடன் ஒன்றோடொன்று முரண்படுகின்றன. இதனால் எந்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நடைமுறையில், மாநில அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளைவிட சுரங்க மற்றும் தொழில்துறை கொள்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
ராஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அவிரல் ஐந்த் கூறுகையில், நடைமுறையில் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டத்தின் (PESA) விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் இந்தச் சட்டம் மணல், களிமண் மற்றும் கூழாங்கற்கள் போன்ற சிறிய அளவிலான கனிமங்களை வெட்டி எடுப்பதற்கே பொருந்தும் என்றாலும், நிறுவனங்கள் சில நேரங்களில் இந்தச் சிறிய கனிமங்கள் பிரிவின்கீழ் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பெரிய அளவிலான முக்கியக் கனிமங்களை வெட்டி எடுக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
நில வங்கிகள் மற்றும் காடு வளர்ப்பு
பழங்குடியினரின் நிலங்கள் பறிபோவதற்குக் கூடுதல் ஒரு காரணம் 'நில வங்கிகள்' (Land banks) ஆகும். இதில் அரசாங்கமோ அல்லது பொது அதிகார அமைப்போ பின்னர் விநியோகிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக நிலங்களை முன்கூட்டியே கையகப்படுத்தித் தன்னிடம் வைத்துக் கொள்ளும். பல நேரங்களில், இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலப்பகுதிகளில் பழங்குடியினரின் நிலங்களும் அடங்கும் என்கின்றனர்.
பழங்குடியின சமூகத்தினரிடம் வேளாண் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படாத சில பொதுவான நிலங்கள் இருக்கும். அவை கால்நடைகளை மேய்ப்பதற்கும், கதிர் அடிப்பதற்கும், அறுவடை செய்த பயிர்களைச் சேமித்து வைப்பதற்கும், சமூகக் கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 2016-ஆம் ஆண்டு கனிமப் படிமங்களை ஆராய்வதற்காக வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது (Aerial survey), அரசாங்கம் தங்களது இந்த பொது நிலங்களில் சிலவற்றை பயன்பாடற்ற தரிசு நிலம் (Wasteland) என வகைப்படுத்தியதாக மிஞ்ச் தெரிவித்தார். பின்னர், இந்த நிலங்கள் காடுகள் அழிக்கப்பட்டதற்கு ஈடாக வேறு இடங்களில் மரங்களை நட்டு காடுகளை வளர்க்கும் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன.
இழப்பீட்டு காடுவளர்ப்புத் திட்டம் பெரும்பாலும் விமர்சனத்திற்குள்ளாவதாக மிஞ்ச் கூறினார். இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், அங்கு அந்த மண்ணுக்குச் சொந்தமில்லாத பிற பகுதி மரங்கள் (Non-native trees) நடப்படுகின்றன. இத்தகைய செயற்கைத் தோட்டங்களால் ஒருபோதும் இயற்கை காடுகளுக்கு இணையான இடத்தை ஈடுசெய்ய முடியாது. மேலும், இந்த மரத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டபிறகு, அந்த நிலம் பொதுவாக வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படுகிறது. இது பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய வன நிலங்களையும் அங்கிருக்கும் வளங்களையும் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது.
சீரற்ற முறையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்தல்
சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தின் (CNT) பிரிவு 71(A)-ன்படி, சட்டவிரோதமாகப் பறிமாற்றம் செய்யப்பட்ட பழங்குடியினரின் நிலங்கள் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்தச் சட்டம் சீரற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நிரஞ்சன் பாக்வர் எழுதிய 'Land, Law and Power: Unraveling the Legal and Criminal Nexus in Jharkhand’s Land Transactions' என்ற ஆய்வுக் கட்டுரையின்படி, நில அபகரிப்பாளர்கள் பெரும்பாலும் இத்தகைய சட்டவிரோத நிலப் பறிமாற்றங்களை 'தானப் பத்திரம்' (Dan patra) அல்லது 'நிலப் பரிமாற்றப் பத்திரம்' (Badlanama) என்று காட்டி மறைத்துவிடுகின்றனர். இது அவர்கள் சட்டரீதியான சோதனைகளில் இருந்து தப்பிக்கவும், அமைப்பில் உள்ள சட்டக் குறைபாடுகளைப் பயன்படுத்தி சுரண்டவும் உதவுகிறது.
இதுகுறித்து லக்ரா கூறுகையில், “நாங்கள் வளர்ச்சிக்கு அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்காக எங்கள் நிலத்தைக் கொடுப்பதற்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும், எங்கள் மக்களுக்குப் பொதுவாகக் குறைந்த ஊதியம் கொண்ட, குறைந்த திறன் தேவைப்படும் வேலைகளே வழங்கப்படுகின்றன. மேலும், தலைமைப் பொறுப்புகளிலோ அல்லது முடிவெடுக்கும் பதவிகளிலோ அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது. இது எங்கள் சமூகத்தை இன்னும் விளிம்பு நிலைக்குத் தள்ளுகிறது, என்றும் இதன் விளைவாக, பழங்குடியின சமூகங்கள் அர்த்தமுள்ள வேலைகளோ அல்லது நீண்டகாலப் பொருளாதாரப் பாதுகாப்போ கிடைக்காமலேயே தங்களது நிலங்களை இழக்கின்றனர்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.