தேர்தல் ஆணையத்தின், புதிய இணையவழிப் பதிவு விதிமுறை வாக்காளர்களுக்கு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்? -தாமினி நாத்

படிவம்-6 (Form-6) என்பது புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவமாகும். தற்போது இணையவழியில் சமர்ப்பிக்கக் கிடைக்கும் இந்தப் படிவத்தின் பதிப்பில், விண்ணப்பதாரர்களின் பெற்றோர் கடந்த சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இருந்தார்களா இல்லையா என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டிய ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய நிபந்தனையைச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் மற்றும் அரசிதழ் அறிவிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.




ECINET : ECINET என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் (Election Commission of India Network) ஆகும். இது வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு ஒற்றை புள்ளி டிஜிட்டல் தளமாக (Single Point Digital Platform) செயல்படுகிறது.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) இணையவழி வாக்காளர் பதிவுத் தளமான ECINET, தற்போது விண்ணப்பதாரர்கள் வாக்காளர் பட்டியலின் கடந்தகால சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது பெற்றோரின் நிலை குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் இப்போது இந்த இணையதளத்தில் வழங்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி எண் மற்றும் அந்த வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும்.


புதிய வாக்காளர் பதிவுகளுக்கான சட்டப்பூர்வ படிவமான படிவம்-6, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்கீழ் இன்னும் திருத்தப்படவில்லை என்ற நிலையிலும் இது நிகழ்கிறது. இந்த புதிய நடைமுறை குறித்தும், அது புதிய வாக்காளர்களுக்கு இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அறிய வேண்டிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


புதிய நடைமுறை என்ன?


தேர்தல் ஆணையத்தின் ECINET இணையதளம், புதிய வாக்காளர் பதிவுகள், ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியல்களில் மாற்றங்கள் மற்றும் நீக்கங்களுக்கான படிவங்களைச் சமர்ப்பிக்க பயனர்களை அனுமதிக்கிறது.


1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) மற்றும் 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின் (Registration of Electors Rules) கீழ் வாக்காளர் பதிவுப் படிவமான படிவம்-6 இன் இணையவழிச் சமர்ப்பிப்புப் பதிப்பில், தற்போது ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அதில், விண்ணப்பதாரர்களின் பெற்றோர் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இருந்தார்களா இல்லையா என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். இது “உறுதிமொழிப் படிவம்” (declaration form) எனப்படும் ஒரு பிரிவின்கீழ் வருகிறது.


ஆம் எனில், அவர்கள் சட்டமன்றத் தொகுதி எண், வாக்குச் சாவடி எண் (பகுதி எண் என அழைக்கப்படுவது) மற்றும் தங்களது தந்தை அல்லது தாய் கடைசியாக பதிவான வாக்காளர் பாட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) பதிவு செய்யப்பட்டிருந்த வரிசை எண் ஆகியவற்றை வழங்க வேண்டும்.


இதுவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் 10 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நிறைவு செய்துள்ளது. மீதமுள்ள, மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை, கடைசியாக சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் 2000-களின் முற்பகுதியில் நடத்தப்பட்ட மீளாய்வைக் குறிக்கிறது.


தற்போது மற்ற 19 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் இந்த நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில், இமாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.


அஸ்ஸாமைப் பொறுத்தவரை, மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) பணி நிறைவடையும் வரை சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


பீகாரைத் தவிர, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்த அல்லது நடைபெற்று வரும் அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் ஆணையத்தின் இணையவழி படிவம்-6 சமர்ப்பிப்புச் செயல்முறையில், விண்ணப்பதாரர் படிவத்தின் ஏற்கனவே உள்ள படிவம் 6-ன் பிரிவுகளுக்கு இடையில் தங்கள் பெற்றோரைப் பற்றிய புதிய “உறுதிமொழிப் படிவத்தை” நிரப்ப வேண்டும்.





விண்ணப்பதாரரின் பெற்றோர் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இடம்பெறவில்லை என்றால், விண்ணப்பதாரர் அந்த விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுத்து, பெற்றோரின் பெயர்களையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்கள் இருந்தால் அவற்றையும் வழங்க வேண்டும்.


சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பின் 326-வது பிரிவு, சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்படாத வரையில், ஒரு குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதியில் இயல்பாக வசிக்கும் வயதுவந்த அனைத்து குடிமக்களுக்கும் வாக்காளராகப் பதிவு செய்யும் உரிமையை உறுதி செய்கிறது.


1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act), தேர்தல்களை நடத்துவது மற்றும் வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ((Representation of the People Act(RPA)) பிரிவு 28 ஆனது, “விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம்” என்பதை, “மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பின்னர், அதிகாரப்பூர்வ அரசாணை அறிவிக்கை மூலம், இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கலாம்” என்று கூறுகிறது. மேலும், இந்தச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் ஒவ்வொரு விதியும், “உருவாக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் அது கூறுகிறது.


படிவம்-6 என்பது, அந்தச் சட்டத்திலிருந்து உருவான 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் ஒரு பகுதியாகும். எனவே, படிவத்தில் ஏதேனும் மாற்றம் செய்வதற்கு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் திருத்தம் மற்றும் அரசிதழ் அறிவிப்பு தேவைப்படும்.




திருத்தம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா?


இல்லை, தேர்தல் ஆணையம் முதன்முதலில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அறிவித்த ஜூன் 24, 2025 முதல் தற்போது வரை, மின்-அரசிதழ் (e-Gazette) இணையதளத்தில் கிடைக்கும் அறிவிப்புகளின்படி, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் படிவம்-6-ல் எந்த மாற்றத்தையும் இன்னும் அறிவிக்கவில்லை.


உண்மையில், தேர்தல் ஆணையத்தின் ECINET இணையதளத்தில், தேர்தல் அதிகாரிகளிடம் நேரில் சமர்ப்பிப்பதற்காகக் கிடைக்கும் படிவம் 6-ல், புதிய சிறப்பு தீவிர திருத்த (SIR) "உறுதிமொழிப் படிவம்" (declaration form) பகுதி இடம்பெறவில்லை. இதிலிருந்து, முறையான நடைமுறைகளின்படி அந்தப் படிவம் திருத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.


ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டதா என்பது குறித்தும், புதிய அறிவிப்பு ECINET இணையதளத்தில் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்தும் விடுக்கப்பட்ட கருத்துகளுக்கான கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.


புதிய வாக்காளர்களுக்கு இதன் பொருள் என்ன?


முக்கியமாக சமீபத்தில் 18 வயதை எட்டிய புதிய விண்ணப்பதாரர்கள், இப்போது தங்களையோ அல்லது தங்கள் பெற்றோரையோ முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பதிவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் கருத்து தெரிவிக்கவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதால், விவரங்களை வழங்க முடியாதவர்கள் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


இதுவரை ஆண்டுதோறும் செய்யப்பட்டு வந்தது போல வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்குப் பதிலாக, புதிதாகப் பட்டியல்களைத் தயாரித்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) நடத்திவரும் இவ்வேளையில், இதற்கான அறிவிப்பின் அறிமுகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.


முன்பு ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியலின், தீவிரத் திருத்த நடவடிக்கைகளின்போது, ​​குடியுரிமை உள்ளிட்ட தகுதிகளை நிரூபிப்பதற்கான படிவங்களையும் ஆவணங்களையும் அனைத்து வாக்காளர்களும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததில்லை; ஆனால் தற்போதைய சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறையில் அது அவசியமாகிறது.


தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, இதுவரை 13 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்துள்ளது. இதன் விளைவாக, 5.58 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officers) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்துபோனது, வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தது, நீண்ட காலமாக வசிப்பிடத்திலில்லாதது அல்லது பல இடங்களில் பெயர்களைப் பதிவு செய்திருந்தது ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.


மேற்கு வங்கத்தில், ஆவணங்களைச் சமர்ப்பித்த 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், முன்னெப்போதும் இல்லாத ஒரு நீதித்துறைத் தீர்ப்பளிப்பு செயல்முறையின் மூலம் நீக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், அவர்களுடைய மேல்முறையீடுகள் தற்போது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நடவடிக்கையில் நீக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் வாக்காளர் பதிவில், சிறப்பு தீவிர திருத்த (SIR) அறிவிப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.


Original Link: What the Election Commission’s new online registration requirement means for voters?.

Share: