நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்காக உச்சநீதிமன்றம் முன்மொழிந்துள்ள விதிமுறைகள் : எவை அனுமதிக்கப்பட்டுள்ளன?, எவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன?. -சுப்ரியா சேகர் ஆசாத், கஹான் மேத்தா

சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஜூலை 15-ம் தேதிக்குள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.


நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், அதன் பயன்பாடு தொடர்பான பொதுவான கொள்கைகளை வகுத்தல் மற்றும் அதற்கான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நிறுவுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 'நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகள்-2026' (Draft Regulations for Use of Artificial Intelligence (AI) in Courts) என்ற வரைவை உச்ச நீதிமன்றம் (SC) கடந்த மாதம் வெளியிட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஜூலை 15-ம் தேதிக்குள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நீதிமன்றம் கோரியுள்ளது.


நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, நீதிமன்ற நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு முயற்சியாக இந்த வரைவு ஒழுங்குமுறைகள் கருதப்படலாம்.


இது கட்டாயமானதா?


தானாகவோ அல்லது சீராகவோ வரைவு விதிமுறைகள் உடனடியாகக் கட்டாயமானதாக மாறாது. இந்தியத் தலைமை நீதிபதியால் அறிவிக்கப்படும் எந்தவொரு தேதியிலும் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வரைவு ஒழுங்குமுறைகள் நடைமுறைக்கு வரும். உயர்நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கு, அந்தந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் அறிவிக்கப்படும் தேதிகளில் அவை தனித்தனியாக நடைமுறைக்கு வரும். இந்த விதிமுறைகளின் வெவ்வேறு அம்சங்கள் வெவ்வேறு தேதிகளில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படலாம். அதாவது நீதிமன்றங்களின் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவை (AI) பயன்பாட்டைப் படிப்படியாகச் செயல்படுத்த அனுமதிக்கிறது.


செயற்கை நுண்ணறிவுக்கு உச்சநீதிமன்றம் என்ன பங்கை முன்மொழிந்துள்ளது?


நீதி கிடைப்பதை எளிதாக்குதல், காலதாமதங்களைக் குறைக்கும் அல்லது நிர்வாகத் திறனை அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை நீதிமன்றங்கள் "தெளிவாக நிரூபிக்க வேண்டும்" actively seek opportunities) என இந்த வரைவு ஒழுங்குமுறைகள் முன்மொழிகின்றன.


வழக்கு மேலாண்மை, ஒலி-உரை மாற்றம் (transcription), மொழிபெயர்ப்பு, சட்ட ஆராய்ச்சி, ஆவணச் சுருக்கம் தயாரித்தல், அணுகல்தன்மை மற்றும் நீதிமன்ற நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக மற்றும் உதவிப் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும், சூழ்நிலைக்கு ஏற்ப உச்சநீதிமன்றத்தின் உச்ச அமைப்பு அல்லது உயர்நீதிமன்றம்/தீர்ப்பாயத்தின் செயற்கை நுண்ணறிவுக் குழுவின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வை மற்றும் சரிபார்ப்பும் தேவைப்படும்.

செயற்கை நுண்ணறிவால் (AI) ஒரு வழக்கில் தீர்ப்பளிக்க முடியுமா?


முடியாது. வழிமுறை சார்ந்த முடிவெடுத்தல் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமேயோ எந்தவொரு நீதித்துறை முடிவும் எட்டப்படக்கூடாது என்று வரைவு ஒழுங்குமுறைகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன. அனைத்து நீதித்துறை சார்ந்த முடிவுகளிலும் மனித நீதிபதியின் அதிகாரமே இறுதியானது. எனவே, ஒரு வழக்கு தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, ஏதேனும் இருந்தால், அது ஆலோசனை வழங்குவதாக மட்டுமே இருக்கும். மேலும் அது மனித (நீதித்துறை) அதிகாரியின் தன்னிச்சை மதிப்பீட்டிற்கு உட்பட்டதாகவே இருக்கும்.



எவற்றிற்கு அனுமதி இல்லை?


பல பயன்பாடுகள் "முழுமையான மற்றும் மாற்றத்திற்கு இடமில்லாத" (absolute and non-derogable) விதிமுறைகளின்படி தடை செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த விதிமுறைகளின்கீழ் எந்தவொரு அதிகார அமைப்பும் பிற்காலத்தில் அவற்றுக்கு அனுமதி அளிக்க முடியாது. பொதுவாக இவற்றில் அடங்குபவை, தப்பி ஓடுவதற்கான அபாயத்தை மதிப்பிடுதல் ('risk scoring'); மீண்டும் குற்றம் செய்வதற்கான வாய்ப்பைக் கணித்தல்; ஜாமீன் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடுதல், சாட்சிகளின் நம்பகத்தன்மையை நிர்ணயித்தல்; வழக்குத் தரப்பினர், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், சாட்சிகள் அல்லது பொதுவாக சட்டப் பிரதிநிதிகளின் எதிர்கால நடத்தை அல்லது செயல்பாடுகளைக் கணிக்க, வகைப்படுத்த அல்லது ஊகிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல்; செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வெளியீட்டை, அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதா என்பதை முழுமையாக வெளிப்படுத்தாமல் தனிப்பட்ட சான்றாகச் சமர்ப்பித்தல்; மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் விஷயங்களில் விளக்கமளிக்க முடியாத (black-box) செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்துதல்.


தங்கள் வழக்கில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது என்பதை வழக்காடும் தரப்பினர்கள் அறிந்துகொள்வார்களா?


ஆம், வரைவு விதிமுறைகளின்படி, ஒரு நீதிமன்றம் வழக்கு மேலாண்மை, ஆவணப் பகுப்பாய்வு அல்லது நீதித்துறை நிர்வாகத்தின் எந்தவொரு அம்சத்திலும் தனக்கு "பொருளாதாரரீதியாக உதவுவதற்காக" ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தினால், அது வழக்காடும் தரப்பினர்களுக்கும் அவர்களது வழக்கறிஞர்களுக்கும் உரிய நேரத்தில் மற்றும் எளிதில் அணுகக்கூடிய வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும். பொருளாதாரரீதியான உதவி என்பதே இதற்கான அளவுகோலாகும். எனவே, வழக்காடும் தரப்பினர்களின் வழக்கில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படாது. மாறாக, அது நீதிபதிக்குப் பொருளாதாரரீதியாக உதவியிருக்கும்போது மட்டுமே அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.



யார் ஒழுங்குமுறைப்படுத்துவார்கள்?


நிறுவனக் கட்டமைப்பானது, உச்சநீதிமன்றத்தில் உள்ள ஒரு “உச்சகட்ட அமைப்பால்” (Apex Body) மிக உயர்ந்த நிலையில் வழிநடத்தப்படும். இந்த அமைப்பில், பதவியில் இருக்கும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மின்னணுவியல் மற்றும் தகவல் அமைச்சகத்தின் (MeitY) ஓர் அதிகாரி, மற்றும் நிதி மற்றும் இணையப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்த அமைப்பு, செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் பயன்பாட்டை அங்கீகரித்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் குறைந்தபட்ச கட்டாயத் தரநிலைகளை வகுக்கும். இது ஐந்து சிறப்புக் குழுக்கள் மூலம் செயல்படும். உச்சநீதிமன்றமும், ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தங்களின் சொந்த செயற்கை நுண்ணறிவுக் குழுக்களை அமைத்து, அவற்றுக்கு ஒரு செயற்கை நுண்ணறிவுச் செயலகம் (AI Secretariat) ஆதரவளிக்கும்.


உச்ச அமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு மீதான ஆராய்ச்சி மற்றும் சிறப்பு மையம் (Centre of Research and Excellence on Artificial Intelligence (CoRE-AI)) என்ற தனி ஆராய்ச்சி அமைப்பு, கருவிகளை மதிப்பீடு செய்து, அதன் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும்.


தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபடுத்தப்படுமா?


ஆம், ஆனால் சம்பந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரியிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலுடனும், கட்டாய ஒப்பந்த நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். விற்பனையாளர்களுடனான ஒப்பந்தங்கள், நீதிமன்றத் தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வெளியீடுகளின் உரிமை மற்றும் அணுகல் உரிமைகள், முக்கியமான நீதித்துறைத் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான தடை, மற்றும் செயற்கை நுண்ணறிவுக் குழுவின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் நீதிமன்றத் தரவுகளைப் பயன்படுத்தி அதற்கான மாதிரிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கோ அல்லது செம்மைப்படுத்துவதற்கோ உள்ள தெளிவான தடை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.



நீதித்துறைத் தரவுகள் அல்லது பொது வளங்களை பெருமளவில் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருவிகள் மீது விற்பனையாளர்கள் பிரத்தியேக அறிவுசார் சொத்துரிமையைக் கோர முடியாது என்றும் வரைவு ஒழுங்குமுறைகள் குறிப்பிடுகின்றன.


என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?


வரைவு ஒழுங்குமுறைகள், செயற்கை நுண்ணறிவு அமைப்பைச் செயல்படுத்துவதற்கு முன், செயல்படுத்தும்போது மற்றும் செயல்படுத்திய பின் என பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறையைக் கையாளுகின்றன. இதில் அமைப்பின் கட்டமைப்பு, பயிற்சித் தரவு, சார்பு, மாயத்தோற்ற அபாயங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொழில்நுட்ப மற்றும் நெறிமுறை தாக்க மதிப்பீடு தேவைப்படும். சில அமைப்புகள் முதலில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பில் "கட்டுப்படுத்தப்பட்ட சூழல் சோதனைக்கு" உட்படுத்தப்பட வேண்டியிருக்கலாம். செயல்படுத்தப்பட்டவுடன், அமைப்புகள் தொழில்நுட்ப, சட்ட மற்றும் நெறிமுறை தணிக்கைகளையும், அதே சுழற்சியில் தனியான இணையப் பாதுகாப்பு தணிக்கைகளையும் எதிர்கொள்ளும். மூலக் குறியீடு மற்றும் பயிற்சித் தரவை தணிக்கை நோக்கங்களுக்காக ஒருபோதும் மூன்றாம் தரப்பினருடன் பகிர முடியாது என்பதால், இவை நிறுவனத்திற்குள்ளேயே நடத்தப்பட வேண்டும்.


ஒவ்வொரு நீதிமன்றமும், அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தணிக்கை முடிவுகளை ஆவணப்படுத்தும் ஒரு செயற்கை நுண்ணறிவுப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவுச் செயலகமும், செயலிழப்புகள், பிழைகள் மற்றும் சார்புகளைப் பதிவுசெய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவுச் நிகழ்வுத் தரவுத்தளத்தைப் பராமரிக்கும். மேலும், ஒரு கருவி செயலிழந்தாலோ அல்லது இடைநிறுத்தப்பட்டாலோ, 24 மணி நேரத்திற்குள் கட்டாயமாக அறிவிக்க வேண்டும். ஒரு அமைப்பு செயலிழந்தால், நீதிமன்றச் செயல்பாடுகளைக் கைமுறையாகத் (manually) தொடர்ந்து இயங்க வைப்பதற்காக, ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஒரு அவசரகால மாற்று நெறிமுறையைப் பராமரிக்க வேண்டும்.


ஒரு வழக்காடும் தரப்பினர் தனது வழக்கில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவால் தீங்கு ஏற்பட்டால், அவருக்கு என்ன தீர்வு உண்டு?


குறிப்பாக, தடைசெய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டினால் (மேலே விளக்கப்பட்டுள்ளது) பாதிப்பு ஏற்படும்போது, குறைதீர்ப்பு வழிமுறை பொருந்தும். பாதிக்கப்பட்ட தரப்பினர், சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்பு பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்டுவரும் நீதிமன்றத்தில், கூடிய விரைவில் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யலாம். அந்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஒரு விசாரணை வாய்ப்பை வழங்கி, "அது பொருத்தமாகக் கருதும் தகுந்த உத்தரவுகளை" பிறப்பிக்க வேண்டும்.


சட்ட அறிவு குறைவாக உள்ள மக்கள் இதை அணுகுவதற்கு ஏதுவாக, உயர்நீதிமன்றங்கள் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளையும் புகார் படிவங்களையும் தனியாக வகுக்கலாம். இந்தக் குறைதீர்ப்பு முறையானது, சாதாரண சட்டத்தின் கீழ் ஏற்கனவே கிடைக்கக்கூடிய வேறு எந்தவொரு சட்டரீதியான தீர்வு வழிமுறைகளுடன் இணைந்தே செயல்படும்.


இக்கட்டுரையின் ஆசிரியர்கள், 'விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசி' (Vidhi Centre for Legal Policy)-இன் 'அப்ளைடு லா அண்ட் ரிசர்ச் சென்டர்' (Applied Law and Research Centre) பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சி ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர் ஆவர்.


Original Link: Inside SC’s proposed regulations for AI use in courts: What’s allowed, what’s absolutely barred.

Share: