கவனம் பெறும் காட்டு எருமை இனம் : தன் மாநில விலங்கைப் பாதுகாக்க சத்தீஸ்கர் மாநிலம் ஏன் தீவிரமாகச் செயல்படுகிறது? - ரோஷ்னி யாதவ்

 சத்தீஸ்கர் மாநிலம், காட்டு எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அசாமில் இருந்து காட்டு எருமைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆனால், இது ஏன் தேவைப்படுகிறது? காட்டு எருமைகளின் பாதுகாப்பு நிலை (Conservation Status) என்ன? காட்டு எருமை மீட்புத் திட்டம் (Wild Buffalo Recovery Project) என்றால் என்ன? 


கடந்த சில  ஆண்டுகளாக காட்டு எருமைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், அசாமில் இருந்து காட்டு எருமைகளை இங்கு கொண்டுவந்து, பாமேத் வனவிலங்கு சரணாலயம் (Pamed Wildlife Sanctuary), உடந்தி சீதாநதி புலிகள் காப்பகம் (Udanti Sitanadi Tiger Reserve) மற்றும் இந்திராவதி புலிகள் காப்பகம் (Indravati Tiger Reserve) ஆகியவற்றில் உள்ள பாதுகாக்கப்பட்ட காப்பகங்களில் பராமரிக்க சத்தீஸ்கர் மாநில வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில், காட்டு எருமைகளைப் பற்றியும், சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்ற பிற உயிரினங்களின் வெற்றிகரமான பாதுகாப்பு முயற்சிகள் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. காட்டு எருமை சத்தீஸ்கர் மாநிலத்தின் மாநில விலங்காகும். வேறு இடத்திற்கு கொண்டு சென்று பராமரிப்பது, அவற்றின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


2. ஆசியக் காட்டு எருமை உலகிலேயே மிகப்பெரிய காட்டு மாடு வகை (bovine) விலங்காகும். இது அதன் மெலிந்த உடலமைப்பு கொண்ட வீட்டு எருமை மாடுகளைவிட இருமடங்கு எடை கொண்டது. உலகின் மொத்த காட்டு நீர் எருமை தொகையில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை (சுமார் 3,500 முதல் 3,700 வரை) இந்தியாவில்தான் உள்ளன. இவை முக்கியமாக வடகிழக்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியா ஆகிய இரண்டு தனித்தனி பகுதிகளில் பரவியுள்ளன. இந்தியாவின் பெரும்பாலான காட்டு எருமைகள் அசாம் மாநிலத்தில் உள்ள பல்வேறு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வாழ்கின்றன. இது தவிர, மேகாலயா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவின் கோலாமார்கா காடுகளிலும் சிறிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன.


3. மத்திய இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு காலத்தில்   பரவலாகக் காணப்பட்ட இவை, இன்று சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சிறிய கூட்டங்களாக மட்டுமே வாழக்கூடிய அளவுக்கு எண்ணிக்கை குறைந்துவிட்டன.


4. 2005-ஆம் ஆண்டு இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (Wildlife Trust of India (WTI)) வெளியிட்ட அறிக்கையின்படி, உடந்தி-சீதாநதி புலிகள் காப்பகம் (USTR), இந்திராவதி புலிகள் காப்பகம் (ITR) மற்றும் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாமேடு (Pamed) ஆகிய பகுதிகளில் 39 முதல் 47 காட்டு எருமைகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது அவற்றின் எண்ணிக்கை மேலும் குறைந்து, வெறும் 12 முதல் 16 வரை மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


5. காட்டு எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சத்திஸ்கர் மாநில வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 2015-ஆம் ஆண்டில், 'தீபாஷா' (Deepasha) என்ற மரபணு நகலாக்க (cloning) முறையில் உருவாக்கப்பட்ட பெண் காட்டு எருமையின் மீது வனத்துறை பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. எனினும், அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.


6. அசாமில் இருந்து காட்டு எருமைகளைக் கொண்டுவந்து, பாமேட் வனவிலங்கு சரணாலயம், உடந்தி சீதாநதி புலிகள் காப்பகம் (USTR) மற்றும் இந்திராவதி ஆகிய இடங்களில் உள்ள சரணாலயங்களின் பராமரிப்பதே புதிய திட்டம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், அசாமில் இருந்து பர்னவபாரா வனவிலங்கு சரணாலயத்திற்கு ஆறு காட்டு எருமைகள் கொண்டுவரப்பட்டன. 2020-ஆம் ஆண்டில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் எருமை, மேலும், 2023-ஆம் ஆண்டில் நான்கு பெண் எருமைகள் கொண்டுவரப்பட்டு, அங்குள்ள காட்டு எருமைகளின் எண்ணிக்கை 11-ஆக உயர்த்தப்பட்டது.


காட்டு எருமையின் பாதுகாப்பு நிலை


7. இந்தியாவில், 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் (Wildlife (Protection) Act, 1972) அட்டவணை I-ன்கீழ் (Schedule I), காட்டு எருமைக்கு மிக உயர்ந்தபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

8. இவ்வகையான உயிரினங்களின் நிலையைத் தெரிவிக்கும் 2016-ஆம் ஆண்டின் 'சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்க' (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்புப் பட்டியல், இதனை "அழிவாய்ப்புள்ள உயிரினம்" (Endangered) என்ற பிரிவில் வைத்துள்ளது. 


காட்டு எருமை மீட்புத் திட்டம்


9. காட்டு எருமை மீட்புத் திட்டம் என்பது இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (Wildlife Trust of India (WTI)) மற்றும் சத்தீஸ்கர் வனத்துறை இணைந்து செயல்படும் ஒரு நீண்டகால வனவிலங்கு பாதுகாப்பு முயற்சியாகும்.


10. மத்திய இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள காட்டு எருமைகளின் எண்ணிக்கையை மீண்டும் பெருக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது, சத்தீஸ்கரில் உள்ள உடந்தி-சீதாநதி புலிகள் காப்பகத்தில், இயற்கையான வாழிடங்களிலும் அதற்கு வெளியிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


11. இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI), வனத்துறையுடன் இணைந்து ஐந்து ஆண்டுகளுக்கான பாதுகாப்புச் செயல்பாட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கியது. காட்டு எருமைகளின் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யப் பலமுனை அணுகுமுறைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஆட்சி மன்றக் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த ஐந்து ஆண்டுத் திட்டம், மூன்று முதன்மை நோக்கங்களைக் கொண்டது, அவை: 


(i) எஞ்சியிருக்கும் காட்டு எருமைகளுக்கு இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்படும் இறப்புகளை முற்றிலுமாகத் தடுத்தல்.


(ii) வாழிடத்தை மேம்படுத்துதல்.


(iii) நெருங்கிய தொடர்புடைய இனங்களிலிருந்து (குறிப்பாக பெண் விலங்குகளை) கொண்டுவந்து சேர்ப்பதன் மூலமாகவோ அல்லது பாதுகாப்பு இனப்பெருக்க முறைகள் மூலமாகவோ அவற்றின் தொகையை அதிகரித்தல்.



இந்தியச் சாம்பல் நிற இருவாச்சிப் பறவை 


1. குஜராத் மாநிலத்தின் கிர் (Gir) காடுகளில் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு வெற்றிச் சாதனை அமைதியாக நிகழ்ந்துள்ளது. 1950-கள் மற்றும் 1960-களில் அப்பகுதியில் முற்றிலுமாக அழிந்துபோன "இந்தியச் சாம்பல் நிற இருவாச்சிப் பறவை" (Indian Grey Hornbill), பின்னர் அரசின் முயற்சியால் அங்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அது தன் வாழிடங்களை வெற்றிகரமாக அமைத்துக்கொண்டு, குஞ்சுகளையும் பொரித்து இனப்பெருக்கம் செய்துள்ளது.


2. இந்தியச் சாம்பல் இருவாச்சி (அறிவியல் பெயர்: Ocyceros birostris) தனது கொம்பு போன்ற விசித்திரமான அலகினால் இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. ஆண் பறவையின் மேல் அலகில் பெரிய, கூர்மையான கருமை நிறக் கொண்டை (Casque) இருக்கும். ஆனால், பெண் பறவைக்குச் சிறிய அளவு கொண்டையே இருக்கும். இதன் அலகு பழுப்பு-கருப்பு மற்றும் தந்த வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும்.


3. இந்தியச் சாம்பல் இருவாச்சி பறவைகள் (Indian Grey Hornbills) முக்கியமாகப் பழங்கள் மற்றும் சிறிய விதையுள்ள பழங்களையே உணவாகக் கொள்கின்றன. இது விதைகள் பல்வேறு பகுதிகளுக்குப் பரவவும், காடுகளின் வளர்ச்சி பெறவும் உதவுகிறது. குறிப்பாக, அத்தி மரங்களின் விதைகளைப் பரப்புவதில் இவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை தவிர, பூச்சிகள், பல்லிகள், நத்தைகள், எலிகள் மற்றும் பறவைக் குஞ்சுகளையும் இவை உணவாக உட்கொள்கின்றன.


4. இதன் பெயருக்கேற்ப, இந்தியச் சாம்பல் இருவாச்சிப் பறவை (Indian Grey Hornbill) சாம்பல் நிற உடலையும், கருப்பு நிற அடிப்பகுதியைக் கொண்ட மஞ்சள் நிற அலகையும், கருப்பு மற்றும் வெள்ளை நிற முனைகளைக் கொண்ட வாலையும், அலகின் மேல் ஒரு சிறிய முடிச்சு (casque) போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது. இது 50 சென்டிமீட்டர் நீளமும், சுமார் 370 முதல் 400 கிராம் எடையும் கொண்டது. மேலும், இது 10 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. இது 2 முதல் 4 முட்டைகள் வரை இடும்.




5. இவை பொதுவாக மரங்களின் மிக உயரமான நுனிக்கிளைகளில் அமர்ந்திருக்கும், அதனால் மரத்தின் அடியில் நின்று கொண்டு இவற்றைப் பார்ப்பது கடினம். சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் இவை 'குறைந்த கவலைக்குரியவை' (Least Concern) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தியச் சாம்பல் நிற இருவாச்சிப் பறவை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் மாநிலப் பறவை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


6. உலகளவில் உள்ள 54 இருவாச்சிப் பறவை இனங்களில், 9 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. மேலும், இந்தியாவில் உள்ள 9 இருவாச்சிப் பறவை இனங்களில், வடகிழக்கு இந்தியப் பகுதியில்தான் அதிக எண்ணிக்கையிலான இருவாச்சி பறவை இனங்கள் வாழ்கின்றன.


Original articles:Wild Buffalo in focus: Why Chhattisgarh is racing to save its state animal. -Roshni Yadav

Share:

ரெப்போ வட்டி விகிதம் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• மத்திய வங்கி தனது கொள்கை நிலைப்பாட்டை நடுநிலையாக வைத்திருந்தாலும், 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.6 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகச் சற்றே உயர்த்தியுள்ளது. அதேவேளையில், பணவீக்கக் கணிப்பை 5.1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளது. குறுகிய கால அபாயங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டுக்குள் பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது.


• ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான, 6 உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், தற்போதைக்கு கடன் மற்றும் வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


• வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தங்கக் கடன் பெற்றிருப்பவர்களுக்கான மாதாந்திரத் தவணைத் தொகையில் மாற்றங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வங்கிகள் தாங்களாகவே முன்வந்து வட்டி விகிதங்களை மாற்றியமைக்கத் தீர்மானித்தாலே தவிர, நிலையான வைப்புநிதி (Fixed Deposit) மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களையும் தற்போதைக்கு மாற்றாமல் வைத்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


• உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்றத் தன்மை அதிகரித்து வரும் நேரத்தில் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நிலையற்றத் தன்மை நிலவுகிறது. இது இந்தியாவுக்கு பணவீக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பாலானவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எரிபொருள் விலையானது போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும், இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மேலும் கடினமாகிறது. 


• பணவியல் கொள்கையை (Monetary policy) அறிவிக்கும்போது, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியைப் பாதித்து வருவதால், ரிசர்வ் வங்கி தனது தற்போதைய கொள்கையைத் தொடர முடிவு செய்துள்ளதாக மல்ஹோத்ரா தெரிவித்தார். மேலும், மேற்கு ஆசிய மோதலின் தீவிரம் மற்றும் நிச்சயமற்றத் தன்மைக்கு ஏற்ப, நிதிச் சந்தைகள் தொடர்ந்து நிலையற்றதாகவே இருந்து வருவதாகவும் தெரிவித்தார். 


• ஒட்டுமொத்தப் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கைவிட அதிகரித்துள்ள போதிலும், இந்த உயர்வுக்குப் பொதுவான ஒட்டுமொத்த நுகர்வோர் தேவையைவிட, உணவு மற்றும் எரிபொருளின் விலை உயர்வே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.




உங்களுக்குத் தெரியுமா?


• அளவுக்கு அதிகமான பணவீக்கம் குறித்த கவலைகள் நிலவுவதால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் 29-ஆம் தேதி தனது வட்டி விகித இலக்கை 3.50 சதவீதம் முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே மாற்றமில்லாமல் தக்கவைத்துக் கொண்டது. பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருந்தாலும் வட்டி விகிதங்களை உயர்த்தாமல் அப்படியே வைத்திருக்கும் இந்த உலகளாவிய போக்கைப் பின்பற்றி, பிற முக்கிய மத்திய வங்கிகளும் தற்போதைக்கு ‘காத்திருந்து கவனிக்கும்’ (wait-and-watch) அணுகுமுறையையே கையாண்டு வருகின்றன. இந்தச் சூழலில்தான், இந்திய ரிசர்வ் வங்கியும் தனது எச்சரிக்கையான அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.


• பணவியல் கொள்கைக் குழு (MPC) என்பது ரிசர்வ் வங்கியின் ஆளுநரைத் தலைவராகக் கொண்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முக்கிய 'ரெப்போ வட்டி விகிதத்தை' (Repo Rate) தீர்மானிக்கிறது. 2016-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவில், ரிசர்வ் வங்கியின் மூன்று அதிகாரிகளும், அரசால் நியமிக்கப்பட்ட மூன்று வெளி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.


• 5.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) என்பது, வணிக வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கு 5.25 சதவீத வட்டி வசூலிக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வட்டி விகிதமே நாட்டின் நிதி அமைப்பிற்கான முதன்மை வழிகாட்டியாகச் செயல்படுகிறது. தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 5.25 சதவீதமாகத் தொடர்வதால், கடன்களுக்கான வட்டிச் செலவும் மாறாமல் ஒரே அளவாகவே இருக்கும். எனவே மாதாந்திர கடன் தவணைகளிலும் மற்றும் நிலையான வைப்புத்தொகைக்கான (Fixed Deposit) வட்டி வருவாயிலும் உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது.


Original articles: How repo rate affects economy? -Priya Kumari Shukla

Share:

இந்திய ரூபாய் தாள்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் மூலப்பொருள் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• ரிசர்வ் வங்கி ஆளுநர் மல்ஹோத்ரா, நெகிழி ரூபாய் தாள்களுக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருப்பதாகக் கூறினார். முதலாவதாக, அவை காகித தாள்களைவிட அதிக காலம் நீடித்து நிலைக்கக்கூடியவை ஆகும். குறிப்பாக, அடிக்கடி பயன்படுத்தப்படும் குறைந்த மதிப்புடைய தாள்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நெகிழி ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ளன. மேலும், இவற்றின் ஆயுட்காலம் காகித தாள்களைவிட சுமார் 2 முதல் 4 மடங்கு அதிகம் ஆகும்.


Currency printing costs

• “பொருளாதாரத்தின் தேவைகள் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப நமது பணப்புழக்கத் திறனை விரிவாக்குவதே இதன் இரண்டாவது நோக்கமாகும்” என்று அவர் கூறினார்.


• புதிய ரூபாய் தாள்களைப் புழக்கத்திற்கு விடுவதற்கு முன், அவை எவ்வளவு காலம் நீடித்து நிலைக்கும் மற்றும் இந்திய சூழலுக்கு ஏற்றவையா என்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசோதிக்கும்.


• இந்தியாவின் காலநிலை, மக்களின் பயன்பாட்டு முறைகள் மற்றும் தற்போதுள்ள பணத்தைக் கையாளும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்த ரூபாய் தாள்கள் எவ்வாறு தாக்குப் பிடிக்கின்றன என்பதை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யும் என்று மல்ஹோத்ரா தெரிவித்தார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த புதிய தாள்கள் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் முதலில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் தாள்களுடன் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். ஏனெனில், இந்த குறைந்த மதிப்புடைய தாள்கள் மக்களிடையே அதிகமாகக் கைமாறுவதால், விரைவில் சேதமடைய வாய்ப்புள்ளது.


• ரிசர்வ் வங்கியின் நெகிழித் தாள் ரூபாய் தாள் சோதனையில், மொத்தம் 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கோடி 10 ரூபாய் தாள்களும், 100 கோடி 20 ரூபாய் தாள்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கடந்த மாதம், இதன் துணை Cash demandநிறுவனமான 'Bharatiya Reserve Bank Note Mudran Private Limited' (BRBNMPL), இந்த ரூபாய் தாள்களைத் தயாரிப்பதற்குத் தேவையான 3.4 கோடி நெகிழித் தாள்களுக்காகப் (Polymer sheets) சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது.


• இந்த ஒப்பந்தப்புள்ளியில் நெகிழித் தாள்கள் 'உடனடித் தேவை' என்று குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும், களப் பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், வெவ்வேறு மதிப்பிலான ரூபாய் தாள்களுக்கு அதிக அளவிலான நெகிழி மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• காகிதப் பணத்தாள்களைவிட நெகிழிப் பணத்தாள்களின் மிகப்பெரிய நன்மையே அவை மிகவும் நீண்டகாலம் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதுதான். பணத்தின் மதிப்பைப் பொறுத்து (குறைந்த மதிப்புள்ள ரூபாய் தாள்கள் அதிக பயன்பாட்டில் இருப்பதால், அவை விரைவில் சேதமடைகின்றன), அவை காகித பணத்தாள்களைவிட இரண்டு முதல் ஆறு மடங்கு அதிக காலம் உழைக்கின்றன. நெகிழிப் பணத்தாள்கள் பயன்பாட்டால் கிடைக்கும் பெரும்பாலான நன்மைகளுக்கு இதுவே முதன்மையான காரணமாகும்.

• ஒவ்வொரு ஆண்டும் காகிதப் பணத்தாள்களை அச்சிடுவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இந்திய ரிசர்வ் வங்கி செலவிடுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், சுமார் 2,600 கோடி ரூபாய் பணத்தாள்களை அச்சிட 52,095 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதுவே ஒரு மிகப்பெரிய தொகையாக இருந்தாலும், எப்போதும் பெரிய தொகைகளைக் கையாளும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு இது மிக முக்கியமான செலவாகும். கடந்த 10 ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் மொத்த செலவில் காகிதப் பணத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு மட்டுமே 15 சதவீதம் முதல் 44 சதவீதம் வரை இருந்துள்ளது.


• இந்திய ரூபாய் தாளின் முக மதிப்பு (Face Value) என்பது அதில் அச்சிடப்பட்டுள்ள துல்லியமான பணத் தொகையாகும் (எ.கா., ₹10, ₹20, ₹50, ₹100, ₹200, ₹500). இட மதிப்பு (Place Value) என்பது அந்த ரூபாய் தாளின் தொடர் எண்ணில் (Serial Number) உள்ள ஒவ்வொரு இலக்கத்திற்கும், அது இருக்கும் இடத்தைப் பொறுத்து (ஒன்றுகள், பத்துகள், நூறுகள், ஆயிரங்கள் போன்றவை) அமையும் மதிப்பாகும்.


• Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு துணை நிறுவனமாகும். இது பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி, 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூபாய் தாள்களை பெருமளவில் அச்சடிப்பதும், அவற்றை வடிவமைப்பதுமே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்.


Original articles: What is the raw material of Indian currency notes? -Priya Kumari Shukla

Share:

மேய்ச்சல் சமூகமுறை : நிரந்தரக் குடியேற்றம் மட்டுமே வளர்ச்சிக்கு ஒரே வழியா? -அப்துல் கபீர்

 மேய்ச்சல் தொழில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் பொதுமக்களின் மேய்ச்சல் தொழில்களின் நிர்வாகத்திற்கும் முக்கியமானதாக இருந்தாலும், பொதுக்கொள்கைகளும் நிறுவனங்களும் பெரும்பாலும் நிரந்தரக் குடியிருப்பு மற்றும் நிலையான நிர்வாக அதிகார வரம்புகளைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளன. பருவகால இடப்பெயர்வுகளுக்கு ஏற்ப இந்த அமைப்பை எவ்வாறு  தகவமைக்கக்கூடியதாக மாற்றுவது? ‘இடம்பெயரக்கூடிய ஆட்சி’ (portable governance) எது போன்ற கருத்தை வழங்குகிறது?


மேய்ச்சல் தொழில் இந்தியாவின் பால் பொருளாதாரம் (dairy economy), கம்பளி மற்றும் நார் உற்பத்தி, உள்நாட்டு கால்நடை இனங்கள், மானாவாரி வேளாண்மை மற்றும் பொது மேய்ச்சல் நிலங்களின் நிர்வாகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இருந்த போதிலும், இந்த பாரம்பரிய வாழ்க்கை முறை தானாகவே நீடித்திருக்கக்கூடியது அல்ல. இது சூழலியல், பொருளாதாரம் மற்றும் அமைப்புரீதியான சிக்கல்களைச் சமாளிக்க அரசாங்கத்தைச் சார்ந்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17-ஆம் தேதி கடைபிடிக்கப்படும் 'பாலைவனமாதல் மற்றும் வறட்சியை (World Day to Combat Desertification and Drought) எதிர்த்துப் போராடுவதற்கான நாள்' என்பதை முன்னிட்டு புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கால்நடை தொடர்பான வாழ்வாதாரங்கள், பல்லுயிர் வளம், நீர் மேலாண்மை, கார்பன் சேமிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைத்தாங்கும் திறன் ஆகியவற்றில் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகளின் முக்கியத்துவத்தை அரசு எடுத்துரைத்தது.


1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (United Nations General Assembly (UNGA)) உருவாக்கப்பட்ட இந்த உலக தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் மேய்ச்சல் நிலங்கள்: அங்கீகரியுங்கள். மதியுங்கள். மீட்டெடுங்கள் (Rangelands: Recognize. Respect. Restore) என்பதாகும். இது மேய்ச்சல் நிலங்களை உலகளாவிய கவனத்தின் மையத்திற்குக் கொண்டு வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2026-ஆம் ஆண்டை ‘சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் கால்நடை வளர்ப்பாளர்களின் ஆண்டாக’ (International Year of Rangelands and Pastoralists  (IYRP)) அறிவித்துள்ளது.


சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் கால்நடை வளர்ப்பாளர்களின் ஆண்டாக, பூமியின் மொத்த ஏறக்குறைய பாதி நிலப்பரப்பை கொண்ட மேய்ச்சல் நிலப்பரப்புகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைச் சார்ந்து தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டுள்ள சமூகங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இது பொது நிர்வாகத்திற்கு ஒரு நடைமுறை சார்ந்த கேள்வியையும் எழுப்புகிறது: நிலையான முகவரிகள் மற்றும் பிராந்திய அதிகார வரம்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி, சுகாதாரம், சமூகப்பாதுகாப்பு மற்றும் கால்நடைப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகள், பருவகால இடப்பெயர்ச்சியை நம்பி வாழும்  மக்களுக்குப் போதுமான அளவு சேவையை வழங்க முடியுமா?


மேய்ச்சல் நிலங்களின் (rangelands) முக்கியத்துவம்


இந்தியாவில், இமயமலைப்பகுதிகளில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகளின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. அந்தப்பகுதியில் குளிர்காலப் பனி உருகும்போது, கால்நடைகளை வளர்க்கும் குடும்பங்கள் தங்கள் கால்நடைகளுடன் உயரமான மேய்ச்சல் நிலங்களை நோக்கி நகரத் தொடங்குகின்றன. குளிர்காலம் மலைப்பாதைகளை மூடுவதற்கு முன்பு அவை திரும்பி வருகின்றன. இந்தியாவின் பாலைவனங்கள், வனப்பகுதிகள், பீடபூமிகள் மற்றும் பாதியளவு வறண்ட பகுதிகள் முழுவதும் இதேபோன்ற பருவகால இடப்பெயர்வுகள் நடைபெறுகின்றன.


மேய்ச்சல் நிலங்கள் என்பது இயற்கையான அல்லது குறைந்த அளவிலான இயற்கையான தாவரங்கள் வளர்ந்து, அவை மேய்ந்து மற்றும் இலைகளை உண்ணும் கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படும் பகுதிகளைக்குறிக்கிறது. இவை திறந்த புல்வெளிகளுக்கு மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. புல்வெளிகள், புதர்நிலங்கள், சவானா புல்வெளிகள், அதிக மரங்கள் (Steppes) இல்லாமல் உள்ள புல்வெளிகள், பாலைவனப் பகுதிகள், மலைப் பகுதிகளில் உள்ள  மேய்ச்சல் நிலங்கள், திறந்த வனப்பகுதிகள் மற்றும் சில சதுப்பு நிலங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.


ஒரு மேய்ச்சல் நிலம் என்பது புல்வெளியைவிட அகலமாக இருக்கும். புல்வெளியில் முக்கியமாக புற்களும் பிற மூலிகைச் செடிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது நிர்வகிக்கப்படும் மேய்ச்சல் நிலத்திலிருந்தும் வேறுபட்டது. அங்கு தீவனம் கால்நடைகளுக்காகப் பிரத்தியேகமாகப் பயிரிடப்படலாம், மேம்படுத்தப்படலாம் அல்லது பராமரிக்கப்படலாம்.


மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளையும், காட்டில் வாழும் தாவர உண்ணி விலங்குகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன. அவை மண் வளத்தைப் பாதுகாக்கின்றன. நீர்ச் சுழற்சியைப் பாதிக்கின்றன, கார்பனைச் சேமிக்கின்றன மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடத்தை வழங்குகின்றன. மேலும், தீவிர வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாத பகுதிகளில் காணப்படும் இயற்கைத் தாவரங்களை பால், இறைச்சி, கம்பளி, நார், இயற்கை உரம் மற்றும் வருமானம் போன்ற வளங்களாக மாற்றுகின்றன.


இந்தியாவில், மேய்ச்சல் நிலங்களில் இமயமலையின் அல்பைன் மேய்ச்சல் நிலங்கள், லடாக்கின் குளிர்-வறண்ட மேய்ச்சல் பகுதிகள், மேற்கு இந்தியாவின் புல்வெளிகள் மற்றும் பொதுநிலங்கள், பாலைவனத்தாவரங்கள், வனப்பகுதிகளை ஒட்டி இருக்கும் மேய்ச்சல் நிலப்பரப்புகள் மற்றும் தக்காண பீடபூமியில் உள்ள  மேய்ச்சல் பகுதிகளும் அடங்கும்.


இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகள் 228 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளன. இந்திய பாலைவனமாதல் மற்றும் நிலச் சீரழிவு அட்லஸ் (India Desertification and Land Degradation Atlas) மதிப்பீட்டின்படி, 97.85 மில்லியன் ஹெக்டேர்,  நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 29.77 சதவீதம், நில பாதிப்பு மற்றும் பாலைவனமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வறண்ட நிலமும் மேய்ச்சல் நிலமாக இருப்பதில்லை. எல்லா மேய்ச்சல் நிலங்களும் சீரழிந்தும் இருப்பதில்லை. ஆனால், நில மேலாண்மைச் சவாலின் அளவை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலப்பரப்புகள் கால்நடை வளர்ப்பு முறைகளுக்கு முக்கியமானவையாகும்.


இந்தியாவில் உள்ள மேய்ச்சல் முறைகள் (Pastoral systems in India)


மேய்ச்சல் என்பது ஒரு வாழ்வாதார மற்றும் கால்நடை உற்பத்தி முறையாகும். இதில் விலங்குகள் இயற்கையான மேய்ச்சல் மற்றும் இலைகளை உண்ணும் வளங்களைச் சார்ந்துள்ளன. உள்ளூர் சூழலியலைப் பொறுத்து, மேய்ச்சல் பணிகளில் ஈடுபடும் நபர்கள் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், மாடுகள், எருமைகள், ஒட்டகங்கள், யாக், குதிரைகள் அல்லது பிற கால்நடைகளை வளர்க்கலாம்.


மேய்ச்சல் என்பது ஒரு குறிப்பிட்ட பழங்குடி அல்லது சமூகப் பிரிவுக்குள் மட்டும் இருந்து விடுவதில்லை. அனைத்து மேய்ச்சல் சமூகங்களும் பட்டியல் பழங்குடியினர் அல்ல, மேலும் அனைத்து பட்டியல் பழங்குடியினரும் மேய்ச்சல் முறையைப் பின்பற்றுவதில்லை. இந்தியாவின் சூழலியல் பன்முகத்தன்மை மேய்ச்சல் முறையின் பல்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளது:


குடியேறிய மேய்ச்சல் சமூகத்தினர்: இவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் வசித்து, அருகிலுள்ள மேய்ச்சல் பகுதிகளைப் பயன்படுத்துகின்றனர். இது, பாரம்பரியமாக இடம்பெயரும் சமூகங்களைச் சேர்ந்த, பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ குடியேறிய குடும்பங்களிடமும் காணப்படுகிறது.


நாடோடி மேய்ச்சல் சமூகத்தினர்: இவர்கள் நீர், தீவனம் மற்றும் தேவையான வானிலை கிடைப்பதைப்பொறுத்து தங்கள் கால்நடைகளுடன் இடம்பெயர்கின்றனர். ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ராய்க்காக்கள் மற்றும் ரபாரிகள் இது போன்ற இடம்பெயரும் மேய்ச்சல் முறைகளுடன் தொடர்புடைய சமூகங்களில் இடம் பெற்றிருப்பர்கள்.


பருவகால இடம்பெயரும் மேய்ச்சல் சமூகத்தினர் (Transhumant Pastoralists): இவர்கள் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள மேய்ச்சல் பகுதிகளுக்கு இடையே வழக்கமான பருவகால இடம்பெயர்வை மேற்கொள்கின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் குஜ்ஜர்-பக்கர்வால் சமூகத்தினர், இமாச்சலப் பிரதேசத்தின் கத்திகள், லடாக்கின் சாங்பாக்கள் மற்றும் உத்தரகாண்டின் வான் குஜ்ஜர்கள் ஆகியோர் இதற்கான முக்கிய  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.


வேளாண்-கால்நடை வளர்ப்போர்: இவர்கள் கால்நடை வளர்ப்புடன் பயிர் சாகுபடியையும் இணைத்து மேற்கொள்கின்றனர். மகாராஷ்டிராவில் பல தங்கர்  சமூக குடும்பங்களும், தக்காணப் பீடபூமியின் மற்ற மேய்ச்சல் கால்நடை வளர்ப்பு சமூகங்களும் இது போன்ற  கலப்பு வாழ்வாதார முறைகளை பின்பற்றுகின்றனர்.


இந்தப் பிரிவுகள் கண்டிப்பானவை அல்ல. மேய்ச்சல் பணிகளை ஒரு  குடும்பம் தனது இடம்பெயரும் பாதையைச் சுருக்கிக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களில் சிலரை ஓரிடத்தில் குடியேறச் செய்யலாம். நிலத்தில் பயிர் சாகுபடி செய்யலாம் அல்லது கூலி வேலைவாய்ப்புடன் மேய்ச்சல் வளர்ப்பையும் இணைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், தனது கால்நடைகளில் ஒரு பகுதியைத் தொடர்ந்து இடம்பெயரச் செய்யவும் முடியும்.


ஒரு மேய்ச்சல் முறையானது, மேய்ச்சல் நில வளங்களின் தகவமைப்பு மேலாண்மை நடைமுறைகளைச் சார்ந்து இருப்பதால், குறைந்து வரும் பாதைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள், காலநிலை மாற்றத்தால், விலங்குகளின் ஆரோக்கியம், சந்தை அபாயங்கள் மற்றும் தரவுகளில் உள்ள இடைவெளிகள் காரணமாக பல்வேறு அழுத்தங்களை  எதிர்கொள்கிறது.


குறைந்து பாதைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள்: மேய்ச்சல் பாதைகள், வேளாண்மை, காடுகள், வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுலா, சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் நிலப்பரப்புகள் வழியாகச் செல்கின்றன. இறுதி மேய்ச்சல் நிலம் பயன்பாட்டிற்குத் தயாராக இருந்தாலும், ஓய்வெடுக்கும் இடங்கள், நீர்நிலைகள் அல்லது பயணப் பாதைகள்  இல்லாததான் காரணமாக ஒரு வழித்தடம் கடினமானதாக மாறக்கூடும்.


காலநிலை நிச்சயமற்ற தன்மை: மேய்ச்சல் கால அட்டவணைகள் பனிப்பொழிவு, மழைப்பொழிவு, தாவர வளர்ச்சி மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளன. பருவம் தவறிய பனிப்பொழிவு, நீண்ட வறண்ட காலங்கள், திடீர் வெள்ளம் மற்றும் வெப்ப அழுத்தம் ஆகியவை இடம்பெயரும் தேதியையும், பாதைகளின் நிலையையும், ஒரு மேய்ச்சல் நிலம் பயனுள்ளதாக இருக்கும் கால அளவையும் மாற்றக்கூடும்.


விலங்களின் ஆரோக்கியம் மற்றும் சந்தை அபாயங்கள்: கால்நடைகள், சரியான நேரத்தில் கால்நடை மருத்துவ ஆதரவு குறைவாகக்கிடைக்கும் பகுதிகள் வழியாக நீண்ட தூரம் பயணிக்கக்கூடும். நோய், காயம், ஒட்டுண்ணித்தாக்குதல் மற்றும் இனப்பெருக்கப்பிரச்சனைகள் போன்றவை குடும்பங்களில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைகள், பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கான அணுகல் குறைவாக இருப்பது, பால், கம்பளி, இறைச்சி மற்றும் நார் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் மதிப்பைக் குறைக்கக்கூடும்.


தரவுகளில் உள்ள இடைவெளிகள்:  நிரந்தர வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் மூலம் மேய்ச்சல் சமூகத்தினரின் தரவுகளைப் பதிவு செய்வது கடினமான பணியாகும்.  இதன் காரணமாக அவர்களின் கால்நடை இருப்பு நிலை, பயண வழிகள், பருவகால இடங்கள் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவை குறைவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். சிறந்த தரவுகள் தேவைப்படுகின்றன. ஆனால், வானிலை, மேய்ச்சல் நிலங்களின் நிலை மற்றும் உள்ளூர்ச்சூழல்களுக்கு ஏற்ற பயண வழி மாற்றங்கள், வரைபடமாக்கல் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

மேய்ச்சல் தொழிலில் இடம்பெயர்வு (Mobility) ஏன் முக்கியமானது?


எனவே, மேய்ச்சல் தொழில் வாழ்வாதாரத்தில் இடம்பெயர்வு முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், நீராதாரங்கள், தாவரங்களின் வளர்ச்சி, விலங்குகளின் செயல்பாடு, இனப்பெருக்கச் சுழற்சிகள், வானிலை மற்றும் பாதுகாப்பான பாதைகள் குறித்ததான அடிப்படையில், ஒவ்வொரு பருவத்திலும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட வெவ்வேறு நிலப்பரப்புகளை மேய்ச்சல் தொழிலிளர்கள் பயன்படுத்த இது உதவுகிறது. மேலும், இடம்பெயர்வு மூலம் மேய்ச்சலின் அழுத்தத்தை  அனைத்து காலத்திற்கும் இடத்திற்கும்  ஏற்ற வகையில்  பரவலாகப் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் காரணமாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மேய்ச்சல் பகுதிகள் மீண்டும் இயற்கையாக மீளுருவாக்கம் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.


இருப்பினும், மேய்ச்சல் தொழிலில் முறையை இயல்பாகவே நிலையானது  என்று கருதக்கூடாது. மேய்ச்சலின் தாக்கம், மேய்ச்சல் நடைபெறும் காலம், அதன் தீவிரம், கால்நடைகளின் வகை மற்றும் எண்ணிக்கை, அந்த நிலப்பரப்பின் சுற்றுச்சூழல் தாங்கும் திறன்  போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். இடம்பெயர்வு பாதைகள் தடுக்கப்படும்போது அல்லது மேய்ச்சல் பகுதிகள் சுருங்கும்போது, கால்நடைகள் சிறிய நிலப்பரப்புகளில் அதிகமாகக் குவிக்கப்படலாம். இதன் காரணமாக, தாவரங்கள் மற்றும் நீர்வளங்களின் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம்.


எனவே, அனைத்து மேய்ச்சல்களும் நன்மை அளிப்பாவை அல்லது தீங்கு விளைவிப்பவை என்ற பொதுவான கருத்தின் அடிப்படையில் கொள்கையை உருவாக்க வேண்டிய  தேவை இல்லை. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையிலான மேய்ச்சல் மேலாண்மையை (Evidence-based Grazing Management) உருவாக்குவதே கொள்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு ஆதரவான சட்ட மற்றும் நிறுவனரீதியான கட்டமைப்பு  முக்கியமானதாகிறது.


வன உரிமைகள் சட்டம் என்ன சொல்கிறது?


2006-ஆம் ஆண்டு பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், மேய்ச்சல் சமூகங்களுக்கு நேரடியாக தொடர்புடையதாகும். இந்தச் சட்டத்தின் பிரிவு 3(1)(d), குடியிருப்பு அடிப்படையிலான மற்றும் பருவகால இடம்பெயரும் மேய்ச்சல் முறைகள் உட்பட மேய்ச்சல் தொடர்பான சமூக உரிமைகளையும், நாடோடி அல்லது மேய்ச்சல்  தொழில் செய்யும் சமூகங்களின் பாரம்பரிய பருவகால வள அணுகல் உரிமைகளையும் அங்கீகரிக்கிறது.


இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஒரு மேய்ச்சல் கால்நடை வளர்ப்பு முறையானது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை மட்டும் சார்ந்திருக்காமல், மேய்ச்சல் நிலங்கள், காடுகள், நீராதாரங்கள், ஓய்வெடுக்கும் இடங்கள் மற்றும் இடம்பெயர்வுப்பாதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றோடொன்று இணைந்த நிலப்பரப்பைச் சார்ந்திருக்கலாம். இந்தச்சட்டம் உரிமைகளைப் பெற்றவர்களுக்கும் கிராம சபைகளுக்கும், வனவிலங்குகள், வனப் பகுதிகள், பல்லுயிர், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல்ரீதியாக உணர்திறன் மிக்க பகுதிகளைப்பாதுகாக்கும் பொறுப்புகளையும் வழங்குகிறது. எனவே, இது வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்புப் பணிகளுடன் இணைக்கிறது.


இருப்பினும், நடைமுறையில் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு கவனமான வரைபடமிடுதல், சரிபார்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. பருவகால இடம்பெயர்வு பாதைகள் பல கிராமங்கள், வனப்பிரிவுகள் அல்லது மாவட்டங்களைக்கடந்து செல்லக்கூடும். ஆனால், நிர்வாக நடைமுறைகள்  நிலையான உள்ளூர் நிர்வாக எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.


நலத்திட்டங்களை வழங்குவதில் உள்ள நிலையான முகவரி தொடர்பான சிக்கல்


இந்தியா கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து திட்டங்கள், உணவுப்பாதுகாப்பு, கால்நடை மருத்துவப்பராமரிப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றுக்கான அணுகலை விரிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை பிராந்திய அதிகார வரம்புகளின் வழியாகவே செயல்படுகின்றன. ஒரு நபர் ஒரு கிராமம், பள்ளி, சுகாதார மையம், நியாய விலைக்கடை, பஞ்சாயத்து அல்லது மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.


ஆனால், ஒரு மேய்ச்சல் தொழில் செய்துவரும் குடும்பம் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் தங்கக்கூடும். மேலும், பருவகால இலக்கை அடைவதற்கு முன்பு பல மாவட்டங்களைக் கடந்து செல்லக்கூடும். இங்கு பிரச்சினை எப்போதும் நலத்திட்டங்கள் இல்லாதது அல்ல, பயனாளிகள் அந்தத் திட்டங்கள் வழங்கப்படும் நிர்வாக எல்லைக்கு வெளியே இடம்பெயரும்போது, சேவைகள் இடையில் துண்டிக்கப்படுவதே முக்கியப் பிரச்சினையாகும்.


கல்வி: குடும்பத்தின் குளிர்காலக் குடியிருப்புக்கு அருகிலுள்ள பள்ளியில் ஒரு குழந்தை சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், கல்வியாண்டு முடிவதற்கு முன்பே அந்தக் குடும்பம் இடம்பெயரக்கூடும். இதனால் குழந்தை பாடங்கள், மதிப்பீடுகள் மற்றும் வருகை ஆகியவற்றில் பின்தங்கக்கூடும். விடுதிகள் மற்றும் தங்குமிடப் பள்ளிகள் சில குடும்பங்களுக்கு உதவக்கூடும். ஆனால்,  இது மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியாது. பருவகாலக்கல்வி மையங்கள், இடம்பெயரும் ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தின் ஆரம்பக் குடியிருப்பு பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை கல்விரீதியான இடையூறுகளைக் குறைக்க உதவும்.


சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து: பருவகால இடம்பெயர்வு காரணமாக தடுப்பூசி, கர்ப்பகால மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, ஊட்டச்சத்து சேவைகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை ஆகியவை தடைபடும். எனவே, சுகாதாரத் திட்டமிடலை இடம்பெயர்வுக்கு முன்பே தொடங்க வேண்டும். தொடர்ந்து சிகிச்சை அல்லது கண்காணிப்பு தேவைப்படும் நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணலாம். அவர்களது மருத்துவப் பதிவுகளை வெவ்வேறு இடங்களிலும் அணுகக்கூடியதாக மாற்றலாம். மேலும், பருவகால இலக்கு கொண்ட பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கலாம்.


கால்நடை ஆரோக்கியம்: கால்நடை வளர்க்கும் குடும்பத்தைப் பொறுத்தவரை, கால்நடை ஆரோக்கியம் என்பது குடும்ப நலனின் ஒரு பகுதியாகும். கால்நடைகள் உணவு, வருமானம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பின் ஆதாரங்களாக உள்ளன. தடுப்பூசி, குடற்புழு நீக்கம், உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் இனப்பெருக்கப் பராமரிப்பு ஆகியவை கால்நடைகள் இடம்பெயரும் கால அட்டவணையைச் சுற்றித் திட்டமிடப்பட வேண்டும். கால்நடைகள் புறப்படும், இடைவழி மற்றும் செல்லும் மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவ நிறுவனங்களும் நோய் கண்காணிப்புத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.




இது போன்ற நடவடிக்கைகள் 'இடம்பெயரும் மக்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும் நிர்வாகச் சேவை முறை' (Portable Governance) என்ற கருத்தின்மீது கவனத்தை ஈர்க்கும். ஆனால், இதன் சரியான பொருள் என்ன?


சேவைகளின் தொடர்ச்சிக்கான இடம்பெயரும் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் நிர்வாகச் சேவை முறை' (Portable Governance)


‘இடம்பெயரும் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் நிர்வாகச் சேவை முறை’ என்பது மேய்ச்சல்  தொழில் செய்து வரும் குடும்பங்களுடன் அரசு அலுவலகங்களும் இடம்பெயர வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. மாறாக, நிர்வாகப்பதிவுகள், உரிமைகள் மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவை ஒரு மாவட்டத்தின் எல்லையில் முடிவடையாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் பொருளாகும்.


‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ (One Nation One Ration Card) திட்டத்தின் மூலம், பொது உரிமைகளுக்கான அணுகல் ஒரே ஒரு வசிப்பிடத்துடன் கட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதை நமது நாடு ஏற்கனவே நிரூபித்துள்ளது. இந்தத் திட்டம், தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் குடும்ப அட்டை முதலில் எங்கு வழங்கப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல், நாட்டில் உள்ள எந்தவொரு  நியாயவிலைக் கடையிலிருந்தும் உணவு தானிய உரிமைகளைப் பெற உதவுகிறது.

கல்வி, சுகாதாரம் மற்றும் கால்நடை ஆரோக்கியம் ஆகியவற்றில் இதே முறையை அப்படியே பயன்படுத்த முடியாது என்றாலும், அதன் அடிப்படைக் கருத்து: தற்காலிகமாக மக்கள் இடம்பெயர்வதால், அவர்களுக்கான நலத்திட்ட உரிமைகள் அல்லது அத்தியாவசிய அரசுச் சேவைகளைப்பெறுவதில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதாகும். சேவைகளின் தொடர்ச்சியை உறுதிசெய்ய குறைந்தபட்சம் பின்வரும் நான்கு பரந்த நடவடிக்கைகள் உதவக்கூடும்:


1. நிரந்தர வசிப்பிடத்தையும் எதிர்பார்க்கப்படும் பருவகால இருப்பிடங்களையும் வரைபடமிடுதல்.


2. இடம்பெயர்வுக்கு முன்பே சேவைகள் பற்றித் திட்டமிடுதல்.


3. பல்வேறு நிர்வாக எல்லைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்.

4. இடம்பெயரக்கூடிய நிர்வாகப் பதிவுகளை நடமாடும் சேவைகளுடன் இணைத்தல்.


இந்த நடவடிக்கைகள், பருவகால இடம்பெயர்வுக்கு ஏற்ப பொதுச்சேவைகளை மாற்றியமைக்க வேண்டியதன் முக்கியதுவத்தை உணர்த்துகின்றன.


அங்கீகாரத்திலிருந்து சேவைகளின் தொடர்ச்சி வரை


இதன் பின்னணியில், 2026-ஆம் ஆண்டு சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் சமூகங்களுக்கான, மேய்ச்சல்  தொழில் முறையை ஒரு விரிவான கண்ணோட்டத்தில் அணுகுவதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குகிறது. மேய்ச்சல் தொழில் செய்பவர்கள் கால்நடை உற்பத்தியாளர்கள், பொதுவான இயற்கை வளங்களைப்பயன்படுத்துபவர்கள் மற்றும் மதிப்புமிக்க சூழலியல் அறிவைக் கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில், அவர்கள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சமூகப்பாதுகாப்பு மற்றும் பொறுப்பான நிர்வாகச் சேவைகளைப் பெறுவதற்கான உரிமையுள்ள குடிமக்களும் ஆவர்.


பொதுக் கொள்கையானது, இடப்பெயர்ச்சியைப் பெருமைப்படுத்தவோ அல்லது நிரந்தரக் குடியேற்றமே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று கருதவோ கூடாது. சில குடும்பங்கள் ஒரு இடத்தில் குடியேறவோ அல்லது தங்கள் வாழ்வாதாரங்களைப் பன்முகப்படுத்தவோ விரும்பலாம். மற்றவர்கள், பருவகால இடப்பெயர்ச்சியைத் தொடரலாம். ஏனெனில், அது பொருளாதார, கலாச்சார, சூழலியல்ரீதியாகவும்  முக்கியமானதாக இருக்கிறது.


உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணி, இடம்பெயர்வுக்கு ஏற்றவாறு ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளை செயல்திறன் கொண்டதாக மாற்றுவதாகும். நிர்வாகப்பதிவுகள் மக்களுடன் பயணிக்க வேண்டும். மாவட்டங்கள் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசின் பொறுப்பு தெளிவாகத்தொடர வேண்டும். இடம்பெயரும் வாழ்வாதாரம் காரணமாக, நலத்திட்ட உரிமைகள் ஒரே இடத்தில் முடங்கிவிடக் கூடாது.


Original articles: Pastoralism: Is permanent settlement the only path to development? -Abdul Khabir

Share:

அரசியலமைப்பின் 110-வது பிரிவு எதைப்பற்றியது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• திங்களன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒரு நிதி மசோதாவாக (Money Bill) நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்த்தப்பட்ட 2019-ஆம் ஆண்டிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. 2018-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்ட ஒரு மாறுபட்ட கருத்து, இந்த நடைமுறையை "அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடி" (fraud on the Constitution) என்று வர்ணித்திருந்தது.


• இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில், கூடுதலாக நான்கு நீதிபதி பதவிகளை உருவாக்குவதற்குத் தேவையான செலவுகள், பணியாளர்கள், குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


• தேவையான பணியாளர்களுடன் உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக நான்கு நீதிபதி பதவிகளை உருவாக்குவதன் மூலம், நீதிபதிகளின் ஊதியம் மற்றும் படிகள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நீதிபதிகள் வாடகை இல்லாத அதிகாரப்பூர்வ குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கும் உரிமை பெறுவார்கள். ஒவ்வொரு நீதிபதிக்கும் அவர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக தனிப்பட்ட பணியாளர்கள் வழங்கப்பட வேண்டும். நீதிபதிகளுக்கான பாதுகாப்புப்பணியாளர்களை நியமிப்பதற்கும் செலவு ஏற்படும். நான்கு நீதிபதிகள் மற்றும் அவர்களது பணியாளர்களின் ஊதியம், போக்குவரத்து மற்றும் இதர பல்வேறு செலவுகளுக்கான மதிப்பிடப்பட்ட தொடர்ச்சியான ஆண்டு செலவு ரூ.10,56,81,648 ஆகும். மேலும், நான்கு சக்கர வாகனம், அதிகாரப்பூர்வ குடியிருப்பைத்தயார் செய்தல் மற்றும் இதர பல்வேறு செலவுகளுக்கான ஒருமுறை செலவு (non-recurring expenditure) ரூ.3,47,36,000 ஆகவும் இருக்கும். எனவே, இந்திய உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக நான்கு நீதிபதி பணியிடங்களை உருவாக்குவதற்கான மொத்தச் செலவு ரூ. 14,04,17,648 ஆக இருக்கும்" என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?


• அரசியலமைப்புச்சட்டத்தின் 110(1)-வது பிரிவின்கீழ், பின்வரும் விவகாரங்களில் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றை மட்டுமே கையாளும் விதிகள் கொண்டிருந்தால், அது ஒரு மசோதா நிதி மசோதாவாக (Money Bill)  கருதப்படும்:


(a) எந்தவொரு வரியையும் விதித்தல், நீக்குதல், தள்ளுபடி செய்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;


(b) அரசாங்கத்தின் கடன் வாங்கும்  நடவடிக்கைகளைஒழுங்குபடுத்துதல்;


(c) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியம் (Consolidated Fund of India) அல்லது அவசரநிலை நிதியம் (Contingency Fund of India) ஆகியவற்றின் பாதுகாப்பு,  இந்த நிதிகளுக்கு பணம் செலுத்துதல் அல்லது அவற்றிலிருந்து பணம் எடுத்தல்,


(d) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து (Consolidated Fund of India) பணத்தை ஒதுக்கீடு செய்தல், 


(e) ஏதேனும் ஒரு செலவை இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்தின் மீது சார்ஜ் செய்யப்பட்ட செலவாக (charged expenditure) அறிவித்தல் அல்லது அத்தகைய செலவின் தொகையை அதிகரித்தல்;


(f) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியம் அல்லது இந்தியாவின் பொதுக்கணக்கில் (Public Account of India) இருந்து பணத்தைப் பெறுதல் அல்லது   பணத்தைப் பாதுகாத்தல் அல்லது வெளியிடுதல் அல்லது மத்திய அல்லது மாநிலத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்தல் அல்லது


(g) உட்பிரிவுகள் (a) முதல் (f) வரை குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பான ஏதேனும் ஒரு விவகாரமாக இருத்தல். அபராதம் அல்லது பிற பண தொடர்பான தண்டனைகளை விதிப்பதற்கான விதிகள், உரிமங்கள் அல்லது சேவைகளுக்கான கட்டணங்களைக் கோருதல் அல்லது செலுத்துதல் அல்லது உள்ளூர் நோக்கங்களுக்காக ஏதேனும் உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது அமைப்பால் வரி விதித்தல், நீக்குதல், தள்ளுபடி செய்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான விதிகளைக் கொண்டிருப்பதன் காரணமாக மட்டும் ஒரு மசோதா 'நிதி மசோதா' (Money Bill) என்று கருதப்படாது.


• ஒரு நிதி மசோதாவை (money Bill) மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். மேலும், ஒரு மசோதாவை “நிதி மசோதா” என மக்களவைத்தலைவர் வகைப்படுத்துவது, அந்த மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெற வேண்டிய  தேவை இல்லை.  மத்திய அரசின் வரவு செலவு அறிக்கை ஒரு நிதி மசோதா ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தின் 110(1)(g)-வது பிரிவு, 110(1)(a) முதல் (f) வரை குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விவகாரத்துடனும் தொடர்புடைய துணை விவகாரங்களும் நிதி மசோதாவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. மோடி அரசாங்கம் தனது முந்தைய பதவிக்காலங்களில் முக்கியச்சட்ட மசோதாக்களை 'நிதி மசோதாக்களாக'  நிறைவேற்றுவதற்கு இந்த கூடுதல் பிரிவே முக்கிய காரணியாக அமைந்தது. மாநிலங்களவையில்  இது போன்ற சட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் ஆதரவு அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினாலேயே இவ்வாறு செய்யப்பட்டது என்று அப்போது எதிர்க்கட்சிகள் கூறின.


• அரசியலமைப்புச்சட்டத்தின் 109(1)-வது பிரிவின்கீழ், ஒரு நிதி மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது நிதி மசோதா என்பதற்கான மக்களவைத்தலைவரின் சான்றிதழுடன் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்காக அனுப்பப்படுகிறது. இருப்பினும், மாநிலங்களவையால் அந்த மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது. மேலும், 14 நாட்களுக்குள் அதை மக்களவைக்குத்திருப்பி அனுப்ப வேண்டும். அதன் பின்னர், மாநிலங்களவை செய்துள்ள பரிந்துரைகளில் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை மக்களவை முடிவு செய்யலாம். எந்தச்சூழ்நிலையிலும், அந்த மசோதா இரண்டு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின் 109(5)-வது பிரிவின்படி, மாநிலங்களவை  14 நாட்களுக்குள் மசோதாவை மக்களவைக்குத் சரிபார்த்து அனுப்பத்தவறினால்,  அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.


Original articles: Article 110 of the Constitution deals with what? -Priya Kumari Shukla

Share:

தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்ற ஒரு தொழிலாளர் பெட்டி (Labour Box) தேவைப்படுகிறது. -உத்தம் பிரகாஷ், ரோஹித் மணி திவாரி, ரஞ்சன் குமார் சாஹூ

 தொழிலாளர் சட்டங்கள், விதிகள், அறிவிப்புகள், நீதித்துறைத் தீர்ப்புகள் மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, பல மொழிகளிலும் குரல் வடிவங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு உரையாடல் இடைமுகத்தைக் (conversational interface) கற்பனை செய்து பாருங்கள்.


தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes) என்பவை வெறும் தொழிலாளர் சட்டங்களின் ஒருங்கிணைப்பு மட்டுமல்ல, அவை தொழிலாளர் நிர்வாகம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் விதத்தில் ஒரு முக்கியக் கொள்கைரீதியான மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன.


இந்தியாவின் தொழிலாளர் வரலாற்றின் பெரும்பகுதியில், தொழிலாளர் பாதுகாப்பு என்பது அவர்கள் பணிபுரியும் இடத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு தொழிலாளியின் உரிமைகளும் சலுகைகளும் அவர்கள் எங்கு பணியாற்றுகிறார்கள், அந்த நிறுவனம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டது மற்றும் பெரும்பாலும், அங்கு எத்தனை பேர் பணிபுரிந்தனர் என்பதைப் பொறுத்தே அமைந்திருந்தன. இந்தப் புதிய கட்டமைப்பு இந்த அணுகுமுறையை முற்றிலும் மாற்றியமைக்க முயல்கிறது. ஒரு பொதுவான பாதுகாப்புக் கட்டமைப்பிற்குள், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகள் முழுவதும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதே இதன் லட்சியமாகும். இதன் மூலம், பணிபுரியும் இடத்தைப் பின்தொடரும் தொழிலாளர் பாதுகாப்பிற்குப் பதிலாக, தொழிலாளியைப் பின்தொடரும் ஒரு அமைப்புக்குத் தொழிலாளர்களை இது நெருக்கமாகக் கொண்டுவருகிறது.


இதனால்தான் இந்தச் சட்டம், ஒரு சட்டத் தொகுப்பு (Code) என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு சிதறிய நிலையில் இருந்த தொழிலாளர் சட்டங்களை ஒரே பொதுவான கட்டமைப்பிற்குள் ஒன்றிணைப்பதன் மூலம், இது தொழில்கள், நிறுவனங்கள் மற்றும் புவியியல் பகுதிகள் முழுவதும் உரிமைகள், கடமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இத்தகைய பெரிய அளவிலான லட்சியம் அதற்கே உரிய சவால்களையும் கொண்டு வருகிறது.


உரிமைகள் எளிதில் மாற்றத்தக்கவையாக (portable) இருக்கலாம். ஆனால், அவை புரிந்துகொள்ளக்கூடியவையா? சட்டத்தின்கீழ் சலுகைகள் இருக்கலாம்; ஆனால், தொழிலாளர்கள் அவற்றை எளிதாகப் பெற்றுப் பயன்படுத்த முடியுமா? கடமைகள் சட்டத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கலாம், ஆனால், வேலையளிப்பவர்கள் அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு சீராகச் செயல்படுத்த முடியுமா?


கட்டமைப்பு சார்ந்த தடைகள்


தொழிலாளர் நிர்வாக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் சிலரால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தால், அந்த அமைப்பால் 'அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பு' (universal social security) போன்ற தனது இலக்குகளை அடைய முடியாது.


இந்தச் சவால் எழுந்துள்ள காலக்கட்டம், குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது. இந்தச் சீர்திருத்தங்கள், படிவங்களையும் கோப்புகளையும் பெரும்பாலும் இணையத்திற்கு மாற்றுவதையே டிஜிட்டல்மயமாக்கல் குறித்த ஒரு உலகில் உருவாக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, நிறுவனங்கள் குடிமக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை மறுவடிவமைக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தச் சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வருகின்றன. உச்சநீதிமன்றம்கூட அதன் பொறுப்பான பயன்பாட்டை ஆராய்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இனி கேள்வியல்ல, மாறாக பொது நோக்கங்களுக்காக அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதே உண்மையான கேள்வியாகும்.


இதற்கான ஒரு சாத்தியமான தீர்வு, 'தொழிலாளர் பெட்டி' (Labour Box) என்று அழைக்கப்படுவதில் இருக்கலாம். இது இந்தியாவின் தொழிலாளர் தரவுத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படும், அரசின் ஆதரவு பெற்ற, செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடல் தளமாக (conversational platform) இருக்கும். இது ஒரு ஒழுங்குபடுத்துபவரோ, ஒரு டிஜிட்டல் நீதிபதியோ செயல்படாது. மாறாக, குழப்பம் மோதலாக மாறுவதற்கு முன்பு, தொழிலாளர்கள், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர் அதிகார அமைப்புகள் நம்பகமான வழிகாட்டுதலைப் பெறக்கூடிய ஒரு அறிவார்ந்த வழிகாட்டுதல் அமைப்பாகச் செயல்படும்.


UAN, இ-ஷ்ரம் (e-Shram), ஷ்ரம் சுவிதா (Shram Suvidha) மற்றும் இணையவழித் தகராறு தீர்க்கும் தளங்கள் மூலமான இந்தியாவின் டிஜிட்டல் தொழிலாளர் உள்கட்டமைப்பு ஏற்கனவே ஈர்க்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், இந்த அமைப்புகள் பெரும்பாலும் டிஜிட்டல் பதிவேடுகளாகவே செயல்படுகின்றன. அவை நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள் மற்றும் விளைவுகளைப் பதிவு செய்கின்றன. என்ன நடந்தது என்பதை அவை பயனர்களுக்குத் தெரிவிக்கின்றன. அது ஏன் நடந்தது அல்லது அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பது குறித்த விளக்கங்களை அரிதாகவே அளிக்கின்றன.


டிஜிட்டல் பதிவேடுகள் மற்றும் மனித விளக்கம்


ஒரு தொழிலாளி தனது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டதையோ அல்லது வருங்கால வைப்பு நிதி (provident fund (PF)) கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையோ காணலாம். ஒரு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) உரிமையாளர், பணிக்கொடைக்கான தகுதி, உரிமத் தேவைகள் அல்லது இணக்கக் கடமைகள் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருக்கலாம். தொழிலாளர் அலுவலகங்கள், எளிமையான ஆனால் முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் கணிசமான நேரத்தைத் தொடர்ந்து செலவிடுகின்றன. இதன் விளைவு கணிக்கக்கூடியதுடன், குழப்பம் அவநம்பிக்கையாக மாறுகிறது, இந்த அவநம்பிக்கை தகராறாக மாறுகிறது. மேலும், அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நோக்கம் கொண்ட ஒரு அமைப்பு, நிபுணர் வழிகாட்டுதலைப் பெறக்கூடியவர்களுக்கு மட்டுமே எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாறுகிறது.


ஒரு தொழிலாளர் பெட்டியின் (Labour Box) மதிப்பு, சந்தேகங்கள் குறைகளாக மாறுவதற்கு முன்பே அவற்றைத் தீர்ப்பதில் அடங்கியுள்ளது. தொழிலாளர்கள் சம்பளப் பிடித்தங்கள், வருங்கால வைப்பு நிதி (PF) கோரிக்கைகள், பணிக்கொடைத் தகுதி அல்லது சமூகப் பாதுகாப்புப் பலன்கள் குறித்து எளிய மொழியில் விளக்கங்களைப் பெறலாம். நிறுவனர்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விதிமீறல்கள் ஏற்படுவதற்கு முன்பே தங்களின் இணக்கக் கடமைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தொழிலாளர் அதிகார அமைப்புகள் வழக்கமான வழிகாட்டுதல்களைத் தரப்படுத்தலாம் மற்றும் மனிதத் தீர்ப்பு தேவைப்படும் விஷயங்களில் கவனம் செலுத்தலாம். அவ்வாறு செய்வதன் மூலம், அது தொழிலாளர் நிர்வாகத்தின் ஒட்டுமொத்தத் தரத்தையே மேம்படுத்தும்.


சட்ட அமலாக்கத்தின் மூலம் மட்டுமே இணக்கத்தை உருவாக்க முடியாது என்பதைத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளே அங்கீகரிக்கின்றன. உலகளாவிய சமூகப் பாதுகாப்பு மற்றும் பரந்த தொழிலாளர் பாதுகாப்பு என்ற இலட்சியத்திற்கு, தொழிலாளர்களும் நிறுவனர்களும் சட்டத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு முன்பே அதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை இந்தக் காரணத்தினால்தான், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் அதிகம் விவாதிக்கப்படாத புதுமைகளில் ஒன்றாக, பாரம்பரிய ஆய்வாளருக்குப் பதிலாக "ஆய்வாளர்-மற்றும்-வழிநடத்துநர்" (Inspector-cum-Facilitator) என்ற பதவி மாற்றப்பட்டுள்ளது.


செயல்முறையில் மனிதனின் பங்கு


இந்தத் தத்துவத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது எளிதானதல்ல. ஒரு சாத்தியமான இணக்க விதிமீறல் குறித்து ஆலோசனையை நாடும் ஒரு நிறுவனர், பிற்காலத்தில் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடிய அதிகாரத்தையே அணுகத் தயங்கக்கூடும். உண்மையான முரண்பாடு எதுவும் இல்லை என்றாலும், சாத்தியமான நடவடிக்கை குறித்த அச்சம், நிறுவனரைத் தானாக முன்வந்து உதவி தேடுவதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்யலாம். எளிதாக்குதலும் அமலாக்கமும் இயல்பாகவே ஒன்றாகச் சிறப்பாகச் செயல்படுவதில்லை.


இன்னொரு சவாலும் உள்ளது. ஆய்வு (Inspection) என்பது விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளைச் சார்ந்துள்ளது. எளிதாக்குதல் (Facilitation) என்பது தகவல் தொடர்பு, கல்வி மற்றும் சிக்கலான கடமைகளை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் விளக்கும் திறனைச் சார்ந்துள்ளது. எனவே, எளிதாக்குதல் விரும்பத்தக்கதா என்பது கேள்வியல்ல. அது நிச்சயமாக விரும்பத்தக்கதுதான். அதை எவ்வாறு சீராக, பெரிய அளவில், மற்றும் சிக்கல்கள் அமலாக்க வழக்குகளாக உருவெடுப்பதற்கு முன்பே வழங்குவது என்பதே உண்மையான கேள்வி.

இங்குதான் 'தொழிலாளர் பெட்டி' (Labour Box) மற்றொரு தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.


தொழிலாளர் சட்டங்கள், விதிகள், அறிவிப்புகள், நீதித்துறைத் தீர்ப்புகள் மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, பல மொழிகளிலும் குரல் வடிவங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு உரையாடல் இடைமுகத்தைக் (conversational interface) கற்பனை செய்து பாருங்கள். ஒரு தொழிலாளி குறையைத் தெரிவிப்பதற்கு முன்பே கிடைக்கக்கூடிய தீர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நிறுவனர், விதிமீறல் ஏற்படுவதற்கு முன்பே இணக்கம் சார்ந்த இடைவெளிகளைக் கண்டறிய முடியும். தற்காலிகப் பணிகள், தள வேலைவாய்ப்புகள் அல்லது மாநிலங்களுக்கிடையேயான ஏற்பாடுகள் போன்ற அறிமுகமில்லாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தொழிலாளர் அதிகாரிகள், ஒரு பொதுவான விளக்க வளத்தைப் (common interpretive resource) பயன்படுத்தலாம்.


தொழிலாளர் பெட்டியானது (Labour Box) நிறுவனரீதியான முடிவெடுக்கும் முறையை மாற்றிவிடாது.


அது, விளக்கமளிப்பதைவிட முடிவெடுப்பதில் கவனம் செலுத்த நிறுவனங்களுக்கு உதவும்.


முக்கியமாக, அது 'மனித ஈடுபாடு கொண்ட' (Human-in-the-Loop) மாதிரியின் அடிப்படையில் செயல்பட வேண்டும். தொழிலாளர் பெட்டியால் சட்டங்களை விளக்கமளிக்கவும், விதிகளைப் பொருள் கொள்ளலாம் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கவும் முடியும். இருப்பினும், இது சட்டரீதியான முடிவுகளை எடுக்கவோ அல்லது தகராறுகளைத் தீர்க்கவோ முடியாது. சர்ச்சைக்குரிய உண்மைகள், சட்டப் பொறுப்புகள் அல்லது அமலாக்க நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகள், நீதியைத் தானியக்கமாக்குவது இதன் நோக்கமல்ல. மாறாக, மக்கள் நீதியை அணுகும் வாய்ப்பை அணுகுவதை மேம்படுத்துவதே நோக்கம் என்பதை மனதில் கொண்டு, நிறுவப்பட்ட மனித நிறுவனங்கள் வழியாகவே தொடர்ந்து செல்ல வேண்டும்.



வழிகாட்டுதலுக்கும் அமலாக்கத்திற்கும் இடையிலான இந்த நடுநிலையான ஆலோசனை அடுக்கு, நிறுவனர்களுக்கான முன்கணிப்புத் தன்மையை மேம்படுத்தும், நிர்வாகிகளுக்கான பொறுப்புணர்வை வலுப்படுத்தும் மற்றும் தனிப்பட்ட விருப்புரிமையைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.


சர்வதேச அனுபவங்களும் இதே போன்றதொரு முறையையே சுட்டிக்காட்டுகிறது. அமலாக்க நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பே மக்கள் விதிகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டால், தொழிலாளர் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படும்.


தொழிலாளர் சீர்திருத்தமாக உரையாடல் முறை (Conversationalisation)


இத்தகையதொரு தளம், தகவலறிந்த ஒப்புதல் (informed consent), தனியுரிமைப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். வழிகாட்டுதல் சட்டத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும், தீர்ப்பளிப்பதிலிருந்து தெளிவாக வேறுபடுத்தப்பட வேண்டும் மற்றும் மனிதரீதியான மேல்நிலைப்படுத்தலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். தொழிலாளர் நலன் பொதுப் பட்டியலில் (Concurrent List) இடம்பெற்றுள்ளதால், அதன் கட்டமைப்பு மத்திய மற்றும் மாநில அளவிலான வேறுபாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கூட்டாட்சியாக நிலைத்திருக்க வேண்டும்.


அடிப்படையில், இந்தக் கேள்வி நம்பிக்கையைப் பற்றியது. உரிமைகளைப் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை எளிதாக அணுக முடியும் என்பதில் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். கடமைகளைத் தொடர்ச்சியாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதில் நிறுவனர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த வகையில், நம்பிக்கை என்பது நல்லாட்சியின் விளைவு மட்டுமல்ல. அது நல்லாட்சிக்கு ஒரு அடிப்படைத் தேவையாகும்.


தொழிலாளர் சீர்திருத்தத்தின் முதல் கட்டம் சட்டத் தொகுப்பாக்கமாகவும் (codification), இரண்டாம் கட்டம் எண்ணிம மயமாக்கலாகவும் (digitalisation) இருந்தால், மூன்றாம் கட்டம் உரையாடல் மயமாக்கலாக (conversationalisation) இருக்கலாம். இதன் பொருள், சட்டங்கள், தரவுத்தளங்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் சேவை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட மக்களுடன் அர்த்தமுள்ள வகையில் தொடர்பு கொள்ளும் ஒரு அமைப்பை உருவாக்குவதாகும்.


தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் உண்மையான வாக்குறுதி, சட்டங்களை எளிமையாக்குவதில் மட்டுமல்ல, பங்கேற்பை விரிவுபடுத்துவதிலும் உள்ளது. உலகளாவிய சமூகப் பாதுகாப்பைச் சட்டமாக்குதல் மற்றும் அமல்படுத்துதல் மூலம் மட்டுமே உருவாக்க முடியாது. அதற்கு, தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள், கணிக்கக்கூடிய, அணுகக்கூடிய மற்றும் நம்பகமான ஒரு கட்டமைப்பின் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும்.


தொழிலாளர் பெட்டி (Labour Box) என்பது இந்த நம்பிக்கை அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முன்மொழிவாகும். ஏனெனில், வேலை உலகில், உரிமைகள் புரிந்துகொள்ளப்படும்போது மிகவும் அர்த்தமுள்ளதாகின்றன. கடமைகள் தெளிவாக இருக்கும்போது மிகவும் பயனுள்ளதாகின்றன. மேலும், தொடக்கத்திலிருந்தே உரிமைகளும் பொறுப்புகளும் சரியாகப் புரிந்து கொள்ளப்படும்போது பல தகராறுகளைத் தவிர்க்கலாம்.


உத்தம் பிரகாஷ் கொச்சியில் பணியாற்றும் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆவார். ரோஹித் மணி திவாரி திருவனந்தபுரத்தின் மண்டல தொழிலாளர் ஆணையர் (சி) ஆவார். ரஞ்சன் குமார் சாஹூ மும்பையின் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆவார்.


Original articles: Labour codes need a Labour Box to fulfil their promise -Uttam Prakash, Rohit Mani Tiwari, Ranjan Kumar Sahoo

Share:

இந்தியாவின் எத்தனால் கொள்கையானது, நீர் மற்றும் நிலைத்தன்மைக்கான விலைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். -அசோக் கெம்கா

 கலப்பு இலக்குகள் (Blending targets) வழிகாட்டுதலை வழங்கலாம். ஆனால், அவையே தனி இலக்குகளாக ஆகிவிடக்கூடாது.


இந்தியாவின் E20 பெட்ரோல் அறிமுகம், உலகின் மிகவும் லட்சியமிக்க உயிரி எரிபொருள் முயற்சிகளில் ஒன்றாகும். எத்தனால் கலப்பானது 2013-14ல் சுமார் 1.5 சதவீதத்திலிருந்து 2025-ல் கிட்டத்தட்ட 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் வருடாந்திர நுகர்வு 700 கோடி லிட்டரை எட்டியுள்ளது. இந்தத் திட்டம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, கிராமப்புற வருமானத்தை உருவாக்கி, நாட்டின் எரிசக்தித் தொகுப்பைப் பன்முகப்படுத்தியுள்ளது. இவை முக்கியமான சாதனைகள் ஆகும். இருப்பினும், இந்தியா E10-லிருந்து E20-க்கு மாறும் நிலையில், இதன் கொள்கையானது வெறும் கலப்பு இலக்குகளை மட்டும் சார்ந்து இல்லாமல், அறிவியல் சான்றுகள் மற்றும் சிறந்த பொதுப் பொருளாதாரத்தால் அதிகளவில் வழிநடத்தப்பட வேண்டும்.


எல்லா எத்தனால்களும் ஒரே மாதிரியான நீடித்த நிலைத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியா தற்போது, சி-ஹெவி வெல்லப்பாகு (C-heavy molasses), பி-ஹெவி வெல்லப்பாகு (B-heavy molasses), கரும்புச்சாறு, மக்காச்சோளம், சேதமடைந்த உணவு தானியங்கள் மற்றும் உபரி அரிசி ஆகியவற்றிலிருந்து எத்தனாலை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு வழிமுறையும் வெவ்வேறு சுற்றுச்சூழல் தடத்தைக் கொண்டுள்ளது. முதலீடு செய்யப்பட்ட ஆற்றலுக்கான ஆற்றல் வருவாய் (Energy Return on Energy Invested (EROEI)) என்பது நிலைத்தன்மையை அளவிடுவதற்கான ஒரு பயனுள்ள அளவீடு ஆகும். இது, சாகுபடி, உர உற்பத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து மற்றும் காய்ச்சி வடிகட்டுதல் ஆகியவற்றில் நுகரப்படும் புதைபடிவ ஆற்றலுடன், உற்பத்தி செய்யப்படும் பயன்படுத்தக்கூடிய ஆற்றலை முதலீடு செய்யப்பட்ட ஆற்றலுக்கான ஆற்றல் வருவாய் (EROEI) ஒப்பிடுகிறது. கரும்புச் சக்கையை எரிபொருளாகக் கொண்டு வடிக்கும் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் திறமையான கரும்பு எத்தனால், பொதுவாக சுமார் 2–4 என்ற முதலீடு செய்யப்பட்ட ஆற்றலுக்கான ஆற்றல் வருவாய் (EROEI) மதிப்பை அடைகிறது. அதேசமயம், அதிக புதைபடிவ ஆற்றல் உள்ளீடுகள் காரணமாக, தானிய அடிப்படையிலான எத்தனால் பொதுவாக 1.2 முதல் 2 வரை இருக்கும். எனவே, எத்தனால் ஒரு நேர்மறையான நிகர ஆற்றல் ஆதாயத்தை வழங்குகிறது. ஆனால் அதன் அளவு மூலப்பொருள், வேளாண்முறைகள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்துள்ளது.


இரண்டாவது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் ஆற்றல் அடர்த்தி (energy density) ஆகும். பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு சுமார் 32 மெகாஜூல் (MJ) ஆற்றலும், எத்தனாலில் ஒரு லிட்டருக்கு சுமார் 21 MJ ஆற்றலும் உள்ளது. எனவே, E20 எரிபொருளில் தூய பெட்ரோலை விட சுமார் 6–7 சதவீதம் குறைவான ஆற்றலே உள்ளது. இது, சீராக வாகனம் ஓட்டும் தன்மையின் அடிப்படையில், எரிபொருள் சிக்கனத்தில் (mileage) சிறியளவிலான ஆற்றல் குறைவு ஏற்படலாம். இருப்பினும், எத்தனால் மிக அதிக ஆக்டேன் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது, அதிக எத்தனால் கலவைகளுக்காக பிரத்யேகமாக அளவீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் அதிகத் திறமையான எரிதலை அடையவும், இந்தக் குறைபாட்டை ஓரளவு ஈடுசெய்யவும் அனுமதிக்கிறது. ஒட்டுமொத்த விளைவு, எரிபொருளின் பண்புகளை மட்டும் சார்ந்து இல்லாமல், இயந்திரத்தின் வடிவமைப்பையே சார்ந்துள்ளது.


வாகனப் பொருத்தம் (compatibility) என்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும். எத்தனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி, குறிப்பிட்ட சில உலோகங்களை அரிக்கும் (corrode) தன்மை கொண்டது. அதே நேரத்தில், பழைய ரப்பர் சீல்கள் (seals) மற்றும் நெகிழிப் பாகங்களையும் சேதப்படுத்தக்கூடும். இச்சவால்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 2023 முதல் தயாரிக்கப்படும் வாகனங்கள் E20 எரிபொருளுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. புதிய என்ஜின்கள் மேம்படுத்தப்பட்ட பொருட்களையும், திருத்தப்பட்ட என்ஜின் அளவுத்திருத்தத்தையும் கொண்டுள்ளன. ஆனால், மில்லியன் கணக்கான பழைய இருசக்கர வாகனங்கள், பயணிகள் கார்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் இந்த வகைக்குள் அடங்கவில்லை. எனவே, இந்த மாற்றத்திற்கு வெளிப்படையான நுகர்வோர் தகவல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் குறைந்த கலப்பு எரிபொருட்கள் தொடர்ந்து கிடைப்பது அவசியம். நுகர்வோர் தங்கள் வாகனங்களுக்குப் பொருத்தமான எரிபொருட்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பல்வேறு எரிபொருட்களின் விலைகள் அவற்றின் உண்மையான செலவுகளைத் தெளிவாகப் பிரதிபலிக்க வேண்டும்


கரும்பு வளரும்போது வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சுவதால், எத்தனால் பெரும்பாலும் குறைந்த கார்பன் எரிபொருளாக விவரிக்கப்படுகிறது. இருப்பினும், பயிர் சாகுபடி, உர உற்பத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து ஏற்படும் உமிழ்வுகளைக் கணக்கில் கொண்டு, காலநிலை சார்ந்த நன்மைகளை அதன் முழு வாழ்க்கைச் சுழற்சி (life-cycle) அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். திறமையாக உற்பத்தி செய்யப்படும் கரும்பு எத்தனால், பெட்ரோலுடன் ஒப்பிடும்போது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை சுமார் 50-70 சதவீதம் குறைக்க முடியும், குறிப்பாக கரும்புச் சக்கை செயல்முறை ஆற்றலை வழங்கும் இடங்களில் இது சாத்தியமாகும். தானிய அடிப்படையிலான எத்தனால் பொதுவாக சுமார் 20-50 சதவீதம் என்ற குறைந்த அளவிலான குறைப்புகளையே வழங்குகிறது. உற்பத்தியானது டீசல் மூலம் இயங்கும் நீர்ப்பாசனம், புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான காய்ச்சி வடித்தல் அல்லது அதிகப்படியான நைட்ரஜன் உரப் பயன்பாடு ஆகியவற்றைச் சார்ந்திருக்கும்போது, இந்த நன்மைகள் கணிசமாகக் குறைகின்றன. எனவே, பல உற்பத்தி முறைகளின்கீழ் எத்தனால் பெட்ரோலைவிடத் தூய்மையானது. ஆனால், அதனைத் தானாகவே கார்பன் சமநிலையானது (carbon neutral) என்று கருத முடியாது.


இருப்பினும், இதில் மிக முக்கியமான சவால் நீர் பயன்பாடு ஆகும். கரும்பு அதிக நீர் தேவைப்படும் ஒரு பயிர். வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices (CACP)) மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) ஆகியவற்றின் மதிப்பீடுகளின்படி, கரும்பு அதன் வளர்ச்சிப் பருவத்தில் பொதுவாக 1,500–2,500 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. உள்ளூர் காலநிலை மற்றும் நீர்ப்பாசன முறைகளைப் பொறுத்து, ஒரு லிட்டர் கரும்பு எத்தனால் உற்பத்தி செய்வதற்குச் சுமார் 2,000–3,500 லிட்டர் நீர் தேவைப்படலாம் என நீர் பயன்பாட்டு ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய கரும்பு உற்பத்திப் பகுதிகளில் பல ஏற்கனவே கடுமையான நிலத்தடி நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. நீர் மற்றும் பிற வளங்களைச் சரியாகக் கணக்கிடாமல் எத்தனால் உற்பத்தியை விரிவுபடுத்துவது, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, பெருகிவரும் பற்றாக்குறையான நன்னீர் வளங்களைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


தற்போது, அதிக மானியத்துடன் கூடிய மின்சாரம் நிலத்தடி நீரை அதிகமாக பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில், மானியம் வழங்கப்படும் யூரியா, நைட்ரஜன் உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த மானியங்கள், கரும்பு சாகுபடியின் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பிரதிபலிக்காமல், அதன் வெளிப்படையான செலவைக் குறைக்கின்றன. இதன் விளைவு, வளங்களை திறனற்ற முறையில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பொது மானியங்கள் அதன் உண்மையான சமூகச் செலவு அதிகமாக உள்ள பகுதிகளில் எத்தனால் உற்பத்தியை தற்செயலாக ஊக்குவிக்கும் சாத்தியத்தையும் ஏற்படுத்துகிறது. வருமானப் பரிமாற்றங்கள் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிப்பதும், அதே நேரத்தில் மின்சாரம், பாசன நீர் மற்றும் உரங்களின் விலைகள் அவற்றின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செலவுகளை சிறப்பாகப் பிரதிபலிக்க அனுமதிப்பதும் ஒரு திறமையான அணுகுமுறையாக இருக்கும். இத்தகைய சீர்திருத்தங்கள், பற்றாக்குறையான வளங்களை மிகவும் விவேகத்துடன் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும், நிலத்தடி நீரின் நிலைத்தன்மையை மேம்படுத்தும். மேலும், அதிகபட்ச நிகர ஆற்றல் ஆதாயங்களையும் குறைந்த வாழ்நாள் உமிழ்வுகளையும் கொண்ட பகுதிகள் மற்றும் மூலப்பொருட்களை நோக்கி எத்தனால் உற்பத்தியை இயல்பாக மாற்றும். அதே நேரத்தில், நிலம் மற்றும் நீர் மீதான அழுத்தத்தைக் குறைக்க, விவசாயக் கழிவுகள் மற்றும் பிற உணவு அல்லாத உயிரிப் பொருட்களிலிருந்து பெறப்படும் இரண்டாம் தலைமுறை எத்தனாலில் முதலீட்டை விரைவுபடுத்த வேண்டும்.


இந்தியாவின் எத்தனால் திட்டம் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இருப்பினும், அதன் நீண்டகால வெற்றியானது, சுற்றுச்சூழல் நோக்கங்களை சிறந்த பொருளாதாரத்துடன் இணைப்பதைப் பொறுத்தே அமையும். இலக்குகளை ஒன்றிணைப்பது ஒரு வழிகாட்டுதலை வழங்கலாம். ஆனால், அவை தங்களுக்குள் ஒரு முடிவாக மாறிவிடக்கூடாது. ஒரு நெகிழ்வான உயிரி எரிபொருள் உத்தியானது, வெளிப்படையான வாழ்க்கை சுழற்சி கார்பன் கணக்கீடு, நீர் பயன்பாட்டின் கடுமையான மதிப்பீடு, தொழில்நுட்ப சார்பற்ற ஊக்கத்தொகைகள் மற்றும் இயற்கை வளங்களின் உண்மையான மதிப்பை பிரதிபலிக்கும் சந்தை சார்ந்த குறியீடுகள் ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும். அப்போதுதான் எத்தனால், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு ஒரு மாற்றாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தின் உண்மையான நீடித்த அங்கமாக மாற முடியும்.


கட்டுரையாளர் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஓய்வு பெற்றார்.


Original articles: India’s ethanol policy must count water, sustainability costs. -Ashok Khemka

Share: