இந்தியாவின் எத்தனால் கொள்கையானது, நீர் மற்றும் நிலைத்தன்மைக்கான விலைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். -அசோக் கெம்கா

 கலப்பு இலக்குகள் (Blending targets) வழிகாட்டுதலை வழங்கலாம். ஆனால், அவையே தனி இலக்குகளாக ஆகிவிடக்கூடாது.


இந்தியாவின் E20 பெட்ரோல் அறிமுகம், உலகின் மிகவும் லட்சியமிக்க உயிரி எரிபொருள் முயற்சிகளில் ஒன்றாகும். எத்தனால் கலப்பானது 2013-14ல் சுமார் 1.5 சதவீதத்திலிருந்து 2025-ல் கிட்டத்தட்ட 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் வருடாந்திர நுகர்வு 700 கோடி லிட்டரை எட்டியுள்ளது. இந்தத் திட்டம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, கிராமப்புற வருமானத்தை உருவாக்கி, நாட்டின் எரிசக்தித் தொகுப்பைப் பன்முகப்படுத்தியுள்ளது. இவை முக்கியமான சாதனைகள் ஆகும். இருப்பினும், இந்தியா E10-லிருந்து E20-க்கு மாறும் நிலையில், இதன் கொள்கையானது வெறும் கலப்பு இலக்குகளை மட்டும் சார்ந்து இல்லாமல், அறிவியல் சான்றுகள் மற்றும் சிறந்த பொதுப் பொருளாதாரத்தால் அதிகளவில் வழிநடத்தப்பட வேண்டும்.


எல்லா எத்தனால்களும் ஒரே மாதிரியான நீடித்த நிலைத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியா தற்போது, சி-ஹெவி வெல்லப்பாகு (C-heavy molasses), பி-ஹெவி வெல்லப்பாகு (B-heavy molasses), கரும்புச்சாறு, மக்காச்சோளம், சேதமடைந்த உணவு தானியங்கள் மற்றும் உபரி அரிசி ஆகியவற்றிலிருந்து எத்தனாலை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு வழிமுறையும் வெவ்வேறு சுற்றுச்சூழல் தடத்தைக் கொண்டுள்ளது. முதலீடு செய்யப்பட்ட ஆற்றலுக்கான ஆற்றல் வருவாய் (Energy Return on Energy Invested (EROEI)) என்பது நிலைத்தன்மையை அளவிடுவதற்கான ஒரு பயனுள்ள அளவீடு ஆகும். இது, சாகுபடி, உர உற்பத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து மற்றும் காய்ச்சி வடிகட்டுதல் ஆகியவற்றில் நுகரப்படும் புதைபடிவ ஆற்றலுடன், உற்பத்தி செய்யப்படும் பயன்படுத்தக்கூடிய ஆற்றலை முதலீடு செய்யப்பட்ட ஆற்றலுக்கான ஆற்றல் வருவாய் (EROEI) ஒப்பிடுகிறது. கரும்புச் சக்கையை எரிபொருளாகக் கொண்டு வடிக்கும் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் திறமையான கரும்பு எத்தனால், பொதுவாக சுமார் 2–4 என்ற முதலீடு செய்யப்பட்ட ஆற்றலுக்கான ஆற்றல் வருவாய் (EROEI) மதிப்பை அடைகிறது. அதேசமயம், அதிக புதைபடிவ ஆற்றல் உள்ளீடுகள் காரணமாக, தானிய அடிப்படையிலான எத்தனால் பொதுவாக 1.2 முதல் 2 வரை இருக்கும். எனவே, எத்தனால் ஒரு நேர்மறையான நிகர ஆற்றல் ஆதாயத்தை வழங்குகிறது. ஆனால் அதன் அளவு மூலப்பொருள், வேளாண்முறைகள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்துள்ளது.


இரண்டாவது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் ஆற்றல் அடர்த்தி (energy density) ஆகும். பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு சுமார் 32 மெகாஜூல் (MJ) ஆற்றலும், எத்தனாலில் ஒரு லிட்டருக்கு சுமார் 21 MJ ஆற்றலும் உள்ளது. எனவே, E20 எரிபொருளில் தூய பெட்ரோலை விட சுமார் 6–7 சதவீதம் குறைவான ஆற்றலே உள்ளது. இது, சீராக வாகனம் ஓட்டும் தன்மையின் அடிப்படையில், எரிபொருள் சிக்கனத்தில் (mileage) சிறியளவிலான ஆற்றல் குறைவு ஏற்படலாம். இருப்பினும், எத்தனால் மிக அதிக ஆக்டேன் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது, அதிக எத்தனால் கலவைகளுக்காக பிரத்யேகமாக அளவீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் அதிகத் திறமையான எரிதலை அடையவும், இந்தக் குறைபாட்டை ஓரளவு ஈடுசெய்யவும் அனுமதிக்கிறது. ஒட்டுமொத்த விளைவு, எரிபொருளின் பண்புகளை மட்டும் சார்ந்து இல்லாமல், இயந்திரத்தின் வடிவமைப்பையே சார்ந்துள்ளது.


வாகனப் பொருத்தம் (compatibility) என்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும். எத்தனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி, குறிப்பிட்ட சில உலோகங்களை அரிக்கும் (corrode) தன்மை கொண்டது. அதே நேரத்தில், பழைய ரப்பர் சீல்கள் (seals) மற்றும் நெகிழிப் பாகங்களையும் சேதப்படுத்தக்கூடும். இச்சவால்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 2023 முதல் தயாரிக்கப்படும் வாகனங்கள் E20 எரிபொருளுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. புதிய என்ஜின்கள் மேம்படுத்தப்பட்ட பொருட்களையும், திருத்தப்பட்ட என்ஜின் அளவுத்திருத்தத்தையும் கொண்டுள்ளன. ஆனால், மில்லியன் கணக்கான பழைய இருசக்கர வாகனங்கள், பயணிகள் கார்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் இந்த வகைக்குள் அடங்கவில்லை. எனவே, இந்த மாற்றத்திற்கு வெளிப்படையான நுகர்வோர் தகவல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் குறைந்த கலப்பு எரிபொருட்கள் தொடர்ந்து கிடைப்பது அவசியம். நுகர்வோர் தங்கள் வாகனங்களுக்குப் பொருத்தமான எரிபொருட்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பல்வேறு எரிபொருட்களின் விலைகள் அவற்றின் உண்மையான செலவுகளைத் தெளிவாகப் பிரதிபலிக்க வேண்டும்


கரும்பு வளரும்போது வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சுவதால், எத்தனால் பெரும்பாலும் குறைந்த கார்பன் எரிபொருளாக விவரிக்கப்படுகிறது. இருப்பினும், பயிர் சாகுபடி, உர உற்பத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து ஏற்படும் உமிழ்வுகளைக் கணக்கில் கொண்டு, காலநிலை சார்ந்த நன்மைகளை அதன் முழு வாழ்க்கைச் சுழற்சி (life-cycle) அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். திறமையாக உற்பத்தி செய்யப்படும் கரும்பு எத்தனால், பெட்ரோலுடன் ஒப்பிடும்போது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை சுமார் 50-70 சதவீதம் குறைக்க முடியும், குறிப்பாக கரும்புச் சக்கை செயல்முறை ஆற்றலை வழங்கும் இடங்களில் இது சாத்தியமாகும். தானிய அடிப்படையிலான எத்தனால் பொதுவாக சுமார் 20-50 சதவீதம் என்ற குறைந்த அளவிலான குறைப்புகளையே வழங்குகிறது. உற்பத்தியானது டீசல் மூலம் இயங்கும் நீர்ப்பாசனம், புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான காய்ச்சி வடித்தல் அல்லது அதிகப்படியான நைட்ரஜன் உரப் பயன்பாடு ஆகியவற்றைச் சார்ந்திருக்கும்போது, இந்த நன்மைகள் கணிசமாகக் குறைகின்றன. எனவே, பல உற்பத்தி முறைகளின்கீழ் எத்தனால் பெட்ரோலைவிடத் தூய்மையானது. ஆனால், அதனைத் தானாகவே கார்பன் சமநிலையானது (carbon neutral) என்று கருத முடியாது.


இருப்பினும், இதில் மிக முக்கியமான சவால் நீர் பயன்பாடு ஆகும். கரும்பு அதிக நீர் தேவைப்படும் ஒரு பயிர். வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices (CACP)) மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) ஆகியவற்றின் மதிப்பீடுகளின்படி, கரும்பு அதன் வளர்ச்சிப் பருவத்தில் பொதுவாக 1,500–2,500 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. உள்ளூர் காலநிலை மற்றும் நீர்ப்பாசன முறைகளைப் பொறுத்து, ஒரு லிட்டர் கரும்பு எத்தனால் உற்பத்தி செய்வதற்குச் சுமார் 2,000–3,500 லிட்டர் நீர் தேவைப்படலாம் என நீர் பயன்பாட்டு ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய கரும்பு உற்பத்திப் பகுதிகளில் பல ஏற்கனவே கடுமையான நிலத்தடி நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. நீர் மற்றும் பிற வளங்களைச் சரியாகக் கணக்கிடாமல் எத்தனால் உற்பத்தியை விரிவுபடுத்துவது, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, பெருகிவரும் பற்றாக்குறையான நன்னீர் வளங்களைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


தற்போது, அதிக மானியத்துடன் கூடிய மின்சாரம் நிலத்தடி நீரை அதிகமாக பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில், மானியம் வழங்கப்படும் யூரியா, நைட்ரஜன் உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த மானியங்கள், கரும்பு சாகுபடியின் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பிரதிபலிக்காமல், அதன் வெளிப்படையான செலவைக் குறைக்கின்றன. இதன் விளைவு, வளங்களை திறனற்ற முறையில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பொது மானியங்கள் அதன் உண்மையான சமூகச் செலவு அதிகமாக உள்ள பகுதிகளில் எத்தனால் உற்பத்தியை தற்செயலாக ஊக்குவிக்கும் சாத்தியத்தையும் ஏற்படுத்துகிறது. வருமானப் பரிமாற்றங்கள் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிப்பதும், அதே நேரத்தில் மின்சாரம், பாசன நீர் மற்றும் உரங்களின் விலைகள் அவற்றின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செலவுகளை சிறப்பாகப் பிரதிபலிக்க அனுமதிப்பதும் ஒரு திறமையான அணுகுமுறையாக இருக்கும். இத்தகைய சீர்திருத்தங்கள், பற்றாக்குறையான வளங்களை மிகவும் விவேகத்துடன் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும், நிலத்தடி நீரின் நிலைத்தன்மையை மேம்படுத்தும். மேலும், அதிகபட்ச நிகர ஆற்றல் ஆதாயங்களையும் குறைந்த வாழ்நாள் உமிழ்வுகளையும் கொண்ட பகுதிகள் மற்றும் மூலப்பொருட்களை நோக்கி எத்தனால் உற்பத்தியை இயல்பாக மாற்றும். அதே நேரத்தில், நிலம் மற்றும் நீர் மீதான அழுத்தத்தைக் குறைக்க, விவசாயக் கழிவுகள் மற்றும் பிற உணவு அல்லாத உயிரிப் பொருட்களிலிருந்து பெறப்படும் இரண்டாம் தலைமுறை எத்தனாலில் முதலீட்டை விரைவுபடுத்த வேண்டும்.


இந்தியாவின் எத்தனால் திட்டம் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இருப்பினும், அதன் நீண்டகால வெற்றியானது, சுற்றுச்சூழல் நோக்கங்களை சிறந்த பொருளாதாரத்துடன் இணைப்பதைப் பொறுத்தே அமையும். இலக்குகளை ஒன்றிணைப்பது ஒரு வழிகாட்டுதலை வழங்கலாம். ஆனால், அவை தங்களுக்குள் ஒரு முடிவாக மாறிவிடக்கூடாது. ஒரு நெகிழ்வான உயிரி எரிபொருள் உத்தியானது, வெளிப்படையான வாழ்க்கை சுழற்சி கார்பன் கணக்கீடு, நீர் பயன்பாட்டின் கடுமையான மதிப்பீடு, தொழில்நுட்ப சார்பற்ற ஊக்கத்தொகைகள் மற்றும் இயற்கை வளங்களின் உண்மையான மதிப்பை பிரதிபலிக்கும் சந்தை சார்ந்த குறியீடுகள் ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும். அப்போதுதான் எத்தனால், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு ஒரு மாற்றாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தின் உண்மையான நீடித்த அங்கமாக மாற முடியும்.


கட்டுரையாளர் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஓய்வு பெற்றார்.


Original articles: India’s ethanol policy must count water, sustainability costs. -Ashok Khemka

Share: