மேய்ச்சல் சமூகமுறை : நிரந்தரக் குடியேற்றம் மட்டுமே வளர்ச்சிக்கு ஒரே வழியா? -அப்துல் கபீர்

 மேய்ச்சல் தொழில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் பொதுமக்களின் மேய்ச்சல் தொழில்களின் நிர்வாகத்திற்கும் முக்கியமானதாக இருந்தாலும், பொதுக்கொள்கைகளும் நிறுவனங்களும் பெரும்பாலும் நிரந்தரக் குடியிருப்பு மற்றும் நிலையான நிர்வாக அதிகார வரம்புகளைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளன. பருவகால இடப்பெயர்வுகளுக்கு ஏற்ப இந்த அமைப்பை எவ்வாறு  தகவமைக்கக்கூடியதாக மாற்றுவது? ‘இடம்பெயரக்கூடிய ஆட்சி’ (portable governance) எது போன்ற கருத்தை வழங்குகிறது?


மேய்ச்சல் தொழில் இந்தியாவின் பால் பொருளாதாரம் (dairy economy), கம்பளி மற்றும் நார் உற்பத்தி, உள்நாட்டு கால்நடை இனங்கள், மானாவாரி வேளாண்மை மற்றும் பொது மேய்ச்சல் நிலங்களின் நிர்வாகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இருந்த போதிலும், இந்த பாரம்பரிய வாழ்க்கை முறை தானாகவே நீடித்திருக்கக்கூடியது அல்ல. இது சூழலியல், பொருளாதாரம் மற்றும் அமைப்புரீதியான சிக்கல்களைச் சமாளிக்க அரசாங்கத்தைச் சார்ந்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17-ஆம் தேதி கடைபிடிக்கப்படும் 'பாலைவனமாதல் மற்றும் வறட்சியை (World Day to Combat Desertification and Drought) எதிர்த்துப் போராடுவதற்கான நாள்' என்பதை முன்னிட்டு புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கால்நடை தொடர்பான வாழ்வாதாரங்கள், பல்லுயிர் வளம், நீர் மேலாண்மை, கார்பன் சேமிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைத்தாங்கும் திறன் ஆகியவற்றில் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகளின் முக்கியத்துவத்தை அரசு எடுத்துரைத்தது.


1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (United Nations General Assembly (UNGA)) உருவாக்கப்பட்ட இந்த உலக தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் மேய்ச்சல் நிலங்கள்: அங்கீகரியுங்கள். மதியுங்கள். மீட்டெடுங்கள் (Rangelands: Recognize. Respect. Restore) என்பதாகும். இது மேய்ச்சல் நிலங்களை உலகளாவிய கவனத்தின் மையத்திற்குக் கொண்டு வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2026-ஆம் ஆண்டை ‘சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் கால்நடை வளர்ப்பாளர்களின் ஆண்டாக’ (International Year of Rangelands and Pastoralists  (IYRP)) அறிவித்துள்ளது.


சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் கால்நடை வளர்ப்பாளர்களின் ஆண்டாக, பூமியின் மொத்த ஏறக்குறைய பாதி நிலப்பரப்பை கொண்ட மேய்ச்சல் நிலப்பரப்புகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைச் சார்ந்து தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டுள்ள சமூகங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இது பொது நிர்வாகத்திற்கு ஒரு நடைமுறை சார்ந்த கேள்வியையும் எழுப்புகிறது: நிலையான முகவரிகள் மற்றும் பிராந்திய அதிகார வரம்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி, சுகாதாரம், சமூகப்பாதுகாப்பு மற்றும் கால்நடைப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகள், பருவகால இடப்பெயர்ச்சியை நம்பி வாழும்  மக்களுக்குப் போதுமான அளவு சேவையை வழங்க முடியுமா?


மேய்ச்சல் நிலங்களின் (rangelands) முக்கியத்துவம்


இந்தியாவில், இமயமலைப்பகுதிகளில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகளின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. அந்தப்பகுதியில் குளிர்காலப் பனி உருகும்போது, கால்நடைகளை வளர்க்கும் குடும்பங்கள் தங்கள் கால்நடைகளுடன் உயரமான மேய்ச்சல் நிலங்களை நோக்கி நகரத் தொடங்குகின்றன. குளிர்காலம் மலைப்பாதைகளை மூடுவதற்கு முன்பு அவை திரும்பி வருகின்றன. இந்தியாவின் பாலைவனங்கள், வனப்பகுதிகள், பீடபூமிகள் மற்றும் பாதியளவு வறண்ட பகுதிகள் முழுவதும் இதேபோன்ற பருவகால இடப்பெயர்வுகள் நடைபெறுகின்றன.


மேய்ச்சல் நிலங்கள் என்பது இயற்கையான அல்லது குறைந்த அளவிலான இயற்கையான தாவரங்கள் வளர்ந்து, அவை மேய்ந்து மற்றும் இலைகளை உண்ணும் கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படும் பகுதிகளைக்குறிக்கிறது. இவை திறந்த புல்வெளிகளுக்கு மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. புல்வெளிகள், புதர்நிலங்கள், சவானா புல்வெளிகள், அதிக மரங்கள் (Steppes) இல்லாமல் உள்ள புல்வெளிகள், பாலைவனப் பகுதிகள், மலைப் பகுதிகளில் உள்ள  மேய்ச்சல் நிலங்கள், திறந்த வனப்பகுதிகள் மற்றும் சில சதுப்பு நிலங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.


ஒரு மேய்ச்சல் நிலம் என்பது புல்வெளியைவிட அகலமாக இருக்கும். புல்வெளியில் முக்கியமாக புற்களும் பிற மூலிகைச் செடிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது நிர்வகிக்கப்படும் மேய்ச்சல் நிலத்திலிருந்தும் வேறுபட்டது. அங்கு தீவனம் கால்நடைகளுக்காகப் பிரத்தியேகமாகப் பயிரிடப்படலாம், மேம்படுத்தப்படலாம் அல்லது பராமரிக்கப்படலாம்.


மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளையும், காட்டில் வாழும் தாவர உண்ணி விலங்குகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன. அவை மண் வளத்தைப் பாதுகாக்கின்றன. நீர்ச் சுழற்சியைப் பாதிக்கின்றன, கார்பனைச் சேமிக்கின்றன மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடத்தை வழங்குகின்றன. மேலும், தீவிர வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாத பகுதிகளில் காணப்படும் இயற்கைத் தாவரங்களை பால், இறைச்சி, கம்பளி, நார், இயற்கை உரம் மற்றும் வருமானம் போன்ற வளங்களாக மாற்றுகின்றன.


இந்தியாவில், மேய்ச்சல் நிலங்களில் இமயமலையின் அல்பைன் மேய்ச்சல் நிலங்கள், லடாக்கின் குளிர்-வறண்ட மேய்ச்சல் பகுதிகள், மேற்கு இந்தியாவின் புல்வெளிகள் மற்றும் பொதுநிலங்கள், பாலைவனத்தாவரங்கள், வனப்பகுதிகளை ஒட்டி இருக்கும் மேய்ச்சல் நிலப்பரப்புகள் மற்றும் தக்காண பீடபூமியில் உள்ள  மேய்ச்சல் பகுதிகளும் அடங்கும்.


இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகள் 228 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளன. இந்திய பாலைவனமாதல் மற்றும் நிலச் சீரழிவு அட்லஸ் (India Desertification and Land Degradation Atlas) மதிப்பீட்டின்படி, 97.85 மில்லியன் ஹெக்டேர்,  நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 29.77 சதவீதம், நில பாதிப்பு மற்றும் பாலைவனமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வறண்ட நிலமும் மேய்ச்சல் நிலமாக இருப்பதில்லை. எல்லா மேய்ச்சல் நிலங்களும் சீரழிந்தும் இருப்பதில்லை. ஆனால், நில மேலாண்மைச் சவாலின் அளவை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலப்பரப்புகள் கால்நடை வளர்ப்பு முறைகளுக்கு முக்கியமானவையாகும்.


இந்தியாவில் உள்ள மேய்ச்சல் முறைகள் (Pastoral systems in India)


மேய்ச்சல் என்பது ஒரு வாழ்வாதார மற்றும் கால்நடை உற்பத்தி முறையாகும். இதில் விலங்குகள் இயற்கையான மேய்ச்சல் மற்றும் இலைகளை உண்ணும் வளங்களைச் சார்ந்துள்ளன. உள்ளூர் சூழலியலைப் பொறுத்து, மேய்ச்சல் பணிகளில் ஈடுபடும் நபர்கள் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், மாடுகள், எருமைகள், ஒட்டகங்கள், யாக், குதிரைகள் அல்லது பிற கால்நடைகளை வளர்க்கலாம்.


மேய்ச்சல் என்பது ஒரு குறிப்பிட்ட பழங்குடி அல்லது சமூகப் பிரிவுக்குள் மட்டும் இருந்து விடுவதில்லை. அனைத்து மேய்ச்சல் சமூகங்களும் பட்டியல் பழங்குடியினர் அல்ல, மேலும் அனைத்து பட்டியல் பழங்குடியினரும் மேய்ச்சல் முறையைப் பின்பற்றுவதில்லை. இந்தியாவின் சூழலியல் பன்முகத்தன்மை மேய்ச்சல் முறையின் பல்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளது:


குடியேறிய மேய்ச்சல் சமூகத்தினர்: இவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் வசித்து, அருகிலுள்ள மேய்ச்சல் பகுதிகளைப் பயன்படுத்துகின்றனர். இது, பாரம்பரியமாக இடம்பெயரும் சமூகங்களைச் சேர்ந்த, பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ குடியேறிய குடும்பங்களிடமும் காணப்படுகிறது.


நாடோடி மேய்ச்சல் சமூகத்தினர்: இவர்கள் நீர், தீவனம் மற்றும் தேவையான வானிலை கிடைப்பதைப்பொறுத்து தங்கள் கால்நடைகளுடன் இடம்பெயர்கின்றனர். ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ராய்க்காக்கள் மற்றும் ரபாரிகள் இது போன்ற இடம்பெயரும் மேய்ச்சல் முறைகளுடன் தொடர்புடைய சமூகங்களில் இடம் பெற்றிருப்பர்கள்.


பருவகால இடம்பெயரும் மேய்ச்சல் சமூகத்தினர் (Transhumant Pastoralists): இவர்கள் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள மேய்ச்சல் பகுதிகளுக்கு இடையே வழக்கமான பருவகால இடம்பெயர்வை மேற்கொள்கின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் குஜ்ஜர்-பக்கர்வால் சமூகத்தினர், இமாச்சலப் பிரதேசத்தின் கத்திகள், லடாக்கின் சாங்பாக்கள் மற்றும் உத்தரகாண்டின் வான் குஜ்ஜர்கள் ஆகியோர் இதற்கான முக்கிய  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.


வேளாண்-கால்நடை வளர்ப்போர்: இவர்கள் கால்நடை வளர்ப்புடன் பயிர் சாகுபடியையும் இணைத்து மேற்கொள்கின்றனர். மகாராஷ்டிராவில் பல தங்கர்  சமூக குடும்பங்களும், தக்காணப் பீடபூமியின் மற்ற மேய்ச்சல் கால்நடை வளர்ப்பு சமூகங்களும் இது போன்ற  கலப்பு வாழ்வாதார முறைகளை பின்பற்றுகின்றனர்.


இந்தப் பிரிவுகள் கண்டிப்பானவை அல்ல. மேய்ச்சல் பணிகளை ஒரு  குடும்பம் தனது இடம்பெயரும் பாதையைச் சுருக்கிக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களில் சிலரை ஓரிடத்தில் குடியேறச் செய்யலாம். நிலத்தில் பயிர் சாகுபடி செய்யலாம் அல்லது கூலி வேலைவாய்ப்புடன் மேய்ச்சல் வளர்ப்பையும் இணைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், தனது கால்நடைகளில் ஒரு பகுதியைத் தொடர்ந்து இடம்பெயரச் செய்யவும் முடியும்.


ஒரு மேய்ச்சல் முறையானது, மேய்ச்சல் நில வளங்களின் தகவமைப்பு மேலாண்மை நடைமுறைகளைச் சார்ந்து இருப்பதால், குறைந்து வரும் பாதைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள், காலநிலை மாற்றத்தால், விலங்குகளின் ஆரோக்கியம், சந்தை அபாயங்கள் மற்றும் தரவுகளில் உள்ள இடைவெளிகள் காரணமாக பல்வேறு அழுத்தங்களை  எதிர்கொள்கிறது.


குறைந்து பாதைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள்: மேய்ச்சல் பாதைகள், வேளாண்மை, காடுகள், வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுலா, சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் நிலப்பரப்புகள் வழியாகச் செல்கின்றன. இறுதி மேய்ச்சல் நிலம் பயன்பாட்டிற்குத் தயாராக இருந்தாலும், ஓய்வெடுக்கும் இடங்கள், நீர்நிலைகள் அல்லது பயணப் பாதைகள்  இல்லாததான் காரணமாக ஒரு வழித்தடம் கடினமானதாக மாறக்கூடும்.


காலநிலை நிச்சயமற்ற தன்மை: மேய்ச்சல் கால அட்டவணைகள் பனிப்பொழிவு, மழைப்பொழிவு, தாவர வளர்ச்சி மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளன. பருவம் தவறிய பனிப்பொழிவு, நீண்ட வறண்ட காலங்கள், திடீர் வெள்ளம் மற்றும் வெப்ப அழுத்தம் ஆகியவை இடம்பெயரும் தேதியையும், பாதைகளின் நிலையையும், ஒரு மேய்ச்சல் நிலம் பயனுள்ளதாக இருக்கும் கால அளவையும் மாற்றக்கூடும்.


விலங்களின் ஆரோக்கியம் மற்றும் சந்தை அபாயங்கள்: கால்நடைகள், சரியான நேரத்தில் கால்நடை மருத்துவ ஆதரவு குறைவாகக்கிடைக்கும் பகுதிகள் வழியாக நீண்ட தூரம் பயணிக்கக்கூடும். நோய், காயம், ஒட்டுண்ணித்தாக்குதல் மற்றும் இனப்பெருக்கப்பிரச்சனைகள் போன்றவை குடும்பங்களில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைகள், பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கான அணுகல் குறைவாக இருப்பது, பால், கம்பளி, இறைச்சி மற்றும் நார் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் மதிப்பைக் குறைக்கக்கூடும்.


தரவுகளில் உள்ள இடைவெளிகள்:  நிரந்தர வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் மூலம் மேய்ச்சல் சமூகத்தினரின் தரவுகளைப் பதிவு செய்வது கடினமான பணியாகும்.  இதன் காரணமாக அவர்களின் கால்நடை இருப்பு நிலை, பயண வழிகள், பருவகால இடங்கள் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவை குறைவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். சிறந்த தரவுகள் தேவைப்படுகின்றன. ஆனால், வானிலை, மேய்ச்சல் நிலங்களின் நிலை மற்றும் உள்ளூர்ச்சூழல்களுக்கு ஏற்ற பயண வழி மாற்றங்கள், வரைபடமாக்கல் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

மேய்ச்சல் தொழிலில் இடம்பெயர்வு (Mobility) ஏன் முக்கியமானது?


எனவே, மேய்ச்சல் தொழில் வாழ்வாதாரத்தில் இடம்பெயர்வு முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், நீராதாரங்கள், தாவரங்களின் வளர்ச்சி, விலங்குகளின் செயல்பாடு, இனப்பெருக்கச் சுழற்சிகள், வானிலை மற்றும் பாதுகாப்பான பாதைகள் குறித்ததான அடிப்படையில், ஒவ்வொரு பருவத்திலும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட வெவ்வேறு நிலப்பரப்புகளை மேய்ச்சல் தொழிலிளர்கள் பயன்படுத்த இது உதவுகிறது. மேலும், இடம்பெயர்வு மூலம் மேய்ச்சலின் அழுத்தத்தை  அனைத்து காலத்திற்கும் இடத்திற்கும்  ஏற்ற வகையில்  பரவலாகப் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் காரணமாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மேய்ச்சல் பகுதிகள் மீண்டும் இயற்கையாக மீளுருவாக்கம் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.


இருப்பினும், மேய்ச்சல் தொழிலில் முறையை இயல்பாகவே நிலையானது  என்று கருதக்கூடாது. மேய்ச்சலின் தாக்கம், மேய்ச்சல் நடைபெறும் காலம், அதன் தீவிரம், கால்நடைகளின் வகை மற்றும் எண்ணிக்கை, அந்த நிலப்பரப்பின் சுற்றுச்சூழல் தாங்கும் திறன்  போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். இடம்பெயர்வு பாதைகள் தடுக்கப்படும்போது அல்லது மேய்ச்சல் பகுதிகள் சுருங்கும்போது, கால்நடைகள் சிறிய நிலப்பரப்புகளில் அதிகமாகக் குவிக்கப்படலாம். இதன் காரணமாக, தாவரங்கள் மற்றும் நீர்வளங்களின் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம்.


எனவே, அனைத்து மேய்ச்சல்களும் நன்மை அளிப்பாவை அல்லது தீங்கு விளைவிப்பவை என்ற பொதுவான கருத்தின் அடிப்படையில் கொள்கையை உருவாக்க வேண்டிய  தேவை இல்லை. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையிலான மேய்ச்சல் மேலாண்மையை (Evidence-based Grazing Management) உருவாக்குவதே கொள்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு ஆதரவான சட்ட மற்றும் நிறுவனரீதியான கட்டமைப்பு  முக்கியமானதாகிறது.


வன உரிமைகள் சட்டம் என்ன சொல்கிறது?


2006-ஆம் ஆண்டு பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், மேய்ச்சல் சமூகங்களுக்கு நேரடியாக தொடர்புடையதாகும். இந்தச் சட்டத்தின் பிரிவு 3(1)(d), குடியிருப்பு அடிப்படையிலான மற்றும் பருவகால இடம்பெயரும் மேய்ச்சல் முறைகள் உட்பட மேய்ச்சல் தொடர்பான சமூக உரிமைகளையும், நாடோடி அல்லது மேய்ச்சல்  தொழில் செய்யும் சமூகங்களின் பாரம்பரிய பருவகால வள அணுகல் உரிமைகளையும் அங்கீகரிக்கிறது.


இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஒரு மேய்ச்சல் கால்நடை வளர்ப்பு முறையானது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை மட்டும் சார்ந்திருக்காமல், மேய்ச்சல் நிலங்கள், காடுகள், நீராதாரங்கள், ஓய்வெடுக்கும் இடங்கள் மற்றும் இடம்பெயர்வுப்பாதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றோடொன்று இணைந்த நிலப்பரப்பைச் சார்ந்திருக்கலாம். இந்தச்சட்டம் உரிமைகளைப் பெற்றவர்களுக்கும் கிராம சபைகளுக்கும், வனவிலங்குகள், வனப் பகுதிகள், பல்லுயிர், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல்ரீதியாக உணர்திறன் மிக்க பகுதிகளைப்பாதுகாக்கும் பொறுப்புகளையும் வழங்குகிறது. எனவே, இது வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்புப் பணிகளுடன் இணைக்கிறது.


இருப்பினும், நடைமுறையில் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு கவனமான வரைபடமிடுதல், சரிபார்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. பருவகால இடம்பெயர்வு பாதைகள் பல கிராமங்கள், வனப்பிரிவுகள் அல்லது மாவட்டங்களைக்கடந்து செல்லக்கூடும். ஆனால், நிர்வாக நடைமுறைகள்  நிலையான உள்ளூர் நிர்வாக எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.


நலத்திட்டங்களை வழங்குவதில் உள்ள நிலையான முகவரி தொடர்பான சிக்கல்


இந்தியா கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து திட்டங்கள், உணவுப்பாதுகாப்பு, கால்நடை மருத்துவப்பராமரிப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றுக்கான அணுகலை விரிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை பிராந்திய அதிகார வரம்புகளின் வழியாகவே செயல்படுகின்றன. ஒரு நபர் ஒரு கிராமம், பள்ளி, சுகாதார மையம், நியாய விலைக்கடை, பஞ்சாயத்து அல்லது மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.


ஆனால், ஒரு மேய்ச்சல் தொழில் செய்துவரும் குடும்பம் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் தங்கக்கூடும். மேலும், பருவகால இலக்கை அடைவதற்கு முன்பு பல மாவட்டங்களைக் கடந்து செல்லக்கூடும். இங்கு பிரச்சினை எப்போதும் நலத்திட்டங்கள் இல்லாதது அல்ல, பயனாளிகள் அந்தத் திட்டங்கள் வழங்கப்படும் நிர்வாக எல்லைக்கு வெளியே இடம்பெயரும்போது, சேவைகள் இடையில் துண்டிக்கப்படுவதே முக்கியப் பிரச்சினையாகும்.


கல்வி: குடும்பத்தின் குளிர்காலக் குடியிருப்புக்கு அருகிலுள்ள பள்ளியில் ஒரு குழந்தை சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், கல்வியாண்டு முடிவதற்கு முன்பே அந்தக் குடும்பம் இடம்பெயரக்கூடும். இதனால் குழந்தை பாடங்கள், மதிப்பீடுகள் மற்றும் வருகை ஆகியவற்றில் பின்தங்கக்கூடும். விடுதிகள் மற்றும் தங்குமிடப் பள்ளிகள் சில குடும்பங்களுக்கு உதவக்கூடும். ஆனால்,  இது மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியாது. பருவகாலக்கல்வி மையங்கள், இடம்பெயரும் ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தின் ஆரம்பக் குடியிருப்பு பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை கல்விரீதியான இடையூறுகளைக் குறைக்க உதவும்.


சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து: பருவகால இடம்பெயர்வு காரணமாக தடுப்பூசி, கர்ப்பகால மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, ஊட்டச்சத்து சேவைகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை ஆகியவை தடைபடும். எனவே, சுகாதாரத் திட்டமிடலை இடம்பெயர்வுக்கு முன்பே தொடங்க வேண்டும். தொடர்ந்து சிகிச்சை அல்லது கண்காணிப்பு தேவைப்படும் நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணலாம். அவர்களது மருத்துவப் பதிவுகளை வெவ்வேறு இடங்களிலும் அணுகக்கூடியதாக மாற்றலாம். மேலும், பருவகால இலக்கு கொண்ட பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கலாம்.


கால்நடை ஆரோக்கியம்: கால்நடை வளர்க்கும் குடும்பத்தைப் பொறுத்தவரை, கால்நடை ஆரோக்கியம் என்பது குடும்ப நலனின் ஒரு பகுதியாகும். கால்நடைகள் உணவு, வருமானம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பின் ஆதாரங்களாக உள்ளன. தடுப்பூசி, குடற்புழு நீக்கம், உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் இனப்பெருக்கப் பராமரிப்பு ஆகியவை கால்நடைகள் இடம்பெயரும் கால அட்டவணையைச் சுற்றித் திட்டமிடப்பட வேண்டும். கால்நடைகள் புறப்படும், இடைவழி மற்றும் செல்லும் மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவ நிறுவனங்களும் நோய் கண்காணிப்புத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.




இது போன்ற நடவடிக்கைகள் 'இடம்பெயரும் மக்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும் நிர்வாகச் சேவை முறை' (Portable Governance) என்ற கருத்தின்மீது கவனத்தை ஈர்க்கும். ஆனால், இதன் சரியான பொருள் என்ன?


சேவைகளின் தொடர்ச்சிக்கான இடம்பெயரும் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் நிர்வாகச் சேவை முறை' (Portable Governance)


‘இடம்பெயரும் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் நிர்வாகச் சேவை முறை’ என்பது மேய்ச்சல்  தொழில் செய்து வரும் குடும்பங்களுடன் அரசு அலுவலகங்களும் இடம்பெயர வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. மாறாக, நிர்வாகப்பதிவுகள், உரிமைகள் மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவை ஒரு மாவட்டத்தின் எல்லையில் முடிவடையாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் பொருளாகும்.


‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ (One Nation One Ration Card) திட்டத்தின் மூலம், பொது உரிமைகளுக்கான அணுகல் ஒரே ஒரு வசிப்பிடத்துடன் கட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதை நமது நாடு ஏற்கனவே நிரூபித்துள்ளது. இந்தத் திட்டம், தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் குடும்ப அட்டை முதலில் எங்கு வழங்கப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல், நாட்டில் உள்ள எந்தவொரு  நியாயவிலைக் கடையிலிருந்தும் உணவு தானிய உரிமைகளைப் பெற உதவுகிறது.

கல்வி, சுகாதாரம் மற்றும் கால்நடை ஆரோக்கியம் ஆகியவற்றில் இதே முறையை அப்படியே பயன்படுத்த முடியாது என்றாலும், அதன் அடிப்படைக் கருத்து: தற்காலிகமாக மக்கள் இடம்பெயர்வதால், அவர்களுக்கான நலத்திட்ட உரிமைகள் அல்லது அத்தியாவசிய அரசுச் சேவைகளைப்பெறுவதில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதாகும். சேவைகளின் தொடர்ச்சியை உறுதிசெய்ய குறைந்தபட்சம் பின்வரும் நான்கு பரந்த நடவடிக்கைகள் உதவக்கூடும்:


1. நிரந்தர வசிப்பிடத்தையும் எதிர்பார்க்கப்படும் பருவகால இருப்பிடங்களையும் வரைபடமிடுதல்.


2. இடம்பெயர்வுக்கு முன்பே சேவைகள் பற்றித் திட்டமிடுதல்.


3. பல்வேறு நிர்வாக எல்லைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்.

4. இடம்பெயரக்கூடிய நிர்வாகப் பதிவுகளை நடமாடும் சேவைகளுடன் இணைத்தல்.


இந்த நடவடிக்கைகள், பருவகால இடம்பெயர்வுக்கு ஏற்ப பொதுச்சேவைகளை மாற்றியமைக்க வேண்டியதன் முக்கியதுவத்தை உணர்த்துகின்றன.


அங்கீகாரத்திலிருந்து சேவைகளின் தொடர்ச்சி வரை


இதன் பின்னணியில், 2026-ஆம் ஆண்டு சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் சமூகங்களுக்கான, மேய்ச்சல்  தொழில் முறையை ஒரு விரிவான கண்ணோட்டத்தில் அணுகுவதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குகிறது. மேய்ச்சல் தொழில் செய்பவர்கள் கால்நடை உற்பத்தியாளர்கள், பொதுவான இயற்கை வளங்களைப்பயன்படுத்துபவர்கள் மற்றும் மதிப்புமிக்க சூழலியல் அறிவைக் கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில், அவர்கள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சமூகப்பாதுகாப்பு மற்றும் பொறுப்பான நிர்வாகச் சேவைகளைப் பெறுவதற்கான உரிமையுள்ள குடிமக்களும் ஆவர்.


பொதுக் கொள்கையானது, இடப்பெயர்ச்சியைப் பெருமைப்படுத்தவோ அல்லது நிரந்தரக் குடியேற்றமே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று கருதவோ கூடாது. சில குடும்பங்கள் ஒரு இடத்தில் குடியேறவோ அல்லது தங்கள் வாழ்வாதாரங்களைப் பன்முகப்படுத்தவோ விரும்பலாம். மற்றவர்கள், பருவகால இடப்பெயர்ச்சியைத் தொடரலாம். ஏனெனில், அது பொருளாதார, கலாச்சார, சூழலியல்ரீதியாகவும்  முக்கியமானதாக இருக்கிறது.


உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணி, இடம்பெயர்வுக்கு ஏற்றவாறு ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளை செயல்திறன் கொண்டதாக மாற்றுவதாகும். நிர்வாகப்பதிவுகள் மக்களுடன் பயணிக்க வேண்டும். மாவட்டங்கள் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசின் பொறுப்பு தெளிவாகத்தொடர வேண்டும். இடம்பெயரும் வாழ்வாதாரம் காரணமாக, நலத்திட்ட உரிமைகள் ஒரே இடத்தில் முடங்கிவிடக் கூடாது.


Original articles: Pastoralism: Is permanent settlement the only path to development? -Abdul Khabir

Share: