பொதுசுகாதாரத்தைச் சீர்திருத்த, நகர்ப்புற நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும். -ரஜிப் தாஸ்குப்தா, காமினி வாலியா

நகர்ப்புற பொது சுகாதார நெருக்கடிகளில், பெரும்பாலான மக்கள் மருத்துவமனைகளின் பற்றாக்குறை மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும் உண்மையான பிரச்சனை பொதுவாக கண்ணுக்குத் தெரியாத, ஆனால் விவாதிக்கக்கூடிய வகையில் அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை, அன்றாட நகர்ப்புற அமைப்புகளில் ஏற்படும் தோல்விகளே ஆகும்.


மத்திய அமைச்சரவை சமீபத்தில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை (Urban Challenge Fund(UCF)) தொடங்க ஒப்புதல் அளித்தது. இதற்கு மத்திய அரசு ரூ. 1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கும். மேலும், மொத்த செலவில் குறைந்தபட்சம் 50 சதவீதம் சந்தையிலிருந்து திரட்டப்படும். பொருளாதார வழித்தடங்கள், நகர்ப்புற போக்குவரத்து, காலநிலை மீள்திறன், பேரிடர் மேலாண்மை, மற்றும் நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் "சவால் அடிப்படையிலான கட்டமைப்பு" (challenge-based framework) மூலம் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதில் போட்டி அடிப்படையிலான திட்டத் தேர்வு, சந்தை நிதி மற்றும் தனியார் பங்கேற்பு ஆகியவற்றிற்கு நகர்ப்புற சவால் நிதி (UCF) அளிக்கும் முக்கியத்துவம், பங்கு மூலதனம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.


இந்தியாவின் நகரமயமாக்கலானது, மும்பை அல்லது டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் பெருமளவில் குடிபெயர்வதால் ஏற்படுவதில்லை, மாறாக அவற்றின் புறநகர்ப் பகுதிகளான குருகிராம், நொய்டா, நவி மும்பை மற்றும் பல சிறிய குடியிருப்புகளுக்கு மக்கள் குடிபெயர்வதால் ஏற்படுகிறது. குறிப்பாக, கிராமங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறை மையங்களாக மாற்றப்படுவதால் நிலப் பயன்பாடு (Land use) வேகமாக மாறிவருகிறது. அதேநேரத்தில் போக்குவரத்து, குடிநீர், வடிகால் மற்றும் திடக்கழிவு, திரவக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுதல் தொடர்பான சேவைகள் போதுமானதாகவோ அல்லது பகுதியளவாகவோ உள்ளன. வளர்ச்சியை நிர்வகிக்க நிறுவனங்கள் முழுமையாகத் தயாராக இல்லாமல், இடம்சார்ந்த விரிவாக்கம் செய்வது இந்தியாவின் நகரமயமாக்கலின் ஒரு முக்கிய அம்சமாகும். பிரிக்ஸ் (BRICS) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) நாடுகளில் 5 முதல் 8 சதவீதம் வரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. பெருந்திட்டம் (Master plans) என்பது செயல்படுத்தக்கூடிய வளர்ச்சி கட்டமைப்புகளாக இல்லாமல், பெரும்பாலும் அடையாளப்பூர்வமான செயல்களாகவே உள்ளன. குடிசைப் பகுதிகளும் (Slums), குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்புகளும் (low-income settlements) "செறிவூட்டப்பட்ட பின்தங்கிய நிலையின்" இடங்களாக மாறுகின்றன. மேலும், மறுவளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் கண்ணியம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பைக் காட்டிலும் பொறியியலுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.


இந்த பலவீனங்களின் காரணமாக, இந்தியாவின் நகரங்களும் மாநகரங்களும் ஒரேநேரத்தில் மூன்று பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. மோசமடைந்து வரும் பொது சுகாதாரம், அதிகரித்து வரும் காலநிலை பாதிப்பு மற்றும் வேகமாக அதிகரித்து வரும் இடம்பெயர்வு போன்றவை ஆகும். ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3.6 டிரில்லியன் ஒதுக்கீடு செய்ய நிதி ஆணையம் எடுத்த முடிவு, நகரங்கள் வெறும் திட்டங்களைச் செயல்படுத்தும் இடங்களாக மட்டும் இல்லாமல், நிர்வாகத்தின் முக்கிய அலகுகளாக அங்கீகரிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம், நிதியின் அளவைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக, பொது சுகாதாரம், காலநிலைத் தழுவல் அல்லது இடம்பெயர்வு மேலாண்மை ஆகிய துறைகளில் நகர்ப்புற நிதி எதைச் சாத்தியமாக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது என்பதில்தான் உள்ளது.


நகர்ப்புற பொது சுகாதார நெருக்கடிகள் பெரும்பாலும் மருத்துவமனைப் பற்றாக்குறை மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை என்ற அடிப்படையில் மட்டுமே விளக்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டம் மிகவும் குறுகியது. ஆனால், அடிப்படை நகர்ப்புற அமைப்புகளில் ஏற்படும் குறைபாடுகளால் பல கடுமையான பிரச்சனைகள் உருவாகின்றன. சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, வடிகால், நீர் வழங்கல் அல்லது காற்றின் தரம் ஆகியவை இதில் அடங்கும். நகர்ப்புற நிர்வாகத்தையும் நீர்-சுகாதார மேலாண்மையையும் வலுப்படுத்துவது ஒரு சுற்றுச்சூழல் கட்டாயம் மட்டுமல்ல, மருந்து-எதிர்ப்புத் நோய்த்தொற்றுகள் பரவுவதற்கு எதிரான ஒரு முக்கியப் பாதுகாப்பாகவும் இது விளங்குகிறது. மானியங்களின் பெரும் பகுதியை சுகாதாரம், கழிவு மேலாண்மை மற்றும் நீர் சேவைகளுடன் இணைப்பதன் மூலம், ஆணையம் ஒரு முக்கிய உண்மையை ஏற்றுக்கொள்கிறது. பொது சுகாதார விளைவுகள் மருத்துவப் பராமரிப்பைப் போலவே நகராட்சி சேவைகளாலும் வடிவமைக்கப்படுகின்றன. நகர்ப்புற மானியங்களின் கட்டுப்பாடற்ற பகுதி சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. இது குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்புகளை வெள்ளபெருக்குப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது, முறைசாராக் கழிவு அமைப்புகளை மேம்படுத்துவது அல்லது கடைசி மைல் வரை நீர் கிடைப்பதை மேம்படுத்துவது போன்ற உள்ளூர் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு பதிலளிக்க உள்ளாட்சி அமைப்புகளை (ULB) அனுமதிக்கிறது.


வெப்ப அலைகள், நகர்ப்புற வெள்ளம், நீர்ப் பற்றாக்குறை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை நகர்ப்புறங்களை மையமாகக் கொண்ட அபாயங்களாகும். இருப்பினும்கூட, காலநிலைத் தழுவல் என்பது முதன்மையாக ஒரு தேசிய அல்லது மாநில அளவிலான கொள்கைத் துறையாகவே தொடர்கிறது. இதனால், நகரங்கள் குறைந்த நிதிச் சுயாட்சியுடன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULB) வழங்கப்படும் சீரான மற்றும் நெகிழ்வான நிதிப் பரிமாற்றங்கள் இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய உதவும். இடம்பெயர்வு நகரங்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. கோவிட் பெருந்தொற்று, இந்த நகர்ப்புற சமூக ஒப்பந்தத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULB) வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, முறைசாரா குடியிருப்புப் பகுதிகளே முதலில் பாதிக்கப்படுகின்றன.


இருப்பினும், பலவீனமான நிறுவனக் கட்டமைப்பை நிதியால் மட்டும் ஈடுசெய்ய முடியாது. பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பணியாளர்கள், திட்டமிடுதல் மற்றும் வருவாய் வழிமுறைகள் மீதான வரையறுக்கப்பட்ட தன்னாட்சியுடன், நிர்வாக வரம்புகளை எதிர்கொள்கின்றன. இது சீர்திருத்தத்தின் அடுத்தநிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிதிப் பகிர்வுடன், செயல்பாட்டு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வும் இணைக்கப்பட வேண்டும். நிதி ஆணையம் இந்தத் துறையில் 455 சதவிகித அதிகரிப்பைப் பரிந்துரைத்தது மட்டுமல்லாமல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிபந்தனையற்ற மானியங்கள் மற்றும் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் பணத்தைச் செலவிட அனுமதிக்கின்றன. இது, பல்வேறு நகர்ப்புற முகமைகளிடையே ஒருங்கிணைப்பை அடைவதில் ஒரு முன்மாதிரியான மாற்றத்தை அவசியமாக்குகிறது.


தாஸ்குப்தா, ஜே.என்.யு-வின் சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதார மையத்தில் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். வாலியா, ஐ.சி.எம்.ஆரில் விஞ்ஞானி ஜி மற்றும் விளக்க ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக உள்ளார்.     Original Link: For public-health reform, fix urban governance.


Share:

தத்தெடுக்கும் தாய்மார்கள் (Adoptive Mothers) குறித்து, மகப்பேறு நலச் சட்டம் (Maternity Benefit Act), 1961 சரியாக என்ன கூறுகிறது? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :


நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, சட்டத்தில் உள்ள மூன்றுமாத காலக்கெடு, தத்தெடுக்கும் தாய்மார்களிடையே ஒரு "செயற்கையான" வேறுபாட்டை (artificial distinction) உருவாக்குவதாகக் கருதியது. மேலும், வளர்ந்த குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண்கள் தங்களின் "பங்குகள், பொறுப்புகள் மற்றும் பராமரிப்புக் கடமைகள்" ஆகியவற்றின் அடிப்படையில் "ஒரே மாதிரியான நிலையில்தான்" உள்ளனர் என்றும் குறிப்பிட்டது.


தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு நல உதவிகளை நீட்டிக்கவும், பெண்கள் பணியிடத்தில் பங்கேற்பதை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், இந்தச் சலுகை மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது. பெரும்பாலான தத்தெடுப்புகளில் மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக, இந்த நல உதவியை "மாயையானதாகவும், நடைமுறைப் பயன்பாடு அற்றதாகவும்" ஆக்கியது.


ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்கள், "குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து பன்னிரண்டுவார காலத்திற்கு மகப்பேறு நல உதவிக்கு உரிமையுடையவர்கள் ஆவார்கள்" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நிறுவனங்களில் வளர்க்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் அதிக மன அழுத்தத்தையும், சீரற்ற பிணைப்பு எதிர்வினைகளையும் வெளிப்படுத்துகிறார்கள் என்றும், இது ஆரம்பகால, சீரான கவனிப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் நீதிபதி குழு குறிப்பிட்டது. இது உயிரியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு, நீதிபதி குழுவானது "மகப்பேறு" என்பதன் சாதாரண அர்த்தத்தை, "ஒரு தாயாக இருக்கும் நிலை" என்று நிதிமன்றம் விளக்கியது. இது பிரசவத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.


ஒரு குழந்தையின் உணர்ச்சி வளர்ச்சிக்கு ஆரம்பகால கவனிப்பு மிகவும் முக்கியமானது என்பதையும், நிறுவனப் பராமரிப்பில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் அதிக மன அழுத்தம் (கார்டிசோல்-cortisol) மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறையுடன் நேரடியாக தொடர்புடைய ஆக்ஸிடோசின் போன்ற சீர்குலைந்த பிணைப்பு ஹார்மோன்களுடன் காணப்படுகிறார்கள் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்ட, நீதிபதிக் குழு வளர்ச்சி ஆராய்ச்சிகளையும் சார்ந்திருந்தது. ஆரம்பகால கவனிப்பு குழந்தைகளுக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும், எனவே சட்டமானது பிணைப்பு நேரத்தை ஒரு விருப்பத் தேர்வாகக் கருத முடியாது அல்லது குழந்தை வீட்டிற்கு வரும்போது அதன் வயதைப் பொறுத்து அதை நிபந்தனைக்குட்படுத்த முடியாது என்றும் நீதிபதி குழு முடிவு செய்தது.


உங்களுக்குத் தெரியுமா? 


மகப்பேறு நலச் சட்டம்-1961 (Maternity Benefit Act), மற்றும் அதன் வாரிசான சமூகப் பாதுகாப்புச் சட்டம்-2020 (Code of Social Security), ஆகிய இரண்டும் தத்தெடுக்கும் தாய்மார்களையும் மகப்பேறு விடுப்பு நலப் பலன்களின்கீழ் கொண்டுவரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன. மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்கள் மட்டுமே பன்னிரண்டு வார விடுப்புக்குத் தகுதி பெறுவார்கள் என்பதே அந்த விதிவிலக்கு ஆகும்.


2020 சட்டத்தின் பிரிவு 60(4) குறிப்பிடுவதாவது, “மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைச் சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கும் ஒரு பெண் அல்லது குழந்தையைக் கேட்கும் தாய், குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து பன்னிரண்டு வாரகாலத்திற்கு மகப்பேறு உதவித்தொகைக்குத் தகுதியுடையவர் ஆவார்.”


மனுதாரர்கள், மூன்று மாதகால வரம்பானது "செயற்கையானது மற்றும் சட்டப்பிரிவு 14-ஐ மீறுவதாகும்" (artificial and violative of Article 14) என்று நீதிமன்றத்தில் வாதிட்டனர். நான்கு மாதக் குழந்தையைத் தத்தெடுக்கும் ஒரு பெண்ணுக்கு, இரண்டு மாதக் குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்ணுக்கு உள்ள அதே பராமரிப்புப் பொறுப்புகள்தான் உள்ளன என்று அவர்கள் விளக்கினர். குழந்தைக்கு உணவூட்டவும், பராமரிக்கவும், குழந்தையை முற்றிலும் புதிய சூழலுக்குப் பழகிக்கொள்ளவும் வேண்டியுள்ளது. இதற்காக, தாய்க்கு வேலையிலிருந்து விடுப்பு தேவைப்படுகிறது.


இதற்குப் பதிலளித்த அரசாங்கம், வளர்ந்த குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள குழந்தைகள் காப்பக வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. இருப்பினும், "வெளித்தோற்றத்தில் லாபகரமானதாகத் தோன்றும்" (seemingly appears to be lucrative) இந்த வாதம் கடுமையான குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தது.


Original Link: What exactly the Maternity Benefit Act, 1961 says about adoptive mothers?


Share:

பாவ்யா (BHAVYA) திட்டம் – தொழில்துறை உள்கட்டமைப்பின்மீது ஏன் ஒரு புதிய கவனம் செலுத்தப்படுகிறது? -குஷ்பூ குமாரி

தற்போதைய நிகழ்வு :


சமீபத்தில், நாடு முழுவதும் 100 தயார் நிலை தொழிற்பூங்காக்களை (plug-and-play industrial parks) மேம்படுத்துவதற்காக, ரூ.33,660 கோடி மதிப்பிலான பாரத் ஆத்யோகிக் விகாஸ் யோஜனா (Bharat Audyogik Vikas Yojna (BHAVYA)) திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, உற்பத்தித் திறனை முழுமையாக வெளிக்கொணர்வது மற்றும் இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வது ஆகும்.


முக்கிய அம்சங்கள் :


1. இத்திட்டத்தின்கீழ், ஏக்கருக்கு ரூ.1 கோடி வரையிலான நிதியுதவியுடன், 100 முதல் 1,000 ஏக்கர் வரையிலான தொழிற்பூங்காக்களின் மேம்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்படும். இந்த தொழிற்பூங்காக்களில் உள்வசதி சாலைகள், நிலத்தடி பயன்பாட்டு வசதிகள், வடிகால், பொது சுத்திகரிப்பு வசதிகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Information and Communication Technology (ICT)) மற்றும் நிர்வாக அமைப்புகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகள் இருக்கும். இவற்றுடன் கூடுதலாக, வெளிப்புற உள்கட்டமைப்பிற்கான ஆதரவும், இதற்கான திட்டச் செலவில் 25% வரை வழங்கப்படும்.


2. பாவ்யா (BHAVYA) திட்டமானது, உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் சேவைகள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது கணிசமான முதலீடுகளை ஈர்ப்பதோடு, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்படும்.


3. இங்கு இதற்கு முன்னரே கட்டப்பட்ட தொழிற்சாலைக் கூடங்கள், தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட நிலையங்கள், பரிசோதனைக் கூடங்கள், கிடங்குகள் மற்றும் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட சமூக உள்கட்டமைப்புகள் அமைக்கப்படும். மேலும், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (National Industrial Corridor Development Programme (NICDP)) கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட தொழில்துறை சீர்மிகு-நகரங்களின் (Industrial Smart Cities) வெற்றியைப் பயன்படுத்தி, பாவ்யா திட்டமானது மாநிலங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.


4. இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்ட முறையானது, சவாலான செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படும். இதன்மூலம், உயர்தரம் வாய்ந்த, சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவது மற்றும் முன்மொழிவுகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு முதலீட்டிற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யப்படும்.


              வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) கீழ் இயங்கும் தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுக் கழகம் நிறுவனத்தின் (National Industrial Corridor Development Corporation Limited (NICDC)), உற்பத்தித் துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் உலகத் தரம் வாய்ந்த புதிய தொழில் சீர்மிகு-நகரங்களின் (smart cities) மேம்பாட்டிற்குத் தலைமை தாங்குகிறது. தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுக் கழகம் நிறுவனம் (NICDC) தற்போது 13 மாநிலங்களில் 20 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.


5. தடையற்ற பல்முனைப் போக்குவரத்து இணைப்பையும், திறமையான இறுதிக்கட்ட அணுகலையும் செயல்படுத்தும் வகையில், பிரதம மந்திரி கதிசக்தி (PM GatiShakti) திட்டக் கொள்கைகளை பின்பற்றும் விதமாக, இந்தத் தொழில் பூங்காக்கள் எதிர்கால நோக்கம் மற்றும் நீடித்த சுற்றுச்சூழல் அமைப்புகளாக வடிவமைக்கப்படும்.

6. தளவாடங்கள் (Logistics) என்பது பரந்த அளவில் வர்த்தகத்திற்கு அவசியமான வசதிகளை உள்ளடக்கியது. அதாவது, பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து சேவைகள், உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற விரைவில் கெட்டுப்போகும் பொருட்களின் வர்த்தகத்திற்கு குறிப்பாக அவசியமான சேமிப்பு வசதிகள், மற்றும் உரிமம் வழங்குதல், சுங்கம் போன்ற வர்த்தகத்தை எளிதாக்கும் அரசாங்க சேவைகளின் சீரான செயல்பாடு ஆகியவை இதில் அடங்கும்.

7. தளவாடத் துறையை வலுப்படுத்த, அரசாங்கம் தேசிய தளவாடக் கொள்கை (National Logistics Policy (NLP)) மற்றும் பிரதம மந்திரி கதி சக்தி தேசிய பெருந்திட்டத்தை (PM Gati Shakti National Master Plan) அறிமுகப்படுத்தியுள்ளது.


8. தேசிய தளவாடக் கொள்கையின் (NLP) இலக்குகளானவை, இந்தியாவில் தளவாடச் செலவைக் குறைத்தல், தளவாடச் செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையை மேம்படுத்துதல், 2030-க்குள் இந்தியாவை முதல் 25 நாடுகளுக்குள் கொண்டுவர இடம்பெற முயற்சித்தல் மற்றும் ஒரு திறமையான தளவாடச் சூழலமைப்பை உருவாக்க, தரவு சார்ந்த முடிவெடுக்கும் ஆதரவு வழிமுறையை உருவாக்குதல் போன்ற இலக்குகளை கொண்டுள்ளது.


9. கடந்த ஆண்டு, “இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India”) திட்டத்தின் பத்தாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, இந்தியாவில் தளவாடச் செலவு மதிப்பீடு குறித்த அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டது. இது, இரண்டாம் நிலைத் தரவுகளையும் நாடு தழுவிய அளவிலான ஆய்வுகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு கலப்பு வழிமுறையைப் பயன்படுத்தி, தளவாடச் செலவுகளின் விரிவான மற்றும் அறிவியல் பூர்வமான மதிப்பீட்டை முதன்முறையாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


10. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்காக (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் (National Council of Applied Economic Research (NCAER)) தயாரித்த தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தியாவில் தளவாடச் செலவுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7.97% என மதிப்பிடப்பட்டுள்ளது.


நிவாரணத் திட்டம் (RELIEF Scheme)


1. மேற்கு ஆசியாவில் நடைபெற்றுவரும் போரின் காரணமாக ஏற்பட்ட வர்த்தக இடையூறுகளைத் தொடர்ந்து, சரக்கு மற்றும் எரிபொருள் செலவுகள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்தது உள்ளிட்ட பரவலான தளவாடச் சவால்களால் வர்த்தக இடையூறுகளை எதிர்கொள்ளும் ஏற்றுமதியாளர்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ரூ.497 கோடி மதிப்பிலான நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது.


2. இந்த நிவாரணத் திட்டத்தில், ஏற்றுமதி கடமைகளைத் தானாகவே நீட்டிக்கும், தளவாட ஆதரவும், மற்றும் கப்பல் தாமதங்களை நிர்வகிப்பதற்கான சாத்தியமான நிதி நடவடிக்கைகளும் ஆகியவை அடங்கும். மேலும் இது முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன், ஈராக், ஈரான், இஸ்ரேல் மற்றும் யேமன் ஆகிய நாடுகளுக்கு விநியோகம் அல்லது இடமாற்றம் செய்யப்படும் சரக்குகளை உள்ளடக்கும்.


3. இத்திட்டமானது ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் (Export Promotion Mission (EPM)) கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சரிபார்ப்பு பணிகள், உரிமைகோரல்களைச் செயலாக்கம், விநியோகப் பணிகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்புச் செயலாக்க முகமையாக இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (Export Credit Guarantee Corporation (ECGC)) நியமிக்கப்பட்டுள்ளது.


4. இத்திட்டத்தில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன :


மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுப் பாதுகாப்பு (Enhanced insurance coverage) : ஏற்கனவே, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (ECGC) காப்பீடு வைத்திருக்கும் ஏற்றுமதியாளர்கள், பிப்ரவரி 14 மற்றும் மார்ச் 15, 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் அனுப்பப்படும் தகுதிவாய்ந்த சரக்குகளுக்கு, கூடுதல் கட்டணமும் செலுத்தாமலேயே 100% வரை இடர் பாதுகாப்பைப் பெறுவார்கள்.


வரவிருக்கும் சரக்கு அனுப்புதலுக்கான ஆதரவு (Support for upcoming shipments) : மார்ச் 16 முதல் ஜூன் 15, 2026 வரை சரக்குகளை அனுப்பத் திட்டமிடும் ஏற்றுமதியாளர்கள், அரசாங்கத்தின் ஆதரவுடன் 95% வரை இடர் காப்பீட்டைப் (risk coverage) பெறலாம். இது வர்த்தகப் பரிமாற்றங்களைத் தக்கவைக்க உதவும்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிவாரணம் (Relief for MSME) : இடையூறு காலத்தில் ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (ECGC) காப்பீடு இல்லாத சிறு ஏற்றுமதியாளர்கள், அதிகரித்த சரக்கு மற்றும் காப்பீட்டுச் செலவுகளில் 50% வரை பகுதித் தொகையைத் திரும்பப் பெறத் தகுதி பெறுவார்கள். இருப்பினும், ஒரு ஏற்றுமதியாளருக்கு இந்தத் தொகை ₹50 லட்சம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டது.


Original Link: BHAVYA Scheme – Why this new push for industrial infrastructure.


Share:

இந்தியா தனது முதல் நகோயா நெறிமுறை அறிக்கையைச் சமர்ப்பித்தது. - குஷ்பூ குமாரி

பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு உடன்படிக்கையின் (CBD) கீழ், நகோயா நெறிமுறை குறித்த தனது முதல் தேசிய அறிக்கையை (National Report (NR1)) இந்தியா சமர்ப்பித்துள்ளது. இந்த நெறிமுறை எதைக் குறிக்கிறது? மேலும், இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?


தற்போதைய செய்தி


சமீபத்தில், அணுகல் மற்றும் பயன் பகிர்வு (access and benefit sharing (ABS)) தொடர்பான நகோயா நெறிமுறையின் (Nagoya Protocol) செயலாக்கம் குறித்த முதலாவது தேசிய அறிக்கையை (National Report (NR1)) இந்தியா சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை, தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்துடன் (National Biodiversity Authority (NBA)) இணைந்து, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) 2026 பிப்ரவரி 27 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது, கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் குறித்த நெறிமுறையின் 29-வது பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. இந்த அறிக்கையானது, 2017 நவம்பர் 1 முதல் கடந்த ஆண்டின் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தின் (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) இலக்கு 13-க்கு பங்களிக்கும் அதே வேளையில், நகோயா நெறிமுறையைச் செயல்படுத்துவதன் மூலம் ஏற்படும் நாட்டின் முன்னேற்றத்தையும் இது எடுத்துரைக்கிறது.





2. அறிக்கையின்படி, இந்தியா, 'அணுகல் மற்றும் பயன் பகிர்வு' (Access and Benefit-Sharing) வழிமுறையை, மூன்று அடுக்கு நிறுவனக் கட்டமைப்பின் கீழ் செயல்படுத்துகிறது. இந்தக் கட்டமைப்பானது, தேசிய அளவில் NBA-வையும்; துணை-தேசிய அளவில் மாநிலப் பல்லுயிர் வாரியங்கள் (State Biodiversity Boards (SBBs)) அல்லது ஒன்றியப் பிரதேசப் பல்லுயிர் மன்றங்களையும் (Union Territory Biodiversity Councils (UTBCs)) மற்றும் உள்ளூர் அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்ட பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களையும் (Biodiversity Management Committees (BMCs)) உள்ளடக்கியுள்ளது. இந்த பரவலாக்கப்பட்ட அமைப்பு, தேசிய, மாநில மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.


3. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பை (UN Framework Convention on Climate Change (UNFCCC)) உருவாவதற்குக் காரணமாக அமைந்த 1992 ரியோ பூமி (Rio Earth Summit) உச்சிமாநாட்டிலிருந்தே, பல்லுயிர் பெருக்கத்திற்கான கூட்டமைப்பும் (Convention on Biological Diversity (CBD)) தோன்றியது. உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதும், இயற்கைச் சூழல் மண்டலங்களை மீட்டெடுப்பதும், உலகின் உயிரியல் வளங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வது  பல்லுயிர் பெருக்கத்திற்கான கூட்டமைப்பின் நோக்கங்களாகும்.


4. இந்தியா உட்படப் பல நாடுகள், 1994-ஆம் ஆண்டில் பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டை (CBD) ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டன. இதில் மூன்று முக்கிய அம்சங்கள் குறித்துப் பொதுவான ஒருமித்த கருத்து எட்டப்பட்டது: அவை,


(i) உயிரியல் வளங்களை வரம்பின்றிப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்;


(ii) இவ்வளங்களின் மருத்துவப் பண்புகள் போன்ற பயன்பாடுகளுக்காக, அவற்றை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும்;


(iii) இவ்வளங்களைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் துணை நிற்கும் மக்களுக்கும் சமூகங்களுக்கும், அவர்களின் முயற்சிகளுக்காக உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.


5. பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாடு (CBD) என்பது சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பது பற்றியது மட்டுமல்ல. இது இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது குறித்தும், இவ்வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசுகிறது. உதாரணமாக, ஐரோப்பாவில் உள்ள ஒரு மருந்து நிறுவனம் தமிழ்நாட்டில் வளரக்கூடிய சில செடிகளின் மருத்துவ குணங்களை பயன்படுத்த விரும்பினால், அந்த பயன்பாட்டினால் கிடைக்கும் நன்மைகள் பணம் அல்லது பிற வகையிலானவை அனைத்து பங்குதாரர்களுக்கும் சமமாக பகிரப்பட வேண்டும். இதில், அந்த குறிப்பிட்ட உயிரியல் வளத்தை பாதுகாத்து வந்த உள்ளூர் பழங்குடியினர் (indigenous மக்கள்) உட்பட அனைவரும் சேர்க்கப்பட வேண்டும்.

6. பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு ஒப்பந்தம் இரண்டு ‘துணை’ ஒப்பந்தங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துள்ளது. அவை, 2003-ஆம் ஆண்டின் கார்டஜீனா (Cartagena Protocol) நெறிமுறை மற்றும் 2014-ஆம் ஆண்டின் நகோயா நெறிமுறை ஆகும். இந்த இரண்டு ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இடங்களின் பெயர்களையே கொண்டுள்ளன.


7. உயிரியல் பாதுகாப்பு குறித்த கார்டஜீனா நெறிமுறையானது, மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களைக் கையாளுதல், அவற்றை கொண்டு செல்லுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றைச் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதை உறுதி செய்வதன் மூலம், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க முயல்கிறது. உதாரணமாக, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops), இயற்கைச் சூழல் மண்டலங்களில் நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத வகையிலான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால்தான், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தனி  பண்ணைகளில் பயிரிடப்படுகின்றன.


8. நகோயா நெறிமுறை (Nagoya Protocol) என்பது உயிரியல் மற்றும் மரபணு வளங்களின் (biological & genetic resources) வர்த்தகப் பயன்பாட்டை (commercial utilisation) பற்றியதாகும். உதாரணமாக, மருந்து நிறுவனங்கள் இந்த வளங்களை பயன்படுத்தும் சூழல்களில் இது பொருந்தும். இந்த ஒப்பந்தம், வளம் உள்ள நாடுகள் தங்களது மரபணு வளங்களுக்கு சட்டபூர்வமாக, நியாயமான முறையில் அணுகலை (access) வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அதே நேரத்தில், அந்த வளங்களை பயன்படுத்தி கிடைக்கும் நன்மைகள் அந்த நாடுகளுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கும் சமமாகவும் நியாயமாகவும் (fair and equitable) பகிரப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், உயிரியல் வளங்களின் மீதான நாடுகளின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பொதுவான கோட்பாடுகளையும், அவற்றின் வர்த்தக பயன்பாட்டிற்கான விதிமுறைகளையும் இது நிர்ணயிக்கிறது.


9. இந்த நடைமுறையின் கீழ், உயிரியல் பல்லுயிர்வகைமையில் (biodiversity) வளமான நாடுகள், ஆராய்ச்சி அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக தங்களது உயிரியல் வளங்களை பயன்படுத்த விரும்புவோருக்கு அவற்றை அணுகும் வாய்ப்பை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேவேளையில், அந்த வளங்களைப் பயன்படுத்தும் முகமைகள், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பயன்களை உள்ளூர் சமூகங்களுடன் பகிர்ந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த அணுகல் மற்றும் பயன் பகிர்வு, உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆகிய இரண்டு நிலைகளிலும் செயல்படுகிறது.


10. 1993-ஆம் ஆண்டு ஒப்பந்தமான பல்லுயிர் பாதுகாப்பு மாநாட்டில் (CBD) கையொப்பமிட்ட நாடுகள், காலநிலை கூட்டங்களைப் போல ஆண்டுதோறும் இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி, பல்லுயிர் இழப்பைத் தடுத்து இயற்கைச் சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான ஒரு உலகளாவிய திட்டத்தில் பணியாற்றுகின்றன. பல்லுயிர் பாதுகாப்பு மாநாட்டில் காலநிலை மாநாட்டின் விளைவுகள்:


17-வது காலநிலை மாநாடு இது 2026 அக்டோபர் 19 முதல் 30 வரை ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெற  உள்ளது.


16-வது காலநிலை மாநாடு: இது 2024 அக்டோபர் 21 முதல் நவம்பர் 1 வரை கொலம்பியாவின் காலியில் நடைபெற்றது. இந்த மாநாடு, குறிப்பாக பழங்குடியினர் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் சமமான பகிர்வை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் வரிசைத் தகவலுக்கான காலி நிதியத்தை (Digital Sequence Information (DSI)) நிறுவியதோடு முடிவடைந்தது. மேலும், உலகளவில் பல்லுயிர் முயற்சிகளுக்கு நிதியளிக்க, 2030-க்குள் ஆண்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.


15-வது காலநிலை மாநாடு: இது 2022-ல் கனடாவின் மாண்ட்ரீலில் நடைபெற்றது. இது உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு (Global Biodiversity Framework (GBF)) எனப்படும் ஒரு புதிய ஒப்பந்தத்தை வழங்கியது. அதன்படி, 2030-க்குள் அடையப்பட வேண்டிய நான்கு குறிக்கோள்களும் 23 இலக்குகளும் உள்ளன. இந்த உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு, உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் 2015-ஆம் ஆண்டின் காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்துடன் ஒப்பிடப்படுகிறது.


பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு


1. இந்தியாவில் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்காக அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறது மற்றும் குடிமக்கள் மீது அடிப்படைக் கடமைகளை விதிக்கிறது.


பிரிவு 48A-அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy): "அரசு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டின்  வனப் பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறுகிறது.


பிரிவு 51-A(g)-அடிப்படைக் கடமைகள் ((Fundamental Duties))  ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கைச் சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தவும், உயிரினங்கள்மீது கருணை காட்டவும் கடமையை விதிக்கிறது.


2. அரசியலமைப்பு வழிகாட்டுதல்கள் தவிர, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பேணுதலுக்கான சட்டப்பூர்வமான விதிகளும் உள்ளன: அவை மீன்வளச் (Fisheries Act) சட்டம், 1897, வனவிலங்கு பாதுகாப்புச் (Wildlife Protection Act) சட்டம், 1972, பல்லுயிர் (Biological Diversity Act) சட்டம், 2002 ஆகும்.


3. 1994-ல் இந்தியா அங்கீகரித்த, ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் பாதுகாப்பு உடன்படிக்கையில் மறைந்துள்ள நோக்கங்களை நிறைவேற்றும் இந்தியாவின் முயற்சியின் விளைவாகவே 2002-ஆம் ஆண்டில் பல்லுயிர் (Biological Diversity Act) சட்டம், உருவானது. இந்தச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் – பல்லுயிரைப் பாதுகாத்தல், அதன் வளங்களை நீடித்த முறையில் பயன்படுத்துதல், மற்றும் மரபணு வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை ஒரு நியாயமான செயல்முறையின் மூலம் நேர்மையாகவும் சமமாகவும் பகிர்ந்தளிப்பது ஆகும்.


4. இதேபோல், பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டின் (CBD) ஆணைகளைச் செயல்படுத்துவதற்காக, 1999-ஆம் ஆண்டு தேசிய பல்லுயிர் பாதுகாப்பு உத்தி மற்றும் செயல் திட்டம் (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) 2008-இல் புதுப்பிக்கப்பட்டது. 2010-ல் நகோயாவில் நடைபெற்ற பல்லுயிர் பெருக்கத்திற்கான  மாநாட்டின் COP 10-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐச்சி பல்லுயிர் பாதுகாப்பு (Aichi Biodiversity targets) இலக்குகளுடன் இந்தத்திட்டத்தை சீரமைப்பதற்காக, 2014-ல் திருத்தங்கள் செய்யப்பட்டன.


5. இதன் தொடர்ச்சியாக, ஐச்சி இலக்குகளுக்குப் பதிலாக COP15-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட குன்மிங்-மான்ட்ரியல் பல்லுயிர் (Kunming-Montreal Biodiversity Framework) பாதுகாப்பு கட்டமைப்புடன் திட்டத்தை சீரமைப்பதற்காக, இந்தியா தனது, 'தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தை' (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) 2024 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான  காலகட்டத்திற்காக, கொலம்பியாவின் காலி நகரில் நடைபெற்ற COP 16 மாநாட்டில் அறிமுகப்படுத்தியது. 2030-ஆம் ஆண்டு வரையிலான பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டும் வகையில், இது 23 தேசிய பல்லுயிர் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.







Original Link: India submits first Nagoya Protocol Report.


Share:

ஜல் ஜீவன் திட்டம் 2.0: அரசின் முக்கிய நீர் திட்டத்தின் மீது மீண்டும் கவனம் திரும்பியது ஏன்? - ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி?


ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான செலவினங்கள் அதிகமாக இருந்ததாக எழுந்த கவலைகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை நுணுக்கமாக ஆய்வு செய்து, அவற்றை முறைப்படுத்தும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் அறிந்துள்ளது. இச்சூழலில், மார்ச் 22-ஆம் தேதி கொண்டாடப்பட்ட 'உலக நீர் தின’த்தில், சமீபகாலமாகச் செய்திகளில் வரும் அரசின் மிக முதன்மை நீர் திட்டமான 'ஜல் ஜீவன் திட்டம்' குறித்து நாம் சற்று விரிவாக அறிந்துகொள்வோம்.

முக்கிய அம்சங்கள்:


1. ஆகஸ்ட் 15, 2019 அன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம், ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செயல்படும் நிலையில் உள்ள குழாய் இணைப்பின் மூலம், ஒரு நபருக்கு நாளொன்றுக்குக் குறைந்தது 55 லிட்டர் குடிநீரை வழங்குவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. ஜல் ஜீவன் திட்டத்தை (JJM) செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அமைச்சகமாக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் செயல்படுகிறது. தொடக்கத்தில் 2024-க்குள் நிறைவுபெறத் திட்டமிடப்பட்டிருந்த இந்தத் திட்டத்திற்கான காலக்கெடு, தற்போது 2028-ஆம் ஆண்டு  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


3. 2025 ஏப்ரல் 21 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் வெளியிட்ட செய்தியில், முறைகேடுகள், ஊழல் மற்றும் பணித் தரம் குறைவாக இருப்பது குறித்து கவலைகள் எழுந்ததால், 2028-ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டத்திற்கு ரூ.2.79 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்ற ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்தது.


4. ஜல் ஜீவன் திட்டத்தில்  முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. சில மாதங்கள் கழித்து, 2025 மார்ச் 10 அன்று ஒன்றிய அமைச்சரவை, இந்த திட்டத்திற்கு 2028 வரை கூடுதலாக ரூ.1.51 லட்சம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்தது. மேலும், “வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக 'டிஜிட்டல் வரைபடமாக்கல்' (digital mapping) முறையும் இடம்பெற்றுள்ளது.


5. அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, “நீர் வளம் மிக்க இந்தியா" (Sujalam Bharat) எனப்படும் ஒரே மாதிரியான தேசிய டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படும். இது நீர் வழங்கல் அமைப்பை “மூல ஆதாரம் முதல் குழாய் வரை” (from source to tap) டிஜிட்டல் முறையில் வரைபடம் அமைக்க உதவும். மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், கட்டமைப்பு சீர்திருத்தங்களை உறுதி செய்வதற்காக, மூன்று மாதங்களுக்குள் மாநிலங்களுடன் தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்படும்.


7. "ஜல் ஜீவன் திட்டம் 2.0-ன் கீழ் ஒன்றிய நிதியை விடுவிப்பது, மாநிலங்கள்/மத்தியப் பிரதேசங்கள் நான்கு கட்டாய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவை: புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுதல், அனைத்து கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டங்களையும் முழுமையாக டிஜிட்டல் வரைபடத்தில் கொண்டுவர  நீர்வள கிராம அடையாள எண்ணை (“Sujal Gaon ID) உருவாக்குதல், காலவரையறைக்குள் நிதி சரிசெய்தல் பணிகளை (financial reconciliation) மேற்கொள்ளுதல், மாநிலங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) கொள்கைகளை அறிவித்தல் போன்றவைகளாகும்.


8. மார்ச் 20-ஆம் தேதி வரை, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட  8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


9.  ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின்படி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கிராமப்புற குடிநீர் அமைப்புகளின் ஆளுகை, நிறுவனத் திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 11 முக்கியக் கட்டமைப்பு சீர்திருத்தப் பகுதிகளைச் செயல்படுத்துவதை முக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளன.


10. இந்த சீர்திருத்தங்களில் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடங்கும்: அவை,


  • குடிநீர் நிர்வாகத்திற்கான நிறுவன அமைப்பு (institutional architecture),


  • கிராமப்புற குடிநீர் வழங்கலுக்கான சேவை பயன்பாட்டுக் கட்டமைப்பு (service utility framework),


  • தொழில்நுட்ப இணக்கம் மற்றும் திட்டங்களை திறமையாக செயல்படுத்துதல் (technical compliance & efficient implementation),


  • பொதுமக்களை நோக்கமாகக் கொண்ட நீர்தர நிர்வாகம் (citizen-centric water quality governance),


  • நீர் ஆதாரம் மற்றும் நீர் பாதுகாப்புக்கான நிலைத்தன்மை கட்டமைப்பு (source sustainability & water security),


  • கிராமப்புற குடிநீர் அமைப்புகளில் டிஜிட்டல் தரவு நிர்வாகம் (digital data governance),


  • மக்கள் பங்கேற்பு மூலம் நிர்வாகம் (participatory governance through Jan Bhagidari),


  • திறன் மேம்பாட்டு கட்டமைப்பு,  


  • மனிதவள மற்றும் திறன் வளர்ச்சி சூழல்,


  • குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாட்டு மற்றும் நிதி நிலைத்தன்மை (operational & financial sustainability),


  • ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் அறிவுச் சூழலமைப்பு போன்றவைகளாகும்.


“நீர் வளம் மிக்க இந்தியா" (Sujalam Bharat)


1. புதிய டிஜிட்டல் கட்டமைப்பின்கீழ், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்துவமான “நீர்வள கிராம அடையாள எண் / சேவைப் பகுதி அடையாள எண்” வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம், குடிநீர் வழங்கல் முழு அமைப்பு “வள ஆதாரம் முதல் குழாய் வரை” (source to tap) டிஜிட்டல் முறையில் முழுமையாக வரைபடமாக்கப்படும்.


2. "வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக", "திட்டங்களைத் தொடங்குவதிலும் மற்றும் முறையாக ஒப்படைப்பதிலும்" கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.


3. ஒரு கிராமப் பஞ்சாயத்து பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதாக சான்றளித்து, “ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்” (Har Ghar Jal’) என அறிவிப்பது, மாநில  அரசு கிராமத்திற்குள் போதுமான செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) அமைப்புகளை நிறுவியுள்ளதை உறுதிப்படுத்திய பின்னரே பணிகள்  மேற்கொள்ளப்படும் என்று  அறிக்கை தெரிவித்துள்ளது.


நீர் தொடர்பான பிற திட்டங்கள்


ஜல் சக்தி அமைச்சகத்தின் பிற திட்டங்களில், 'கங்கைக்கு வணக்கம்' என்று பொருள்படுகிற ‘நமாமி கங்கை’ (Namami Gange) மற்றும் 'நதி இணைப்புத் திட்டங்கள்' ஆகியவை முக்கியமானவையாகும். எனவே, இந்தத்திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், 'நதிகள் இணைப்பு' என்பது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியமானதாகும்.  முன்னதாக கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் இணைப்பு தொடர்பான ஒரு கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. பல்வேறு நதி இணைப்புத் திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியமானதாகிறது.


நமாமி கங்கே திட்டம் (Namami Gange Programme)


1. “கங்கைக்கு வணக்கம்” (Namami Gange) என்பது ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டமாகும். தேசிய நதியான கங்கையில் ஏற்படும் மாசுபாட்டை வேகமாக குறைத்தல், நதியைப் பாதுகாத்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற இரண்டு நோக்கங்களை அடைவதற்காக, ஜூன் 2014-ல் ஒன்றிய அரசால் இந்த திட்டம் “பாதுகாப்பு மற்றும் முதன்மைத் திட்டமாக” (Flagship Programme) அங்கீகரிக்கப்பட்டது.


2. கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு, நதிக்கரை மேம்பாடு, நதியின் மேற்பரப்புச் சுத்தம் செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, பொது விழிப்புணர்வு, தொழிற்சாலைக் கழிவுநீர் கண்காணிப்பு மற்றும் 'கங்கா கிராம்' (Ganga Gram) ஆகியவை நமாமி கங்கே திட்டத்தின் முக்கியத் தூண்களாகத் திகழ்கின்றன.


நதிகள் இணைப்புத் திட்டம்


1. நதிகள் இணைப்பு (River Interlinking) என்பது, உபரிநீர் உள்ள பகுதிகளிலிருந்து நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு, மனிதத் தலையீட்டின் மூலம் நீரை மறுவிநியோகம் செய்யும் பெரிய அளவிலான நீர் மேலாண்மை திட்டமாகும்.


2. இந்த திட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நதி நீர்ப்பிடிப்பு பகுதிகள் கால்வாய்கள், அணைகள், குழாய்கள் போன்றவற்றின் மூலம் இணைக்கப்படுகின்றன. இந்த இடைநிலை நீர் மாற்று திட்டங்கள் (Inter-Basin Water Transfer (IBWT)) பாசன வசதியை அதிகரிக்கவும், வெள்ளக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், வறட்சிப் பகுதிகளில் நீர் ஆதாரங்கள் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.



தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் உள்ள இணைப்புத் திட்டங்கள்

திட்டம்

பயன் பெறும் மாநிலங்கள்

கென்-பெட்வா இணைப்பு (Ken-Betwa Link Project (KBLP)) திட்டம்

மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம்

மகாநதி (மணிபத்ரா) - கோதாவரி (டௌலீஸ்வரம்) இணைப்பு திட்டம் 

ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா

கோதாவரி (போலாவரம்) - கிருஷ்ணா (விஜயவாடா) இணைப்பு திட்டம்

ஆந்திரப் பிரதேசம் 

கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா இணைப்பு  (நாகார்ஜுனசாகர்) திட்டம்

தெலுங்கானா

கிருஷ்ணா (ஆல்மட்டி) - பென்னார் இணைப்பு திட்டம்

ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம்

பார்-தாப்பி-நர்மதா இணைப்பு திட்டம்

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

பெட்ரி – வரதா இணைப்பு திட்டம்

கர்நாடகம்


இந்தியாவில் நீர் தொடர்பான அரசியலமைப்பு விதிகள்


உலக நீர் தினத்தை முன்னிட்டு, நீர் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பதையும் இப்போது காண்போம்.


அடிப்படை உரிமையாக நீர் பெறும் உரிமை: இந்தியாவில், சுத்தமான  குடிநீரைப் பெறுவதற்கான அரசியலமைப்பு உரிமையானது, உணவு பெறும் உரிமை, சுத்தமான சுற்றுச்சூழல் பெறும் உரிமை மற்றும் சுகாதாரம் பெறும் உரிமை ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. இவை அனைத்தும், அரசியலமைப்பின்  பிரிவு 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட 'உயிர் வாழும் உரிமை' (Right to Life) எனும்  தலைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

  முக்கியமாக, குடிநீர் என்பது மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாகும். அது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ல் உள்ள ‘உயிர் வாழும் உரிமை’ மற்றும் மனித உரிமைகளின் ஒரு பகுதியாகும். மேலும், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்த வளர்ச்சி பெறும் உரிமையும் ‘உயிர் வாழும் உரிமைக்குள் உட்பட்ட அடிப்படை மனித உரிமைகளாகும் என்று  2000-ஆம் ஆண்டு நர்மதா பச்சாவோ அந்தோலன் vs யூனியன் ஆஃப் இந்தியா (Narmada Bachao Andolan v. Union of India)  வழக்கில், உச்சநீதிமன்றம் கூறியது.


2000-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசு vs ஆந்திரப் பிரதேச மாநில அரசு (State of Karnataka v State of Andhra Pradesh (2000)) வழக்கில், நீருக்கான உரிமை என்பது ‘உயிர் வாழும் உரிமையின்’ ஒரு பகுதியாகும். ஆகவே, அது ஒரு அடிப்படை உரிமையாகும் என்று நீதிமன்றம்   தீர்ப்பளித்தது.


பிரிவு 48A-அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy): "அரசு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டின்  வனப் பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறுகிறது.


பிரிவு 51A(g)- அடிப்படை கடமைகள் ((Fundamental Duties)) : இது முக்கியமாக சுற்றுச்சூழல் தொடர்பான அடிப்படை கடமையை எடுத்துரைக்கிறது. " வன பகுதிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும், உயிரினங்கள்மீது கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்" என்று  பிரிவு குறிப்பிடுகிறது.


பிரிவு 262: இது 'மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் அல்லது ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்த்தல்' குறித்து குறிப்பிடுகிறது. இதன் உட்பிரிவு (1): மாநிலங்களுக்கு இடையிலான எந்த நதி அல்லது நதிக்கரைப் பகுதியின் நீரைப் பயன்படுத்துதல், விநியோகித்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பாக எழும் எந்தவொரு தகராறு அல்லது புகாரையும் தீர்த்து வைப்பதற்கு, நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் செய்யலாம் என்று கூறுகிறது. உட்பிரிவு (2): "இந்த அரசியலமைப்பில் உள்ள பிற விதிகளைப் பொருட்படுத்தாமல், உட்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய சர்ச்சைகள் அல்லது புகார்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றமோ அல்லது வேறு எந்த நீதிமன்றமோ தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தக் கூடாது என்று நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் வழிவகை செய்யலாம் என்று கூறுகிறது. இந்த பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நதிநீர்ச் சிக்கல்களைக் கையாள்வதற்காக நாடாளுமன்றம் 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்கள் (Inter-State River Water Disputes Act) சட்டத்தை இயற்றியது.


இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் (பட்டியல் II) 17-வது பதிவு, நீர் வழங்கல், பாசனம் மற்றும் கால்வாய்கள், வடிகால் மற்றும் அணைக்கட்டுகள், நீர் சேமிப்பு மற்றும் நீர்வள மின்சாரம் ஆகியவை பட்டியல் I-ன் பட்டியல் 56-ன் விதிகளுக்கு உட்பட்டதாகும். இதன் பொருள் மாநிலங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கால்வாய்கள் மற்றும் கரைகள் போன்ற நீர் தொடர்பான விவகாரங்கள் குறித்துச் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன என்பதாகும்.


இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் உள்ள ஒன்றியப் பட்டியலின் (பட்டியல் I) 56-வது பதிவு: மாநிலங்களுக்கு இடையிலான நதிகள் மற்றும் நதிக்கரைப் பகுதிகளின் கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு—பொது நலனுக்காக அவை  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று  நாடாளுமன்ற சட்டம் மூலம் தேவையானதாக அறிவிக்கும் அளவிற்கு உட்பட்டது. நாடாளுமன்றம் அத்தகைய நதிகளை ஒழுங்குபடுத்து மேம்படுத்துவது முக்கியமென அறிவிக்கும் பட்சத்தில், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

Original Link: Jal Jeevan Mission 2.0: Why the government’s flagship water scheme is back in focus.


Share: