200 ஆண்டுகள் பழமையான ஜோத்புரி மொஜாரி காலணி புவிசார் குறியீடைப் பெற்றுள்ளது -குஷ்பூ குமாரி

200 ஆண்டுகள் பழமையான ஜோத்புரி மொஜாரி, புவிசார் குறியீடைப் (GI tag) பெற்றுள்ளது. இது ராஜஸ்தானின் புகழ்பெற்ற தோல் கைவினைக் கலையின் அடையாளத்தை மேலும் உயர்த்தியுள்ளது. புவிசார் குறியீடு (GI) பதிவகம், ஜோத்பூர் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் கிராம் விகாஸ் சேவா சன்ஸ்தான் ஆகிய அமைப்புகளிடம் புவிசார் குறியீட்டுச் சான்றிதழை வழங்கியது. இந்த அங்கீகாரம் ஜோத்பூரின் கைவினைப் பொருட்கள் துறைக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.


தற்போதைய செய்தி 



ஜோத்பூரின் ஏறக்குறைய 200 ஆண்டுகள் பழமையான மொஜாரி காலணி  கைவினைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI) வழங்கியுள்ளது. இது அந்த பாரம்பரிய காலணிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும், உலகளாவிய வர்த்தக முத்திரைக்கு ஒரு உத்வேகத்தையும் அளித்துள்ளது. புவியியல் குறியீட்டுப் பதிவகம், ஜோத்பூர் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் கிராம விகாஸ் சேவா சன்ஸ்தான் ஆகியவற்றுக்கு புவியியல் குறியீட்டுச் சான்றிதழை வழங்கியது. இந்த அங்கீகாரம் ஜோத்பூரின் கைவினைத் தொழிலுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. ஜோத்பூரி மொஜாரிகள் (Jodhpuri Mojari), ஜினகர் என்ற சாதியினரால் உருவாக்கப்படுகின்றன. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இவர்கள் பாரம்பரியமாக சேணம் தயாரிப்பாளர்களாக (saddle makers) இருந்தனர். ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரால் ஆதரிக்கப்பட்ட மொஜாரி, படிப்படியாக ஒரு தனித்துவமான கைவினைப் பொருளாக உருவெடுத்து, அந்த நகரத்திற்கு ஒரு தனி அடையாளத்தை வழங்கியது. இன்று, ஜோத்பூரில் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவினைகலைஞர்கள் இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.


2. கோட்டா பாரம்பரிய சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் மதன் மீனா, இந்த சமூகம்  250 ஆண்டுகளுக்கு முன்பு காலணி தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டது. அவர்கள் படைகளுக்காக ஜீன் (சேணம்) மற்றும் மியான் (வாள்கள், கத்திகளுக்கான தோல் உறைகள்) ஆகியவற்றைத் தயாரித்தனர். ஜீன் (சேணம்) தயாரிக்கும் அவர்களின் பாரம்பரியத்தின் காரணமாக, அவர்கள் ஜிங்கார்கள் (ஜீன் தயாரிப்பாளர்கள்) என்று அழைக்கப்பட்டதாக கூறினார்.



3. அந்தச் சமூகம் காலணி தயாரிப்புத் தொழிலுக்கு மாறியதைக் கூறும் ஒரு புராணக்கதையை மீனா மேற்கோள் காட்டினார். ஜோத்பூர் அரசரின் மகளின் திருமணத்தின் போது, ஜிங்கர்கள் ஒரு ஜோடி தோல் காலணிகளைப் பரிசாக வழங்க முடிவு செய்தனர். அதில் ஒரு காலணியை மற்றொரு காலணிக்குள் மிகவும் நேர்த்தியாக மறைத்து வைத்திருந்ததால், வெளியில் இருந்து பார்த்தால் அது ஒரே காலணியாகத் தோன்றியது. அவர்களின் கைவினைத் திறமையால் கவரப்பட்ட அரசர், அவர்களின் கைத்திறனைப் பாராட்டி, அவர்களை காலணி செய்யும் தொழிலை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார்.


4. ஆண்களும் பெண்களும் அணியும் மொஜாரி, ராஜஸ்தானின் வெப்பமான காலநிலைக்கு ஏற்றதாக இருந்தது. இது காற்றோட்டமானது, நீண்ட தூரம் நடப்பதற்கு எளிதானது, உறுதியானது மற்றும் நெகிழ்வானது. மேலும், வீடுகளிலும் கோவில்களிலும் எளிதாகக் கழற்றிவிடக்கூடியது.  பாதத்தின் மேற்பகுதி, பக்கவாட்டு மற்றும் பின்பகுதி  திறந்த நிலையில் இருக்கும் ஸ்லிப்-ஆன் (Slip-on) வடிவில் இந்தக்காலணிகள் உருவாக்கப்பட்டன.


5. இன்று, ஜோத்புரி மொஜாரி எந்தவொரு நிகழ்விற்கும் ஏற்ற வகையில் உள்ளூர் கைவினை கலைஞர்களால் அழகாக எம்ப்ராய்டரி செய்யப்படுகிறது. இயந்திரத்தால் செய்யப்பட்ட ஒரு  தோற்றமுடைய பொருட்களின் வருகையால், இந்த பாரம்பரிய கைவினைத் தொழில் நிலைத்திருப்பதற்கு இந்த அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


6. ஜோத்புரி மொஜாரிக்கான உள்நாட்டுச் சந்தையில் ₹100 கோடியாகவும், ஏற்றுமதி ₹10 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு (GI tag) ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், ஏற்றுமதி அதிகரித்து, இரண்டு ஆண்டுகளில் வணிகம் இரண்டு மடங்காகும் என்று தொழில்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர்.


இந்தியாவில் புவிசார் குறியீடு (GI tag) எவ்வாறு வழங்கப்படுகிறது?


1. பொருட்களின் புவிசார் குறியீடுகள், ஒரு பொருள் உருவான இடத்தைக் குறிப்பிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதி, பிராந்தியம் அல்லது நாட்டில் உருவானதன் காரணமாக, தரம் மற்றும் தனித்துவத்திற்கான உத்தரவாதத்தை அவை அளிப்பதால், இது போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன.


2. ஒரு தனித்துவமான சட்டமாகிய பொருட்களின் புவியியல் குறியீடுகள்,சட்டமாகிய 1999-ஆம் ஆண்டு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம், (Geographical Indications of Goods (Registration and Protection) Act)  இது போன்ற பொருட்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வந்தது. மேலும், உலக வர்த்தக அமைப்பின் (WTO) அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகத் தொடர்பான அம்சங்கள் ஒப்பந்தம் (Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) விதிகளுக்கு ஏற்ற வகையிலும் இந்தச்சட்டம் இயற்றப்பட்டது.


3. இது, பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகளைப் பதிவு செய்வதற்கும், பதிவுசெய்யப்பட்ட புவிசார் குறியீட்டிற்கு வழங்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளை மோசடியான பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)), புவிசார் குறியீடுகளை வழங்குகிறது.


4. மேலும், 2016-ஆம் ஆண்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கையானது, நாடு முழுவதும் புபுவிசார் குறியீடுகளை (GI) ஊக்குவிப்பதில் வலுவான முக்கியத்துவத்தை வழங்குகிறது. இது தொடர்பாக, புவிசார் குறியீடுகள் உட்பட அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும், கொள்கையில் அடையாளம் காணப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) புவிசார் குறியீடுகளை (GI) வழங்குகிறது.


இந்தியாவில் புவிசார் குறியீட்டின் (GI tag) முதல் தயாரிப்பு, 2004-05-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட டார்ஜிலிங் தேநீர் ஆகும்.


5. தனிநபர்கள், உற்பத்தியாளர்கள், அமைப்புகள் அல்லது உற்பத்தியாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அதிகார அமைப்பும் புவிசார் குறியீட்டுப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தச்செயல்முறையானது, மத்திய அரசால் சென்னையில் நிறுவப்பட்டுள்ள  புவிசார் குறியீடுகள் பதிவகத்தில் (Geographical Indications Registry) விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யும் முறையை கொண்டுள்ளது.


6. அதன்பிறகு, தேர்வாளர் அந்த அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்து கவனமாக ஆராய்வார். ஏதேனும், குறைபாடுகள் இருந்தால், விண்ணப்பதாரர் அவற்றை ஒரு மாதத்திற்குள் சரிசெய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தின்மீது பதிவாளருக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், விளக்கம் கோரும் அறிவிப்பு வழங்கப்படும். அந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு, அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அது புவிசார் குறியீட்டு இதழில் (GI Journal) வெளியிடப்படும்.




7. எந்தவொரு நபரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அறிவிப்பு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள் எதிர்ப்பு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரர் இதற்கு 2 மாதங்களுக்குள் பதிலளிக்கலாம். அவ்வாறு செய்யத் தவறினால், அவர் தனது விண்ணப்பத்தைக் கைவிட்டதாகக் கருதப்படுவார். பின்னர், தரப்பினர் தமது சான்றுகளை முன்வைப்பார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பளிக்கப்படும். ஒரு பொது அறிவிப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்போது, ​​அது பதிவு செய்யப்படும்.


8. ஒரு பொருளுக்கு இந்த முத்திரை வழங்கப்பட்டவுடன், எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ அதே பெயரில் அதுபோன்ற  பொருளை விற்க முடியாது. இந்த முத்திரை 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் தன்மை கொண்டுள்ளது. அதன் பிறகு அதை புதுப்பித்துக் கொள்ளலாம். புவிசார் குறியீட்டுப் பதிவின் மற்ற நன்மைகளில், அந்தப் பொருளுக்குச் சட்டப் பாதுகாப்பு அளித்தல், மற்றவர்களால் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.


9. புவிசார் குறியீட்டுப் பதிவு (GI registration) ஒரு பகுதிக்கு வழங்கப்படுகிறது, வர்த்தகருக்கு அல்ல. ஆனால், ஒரு பொருளுக்குப் பதிவு கிடைத்தவுடன், அந்தப்பொருளைக் கையாளும் வர்த்தகர்கள் புவிசார் குறியீட்டுச் சின்னத்துடன் அதை விற்க விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான புவிசார் குறியீட்டு எண் ஒதுக்கப்படும்.


சமீபத்தில் புவிசார்  குறியீடு (GI Tag) பெற்ற பொருட்கள்


1. சந்தன்நகரின் ஜோல்போரா சந்தேஷ் மற்றும் ஜனயின் மனோகரா: ஜூன் மாதத்தில், மேற்கு வங்கம் மேலும் நான்கு தயாரிப்புகளுக்கான புவிசார் குறியீடுகளைப் பெற்றது. இதன் மூலம், அந்த மாநிலத்தில் புவிசார்  குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. சந்தன்நகரின் ஜோல்போரா சந்தேஷ், ஜனாயின் மோனோஹாரா மற்றும் பாலகரின் பாரம்பரிய மரப் படகுகளும் அங்கீகாரம் பெற்றுள்ளன.



2. மாண்டுவின் 'குராசானி இம்லி': மத்தியப் பிரதேசத்தின் மாண்டுப்பகுதியில் காணப்படும் புகழ்பெற்ற பாவோபாப் மரங்களின் பழமான குராசானி இம்லி, ஜூன் 2026-ல் புவிசார் குறியீடு பெற்றது. இந்தப்பழம் அதன் தனித்துவமான இனிப்பு-புளிப்புச் சுவை மற்றும் அதிக ஊட்டச்சத்திற்காகப் பெயர் பெற்றது.


3. கடந்த மாதம் ஜார்க்கண்டின் பகையா பட்டு, குச்சாய் பட்டு, முண்டா நகைகள் மற்றும் மூங்கில் கைவினைப் பொருட்கள் புவிசார் குறியீட்டு (GI) அங்கீகாரத்தைப் பெற்றன. இது பாரம்பரிய அறிவை அடிப்படையாகக் கொண்ட கைவினைக்கலைகளுக்குத் தேசிய அங்கீகாரத்தை அளிக்கிறது. முண்டா சமூகத்தின் முண்டா நகைகள், அவற்றின் தனித்துவமான வடிவமைப்பு, பாரம்பரிய கைவினைத் திறன் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றவை. அவை அடையாளத்தையும் பாரம்பரியத்தையும்  வெளிக்காட்டுகின்றன.

4. ஆந்திரப் பிரதேசத்தின் போண்டூரு காதி: போண்டூரு காதி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள, உள்ளூரில் பட்நுலு என்று அழைக்கப்படும் போண்டூரு கிராமத்தில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய கைத்தறி பருத்தித் (traditional hand-woven cotton fabric) துணியாகும். அதேபகுதியில் விளையும் மலைப் பருத்தி, புனசா பருத்தி மற்றும் சிவப்புப் பருத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் துணி தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, பருத்தியைச் சுத்தம் செய்ய வாலுகா மீனின் தாடை எலும்பைப் பயன்படுத்துவதாகும். இது உலகில் வேறு எந்த பகுதியில் இல்லாத ஒரு நடைமுறையாகும்.

 
Share: