சர்தார் வல்லபாய் படேல் நினைவு நாள் : ஆரம்பத்திலிருந்தே, சர்தார் படேல் தனது அரசியல் வாழ்க்கையை வரையறுக்கும் குணங்களைக் காட்டினார். இரும்பு போன்ற மன உறுதி, கொள்கைகளின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மற்றும் விதிவிலக்கான அமைப்புத் திறன்களையும் பெற்றிருந்தார். இதை விளக்கும் மூன்று சம்பவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் : டிசம்பர் 15 சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினமாகும். நவீன இந்தியாவை வடிவமைப்பதில் தீர்க்கமான பங்கு வகித்த தலைவர் அவர்.
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டபடி, படேல் “நாட்டை ஒரே நூலில் இணைப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். பிளவுபடாத மற்றும் வலிமையான பாரதத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றிய நிகரற்ற பங்களிப்பை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்காது.”
சுதந்திரத்திற்குப் பிறகு சுதேச மாகாணங்களை இந்தியாவுடன் இணைப்பதில் சர்தார் வல்லபாய் படேலின் பங்கு நன்கு அறியப்பட்டிருந்தாலும், அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் பரவலாக அறியப்படாத பல ஊக்கமளிக்கும் சம்பவங்கள் உள்ளன. தனது வாழ்க்கையின் சிறு வயதிலிருந்தே, ஒரு மாணவராகவும் பின்னர் ஒரு வழக்கறிஞராகவும், சர்தார் படேல் பிற்காலத்தில் அவரது அரசியல் வாழ்க்கையை வடிவமைத்த குணங்களை வெளிப்படுத்தினார். இரும்பு போன்ற மன உறுதி, கொள்கைகளின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மற்றும் நிகரற்ற அமைப்புத் திறன்களையும் பெற்றிருந்தார்.
சுதந்திரப் போராட்டத்தின் மற்ற இரண்டு மாபெரும் தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவைப் போலல்லாமல், சர்தார் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஏராளமான சொற்பொழிவுகளையும், கடிதங்களையும் விட்டுச் செல்லவில்லை. அவரது செயல்களின் மூலமாகவே படேலைப் பற்றிய தெளிவான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. மேலும், அவரது வாழ்க்கையிலிருந்து வரும் பின்வரும் மூன்று நிகழ்வுகள் அவரது மிக முக்கியமான குணங்களில் சிலவற்றை எடுத்துக்காட்டுகின்றன.
வல்லபாய் படேல் எப்படி 'சர்தார்' பட்டத்தைப் பெற்றார்?
1926-ல், குஜராத்தின் பர்தோலி பகுதியில் சில ஆண்டுகளாகப் பயிர் விளைச்சல் குறைவாக இருந்தபோதிலும், பிரிட்டிஷ் அரசாங்கம் வரிகளை உயர்த்தியது. விவசாயிகள் வரிகளைச் செலுத்த மறுத்து ஒரு சத்தியாகிரகத்தைத் திட்டமிட்டனர். இந்த இயக்கத்திற்குப் படேல் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அவர் அப்பகுதியை துணைப் பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் தன்னார்வலர்களை நியமித்து, அதைத் திறமையாக ஏற்பாடு செய்தார். பிரிட்டிஷார் போராட்டக்காரர்களை ஒடுக்கி, அவர்களின் சொத்துக்களை ஏலம் விட முயன்றபோது, ஏலத்தில் பங்கேற்க மிகச் சிலரே வந்தனர்.
இறுதியில், வரிகள் குறைக்கப்பட்டன. படேலின் தலைமைத்துவமும் அமைப்புத் திறன்களும் பெரிதும் பாராட்டப்பட்டன. மேலும், அவருக்கு 'சர்தார்' (Sardar) என்ற பட்டம் வழங்கப்பட்டது. பெரும்பாலான குறிப்புகள் மகாத்மா காந்திதான் அவரை முதலில் சர்தார் என்று அழைத்தார் என்று கூறினாலும், மற்றவர்கள் வழக்கறிஞர் கே.எஃப். நரிமானுக்கு அந்தப் பெருமையைக் கொடுக்கிறார்கள்.
சர்தார் படேல் குறித்த டைம் இதழின் அட்டைப்படம்
ஜனவரி 1947-ல், டைம் இதழ் சர்தார் படேலை தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் தலைப்பு எளிமையாக, “தலைவர்” (The Boss) என்று இருந்தது.
இந்தக் கட்டுரை மெலும் குறிப்பிட்டதாவது, “படேலுக்குத் தன்னை ஒரு துறவி என்றோ, சிறந்த பேச்சாளர் என்றோ, அல்லது ஒரு மதவெறியர் என்றோ காட்டிக்கொள்ளும் பாசாங்கு இல்லை என்று கூறியது. அமெரிக்கச் சொற்களில் சொல்வதானால், அவர் ஒரு அரசியல் தலைவர் (Political Boss) ஆவார். செல்வந்தர்களான இந்து மற்றும் பார்சி தொழிலதிபர்கள் (சர்தார் படேலின் மகனின் முதலாளியான சி.எச். பாபா, அப்போதுதான் பணிகள், சுரங்கங்கள் மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றவர் போன்றோர்) பெரும் தேர்தல் நிதித் தொகையை அவர் கைகளில் வழங்கினர். அவர்களின் பணம், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மற்றும் தொடர்ச்சியான முயற்சியைப் பயன்படுத்தி, படேல் இந்தியாவின் அனைத்து சிக்கல்களையும் பாதிக்கும் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஒவ்வொரு போராட்டத்திலும் அவரது நோக்கம் ஒன்றாகவே இருந்தது. அவை ”இந்தியாவுக்கான அதிகாரம்” ஆகும்.
படேல் முதன்முதலில் ஏற்பாடு செய்த இயக்கம் ஒரு மாணவர் கிளர்ச்சி (student revolt) என்றும் டைம் கட்டுரை குறிப்பிட்டது. பென்சில்கள் மற்றும் காகிதங்களில் நியாயமற்ற முறையில் லாபம் ஈட்டியதாக அவர் குற்றம் சாட்டிய ஒரு ஆசிரியரை அவர் எதிர்த்தார்.
வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி இதைத் தனது ”படேல்: ஒரு வாழ்க்கை” (Patel: A Life) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் படேலின் பள்ளி நாட்களில், வல்லபாய் ஒரு மாணவர் புறக்கணிப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்த பிறகு, மற்றொரு ஆசிரியர் நோட்டுப் புத்தகங்களையும் பென்சில்களையும் சட்டவிரோதமாக விற்பதை நிறுத்த வேண்டியிருந்தது என்று அவர் கூறுகிறார்.
அவர் தனக்குப் பதிலாகத் தன் சகோதரரை இங்கிலாந்துக்கு அனுப்பியது எப்போது?
இளைஞராக இருந்தபோது, வல்லபாய் சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்து செல்ல வேண்டும் என்று கனவு கண்டார். அவர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியபோது, இந்தக் கனவை அடைவதற்காகத் தன்னால் முடிந்த ஒவ்வொரு பைசாவையும் சேமித்தார். இருப்பினும், கடைசி நேரத்தில், அவருடைய அனைத்து ஆவணங்களும் தயாராக இருந்தபோது, அவரும் ஒரு வழக்கறிஞராக இருந்ததும், அவருடைய பெயரின் முதல் எழுத்துக்களும் VJ படேல் என்று இருந்தவருமான அவருடைய மூத்த சகோதரர் வித்தல்பாய், தானே வெளிநாடு செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். தயக்கமின்றி, வல்லபாய் தன் மூத்த சகோதரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். மேலும், அவர் படிக்கும்போது அவருடைய செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வல்லபாய் 1921-ல் குறிப்பிட்டதாவது, “என் மூத்த சகோதரர் என்னிடம், “முதலில் நான் இங்கிலாந்து போகிறேன். நான் திரும்பி வந்த பிறகு, உனக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நீ சென்ற பிறகு என்னால் செல்ல முடியாது’ என்றார்.” வல்லபாய் தனது சகோதரர் முடிவெடுக்கப் பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்தார். பதினைந்தாவது நாளில், அவரது சகோதரர் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.
அந்தப் பதினைந்து நாட்கள் வித்தல்பாய் தனது இறுதி முடிவை எடுப்பதற்காக வழங்கப்பட்டது. காந்தி தனது புத்தகத்தில், வித்தல்பாய் இங்கிலாந்து சென்ற பிறகு, “வழக்கமான 36 மாதங்களுக்குப் பதிலாக 30 மாதங்களில் தனது படிப்பை முடித்தார். இறுதித் தேர்வில், அவர் முதல் வகுப்பில் முதல் இடத்தைப் பிடித்து, ஆறு மாத காலச் சலுகையுடன் 50 பவுண்டுகள் பரிசையும் வென்றார்” என்று எழுதுகிறார்.
Original link: