புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன? -ரோஷ்னி யாதவ்

 இந்தியாவின் மின்சார உற்பத்தி 2070-ஆம் ஆண்டிற்குள் நிலக்கரியைச் சார்ந்திருக்காமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (சூரிய ஒளி, காற்று போன்றவை) மூலம் பெருமளவு மாற்றமடையும் என அரசின் கொள்கை அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில 'கட்டமைப்புச் சிக்கல்கள்' காரணமாக, இதுவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் உண்மையான மின்சார உற்பத்திக் குறைவாகவே உள்ளது என்பதையும் அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


— இந்தியாவின் மின்சாரத் துறையில் நிலக்கரியானது, நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 74 சதவீதம் பங்களிப்பதோடு, நம்பகமான மற்றும் குறைந்த செலவிலான அடிப்படை மின்சார ஆதாரமாகவும் விளங்குகிறது.


— இருப்பினும், ‘விக்சித் பாரத் மற்றும் நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய சூழல்’ (Scenarios Towards Viksit Bharat and Net Zero) என்ற தலைப்பிலான நிதி ஆயோக் அமைப்பின் ஆய்வின்படி, இந்தியா தனது தூய்மையான எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துவதால், மின்சார உற்பத்தித் துறையில் நிலக்கரியின் பயன்பாடு படிப்படியாக குறையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


— தற்போதைய கொள்கை சூழலின்படி (Current Policy Scenario), இப்போதுள்ள நடைமுறைகளே தொடரும் பட்சத்தில், மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கு 2024-25-ஆம் ஆண்டில் உள்ள 20 சதவீதத்திலிருந்து உயர்ந்து, 2070-ஆம் ஆண்டிற்குள் 80 சதவீதத்திற்கும்  அதிகமாக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 


— இந்தச் சூழலில், மின் உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 2070-ஆம் ஆண்டிற்குள் 6 சதவீதம்  முதல் 10 சதவீதம் வரை வெகுவாகக் குறையக்கூடும் என்கின்றனர். இந்தியாவின் 2070 'நிகர பூஜ்ஜிய' (Net Zero) இலக்கை நோக்கிய மிகத் தீவிரமான திட்டத்தின்கீழ், நிலக்கரி மூலமான மின்உற்பத்தி முற்றிலுமாக தேவையில்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


— நிலக்கரியின் பயன்பாடு குறையும்போது, அணுசக்தியின் பங்களிப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய கொள்கை சூழலின் (CPS) கீழ், இப்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் அணுசக்தியின் பங்கு 2070-ஆம் ஆண்டிற்குள் 5-8 சதவீதமாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இது நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்திற்கு மாற்றாகவும், கார்பன் வெளியேற்றம் இல்லாத அடிப்படை மின்சாரத்தை வழங்குவதிலும் அணுசக்தியின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


— கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் 2014-ஆம் ஆண்டில்  76.38 ஜிகாவாட் (GW) அளவாக இருந்தது, டிசம்பர் மாதம்  2025-ஆம் ஆண்டுக்குள் 258 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


— இந்தியாவின் மொத்த மின் உற்பத்தித் திறனான 513 ஜிகாவாட்டில் (GW), நிலக்கரி போன்ற படிம எரிபொருள்கள் 48 சதவீதம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் 50 சதவீதம், மற்றும் அணுசக்தி 1.7 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன. மொத்த உற்பத்தித் திறனில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு, 2014-15 ஆம் ஆண்டில் இருந்த 29 சதவீதத்திலிருந்து, 2025 டிசம்பர் மாதத்திற்குள் 50 சதவீதமாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.


— இருப்பினும், மின் உற்பத்தித்திறன் இவ்வளவு வேகமாக அதிகரித்த போதிலும், உண்மையான மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின்) பங்கு குறைவாகவே உள்ளது. இது 2013-14-ஆம் ஆண்டில் 19.6 சதவீதத்திலிருந்து, 2024-25-ஆம் ஆண்டில் 22 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.


— சூரியசக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை கையாளுவதில் உள்ள கட்டமைப்புச் சவால்களே இந்த இடைவெளிக்கு முக்கியக் காரணம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.


— இந்த எரிசக்தி ஆதாரங்கள் பொதுவாகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, அவற்றின் முழுத் திறனைவிடக் குறைவான உற்பத்தியையே தருகின்றன. மேலும், இவை சீரற்ற உற்பத்தி, மாறுபடும் தன்மையால் ஏற்படும் மின்தடை, மின்விநியோகக் கட்டமைப்பு வரம்புகள், குறைந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் விநியோகச் சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றன.


— புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சீராகக் கிடைக்காததால், அது நாள் முழுவதும் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மின் விநியோகத்தை சீராக வைத்திருக்கவும், வேகமாக அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி இன்னும் அவசியமாக உள்ளது.


— இந்தியாவின் எதிர்கால மின்சாரத் திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், நீண்டகால அடிப்படையில் அணுசக்தி ஒரு முக்கியமான ஆதரவாக இருக்கும் என்றும், அது மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறன் 2025-ல் உள்ள 8.18 GW-லிருந்து, 2070-ஆம் ஆண்டிற்குள் 90 முதல் 135 ஜிகாவாட் (GW) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய அளவைவிட சுமார் 10 முதல் 15 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. 


— தூய்மை எரிசக்திக்கு (Clean Energy) முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்திற்கு நிலக்கரி தொடர்ந்து அவசியமான ஒன்றாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏனெனில், பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்குத் தேவையான ‘நீண்டகால சேமிப்பு வசதிகள்’ (Long-duration storage) இன்னும் அதிக செலவுமிக்கதாகவும், பரவலாகப் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளன. அதேசமயம், அணுசக்தித் திட்டங்களுக்கு அதிக முதலீடும், நீண்டகால கட்டுமான காலமும் தேவைப்படுகின்றன.


— தற்போதைய கொள்கை சூழலின்படி (CPS), நிலக்கரி மின் உற்பத்தித் திறன் 2025-ஆம் ஆண்டில் 268 ஜிகாவாட்டிலிருந்து உயர்ந்து, 2050-ஆம் ஆண்டிற்குள் 450–470 ஜிகாவாட் GW என்ற உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிகர பூஜ்ஜிய உமிழ்வு (Net Zero) சூழலில், 2045-ஆம் ஆண்டிலேயே சுமார் 420–435 ஜிகாவாட் (GW) என்ற அளவில் உச்சமடைந்து, அதன் பிறகு மின் சேமிப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றுகள் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாறுவதால் படிப்படியாக குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. 


— காலப்போக்கில், புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், தற்போதுள்ள சில நிலையங்கள் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தப்படும் ஒரு கூடுதல் மின் உற்பத்தி ஆதாரமாக, குறைந்த அளவிலேயே இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


original article : What are the major initiatives taken by India in the direction of renewable energy? -Roshni Yadav

Share: