விஜய் அரசின் முதல் வரவு-செலவு அறிக்கை : தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிதிச் சவாலாக கடன் ஏன் உள்ளது? -உதித் மிஸ்ரா

 தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தனது வரவு-செலவு அறிக்கை உரையில், முந்தைய அரசுகள் தங்கள் வருவாயைவிட மிக அதிகமாகச் செலவிட்டதாகவும், அதன் விளைவாக, தாங்கள் நிலையான முறையில் திருப்பிச் செலுத்தக்கூடிய அளவைவிட மிக அதிகமான தொகையைக் கடனாகப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.


முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் வரவு-செலவு அறிக்கையை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் என். மேரி வில்சன் புதன்கிழமை தாக்கல் செய்தார்.


நிதியமைச்சர், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் அளவை $1.5 டிரில்லியன் ஆக உயர்த்துவதாக உறுதியளித்தார். தற்போதைய நிலையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross state domestic product (GSDP)) அந்நிய செலாவணி விகிதத்தைப் பொறுத்து $350 பில்லியன் முதல் $400 பில்லியன் வரை உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தின் அளவை மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்த்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.


மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுடன் சேர்ந்து, தமிழ்நாடும் நீண்டகாலமாக இந்தியாவின்  வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அனைத்து இந்திய மாநிலங்களிலும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு வளர்ந்த போதிலும், மாநிலத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது.


முக்கிய சவால்


தனது நிதிநிலை அறிக்கை உரையில், கடந்தகால அரசுகள் தாங்கள் ஈட்டிய வருவாயை விடப்  அதிகமாகச் செலவு செய்துள்ளன என்றும்,  நிலையான முறையில் திருப்பிச் செலுத்தும் திறனைவிட அதிகமாகக் கடன் வாங்கியுள்ளன என்றும் வில்சன் தெளிவுபடுத்தினார்.


மாநிலத்தின் நிதி நிலைமை பற்றாக்குறையில் உள்ளது. கடன் சுமை, போதிய வருவாய் இல்லாத நிலை மற்றும் நிதி இழப்பு போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஒரு கருவூலமே எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இருப்பினும், நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதிசார்  முன்னேற்றமான பாதைக்குக் கொண்டுவர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.


கீழே உள்ள இரண்டு வரைபடங்கள், தமிழ்நாடு எதிர்கொள்ளும் நிதிச் சவாலின் ஒரு கண்ணோட்டத்தை வழங்குகின்றன.


வரைபடம் 1-ல், தமிழ்நாடு மற்றும் அதற்கு ஒப்பிடத்தக்க பொருளாதார அளவைக்கொண்ட சில மாநிலங்களின் மொத்த அரசுக் கடன், மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த விகிதம் கடந்த காலத்தில் பெரிதாக அதிகரிக்கவில்லை என்றாலும், பொருளாதார அளவைக்கொண்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி  (Debt-to-GSDP) விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.


இதற்குக் காரணம், மாநிலத்தன் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளியை ஈடுசெய்யத் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிக அளவில் கடன் வாங்கி வருவதே ஆகும். அதிக அளவிலான கடன் சுமை இருப்பதன் விளைவாக, மாநிலம் தனது வருவாயை அதிகரிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ளாத பட்சத்தில், காலப்போக்கில் வட்டிச் சுமை  அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


இதைத்தான் வரைபடம் 2 காட்டுகிறது. தமிழ்நாட்டில், கடந்தகாலக் கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்துவதற்காகச் செலவிடப்படும் பணத்தின் சதவீதம் சீராக அதிகரித்து வருகிறது.


கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்துவதற்கே அரசின் வருவாயில் அதிகப் பணம் செலவிடப்படுவதால் ஏற்படும் உடனடி விளைவு, ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற நலத் திட்டங்களுக்காக அரசு ஒதுக்கக்கூடிய நிதி குறைந்து விடுகிறது அல்லது மூலதனச் செலவுகளுக்காக (Capital Expenditure) சாலைகள், துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காகச் செய்யப்படும் முதலீடுகளுக்காகவும் அரசிடம் குறைவான நிதியே மீதமிருக்கும். இது போன்ற உள்கட்டமைப்பு சொத்துகளே மாநிலத்தின் பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முக்கிய முதலீடுகளாகும்.


கடந்த மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் (White Paper), அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மாநிலத்தின் நிதி நிலையை மிகக்கடுமையான கட்டத்திற்கு தள்ளியுள்ளது  என்பதை விளக்கியது.

அதிகரித்துவரும் வட்டிச்செலவுகளே கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்குகின்றன. ஏனெனில், வட்டித் தொகையைச் செலுத்துவதற்கு அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. வருவாய் வரவுகள் (Revenue Receipts) போதுமானதாக இல்லாவிட்டால், அந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசு மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவே 'கடன்–வட்டி சுழற்சி' (Debt-Interest Spiral) என்று அழைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாடு இந்தச்சுழற்சியின் ஆரம்ப நிலையிலேயே நுழைந்து கொண்டிருக்கிறது என்று வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது.


வரவு-செலவு அறிக்கையின் குறிப்பிடுகள் 


நிதிநிலை தொடர்பான கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு செலவுகளைக்குறைப்பதன் மூலம் கடன் வாங்குவதைக் குறைக்கவும், அதேவேளையில் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறியும் நிலை ஏற்பட்டுள்ளது.


அரசு ஏற்கனவே  15,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட 'வருவாய் அதிகரிப்பு குழு' (Revenue Augmentation Committee) அமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.


2025-26 ஆம் ஆண்டில் 28%-ஆக இருந்த கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதமானது, 2027-28-ஆம் ஆண்டில் 26.57% ஆகவும், 2028-29-ஆம் ஆண்டில் 26.10%-ஆகவும் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்தார்.


Original articles: First Vijay government budget: Why debt is Tamil Nadu’s biggest fiscal challenge. -Udit Misra

Share: