NCERT பாடப்புத்தகங்களில் இருந்து நீதித்துறை ஊழல் குறித்த குறிப்புகளை நீக்குவது, உண்மையான பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? -உம்மர் ஜமால்

 நீதித்துறையின் மாண்பைப் பாதுகாப்பதும், கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதும் ஒன்றிற்கு ஒன்று எதிரான குறிக்கோள்கள் அல்ல. ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் தனது நிறுவனங்கள்மீது மரியாதையையும், அதே நேரத்தில் அவற்றை விமர்சனரீதியாக ஆய்வு செய்யும் துணிச்சலையும் கொண்டிருக்க வேண்டும்.


எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வழக்கமான மாற்றம், எதிர்பாராத விதமாக இந்திய நீதித்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு  (National Council of Educational Research and Training (NCERT)) வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தகத்தில் “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்கிறது. குறிப்பாக, தேங்கிக் கிடக்கும் வழக்குகள், நீதிபதிகளின் பற்றாக்குறை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற சிக்கல்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது நீதித்துறையின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் கூறியுள்ளது.


இந்த அத்தியாயம் நீதிமன்றக் கட்டமைப்புகளை விளக்குவதுடன் நின்றுகொள்ளாமல், திறமையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற உண்மையானப் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியது. இதன் சொல்லாடல்கள் நீதித்துறையில் முறையான பலவீனங்கள் இருப்பதை உணர்த்தியதால், உச்சநீதிமன்றம் இதனை ஏற்க முடியாத ஒன்றாகக் கருதியது. பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த பாடப்புத்தகத்தை விமர்சித்ததுடன், நீதித்துறை ஊழல் குறித்த அந்தப் பகுதியை "நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ஆழமாக வேரூன்றிய, நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி" என்று குறிப்பிட்டது.


நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் அமைந்த அந்தப் பாடப்புத்தகக் கருத்துக்கள், நீதித்துறையை இரத்தக் காயம் அடையச் செய்த துப்பாக்கிக் குண்டு போன்றது என்றும், இத்தகையக் கூற்றுக்களை இளம் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது பெரும் ஆபத்தானது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடப்புத்தகத்திற்குத் தடை விதித்த நீதிமன்றம், அதன் அச்சு மற்றும் மின்னணுப் பிரதிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஏன் தொடங்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) இயக்குநர் மற்றும் பள்ளி கல்வித்துறைச் செயலாளருக்கு நீதிமன்றம் அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.


உச்சநீதிமன்றம் நீதித்துறை மீதான நியாயமான விமர்சனங்களை எதிர்க்கவில்லை என்றும், அதேவேளையில் எளிதில் எதையும் நம்பக்கூடிய மாணவர்களிடம் தவறான அல்லது அவதூறான தகவல்கள் உண்மைகளாக முன்வைக்கப்படுவது குறித்தே கவலை கொள்வதாகவும் தெளிவுபடுத்தியது. இந்த விவகாரத்தில், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தலைமையிலான அரசுத் தரப்பு மன்னிப்பு கோரியதுடன், சம்பந்தப்பட்ட பாடப்பகுதியை உருவாக்கியவர்கள் இனி இதுபோன்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள் என்று உறுதியளித்தது. இருப்பினும், அரசாங்கத்தின் இந்த அதிகாரப்பூர்வ பதில் உண்மையான வருத்தத்தைவிட தற்காப்பு மனப்பான்மையையே வெளிப்படுத்துவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீவிரமான எதிர்வினை, குறிப்பாகத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்களின் கருத்துக்கள், குருட்டுத்தனமான ஆதரவோ அல்லது முற்றிலுமான நிராகரிப்போ இன்றி ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை ஆகும். நீதிமன்றம் தனது நிறுவனத்தின் மாண்பைக் காக்க முயற்சிப்பது ஒருபுறம் நியாயமானதாகத் தெரிந்தாலும், பாடப்புத்தகத்திற்கு முழுமையான தடை விதிப்பது, பிரதிகளின் பறிமுதல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவது போன்ற அதன் அதிரடிச் செயல்கள், அந்தப் பிரச்சனைக்கு இணையாக எடுக்கப்பட்ட ஒரு சரியான அளவிலான நடவடிக்கைதானா?  என்கிற கவலையை எழுப்புகிறது.


ஒரு உண்மை மிகத் தெளிவாக உள்ளது: பாடப்புத்தகங்களிலிருந்து நீதித்துறை ஊழல் தொடர்பான குறிப்புகளை நீக்குவதால், நீதித்துறையில் உள்ள ஊழல் ஒழிந்துவிடாது. பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், மௌனமாக இருப்பதன்மூலம் மட்டும் ஒரு பிரச்சனையை மறைத்துவிடவோ அல்லது இல்லாமலோ செய்துவிட முடியாது.


2025-ஆம் ஆண்டில், யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் அதிகாரப்பூர்வ கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், உயர்மட்டங்களில் உள்ள பொறுப்புக்கூறல் குறித்த தீவிர கவலைகளை எழுப்பியது. அதேபோல், 2024-ஆம் ஆண்டின் இறுதியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மாவட்ட நீதிபதி பிணை வழங்குவதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்பட்டு அவர் மீது முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) பதிவு செய்யப்பட்டதும் கீழ்நிலை நீதித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள், பள்ளிப் பாடப்புத்தகங்களில் இவை எவ்வாறு சித்தரிக்கப்பட்டாலும், நிறுவனரீதியான ஊழல் சிக்கல்கள் இன்னும் தொடர்வதையே காட்டுகின்றன. இவ்வாறான உண்மைகளை மாணவர்களிடமிருந்து மறைப்பது சமூகப் பொறுப்பு சார்ந்த கல்வியை வலுவிழக்கச் செய்வதோடு, அதிகாரத்தைக் கேள்விகேட்கும் திறனற்ற குடிமக்களை உருவாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.


ஒரு குடிமகனின் சமூகப் பொறுப்புகள் சார்ந்த பயிற்சி என்பது அரசு நிறுவனங்களை விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, பொது அமைப்புகளின் பலம் மற்றும் பலவீனம் ஆகிய இரண்டையும் மாணவர்கள் புரிந்து கொள்ள உதவுவதே அதன் உண்மையான நோக்கமாகும். ஒரு ஜனநாயக நாட்டில், எந்தவொரு நிறுவனமும் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வெளிப்படைத்தன்மையும் சீர்திருத்தமும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். சங்கடமான உண்மைகளை மறைப்பது தற்காலிகமாக விமர்சனங்களைக் குறைக்கலாம், ஆனால் அது நிலையான நம்பிக்கையை உருவாக்காது. வெளிப்படைத்தன்மை மற்றும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளின் மூலமே ஒரு அமைப்பின் மீதான நம்பிக்கை வளருமே தவிர, உண்மைகளைத் தவிர்ப்பதன் மூலம் அல்ல என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


அதே நேரத்தில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல்களின் பின்னணியில் தலைமை நீதிபதியின் இந்த எதிர்வினையைப் புரிந்து கொள்ள வேண்டும். 2015-ஆம் ஆண்டில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission (NJAC)) உச்சநீதிமன்றம் ரத்து செய்து, கொலிஜியம் முறையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அன்றிலிருந்து, நீதிபதிகள் நியமன செயல்முறை என்பது நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே ஒரு தீராதப் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், காலதாமதம் ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே வேளையில், நீதிபதிகள் நியமனத்தில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்தச் சூழலில், பாடப்புத்தக சர்ச்சை என்பது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, நீதிபதிகள் நியமன முறையை மாற்றக் கோரும் ஒரு பெரிய போக்கின் பகுதியாக நீதிமன்றத்திற்குத் தோன்றியிருக்கலாம் என்றும் இந்தக் கண்ணோட்டம் நீதிமன்றத்தின் கடும் எதிர்வினைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இந்தச் சூழலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. பாடப்புத்தகத்தின் நடை, தொனி அல்லது துல்லியம் தொடர்பான பிரச்சனைகளை, அந்த அத்தியாயத்தைத் தடை செய்வதற்குப் பதிலாக, திருத்தங்கள் மற்றும் தெளிவுபடுத்துதல்கள் மூலமாகவே சரிசெய்திருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 


நீதித்துறையின் மாண்பைப் பாதுகாப்பதும், கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதும் ஒன்றிற்கு ஒன்று எதிரான குறிக்கோள்கள் அல்ல. ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் தனது நிறுவனங்கள் மீது மரியாதையையும், அதே நேரத்தில் அவற்றை விமர்சனரீதியாக ஆய்வு செய்யும் துணிச்சலையும் கொண்டிருக்க வேண்டும். ஊழல், நிர்வாகத் திறன் குறைபாடு மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்து மாணவர்களின் வயதுக்கேற்ற புரிதலுடன் கலந்துரையாடுவது ஜனநாயகத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றும் மாறாக, இது அதிகாரத்தில் இருப்பவர்களின் பொறுப்புணர்வை ஊக்குவித்து ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்கின்றனர். 


அதேநேரத்தில், நீதித்துறை மீதான விமர்சனங்கள் உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதோடு, அவை பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்பட வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நிறுவனத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக அதனை மேலும் வலுப்படுத்துகின்றன. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) வெளியிட்ட பாடப்புத்தகத்தின் அத்தியாயத்தைத் தடை செய்வது உடனடி விமர்சனங்களைத் தடுத்து நிறுத்தலாமே தவிர, அந்தப் பாடம் எழுப்பிய ஆழமான பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது என்கின்றனர். கடினமான உண்மைகளை மறைப்பதன் மூலம் அல்லாமல், அவற்றை முறையான விவாதம் மற்றும் சீர்திருத்த மனப்பான்மையுடன் எதிர்கொள்வதன் மூலமே ஜனநாயகம் நிலைத்துநிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


உம்மர் ஜமால், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு கட்டுரையாளர் ஆவார். அவர் தற்போது ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் நீதித்துறை எழுத்தராகவும் மற்றும் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article : Will purging reference to judicial corruption from NCERT textbooks solve the real problem? -Ummar Jamal

Share: