இந்தியாவின் முனைவர் பட்டக் கல்வித் திட்டங்களை ஏன் மாற்றி அமைக்க வேண்டும்? -பிஜு தர்மபாலன்

 இந்தியா தற்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது; இவற்றைத் தரமான முனைவர் பட்ட (PhD) ஆராய்ச்சிகளின் மூலம் தீர்க்க முடியும். பொது சுகாதாரம், விவசாயம், நிலைத்தன்மை, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் கல்வி எனப் பல துறைகளில் இந்தச் சிக்கல்கள் நீடிக்கின்றன. ஆனால், நம்மிடம் தற்போது இருக்கும் கல்வி முறைகள், மக்களின் அடிப்படைத் தேவைகளை மையமாகக் கொண்ட இத்தகைய ஆய்வுகளுக்குப் போதிய ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குகின்றனவா என்பதே இங்குள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.


சீனா சமீபத்தில் தனது முதல் "செயல்முறை முனைவர் பட்டங்களை" (Practical PhDs) வழங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, பாரம்பரியமான ஆராய்ச்சி கட்டுரைகளுக்குப் பதிலாக, நடைமுறை உலகில் பயன்படுத்தக்கூடிய நேரடித் தயாரிப்புகளை உருவாக்கியதற்காக இந்த பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு, இந்தியாவில் முனைவர் பட்டக் கல்வியின் பொருத்தம், அதன் கட்டமைப்பு மற்றும் கலாச்சாரம் குறித்து நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்பியுள்ளது. சீனாவின் இந்தப் புதிய முறையில், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் நீண்ட ஆய்வேடுகள் அல்லது ஆய்விதழ் வெளியீடுகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடப்படாமல், அவர்கள் உருவாக்கிய செயல்படும் முன்மாதிரிகள் மற்றும் நடைமுறை வாழ்க்கைப் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. 

இந்த மாற்றமானது, நடைமுறைச் சாத்தியமான கண்டுபிடிப்புகளையும் கல்விசார் எழுத்துகளுக்கு இணையானதாகக் கருதுகிறது. மேலும், ஒரு முனைவர் பட்டம் (PhD) என்பது நீண்ட ஆய்வறிக்கைகளையும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்ற நீண்டகால நம்பிக்கையை இது கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு முனைவர் பட்டத்தை ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட வேண்டுமா அல்லது அந்த ஆராய்ச்சியின் சமூகத் தாக்கம் மற்றும் நடைமுறைப் பயன்பாட்டை வைத்து மதிப்பிட வேண்டுமா என்பதை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்கின்றனர். 


கல்விசார் குறைபாடு


இந்தியாவில் ஆராய்ச்சிசெய்ய விரும்பும் மாணவர்களுக்கு உள்ள ஒரு மிகப்பெரிய சவால், முனைவர் பட்டப் (PhD) படிப்பை முடிக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்வதாகும். பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இதை முடிக்க மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும், சில சமயங்களில் எட்டு ஆண்டுகள் வரையிலும்கூட ஆகிறது. இந்தத் தாமதத்திற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் (Publishing) ஏற்படும் சிரமங்களோடு தொடர்புடையவை. பல துறைகளில், ஒரு மாணவரின் முன்னேற்றமானது அவருடைய தனித்துவமான சிந்தனைகளின் ஆழத்தை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, குறிப்பிட்ட தரவுத்தளங்களில் பட்டியலிடப்பட்ட ஆய்விதழ்களின் எண்ணிக்கை மற்றும் அந்த ஆய்விதழ்களின் புகழை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய அணுகுமுறை, ஆராய்ச்சியின் தரம் மற்றும் அதன் பொருத்தப்பாடு ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. 


கல்விசார் மேன்மையை நிலைநாட்டுவதில் ஆய்வறிக்கைகளை வெளியிடுவது ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும், ஒரு பட்டத்தைப் பெறுவதற்காகப் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட இதழ்களில் ஆய்வுகளை வெளியிட வேண்டும் என்பதில் தற்போது காட்டப்படும் அதீத ஆர்வம், ஆழமற்ற மேலோட்டமான ஆராய்ச்சிகளுக்கே வழிவகுக்கிறது. இத்தகைய அணுகுமுறையால் ஒரு குறிப்பிட்ட துறையின் அறிவுத்தளம் விரிவடைவதோ அல்லது நடைமுறை உலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைப்பதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஏதேனும் ஒரு இதழில் (journal) வெளியிட்டே தீரவேண்டும் என்ற கட்டாயம், அவர்களுக்குப் பெரும் மனஅழுத்தத்தை உருவாக்குகிறது. இது தரம் குறைந்த அல்லது போலி இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவது போன்ற நெறிமுறையற்றச் செயல்களில் அவர்கள் அறியாமலேயே ஈடுபடுவதற்கான சூழல் அமைந்துவிடுகிறது.


அறிஞர்களின் அவலநிலை


பல ஆய்வகங்களில், முனைவர் பட்ட (PhD) ஆராய்ச்சியாளர்கள் வெறும் தொழிலாளர்களைப் போல நடத்தப்படுவதோடு, அவர்களின் உழைப்பை மேற்பார்வையாளர்கள் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்களைத் தக்கவைத்துக்கொண்டு, அவர்களின் உழைப்பிலிருந்து ஆதாயம் அடைவதற்காக, 'ஆய்வுக் கட்டுரை வெளியீடு' என்ற பெயரில் மாணவர்கள் ஆய்வகத்தில் தங்கும் காலத்தை மேற்பார்வையாளர்கள் திட்டமிட்டே நீட்டிக்கின்றனர். மேலும், தங்கள் ஆய்வகத்தின் செயல்பாடுகளைத் தொடர, மாணவர்களுக்குச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகும் என்ற வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் உண்மையில், இத்தகைய வெளியீடுகள் மாணவர்களின் எதிர்காலத்தைவிட, மேற்பார்வையாளர்களின் பணி மதிப்பீட்டிற்கும் பதவி உயர்விற்குமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.


கட்டணம் பெற்றுக்கொண்டு விரைவாக ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தரமற்ற இதழ்களால் இந்தப் பிரச்சனை மேலும் மோசமடைகிறது. ஆய்வு மாணவர்களுக்கு இருக்கும் 'கட்டுரை வெளியிட வேண்டும்' என்ற நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ளும் இத்தகைய இதழ்கள், கல்வி நேர்மையைக் குலைக்கும் குறுக்குவழிகளை உருவாக்குகின்றன. தற்போதைய சூழலில், இந்தியக் கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட இதழ்களில் கட்டுரைகளை வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும், அத்தகைய இதழ்களின் தரமும் நம்பகத்தன்மையும் பெருமளவில் வேறுபடுகின்றன. மேலும், இந்த அங்கீகாரமே இன்று ஒரு வணிகமாக மாறிவிட்டது. இதன் விளைவாக, பெரும்பாலான முனைவர் பட்ட ஆய்வுகள் அறிவியல்ரீதியான தரத்தையோ அல்லது சமூகத்திற்கான பங்களிப்பையோ வழங்குவதற்குப் பதிலாக, வெறும் நிர்வாக நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.


ஆய்வேடுகளை சமர்ப்பிப்பதில் உள்ள தடைகள்


பல பல்கலைக்கழகங்களில், முனைவர் பட்ட (PhD) ஆய்வறிக்கைகள் அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையை வைத்தே மதிப்பிடப்படுகின்றன, இதனால் அவை பெரும்பாலும் 200 பக்கங்களுக்கும் மேலாக அமைகின்றன. பக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஆய்வின் தரம் உயரும் என்ற தவறான நம்பிக்கை பரவலாக உள்ளது. ஆனால், நோபல் பரிசு பெற்ற பல ஆராய்ச்சிக் கட்டுரைகள்கூட ஒருசில பக்கங்களிலேயே மிகச் சிறப்பாக விளக்கப்பட்டிருப்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஒரு சிறந்த ஆராய்ச்சியைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கிவிட முடியும் எனும்போது, பக்கங்களின் எண்ணிக்கைக்காக அதனை வீணாக நீட்டிப்பது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 


நீண்ட அளவிலான ஆய்வேடுகளை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால், ஆய்வாளர்கள் நீண்ட முன்னுரைகள் மற்றும் விரிவான இலக்கிய ஆய்வுகளுக்காகத் தேவையற்ற நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனால், தற்போது உலகெங்கிலும் உள்ள பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள், ஆய்வுக் கட்டுரையின் அளவைவிட அதன் தனித்துவமான பங்களிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சுருக்கமான ஆய்வேடுகளைத் தாக்கல் செய்யும் முறைக்கு மாறி வருகின்றன.


இந்தியாவின் முனைவர் பட்ட (PhD) கல்வி முறையில் உள்ள ஒரு முக்கியமான கட்டமைப்புப் பிரச்சனை என்னவென்றால், பழமைவாத ஆய்வேடு சமர்ப்பிப்பு முறை மற்றும் நீண்டகால நிர்வாக நடைமுறைகளே ஆகும். மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியை முடித்த பிறகும், ஆய்வேட்டைச் சமர்ப்பிப்பதிலும், அதன் மதிப்பீட்டு முடிவுகளுக்காகக் காத்திருப்பதிலும், இறுதியாக வாய்மொழித் தேர்வை (Viva-voce) முடிப்பதிலும் பெரும் காலதாமதத்தை எதிர்கொள்கின்றனர். மாணவரின் ஆராய்ச்சித் திறன் அல்லது அந்த ஆய்வின் முக்கியத்துவம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், இந்தத் தேவையற்ற நிர்வாகத் தாமதங்கள் ஒரு முனைவர் பட்டப் படிப்பின் இறுதிக்கட்டத்தை பல மாதங்கள், சில நேரங்களில் பல ஆண்டுகள் வரை நீட்டித்துவிடுகின்றன.


சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் அல்லது சிகிச்சை முறைகள் போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை உருவாக்கும் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, நீண்டகால ஆய்வுக் காலதாமதங்கள் அவர்களது முனைவர் பட்ட ஆய்வின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. 


முனைவர் பட்ட ஆய்வின் முக்கியத்துவம்


இந்தியாவின் தற்போதைய முனைவர் பட்ட (PhD) ஆய்வு முறை மீதான ஒரு முக்கிய விமர்சனம் என்னவென்றால், மேற்கொள்ளப்படும் பல ஆய்வுகள் சமூகத்திற்குப் பெரிய அளவில் பயன்படுவதில்லை என்பதாகும். பல ஆய்வேடுகள் வெறும் கல்வித்துறை ஆவணக் காப்பகங்களோடு முடங்கிவிடுகின்றனவே தவிர, அவை பொதுக் கொள்கை உருவாக்கம், வணிகரீதியிலான கண்டுபிடிப்புகள் அல்லது சமூக ஆரோக்கிய மேம்பாடு போன்றவற்றிற்கு அரிதாகவே பங்களிக்கின்றன. குறிப்பாக, பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வேடுகள் முறையான பயன்பாடின்றி வெறும் அறைகளிலும், கவனிக்கப்படாத இடங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன.


ஒரு முனைவர் பட்டப் படிப்பு (PhD) என்பது தனிமைப்படுத்தப்பட்ட வெறும் அறிவுசார் பயிற்சியாக மட்டும் இருந்துவிடாமல், ஆழமான ஆராய்ச்சியை நடைமுறை உலகத் தாக்கத்தோடு இணைப்பதாக இருக்க வேண்டும். சீனாவின் நடைமுறைசார் முனைவர்பட்ட மாதிரியானது, முனைவர் பட்ட ஆய்வுகளை நடைமுறை உலகப் பயன்பாடுகள் மற்றும் தொழில்துறைத் தேவைகளோடு இணைப்பதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்கிறது. மேலும், இந்த ஆய்வுகள் கல்வியாளர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் அடங்கிய குழுக்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.


பொது சுகாதாரம், விவசாயம், நிலைத்தன்மை, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் கல்வி உள்ளிட்ட இந்தியாவின் நடைமுறைச் சவால்களுக்கு வலுவான முனைவர் பட்ட (PhD) ஆராய்ச்சிகள் பெரும் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு நமது தற்போதைய கல்விமுறை போதிய ஆதரவையும் வசதிகளையும் வழங்குகிறதா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும்.


இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப முனைவர் பட்ட (PhD) கல்வியை மறுபரிசீலனை செய்து சீரமைக்க வேண்டியது அவசியமாகும். டிஜிட்டல் யுகத்தில், வெறும் பாரம்பரியத்திற்காக மட்டும் பல ஆண்டுகளை முனைவர் பட்டத்திற்காகச் செலவிடுவது தற்போதைய சூழலுக்குப் பொருந்தாது என்கின்றனர். ஆய்வேடுகளின் கட்டமைப்பும் அதன் மதிப்பீடும், எத்தனை ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன என்பதைவிட, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகப் பயன்பாடு ஆகியவற்றிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிப்பது நாட்டிற்குப் பயன் தந்துவிடாது என்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கும், மனிதகுலத்தின் நலனுக்கும் பங்களிக்கக்கூடிய உயர்தரமான ஆராய்ச்சிகளே இன்றைய இந்தியாவிற்கு தேவையானதாகக் கருதப்படுகிறது. 


பிஜு தர்மபாலன், பெங்களூருவின் கார்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் கல்வி விவகாரங்களுக்கான தலைவராகவும், பெங்களூருவின் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் துணை ஆசிரிய உறுப்பினராகவும் உள்ளார்.


Original article : Why India needs to radically think its doctoral education programmes -Biju Dharmapalan

Share: