பயிர்க்கடன் தள்ளுபடி என்பது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே. - அ. நாராயணமூர்த்தி

 துயரத்திலுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், புதிய தமிழக அரசு மற்றும் இதர மாநில அரசுகள் நியாயமான விலை, போதிய கொள்முதல் மற்றும் பாதுகாப்பான சந்தை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.


ஜூன் மாதத்தில் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசு 56 லட்சம் வேளாண் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ரூ.36,585 கோடிக்கான பிரம்மாண்ட பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்ததைத் தொடர்ந்து, மே மாதத்தில் தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான அரசு, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான நிபந்தனையுடன்கூடிய பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது.


தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதையும், தமிழ்நாட்டின் அதிகக் கடன்பட்ட வேளாண் தொழிலாளர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, சிறு மற்றும் குறு வேளாண் தொழிலாளர்களுக்கு ஓரளவிற்கு நிம்மதியை அளிக்கும்.


இருப்பினும், ஒருமுறை வழங்கப்படும் இத்தகைய கடன் தள்ளுபடி, வேளாண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆழமான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?


இத்திட்டம் சுமார் 14.22 லட்சம் வேளாண் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ரூ.2,044.46 கோடியை ஒதுக்குகிறது. ஆனால், இதற்கான தகுதி வரம்புகள், மே மாதம் 1-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு மற்றும் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட குறுகிய காலப் பயிர்க் கடன்களுக்குப் பொருந்தும்.


அனைத்து வேளாண் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்தமாகக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் ஒரு புதிய 'தகுதிக்கேற்ப வழங்கப்படும் நிவாரண' (Graded Relief) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையின்கீழ், தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையானது, நிலுவையில் உள்ள கடன் அளவு மற்றும் வேளாண் தொழிலாளர்களின் நில உடைமை வகை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ₹50,000 வரை கடன் வைத்துள்ள விளிம்புநிலை மற்றும் குறு வேளாண் தொழிலாளர்கள் முழுத் தள்ளுபடியைப் பெறுவார்கள். அதே கடன் பிரிவில் உள்ள சிறு வேளாண் தொழிலாளர்கள் 50% மட்டுமே நிவாரணம் பெறுவார்கள்.


இந்தக் கொள்கையானது ஒரு முற்போக்கான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இதன்படி கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க வழங்கப்படும் நிவாரணத் தொகை குறையும். உதாரணத்திற்கு, ₹50,001 முதல் ₹60,000 வரை உள்ள கடன்களுக்கு நிலையான தள்ளுபடியாக ₹40,000 வழங்கப்படும், மேலும் கடன் சுமை அதிகரிக்க அதிகரிக்க இந்தச் சலுகை படிப்படியாகக் குறையும். இதன் விளைவாக, பெரிய நில உரிமையாளர்களும் மற்றும் ₹1,00,000-க்கு மேல் கடன் பெற்றுள்ள மற்ற வேளாண் தொழிலாளர்களும் வெறும் ₹5,000 மட்டுமே தள்ளுபடியாகப் பெறுவார்கள். ஒருமுறை செய்யப்படும் கடன் தள்ளுபடிகள் அவர்களின் துயரங்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது என்றாலும், தகுதிக்கேற்ப வழங்கப்படும் நிவாரண அளவுகோலை (Graded relief scale) புதுமையாகப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.


கடன் தள்ளுபடி குறித்த வரலாறு


இந்தியாவில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு (Farm loan waivers) ஒரு நீண்ட வரலாறு உண்டு. வறட்சி, பருவமழை பொய்த்தல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றைக் காரணம் காட்டி, பல்வேறு மாநில அரசுகள் 1987-ஆம் ஆண்டு முதல் சிறிய அளவிலான நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளன. இருப்பினும், நாடு முழுவதும் வேளாண் தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்ததைக் கண்டும், கடன் சுமை குறித்து 2006-ஆம் ஆண்டு வெளிவந்த ராதாகிருஷ்ணா குழுவின் அறிக்கையின் (Radhakrishna Committee Report on Indebtedness) ஆய்வு முடிவுகளைக் கருத்தில் கொண்டும், ஒன்றிய அரசு 2008-ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் ஒரு பிரம்மாண்டமான         'பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டத்தை' (Agricultural Debt Waiver and Debt Relief Scheme (ADWDRS)) அறிமுகப்படுத்தியது.


இந்தத் திட்டம் சுமார் 3.7 கோடி சிறு, குறு வேளாண் தொழிலாளர்களையும் மற்றும் 60 லட்சம் இதர வேளாண் தொழிலாளர்களையும் உள்ளடக்கி,     ஏறக்குறைய ₹60,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்தது. ஆனாலும், இந்திய தலைமைத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) தனது தணிக்கை அறிக்கையில் இந்தத் திட்டத்தில் நடந்த கடுமையான நிறுவன முறைகேடுகளைப் பின்னாளில் சுட்டிக்காட்டினார்.


அதன் பிறகு, பல மாநிலங்கள் வழக்கமாகவே பயிர்க்கடன் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் வேளாண் தொழிலாளர்களின் தற்கொலைகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே கொள்கை வகுப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், உண்மையான தரவுகளைப் பார்க்கும்போது, 2008-ஆம் ஆண்டின் அவ்வளவு பெரிய பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பிறகும்கூட, வேளாண் தொழிலாளர்களின் தற்கொலை தொடர்ந்து கொண்டுள்ளது என்பதுதான் வேதனைக்குரிய ஒன்றாகும்.


பயிர்க்கடன் தள்ளுபடிக்கு முந்தைய காலகட்டமான 1995-2008-ஆம் ஆண்டுகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 41 வேளாண் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், இந்தத் துயரமான எண்ணிக்கை பயரிக்கடன் தள்ளுபடிக்கு பிந்தைய காலகட்டமான 2009-2011-ஆம் ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 43-ஆக உயர்ந்தது.


அடிப்படைப் பிரச்சனை


வேளாண் தொழிலாளர்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவதற்கு முதன்மையான காரணம், பயிர் சாகுபடி மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் உண்மையான லாபம் மிக மிகக் குறைவாக இருப்பதுதான். வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் குறித்த நிலைமை மதிப்பீட்டு ஆய்வின்படி (Situation Assessment Survey, 2021), தமிழ்நாட்டில் ஒரு வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பத்திற்குப் பயிர் சாகுபடி மூலம் கிடைக்கும் சராசரி மாத நிகர வருமானம் வெறும் ₹2,641 மட்டுமே. இது ஒரு நாளைக்குச் சுமார் ₹88 என்ற மிகக் குறைந்த வருமானமே ஆகும். இந்தத் தொகையை வைத்துக் கொண்டு வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பத்தால் தங்களின் அடிப்படை வீட்டுச் செலவுகளைக் கூடச் சமாளிக்க முடியுமா?


வேளாண் தொழிலாளர்களின் இந்த வருமானக் குறைவிற்கு முக்கியக் காரணம், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சாகுபடிச் செலவுகளும், அதற்கு நேர்மாறாக அவர்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த, லாபமில்லாத கொள்முதல் விலையும்தான். உதாரணமாக, சாகுபடிச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices (CACP)) 1974-75-ஆம் ஆண்டு முதல் 2021-22-ஆம் ஆண்டு வரை வெளியிட்ட தரவுகளின் பகுப்பாய்வு ஒரு அதிர்ச்சியான உண்மைகளைக் காட்டுகிறது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உள்ள நெல் சாகுபடி செய்த வேளாண் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவை ஒப்பிடும்போது, வெறும் 15 ஆண்டுகளில் மட்டும்தான் லாபம் ஈட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.


இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், 2000-01-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில், நெல் சாகுபடியானது வெறும் மூன்று ஆண்டுகளில் மட்டுமே லாபகரமாக இருந்துள்ளது. இத்தகைய மோசமான சூழ்நிலையில், அரசாங்கம் வழங்கும் ஒருமுறை கடன் தள்ளுபடி என்பது தற்காலிகத் தீர்வாக மட்டுமே செயல்படுகிறது. இதே நஷ்டம் தரும் சூழ்நிலையில், வேளாண் தொழிலாளர்கள் அடுத்த பயிர் சாகுபடி பருவத்தில்  (Cropping season) மீண்டும் கடன் வாங்கும்போது, அவர்கள் மறுபடியும் கடன் பிரச்சனையில் மீண்டும் சிக்கிக்கொள்ள நேரிடும் என்கின்றனர். 


மேலும், நிதி உள்ளடக்கம் குறித்த ரங்கராஜன் குழு அறிக்கை (2008), (Rangarajan Committee Report on Financial Inclusion (2008)) இந்தியாவின் 66 சதவீதத்திற்கும் அதிகமான சிறு மற்றும் குறு வேளாண் தொழிலாளர்கள் வங்கிகள் போன்ற முறையான அரசு நிறுவனக் கடன்களைப் பெறுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் அவர்கள் கந்துவட்டிக்குக் கடன் தரும் வெளி நபர்களையே (Informal money lenders) நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசின் கடன் தள்ளுபடித் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்களை மட்டுமே குறிவைப்பதால், வெளிநபர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கிப் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஏழைச் சிறு வேளாண் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை; இதுவே இந்த நிவாரணத் திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகக் கருதப்படுகிறது.


அடுத்தகட்ட நடவடிக்கை


மகாராஷ்டிராவின் பிரம்மாண்டமான கடன் தள்ளுபடியோ அல்லது தமிழ்நாடு அரசு அறிவித்த தகுதி அடிப்படையிலான கடன் தள்ளுபடியோ, போதிய வாழ்வாதாரம் இல்லாத ஏழை வேளாண் தொழிலாளர்களைப் பொருளாதாரக் கடன் சிக்கல்களில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்காது. அவர்கள் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்ய, சந்தைகளை மையமாகக் கொண்ட பல தீவிரமான கொள்கைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

முதலாவதாக, தற்போது வேளாண் தொழிலாளர்களுக்குப் பயிர்களை உற்பத்தி செய்வதைவிட, விளைவித்தப் பொருட்களைச் சந்தைப்படுத்தி விற்பனை செய்வதில்தான் கடுமையான சவால்கள் உள்ளன. எனவே, அரசு நிறுவனங்கள் முக்கியப் பயிர்களைக் கொள்முதல் செய்வதை வேகப்படுத்தவும் முறைப்படுத்தவும் வேண்டும். மற்ற மாநிலங்களைப் பின்பற்றி, கடுமையான விலை வீழ்ச்சியின் போது வேளாண் தொழிலாளர்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு ஒரு வலுவான சந்தை தலையீட்டுத் திட்டத்தை (Market Intervention Scheme (MIS)) தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.


இரண்டாவதாக, எம். எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் (National Commission on Farmers (NCF)) 2006-ஆம் ஆண்டில் பரிந்துரைத்தபடி, வேளாண்மைக்கான ஒட்டுமொத்த உற்பத்திச் செலவைவிட 50 சதவீதம் கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) மாநில அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு ஆதரவாக ஒரு பிரத்யேக மாநில விலை நிலைநிறுத்தல் நிதியையும் (State Price Stabilization Fund) உருவாக்க வேண்டும்.


மூன்றாவதாக, நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாததால், அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, திறந்தவெளிகளிலேயே முளைத்து விடுகின்றன. இதனால் அறுவடைக்கு பிந்தைய பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, உள்ளூர் உற்பத்தி அளவைக் கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான சேமிப்பு கிடங்கு வசதிகளை உருவாக்க வேண்டும்.


இறுதியாக, ஒரே ஒருமுறை செய்யப்படும் பயிர்க்கடன் தள்ளுபடியால் மட்டும் ஊரகப்பகுதிகளில் நீடிக்கும் தொடர் கடன் சுமையை ஒழித்துவிட முடியாது.           பயிர் சாகுபடிக்கான நியாயமான விலை, போதிய கொள்முதல் வசதி, பாதுகாப்பான சந்தைகள் மற்றும் உறுதியான பாசன வசதி ஆகியவை கிடைக்காத வரை, கடன் சுமை வேளாண் தொழிலாளர்களைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கும்.


எனவே, மாநில அரசு வேளாண் சந்தைகளை மறுசீரமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


அ. நாராயணமூர்த்தி, பொருளாதார நிபுணர் மற்றும் புது டெல்லியில் உள்ள வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) முன்னாள் முழுநேர அதிகாரப்பூர்வ உறுப்பினர் ஆவார்.     


Original article : Farm loan waivers are just a band aid solution -A Narayanamoorthy

Share: