உர மானியம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கருவுறுதல் விகிதம் - பிரியா குமாரி சுக்லா

 இந்தியாவில் உரப் பயன்பாடு குறித்து தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?


தற்போதைய நிகழ்வு என்ன? 


விநியோகப் பற்றாக்குறை மற்றும் உலகளவில் உரங்களின் விலை உயர்வு காரணமாக, உர மானியச் சுமை சுமார் ரூ. 3.4 லட்சம் கோடியாக உயரக்கூடும் என்று உயர்மட்ட அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்ட ரூ. 1.7 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 100 சதவீத அதிகரிப்பாகும்.


முக்கிய அம்சங்கள் :


"கோவிட் காலத்திற்குப் பிறகு உரத்தின் விலை சுமார் ரூ.2,900-லிருந்து தற்போது ரூ.4,500-ஆக உயர்ந்திருந்தாலும், இன்னும் ஒரு மூட்டைக்கு சுமார் ரூ.300 என்ற மானிய விலையிலேயே உரத்தை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மானியச் செலவு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டைவிட 100% அதிகமாக இருக்கலாம்," என்று ஒரு அதிகாரி கூறினார்.


"மற்றொரு மூத்த அரசு அதிகாரி இச்சூழ்நிலையை மிகவும் சிக்கலானது என்று விவரித்தவுடன், மேலும் ஈரான் போர்ச்சூழல் காரணமாக சீனா உள்ளிட்ட உலகளாவிய விநியோகர்கள் தங்கள் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் (விற்பனையைத் தாமதப்படுத்துகின்றனர்). இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் உரங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய அரசு ஆராய்ந்து வருகிறது என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.



விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட உரங்கள் தொழில்முறைப் பயன்பாட்டாளர்களுக்குத் திருப்பி விடப்படுவது குறித்தும் அரசு கவலை கொண்டுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் வேளாண்மை, உரங்கள் மற்றும் நிதி ஆகிய தொடர்புடைய அமைச்சகங்களின் உயர்மட்ட அளவில் இது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரி கூறினார்.


மே 27 அன்று, அரசுக்குச் சொந்தமான 'நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட்' ((National Fertilizers Ltd)) நிறுவனம் 17 லட்சம் மெட்ரிக் டன் (LMT) யூரியாவை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டரை வெளியிட்டது. அதற்கு முன்னதாக, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், 'இந்தியன் பொட்டாஷ் லிமிடெட்' (Indian Potash Ltd(IPL)) நிறுவனம் 25 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை இறக்குமதி செய்வதற்கான டெண்டரை வெளியிட்டிருந்தது.


வட்டாரங்களின் தகவலின்படி, உரங்களின் விலை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது.


2026-27-ஆம் ஆண்டில் உர மானியத்திற்காக ரூ. 1.71 லட்சம் கோடி செலவிட வேண்டியிருக்கும் என்று அரசு மதிப்பிட்டிருந்தது. 'தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர்' (Controller General of Account(CGA)) அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, யூரியா மற்றும் சத்து அடிப்படையிலான உரங்களுக்காக ஏப்ரல் மாதத்தில் மட்டும் மத்திய அரசு ரூ.22,033 கோடியை மானியமாகச் செலவிட்டுள்ளது. இந்தத் தொகை, முழு ஆண்டிற்கான மொத்த மானிய மதிப்பீட்டில் சுமார் 13% ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா? 


மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) எனும் முக்கிய நீர்வழிப்பாதை மூடப்பட்டதால், உரங்களின் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, இந்தியா சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்து வாங்கிய யூரியாவின் விலை (சரக்குக் கட்டணம் உட்பட) ஒரு டன்னுக்கு 935 முதல் 959 டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு இருந்த 410 முதல் 420 டாலர் விலையைவிட இருமடங்கிற்கும் அதிகமாகும்.

எரிபொருள் மற்றும் தங்கம் வாங்குவதற்கான அந்நியச் செலாவணி மற்றும் உரம் ஆகிய மூன்றும் '3 Fs' (எரிபொருள், அந்நியச் செலாவணி, உரம்) என்று கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் குறிப்பிடப்பட்டன. இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்படுபவை என்பதால் ரூபாய்க்குப் பதிலாக அந்நியச் செலாவணியிலேயே பணம் செலுத்த வேண்டியிருந்தது. எனவே, தற்போது நிலவும் மோதலால் ரூபாய் மதிப்பின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இம்மூன்று விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருந்தது.


இந்தியா உலகின் மிகப்பெரிய உர இறக்குமதியாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதேவேளையில் சீனா, ரஷ்யா மற்றும் மொராக்கோ ஆகியவை மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக உள்ளன. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மார்ச் மாத மத்தியில் சீனா உர ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. மேற்கு ஆசியப் போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவின் யூரியா இறக்குமதியில் ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளின் பங்கு சுமார் 40 சதவீதமாக இருந்தது.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் தற்போதைய பிரதமர் - ஒப்பீடு மற்றும் வேறுபாடுகள்


தற்போதைய நிகழ்வு என்ன? 


பாஜக தலைமையிலான அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்ததையும், ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற தனிப்பட்ட மைல்கல்லை நரேந்திர மோடி எட்டியதையும் கொண்டாடும் வகையில், என்டிஏ (NDA) கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமையன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கூடவுள்ளனர்.


முக்கிய அம்சங்கள் :


புதன்கிழமையன்று, பிரதமர் மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் பதவியில் இருந்தவர் என்ற நிலையை எட்டுகிறார். இது, 1952 மே 13 அன்று பதவியேற்று 1964 மே 27 அன்று தனது மறைவு வரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றிய நேருவின் 4,398 நாட்கள் என்ற கால அளவைவிட ஒரு நாள் அதிகமாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் பொதுத் தேர்தலான 1952-ல் நேரு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்குத் தெரியுமா?


ஜூன் 10 அன்று, இந்தியாவில் தொடர்ந்து நீண்டகாலம் பதவி வகித்த "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்" என்ற வரிசையில் மோடி நேருவை முந்துகிறார். மோடி பதவியில் 4,399 நாட்களை நிறைவு செய்தார். நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலம் 4,398 நாட்களாகக் கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கீடு, நேரு முதல் பொதுத் தேர்தலில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1952-ம் ஆண்டிலிருந்து, அவர் பதவியில் இருந்தபோதே மறைந்த 1964 மே மாதம் வரையிலான காலத்தை அடிப்படையாகக் கொண்டது. பொதுத் தேர்தல் மூலம் அல்லாமல், இடைக்கால அரசியலமைப்பு ஏற்பாட்டின்கீழ் "நியமிக்கப்பட்ட" 1947 முதல் 1952 வரையிலான அவரது பதவிக்காலத்தை ஆளும் தரப்பு இதில் கணக்கில் கொள்வதில்லை.


இருவருமே நாட்டிற்கு தொலைநோக்கு பார்வையால் மாற்றங்களைக் கொண்டுவந்த மக்கள் தலைவர்களாக இருந்தபோதிலும், முற்றிலும் மாறுபட்ட சூழல்களில் செயல்பட்டவர்கள் என்பதால், இந்தியாவின் முதல் பிரதமரையும் 14-வது பிரதமரையும் ஒப்பிடுவது நியாயமானதாக இருக்காது.


வெவ்வேறு காலகட்டங்களில் நேரு மற்றும் மோடி ஆகிய இருவரையும் இந்தியா ஏற்றுக்கொண்டது, நாட்டின் பயணத்தையே பிரதிபலிக்கிறது. உயர்குடிப் பின்னணியைக் கொண்டவராகவும், ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றவராகவும் இருந்த நேரு, தனது சலுகைகளைத் துறந்து சுதந்திரப் போராட்டக் களத்தில் இணைந்ததே அவரது ஈர்ப்புக்குக் காரணமாக அமைந்தது. மறுபுறம், மிகச் சாதாரண நிலையில் வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்ததே மோடியின் ஈர்ப்புக்குக் காரணமாக உள்ளது. 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும், மக்கள் தொகையில் பெரும்பகுதியினரின் நம்பிக்கையை அவர் தக்கவைத்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


இந்தியாவில் நவீன, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நிறுவனங்களுக்கான அடித்தளத்தை நேரு அமைத்தார். நாடு பிரிவினையாலும், 1.4 கோடி அகதிகளின் இடப்பெயர்வாலும் நிலைகுலைந்திருந்த சூழலில், சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்வதை உறுதிசெய்ய அவர் முயன்றார். அதேவேளையில், குடியரசுக்கு வழிகாட்டும் வகையிலான தாராளவாத அரசியலமைப்பை உருவாக்குவதிலும் அவர் உதவினார். இராமர் கோயில் கட்டுதல், 370-வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நோக்கிச் செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 'முத்தலாக்' முறைக்குத் தடை விதித்தல் போன்ற தனது கட்சியின் முக்கிய செயல்திட்டங்களை நிறைவேற்றிய மோடி, இப்போது தனது கட்சியும் அதன் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பும் உறுதியுடன் கொண்டுள்ள "1,000 ஆண்டுகால நாகரிகத் திட்டத்தை" (civilisational project) முன்னெடுப்பைச் செயல்படுத்த தயாராகி வருகிறார்.


140 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசத்தை மோடி வழிநடத்துகிறார். இவர்களில் பெரும்பாலோர் 35 வயதுக்குட்பட்டவர்கள். இந்த இளம் தலைமுறையினர் அரசியல்ரீதியாகத் தங்கள் கருத்துக்களைத் துணிச்சலாக வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர். உதாரணமாக, இதற்குத் தமிழ்நாட்டில் நடிகர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்வை குறிப்பிடலாம். இது 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (Cockroach Janta Party) போன்ற முன்னெப்போதும் இல்லாத ஒரு டிஜிட்டல் நிகழ்வுப் போக்குக்கு வழிவகுத்துள்ளது. இதன் நேரடி (ஆஃப்லைன்) தாக்கம் குறைவாக இருக்கலாம். ஆனால் 'இளம் இந்தியா' என்ன சொல்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.


மிகச் சிலரே வரலாற்றுச் சூழல்களால் அதிகாரத்திற்கு உயர்த்தப்பட்டு, தங்கள் தேசத்தின் தலைவிதியை வடிவமைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அத்தகைய தலைவர்களில் மோடியும் ஒருவர். நேரு அத்தகைய மற்றொருவர். அவரைப் பாராட்டினாலும் சரி அல்லது விமர்சித்தாலும் சரி, நரேந்திர மோடியின் பயணம் இன்னும் முடியவில்லை. அவரால் இன்னும் பல ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும். அவரைப் பொறுத்தவரை, வரலாறு என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயல்முறையாகவே உள்ளது.



மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate - TFR) என்றால் என்ன?


தற்போதைய நிகழ்வு என்ன?


இந்தியா முதல் ஸ்வீடன் மற்றும் ஜப்பான் வரை, பல்வேறு பொருளாதார மற்றும் சமூகச் சூழல்கள் நிலவினாலும், மக்கள் குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கான காரணங்கள் சமூகப் பிளவு, மாறிவரும் வாழ்க்கை நெற்முறைகள், வருமானம் மற்றும் திறன்பேசிகளின் பயன்பாடு ஆகியவை இதில் அடங்கும்.


முக்கிய அம்சங்கள் :


சில அரசுகள், தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும்போது 30,000 ரூபாய் நிதியுதவி வழங்குகின்றன. முதல் முறையாகப் பெற்றோராகும் தம்பதியினருக்கு அரசு நிதியுதவியுடன் கூடிய கூடுதல் செயற்கை கருத்தரிப்பு (In Vitro Fertilization(IVF)) முயற்சிகளின் எண்ணிக்கையைச் சில நாடுகள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளை வளர்க்கும் குடும்பங்களுக்காக சுமார் 3,00,000 பொது வீட்டுவசதி அலகுகளை (public housing units) ஒதுக்கும் திட்டங்களும் உள்ளன.


குழந்தைப் பேற்றை ஊக்குவிப்பதற்காகச் சமீப காலங்களில் உலகெங்கிலும் உள்ள அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பல கொள்கைகளில் இவை சில மட்டுமே. கடந்த மாதம், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வோருக்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்த முதல் இந்திய மாநிலங்களில் ஒன்றாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது. மக்கள்தொகை குறைவு என்ற பொதுவான கவலைக்குத் தீர்வு காண ஸ்வீடன் மற்றும் ஜப்பான் நாடுகளும் பல்வேறு திட்டங்களை முன்மொழிந்துள்ளன.


சில விதங்களில், இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரக் குறியீடுகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் காரணமாக, காலப்போக்கில் பல சமூகங்களில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவதைக் காண முடிகிறது. ஆனால், இந்த மாற்றத்தின் வேகமும் பரவலும் எதிர்பாராதவையாக உள்ளன.


மக்கள்தொகை வளர்ச்சியில் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்று 'மொத்தக் கருவுறுதல் விகிதம்' (Total Fertility Rate(TFR)) ஆகும். ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது. மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு 2.1 என்ற மாற்று விகிதம் (replacement rate) சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, மக்கள்தொகையில் உள்ள தாய் மற்றும் தந்தைக்குப் பதிலாக, சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.


2023-ம் ஆண்டின் நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகளில், மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 2.1-க்கும் குறைவாகவே இருந்தது.



1960-களின் தொடக்கத்தில் 5.3 ஆக இருந்த உலகளாவிய சராசரி மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR), 2024-ல் 2.2 ஆக உள்ளது. இது மக்கள்தொகை மாற்று விகிதத்தை (replacement rate) விடச் சற்று அதிகம். இதே காலகட்டத்தில், இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 5.9-லிருந்து 2-ஆகக் குறைந்துள்ளது, இது மாற்று விகிதத்தை (replacement rate) விடச் சற்று குறைவு. எனவே, ஆந்திரப் பிரதேசத்தில் விடுக்கப்பட்டதைப் போன்ற கருத்துகள், சில தலைமுறைகளுக்கு முந்தைய நிலையிலிருந்து ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன. அக்காலத்தில், விரைவான மக்கள்தொகை வளர்ச்சி நாட்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அதைச் சமாளிக்கக் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் (family planning policies) அறிமுகப்படுத்தப்பட்டன.


உங்களுக்குத் தெரியுமா?


ஜெர்மனியின் ரோஸ்டாக் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் மக்கள்தொகை ஆய்வு நிறுவனத்தின் (Max Planck Institute for Demographic Research (MPIDR)) விஞ்ஞானியும் மேரி கியூரி ஆராய்ச்சி ஆய்வாளருமான மொராத்வாஜ் தாக்கட், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம் குறிப்பிட்டதாவது, "சுமார் ஒரு பத்தாண்டிற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கணிப்புகளைவிட இந்த வீழ்ச்சி மிக வேகமாக நிகழ்ந்துள்ளது. 2030 மற்றும் 2035-க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 2.1-க்குக் கீழே குறையும் என்று அந்தக் கணிப்புகள் எதிர்பார்த்தன. ஆனால், இந்தியா 2020-லேயே இந்த நிலையை எட்டிவிட்டது," என்று தெரிவித்தார்.


மக்கள்தொகை மாற்றக் கோட்பாட்டின்படி (demographic transition theory), சமூகங்கள் காலப்போக்கில் குறைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி நிலையிலிருந்து அதிக செழிப்பு நிலையை நோக்கி நகரும்போது, ​​பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் குறைகின்றன. இதன் விளைவாக மக்கள்தொகையில் ஒட்டுமொத்த மாற்றம் குறைவாகவே உள்ளது. இருப்பினும், சில பத்தாண்டுகளிலேயே கருவுறுதல் விகிதங்களில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றம், இந்தப்போக்கைத் தீர்மானிக்கக்கூடிய கூடுதல் காரணிகளை ஆராய ஆராய்ச்சியாளர்களைத் தூண்டியுள்ளது.


வருமானம் என்பது பெரும்பாலும் முதலில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளில் ஒன்றாகும். ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகையியல் பிரிவு (Stockholm University Demography Unit) மற்றும் சமூகவியல் துறையின் (Department of Sociology) இணைப் பேராசிரியரான மார்ட்டின் கோல்க், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், கடந்தகாலத்தில் பல நாடுகளில் குறைந்த வருமானம் கொண்டவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறினார்.


பெண்களின் கல்வித் தகுதி அதிகரிப்பு, பணியிடங்களில் அவர்களின் பங்கேற்பு மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சஹாரா-கீழ் ஆப்பிரிக்கப் பகுதிகளில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) இன்னும் 4 முதல் 5 வரை அதிகமாக உள்ள நிலையில், அங்கு பதின்ம வயதினரிடையே காணப்படும் அதிக அளவிலான கர்ப்பங்களுக்குக் கருத்தடை முறைகளை குறைவாகப் பயன்படுத்துதல், குறைந்த கல்வி நிலை மற்றும் இளம் வயதுத் திருமணங்கள் ஆகியவை காரணமாகக் கூறப்படுகின்றன.


Original article : Fertiliser Subsidy, Prime Minister Narendra Modi and Fertility Rate -Priya Kumari Shukla

Share: