பாதுகாப்பு அமைச்சகத்தின் சீதாபூர் சூரிய ஆற்றல் திட்டம் (Sitapur Solar Project) குறித்து… -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு :


உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் 250 மெகாவாட் (MW) சூரிய மின்சக்தித் திட்டத்தை (Solar Power Project) அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இச்சூழலில், சீதாபூர் சூரிய ஆற்றல் திட்டம் ஏன் தனித்துவமானது? என்பதையும், பல்வேறு ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் குறித்தும் புரிந்துகொள்வது அவசியமாகும்.


முக்கிய அம்சங்கள் :


1. இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படாத ஆயிரக்கணக்கான ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலங்களைப் பசுமை ஆற்றல் முயற்சிகளுக்குப் பயன்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் 'மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு' (Battery Energy Storage System (BESS)) வசதியுடன் கூடிய 250 மெகாவாட் சூரிய ஆற்றல் திட்டத்தை நிறுவ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.


2. “பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் (MoD) மேற்கொள்ளப்படும் இத்தகைய முதல் திட்டம் இதுவாகும். இதில், பாதுகாப்புத் துறை நிலத்தில் ஒருங்கிணைந்த மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) ஆதரவுடன் கூடிய ஒரு பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்படுகிறது,” என்று அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.


3. இத்திட்டம், பாதுகாப்புப் படைகளுக்கான நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, இத்திட்டம் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான மரபுசார் மின்கட்டமைப்பு மின்சாரத்தைக் (grid power) கொள்முதல் செய்வதில் ஏற்படும் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், அதன் விளைவாக இத்திட்டம் அதன் முழுச் செயல்பாட்டுக் காலத்திலும் அரசாங்கத்திற்குப் பெருமளவிலான சேமிப்பை ஈட்டித் தரும் என்று கருதப்படுகிறது.


4. “பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைந்த தலைமையகம் (இராணுவம்) மற்றும் பாதுகாப்புத் துறை நிலங்கள் இயக்குநரகம் (Directorate General Defence Estates (DGDE)) ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சகம் கூறியதுடன், இத்திட்டம் தேசியப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை ஒரே முயற்சியில் இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது என்றும் அது மேலும் தெரிவித்தது.


5. சீதாபூரில் உள்ள சூரிய மின்சக்தித் திட்டம் (solar power project), பாதுகாப்புத் துறை நிலத்தில் நிறுவப்பட்ட நாட்டின் மிக முக்கியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என்றும், பாதுகாப்புத் துறையில் எதிர்கால சூரிய ஆற்றல் மற்றும் சேமிப்புத் திட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.


ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்கள்


சீதாபூரில் அங்கீகரிக்கப்பட்ட 250 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டத்தில் ஒரு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (battery energy storage system) உள்ளதால், அது என்ன? என்பதைப் புரிந்துகொள்வதும், மற்ற ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்துகொள்வதும் முக்கியம். இது தொடர்பாக கீழே குறிப்பிட்டுள்ளது.





1. ஆற்றல் சேமிப்பு (Energy storage) என்பது, மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது உபரியான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைச் சேமித்து, தேவை அதிகரித்து மின் உற்பத்தி குறைவாக இருக்கும் சமயங்களில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை பின்னர் வெளியிடுகின்றன.


2. குறிப்பிடும்படியாக, ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (energy storage systems), சூரிய மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, சேமிக்கக்கூடிய கட்டமைப்புகளுக்கு மாற்றுகின்றன. பின்னர், தேவை ஏற்படும்போது, ​​அவற்றை மீண்டும் மின்சாரமாக மாற்றுகின்றன.


3. உலகளவில் பல்வேறு ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள், நீரேற்று நீர்மின் சேமிப்பு (Pumped Hydro Storage (PHS)) மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems (BESS)) தற்போது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


(i) நீரேற்று நீர் சேமிப்பு (Pumped Hydro Storage (PHS)) : நீரேற்று நீர் சேமிப்பு (PHS) அமைப்பானது, உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி, கீழ்மட்ட நீர்த்தேக்கத்திலிருந்து மேல்மட்ட நீர்த்தேக்கத்திற்குத் தண்ணீரை இறைக்கிறது. மின்சாரத் தேவை உச்சத்தை அடையும்போது, சேமிக்கப்பட்ட நீர் கீழ்நோக்கி வெளியிடப்படுகிறது. நீர் விசையாழிகள் வழியாகப் பாயும்போது, அது மின்சாரத்தை உருவாக்குகிறது.


(ii) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems (BESS)) :  மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) தொழில்நுட்பமானது, மின்சாரத்தை வேதியியல் முறையில் சேமித்து, தேவைப்படும்போது அதை வெளியேற்றுகிறது. லித்தியம்-அயன் மின்கலங்கள் (Lithium-ion batteries), குறிப்பாக லித்தியம் இரும்பு பாஸ்பேட் (lithium iron phosphate (LFP)) மின்கலங்கள், அவற்றின் குறைந்துவரும் செலவுகள், அதிக செயல்திறன் மற்றும் நீண்ட செயல்பாட்டுக் காலம் ஆகியவற்றின் காரணமாக, தற்போது மின்கட்டமைப்பு அளவிலான சேமிப்பிற்கான முதன்மைத் தொழில்நுட்பமாக விளங்குகின்றன.



4. நீரேற்று நீர் சேமிப்பு (PHS) மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பைத் (BESS) தவிர, உலகளவில் சிறிய அளவிலான பல ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை,


(i) குவிக்கும் சூரிய-வெப்ப சேமிப்பு அமைப்புகள் (Concentrating solar-thermal storage systems) : இந்தத் தொழில்நுட்பம், சூரிய ஒளியைப் பிடித்து ஒரு ஏற்பியின் (receiver) மீது குவிக்கும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறது. ஏற்பி சூடாகும் போது, ​​உருகிய உப்பு போன்ற பொருட்கள் வெப்பத்தைச் சேமிப்பதற்காக ஏற்பிக்குள் சுற்றோட்டம் செய்யப்படுகின்றன. சேமிக்கப்பட்ட இந்த வெப்பம் பின்னர் நீராவியை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படலாம். இந்த நீராவி ஒரு விசையாழியில் இயந்திர ஆற்றலாக மாற்றப்பட்டு, அது மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு மின்னாக்கியை இயக்குகிறது.


(ii) அழுத்தப்பட்ட-காற்று ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Compressed-air energy storage systems) : இந்த அமைப்புகள் அதிகப்படியான மின்சாரத்தைப் பயன்படுத்தி காற்றை அழுத்துகின்றன. இதில் அழுத்தப்பட்ட காற்று நிலத்தடி குகைகள் அல்லது சேமிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. மின்சாரத் தேவை அதிகரிக்கும்போது, ​​அழுத்தப்பட்ட காற்று வெளியிடப்பட்டு விசையாழிகளை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


(iii) சுழல்சக்கர ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Flywheel energy storage systems) : இந்த அமைப்புகள் மின்சாரத்தைச் சுழற்சி ஆற்றல் வடிவில் சேமிக்கின்றன. அவை மின்கட்டமைப்பில் ஏறக்குறைய உடனடியாக மின்சாரத்தைச் செலுத்தக்கூடியவை என்பதால், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கும் குறுகியகால ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதற்கும் அவை குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கின்றன.


(iv) புவியீர்ப்பு ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Gravity energy storage systems) : கனமான எடைகளை அதிக உயரங்களுக்குத் தூக்குவதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் தேவைப்படும்போது, ​​அந்த எடைகள் கீழே இறக்கப்பட்டு, மின்னாக்கிகள் மூலம் புவியீர்ப்பு ஆற்றல் மீண்டும் மின்சாரமாக மாற்றப்படுகிறது.


இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்கலங்களைப் (Solar Cells) பயன்படுத்துவது குறித்த புதிய கட்டாயம்


1. மத்திய அரசின் உத்தரவின்படி, ஜூன் 1 முதல் வீட்டு உபயோக, வணிக மற்றும் தொழில்துறை சூரிய ஆற்றல் திட்டங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்கலன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.


2. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் கூறுகளான மின்கலன்கள், மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படும் சூரிய தகடுகளாலான சூரியத் தொகுதிகளின் அடிப்படைக் கட்டுமான அலகுகளாகும்.


3. சூரிய மின்கலங்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யும் ஆணையானது, இறக்குமதியைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலையைக் குறைப்பதையும், உள்நாட்டு சூரிய ஆற்றல் உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


original article : Why Defence Ministry’s Sitapur Solar Project is making headlines?. -Roshni Yadav

Share: