வெப்ப அலை நெருக்கடிக்கு வெறும் கொள்கைகள் மட்டும் போதாது, ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. -ரோஹித் பகா

 தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), நிவாரண நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, வெப்பத் தணிப்பு மற்றும் மீள்திறனுக்கான முதலீடுகளை ஆதரிக்கும் விரிவான கட்டமைப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் இருக்க வேண்டும்.


குறிப்பாக, 2026-ம் ஆண்டின் கோடைக்காலம் தீவிரமாக இருக்கக்கூடும் என்றும், நாட்டின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகளைக் கொண்ட நாட்கள் நிகழ வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) எச்சரித்துள்ளது. இதில் வெப்ப அலைகளானவை, புயல்கள் அல்லது திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்களிலிருந்து வேறுபட்டு, மெதுவாக உருவாகி, அவை பெரும்பாலும் நாட்கள் அல்லது வாரங்களில் படிப்படியாக தீவிரமடைகின்றன. இதன் காரணமாக, அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மட்டுமல்லாமல், தொடர்ச்சியான திட்டமிடல் தேவைப்படுகிறது.


இதை உணர்ந்து, பல இந்திய நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் வெப்பச் செயல் திட்டங்களை (Heat Action Plans (HAP)) உருவாக்கியுள்ளன. இந்தத் திட்டங்கள், முன்னறிவிப்பு அமைப்புகள், பொதுமக்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் மூலம் அரசுத் துறைகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல நகரங்களில், வெப்பம் சார்ந்த உயிரிழப்புகளையும் நோய்களையும் குறைப்பதற்கு இத்திட்டங்கள் பெரிதும் உதவியுள்ளன.


இருப்பினும், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா இப்போது குறுகிய கால நடவடிக்கைகளைக் கடந்து, நகரங்களை நிலையான முறையில் குளிர்விப்பதற்கான நீண்டகால உத்திகளில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இந்தச் சூழலில், தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட பேரிடர்களின் பட்டியலில் வெப்ப அலைகளையும் சேர்க்க வேண்டும் என்ற 16-வது நிதி ஆணையத்தின் சமீபத்திய பரிந்துரை ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். இப்பரிந்துரையை அளிப்பதன் மூலம், காலநிலை மாற்றம் இந்தியாவின் பேரிடர்ச் சூழலை அடிப்படையிலேயே மாற்றியமைத்துவிட்டது என்பதை ஆணையம் அங்கீகரிக்கிறது.


இந்த மறுவகைப்பாடு, மாநிலங்களுக்குக் கிடைக்கும் நிதி மற்றும் நிறுவனரீதியான ஆதரவை மாற்றியமைக்கிறது. இதுவரை, மாநிலங்கள் வெப்ப அலைகள் உட்பட உள்ளூர் பேரிடர்களை, மாநிலம் சார்ந்த பேரிடர்களாக அறிவித்திருந்தால், அவற்றுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தங்கள் மாநிலப் பேரிடர் மீட்பு நிதியில் (State Disaster Response Fund (SDRF)) 10 சதவீதம் வரை பயன்படுத்த முடிந்தது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெப்ப அலைகளைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், மாநிலங்கள் இப்போது தங்கள் மாநிலப் பேரிடர் இடர் மேலாண்மை நிதிகள் (State Disaster Risk Management Funds (SDRMF)) மட்டுமின்றி, பரந்த அளவிலான தேசியப் பேரிடர் இடர் மேலாண்மை நிதியிலிருந்தும் ஆதரவைப் பெற முடியும். இது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாமல், நீண்ட கால மீள்திறன் மற்றும் பேரிடர் தணிப்பு முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கும் நிதிச் சாத்தியக்கூறுகளை விரிவுபடுத்துகிறது.


புதிய வகைப்பாடு நிதி ஆதாரங்களைத் திறந்தாலும், தற்போதைய கொள்கைக் கட்டமைப்பு வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. இங்குதான் உண்மையான சவால் உள்ளது. பெரும்பாலான வெப்பச் செயல் திட்டங்கள், எச்சரிக்கைகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் போன்ற குறுகிய கால நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து முதன்மையாகக் கவனம் செலுத்துகின்றன. மோசமான நகர்ப்புற வடிவமைப்பு, வெப்பத்தை உறிஞ்சும் கட்டுமானப் பொருட்கள், குறைந்து வரும் பசுமைப் பரப்பு, திறனற்ற குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் வெப்ப வசதிக்கான சமமற்ற அணுகல் போன்ற வெப்ப பாதிப்புக்கான கட்டமைப்பு சார்ந்த காரணிகளைக் கையாள்வதில் அவை சிறிதளவே பங்களிக்கின்றன.


கிடைக்கக்கூடிய நிதிகளைத் திறம்படப் பயன்படுத்த, இந்தியா தனது கொள்கைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் மற்றும் நீண்டகால வெப்ப மீள்திறன் உத்திகள் குறித்து நகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிவாரணப் பணிகளுக்கு அப்பாற்பட்டு, காலநிலைக்கேற்ற திட்டமிடல், நகர்ப்புற பசுமை மற்றும் நீல உள்கட்டமைப்புகளின் விரிவாக்கம், மேம்படுத்தப்பட்ட கட்டிட வடிவமைப்பு, உள்கட்டமைப்பு மீள்திறன் மற்றும் நீடித்த குளிரூட்டும் தீர்வுகள் போன்ற வெப்பத் தணிப்பு மற்றும் மீள்திறன் முதலீடுகளை ஆதரிக்கும் விரிவான கட்டமைப்புகளின் உருவாக்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.


உள்ளாட்சி அமைப்புகள், காலப்போக்கில் வெப்பம் சார்ந்த இடர்களைக் குறைக்கும் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த உதவும் நிறுவனத் திறனை வளர்த்தெடுப்பதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிதி ஆதாரங்கள் திறம்படப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களுக்கு இடையிலான வலுவான ஒருங்கிணைப்பும், நகரங்களுக்கான மேம்பட்ட தொழில்நுட்ப ஆதரவும் மிக முக்கியமானவையாக அமையும்.


நிதி ஆதாரங்கள் தற்போது இருப்பு உள்ளன. இந்தியாவுக்கு அடுத்ததாகத் தேவைப்படுவது, வெப்பம் தணிந்த, பாதுகாப்பான மற்றும் அதிக மீள்திறன் கொண்ட நகரங்களை உருவாக்கும் ஒரு கொள்கை சார்ந்த தொலைநோக்குப் பார்வையே ஆகும்.


கட்டுரையாளர், iFOREST-இன் திட்ட உதவியாளர் ஆவர்.     

Original article : Heatwave crisis needs a vision, not just policy.

Share: