சபரிமலை வழக்கும், மதம் மற்றும் சமத்துவம் குறித்த கேள்விகளும். - திலீப் பி சந்திரன்

 சபரிமலை வழக்கில், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அரசியலமைப்பு செயல்முறை தொடர்பான 7 கேள்விகள் உள்ளன. சமத்துவம், சமயச் சுதந்திரம், தேவையான சமய நடைமுறைகள், சமயப் பிரிவின் வரையறை மற்றும் அறநெறி குறித்த கோட்பாடுகள் ஆகியவற்றுடன் இந்தக்கேள்விகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன?


சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு வாதங்களைக் கேட்டு வரும் நிலையில், 7 முக்கிய கேள்விகளைச் சுற்றி பல்வேறு அரசியலமைப்பு கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.


இந்த கேள்விகள் சமத்துவம், மத சுதந்திரம், அத்தியாவசிய மத நடைமுறைகள், மதப் பிரிவின் வரையறை, மற்றும் நெறிமுறை (morality) என்ற கருத்து போன்ற முக்கியக் கோட்பாடுகளை எவ்வாறு பிரதிபலிக்கின்றன? இதைப் பற்றி தெரிந்து கொள்வோம். அதற்கு முன், 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பைச் சுருக்கமாகப் பார்ப்போம்.


சபரிமலை தீர்ப்பு மறுபார்வை


2018-ஆம் ஆண்டில், இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் vs  கேரள அரசு (Indian Young Lawyers’ Association vs. State of Kerala) வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அந்தத்தீர்ப்பு, மாதவிடாய் வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.


4:1 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பில், 1965-ஆம் ஆண்டு கேரள இந்து பொது வழிபாட்டுத் தலங்கள் (Kerala Hindu Places of Public Worship Rules) விதிகளின் விதி 3(b)-ன் கீழ் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை, அரசியலமைப்பின் 15(1) பிரிவின் கீழ் உள்ள சமத்துவத்திற்கான அடிப்படை (right to equality) உரிமையையும், அரசியலமைப்பின் 25(1) பிரிவின்கீழ் உள்ள மத உரிமையையும் (right of religion) மீறுவதால் அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


பெண்களை விலக்கி வைப்பது ஒரு தேவையான மத நடைமுறை (essential religious practice (ERP)) அல்ல என்றும், ஐயப்பன் பக்தர்கள் ஒரு தனி மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஆனால், அந்த அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, சட்டப்பிரிவு 25-ன் கீழ் வரும் மத நடைமுறை பகுத்தறிவு சார்ந்ததா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், சட்டப்பிரிவு 14-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சமத்துவம், சட்டப்பிரிவு 25-ன் கீழ் உள்ள மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறாது என்று தீர்ப்பளித்தார்.


தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் பல மனுக்களின் அடிப்படையில், 2019-ல் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வு, சபரிமலை மறு ஆய்வு வழக்கை மற்ற மதங்கள் தொடர்பான இதே போன்ற வழக்குகளுடன் இணைத்தது. தற்போது, ​​தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட புதிய அரசியலமைப்பு அமர்வு, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் அரசியலமைப்பு தொடர்பான  7 கேள்விகளை விசாரித்து வருகிறது.


7 கேள்விகளும் அரசியலமைப்பு உரிமைகளும்.

 

நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உரிய 7 முக்கிய கேள்விகள் பின்வருமாறு:


1. இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் உள்ள மத சுதந்திர உரிமையின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன?


2. அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் உள்ள தனி நபர்கள் தொடர்பான உரிமைகளுக்கும், 26-வது பிரிவின் கீழ் உள்ள மதப் பிரிவுகளின் உரிமைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?


3. அரசியலமைப்பின் 26-வது பிரிவின்கீழ் ஒரு மதப் பிரிவினருக்கு உள்ள உரிமைகள், பொது ஒழுங்கு, ஒழுக்கநெறி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைத் தவிர, அரசியலமைப்பின் 3-வது பகுதியின் பிற விதிகளுக்கு உட்பட்டவையா?


4. அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் 26 ஆம் பிரிவுகளின் கீழ் ‘நெறிமுறை’ என்ற சொல்லின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன, மேலும் அது அரசியலமைப்பு நெறிமுறையை (constitutional morality) உள்ளடக்கியதா?


5. அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் ஒரு மதம் தொடர்பான  நடைமுறையின் மீதான நீதித்துறை மறுஆய்வின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன?


6. அரசியலமைப்பின் 25(2)(b) பிரிவில் வரும் “இந்துக்களின் பிரிவுகள்” (Sections of Hindus) என்ற  சொல்லின் பொருள் என்ன?


7. ஒரு மதப் பிரிவையோ அல்லது மதக் குழுவையோ சாராத ஒரு நபர், பொதுநல வழக்கை (PIL) தாக்கல் செய்வதன் மூலம் அந்த மதப் பிரிவு அல்லது மதக் குழுவின் நடைமுறையைக் கேள்விப்படுத்த முடியுமா?


இந்தக் கேள்விகள், கீழே விவரிக்கப்பட்டுள்ள முக்கியமான அரசியலமைப்பு கோட்பாடுகளுடன் தொடர்புடையவை.


மத சுதந்திரம் மற்றும் சமத்துவ உரிமை (Freedom of religion and right to equality )


அரசியலமைப்பின் 25-வது பிரிவு, ஒவ்வொரு நபருக்கும் மத சுதந்திரத்தையும், அந்த சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையையும் உறுதி செய்கிறது. இருப்பினும், அரசியலமைப்பின் 3-வது பகுதியில் உள்ள மற்ற உரிமைகளைப் போலவே, இந்த சுதந்திரமும் முழுமையானது அல்ல.


பிரிவு 25(1)-ன் கீழ் உள்ள மத சுதந்திரம், பகுதி III-ன் பொது ஒழுங்கு, நெறிமுறை, சுகாதாரம் மற்றும் பிற விதிகளுக்கு உட்பட்டது. மேலும், பிரிவு 25(2), மத சுதந்திரத்திற்கான இந்த பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் சீர்திருத்தத்திற்கான சட்டங்களை இயற்றுவதிலிருந்து அரசைத் தடுக்காது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள முக்கியமான கேள்விகளில் ஒன்று உயிரியல் காரணத்தை (biological factor) அடிப்படையாகக் கொண்டு பெண்களை விலக்கும் ஒரு மத நடைமுறை, பாகுபாடாக (discrimination)  கருதப்படுமா என்பதும், அதன்மூலம் இந்திய அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 17 ஆகிய பிரிவுகளின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவக் கோட்பாட்டை (violating the principle of equality) அது மீறுமா என்பதும் ஆகும்.


ஒரு சமய நடைமுறையானது, ஒரு தனித்துவமான சமயப் பிரிவுடன் தொடர்புடையது (distinct religious denomination) என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, அது இந்திய அரசியலமைப்பின் 26-வது பிரிவின் கீழ் பாதுகாப்பைக் கோரமுடியும் என்றும் பல நேரங்களில் வாதிடப்படுகிறது. அது போன்ற சமயப் பிரிவின் அங்கீகாரம் இல்லாத நிலையில், அந்த நடைமுறைகள் பிற அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டவையாக மாறிவிடுகின்றன. இருப்பினும், சமத்துவத்திற்கான விதிகள், சமயச் சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தை மீறி நிலைத்து நிற்குமா என்பதே இங்கு ஒரு  முக்கிய கேள்வியாக உள்ளது.



மதப் பிரிவு (Religious denomination )


அரசியலமைப்பின் 26-வது பிரிவு, ஒவ்வொரு மதப் பிரிவுக்கும் அல்லது அதில் உள்ள எந்த ஒரு பகுதிக்கும், மதம் சார்ந்த விவகாரங்களில் தத்தமது விவகாரங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளவும், தமது சொத்துக்களை வைத்துக்கொள்வதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்கும் தேவையான உரிமையை உறுதி செய்கிறது. மேலும், அதன் எந்த ஒரு பகுதியும்” (any section thereof) என்ற பயன்பாடு, மதங்களின் உட்பிரிவுகளுக்கும் இந்த உரிமை விரிவடைகிறது என்பதை குறிப்பிடுகிறது.


இருப்பினும், மேற்கூறிய விதிமுறை 'மதம்' (denomination) என்ற சொல்லுக்கு வரையறை அளிக்கவில்லை. இது நீதித்துறை விளக்கங்களுக்கும் தலையீடுகளுக்கும் வழிவகுத்து வருகிறது.


மத சுதந்திரம் தொடர்பான அடிப்படை வழக்கு, 1954-ஆம் ஆண்டு மெட்ராஸ் இந்து சமய அறநிலைய ஆணையர் vs ஷிரூர் மடத்தின் ஸ்ரீ லக்ஷ்மிந்திர தீர்த்த சுவாமியார் (The Commissioner, Hindu Religious Endowments, Madras versus Sri Lakshmindra Thirtha Swamiar of Shirur Mutt) வழக்காகும். இந்த வழக்கில், மத நம்பிக்கையின் ஒருங்கிணைந்த முக்கிய நடைமுறைகளையும் மதம் உள்ளடக்கியது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், மத நடைமுறைகளுக்கும் மதத்துடன் தொடர்புடைய மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் வரையறுத்தது. நிர்வாகம், சொத்து மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில், சில காலங்களுக்கு பின்னர்  அரசு  நெறிமுறைப்படுத்தலாம்.


1982-ஆம் ஆண்டு எஸ். பி. மிட்டல் vs இந்திய யூனியன் (S P Mittal versus Union of India case) வழக்கில் , ஒரு மதப்பிரிவை அடையாளம் காண்பதற்கான 3 நிபந்தனைகளை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது: அவை,


(1) ஒரு பொதுவான நம்பிக்கை


(2) பொதுவான அமைப்பு


(3) ஒரு தனித்துவமான பெயர் ஆகும்.


சட்டப்பிரிவு 25 தனிநபர்களின் மத சுதந்திரத்தைப் (சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு) பாதுகாக்கும் அதேவேளையில், சட்டப்பிரிவு 26 மதப் பிரிவுகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனால், ஒரு குழு மதப் பிரிவு என்ற வரையறைக்கு உட்படுகிறதா என்பது விவாதத்திற்குரியது. அது ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறது.


மிக முக்கியமாக, ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கப்படுவது, ஒரு குழு தனது அடிப்படை மத நடைமுறைகளை வெளிப் நபர்களின் தலையீடுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. இருப்பினும்,  இது போன்ற கோரிக்கையே நீதித்துறை ஆய்வுக்கு (judicial scrutiny) உட்பட்டதாகும். அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு (Essential Religious Practices doctrine (ERP)) இந்தவளர்ச்சிக்குத் துணையாக அமைகிறது.


Original article : The Sabarimala case and questions of religion and equality.

Share: