பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு எதை வெளிப்படுத்துகிறது? -குஷ்பூ குமாரி

 சமீபத்தில் வெளியிடப்பட்ட 'பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு' (Panchayat Advancement Index (PAI)) 2.0-ல், திரிபுரா, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்துகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இந்தக்குறியீட்டின் சிறப்பம்சங்கள் யாவை? பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை (PRIs) அவ்வப்போது ஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிற அளவுகோல்கள் எவை?


தற்போதைய செய்தி :


நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (Sustainable Development Goals (SDGs)) இணைந்த 9 கருப்பொருள்களின் அடிப்படையில், 2,59,867 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு மற்றும் முன்னேற்றத்தை மதிப்பிட்ட 'பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு (Panchayat Advancement Index (PAI)) 2.0'-ஐ, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டது. மேற்கு வங்கத்தைத் தவிர, நாட்டின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளையும் இந்தக்குறியீடு உள்ளடக்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்:


1. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இதன் முதல் பதிப்பு, 2.16 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை அவற்றின் செயல்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தியது.


2. பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு (Panchayat Advancement Index (PAI)) என்பது 9 கருப்பொருள்களில், நிலையான வளர்ச்சி இலக்குகளின் (Localization of Sustainable Development Goals (LSDGs)) செயல்படுத்தப்படுவது எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும். இது ஒன்பது விரிவான கருப்பொருட்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது.


3. இந்த ஆண்டில், 2023-24-ஆம் ஆண்டு நிதியாண்டின் போது— வறுமையற்ற மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரங்கள் முதல் பெண்களுக்கு உகந்த பஞ்சாயத்துகள் வரை— ஒன்பது நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளடக்கிய 150 குறியீடுகளின் அடிப்படையில் பஞ்சாயத்துகளின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது.


4. பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியிட்டின் (Panchayat Advancement Index (PAI))  கீழ், 

சாதனையாளர்’ (Achiever) – 90 முதல் 100


‘முன்னணி’ (Front Runner) – 75 முதல் 90


‘செயற்பாட்டாளர்’ (Performer) – 60 முதல் 75


‘ஆர்வமுள்ளவர்’ (Aspirant) – 40 முதல் 60


‘தொடக்க நிலை’ (Beginner) – 40க்கு போன்றவை, மதிப்பெண் அடிப்படையில் கிராம பஞ்சாயத்துகளின் செயல்திறன் வகைப்படுத்தப்படுகிறது.


5. 2,59,867 கிராமப் பஞ்சாயத்துகளில், 3,635 'முன்னணி' பஞ்சாயத்துகளாகவும், 1,18,824 'செயல்திறன் மிக்கவை' பஞ்சாயத்துகளாகவும், 1,23,719 'முன்னேற விரும்புபவை' பஞ்சாயத்துகளாகவும், 13,689 'தொடக்கநிலை' பஞ்சாயத்துகளாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு பஞ்சாயத்தும் 'சாதனையாளர்' பிரிவில் இடம்பெறவில்லை.


6. ‘முன்னணி’ பஞ்சாயத்துகளில், திரிபுராவில் 943 பஞ்சாயத்துகள் இருந்தன. இது அந்தமாநிலத்தின் மொத்தமுள்ள 1,176 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 80 சதவீதமாகும். இதனைத் தொடர்ந்து கேரளாவில், அதன் 941 கிராமப் பஞ்சாயத்துகளில் 10 சதவீதம் ‘முன்னணி பஞ்சாயத்துகள்’ என மதிப்பிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 6,794 கிராமப் பஞ்சாயத்துகளில் 8 சதவீதம் ‘முன்னணி பஞ்சாயத்துகள்’’ என மதிப்பிடப்பட்டு, ஒடிசா அடுத்த இடத்தில் உள்ளது.


7. பல பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகள்  சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 57,678 கிராமப் பஞ்சாயத்துகளில் 51 பஞ்சாயத்துகள் மட்டுமே ‘முன்னணி பஞ்சாயத்துகளாக மதிப்பிடப்பட்டன. ராஜஸ்தானில், 11,037-ல் 8; பீகாரில், 8,053-ல் இரண்டு; மற்றும் பஞ்சாபில், 13,233-ல் ஒன்று என்ற அளவில் இந்த பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை இருந்தது.


பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீட்டை அறிமுகப்படுத்துவதன் நோக்கம்:


1. 2015-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை, வறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) வகுத்தது. இந்த இலக்குகளை உறுப்பு நாடுகள் 2030-ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும்.


2. இந்த இலக்குகள் 269 குறிக்கோள்களை கொண்டுள்ளன. அவற்றின் முன்னேற்றம் 231 குறிகாட்டிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை, நிலையான வளர்ச்சி இலக்குகளின், முன்னேற்றத்தை கண்காணித்து வரும் அதே வேளையில், இந்தியாவின் முக்கிய அரசு சிந்தனைக் குழுவான 'நிதி ஆயோக்' (NITI Aayog), 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தனது 'நிலையான வளர்ச்சி இலக்கு இந்தியா குறியீடு' (SDG India Index) மூலம் மாநில வாரியான முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. கடந்த சில  ஆண்டுகளில், நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.


3. உள்ளாட்சி நிர்வாகத்தில் பஞ்சாயத்துகளின் முக்கியப் பங்கை உணர்ந்து, அரசு அவற்றை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இதன் விளைவாக, அனைவரையும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சிக்கான உள்ளூர் உத்திகள் மற்றும் இலக்குகளை வகுப்பதற்கு உதவும் வகையில், அடிமட்ட அளவில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய அளவீடாக பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு உருவாக்கப்பட்டது.


4. இந்தக் குறியீடு, அனைவருக்குமான 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுக்குப் ஏற்ப 9 கருப்பொருள் பகுதிகளாக ஒருங்கிணைக்கும் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் (LSDGs) கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.


5. பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் தரவு சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், “வளர்ந்த கிராம பஞ்சாயத்துகள்” என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.


இந்தியாவில் மூன்று அடுக்கு அரசாங்கத்தின் நிலை: இந்தியாவில் கிராம பஞ்சாயத்து (கிராம அளவில்), பஞ்சாயத்து சமிதி (வட்டார அளவில்) மற்றும் மாவட்ட பரிஷத் (Zila Parishad) ஆகிய மூன்று அடுக்குகளிலும் சேர்த்து 2.63 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் 32.29 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களில் 15.03 லட்சம் (46.6 சதவீதம்) பேர் பெண்கள் ஆவர்.

இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்பு


1. “பஞ்சாயத்து” என்பது “உள்ளாட்சி அமைப்பு” என்பதால், அது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு அமைப்பாகும். மேலும், இது அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் ஒரு பகுதியாகும். பஞ்சாயத்துகள் சமந்தப்பட்ட மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டங்களின்கீழ் செயல்படுகின்றன.


2. அரசியலமைப்பின் 243G பிரிவு, ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு, உரிய அளவில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் ஒப்படைப்பது குறித்து, சட்டத்தின் மூலமாக விதிகளை இயற்றுவதற்கு ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பகிர்ந்தளிப்பதற்காக, 11-வது அட்டவணையில் 29 பாடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


3. பஞ்சாயத்துகளை அவ்வப்போது கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல், பஞ்சாயத்து அளவில் அலுவலர்களை நியமித்தல், தன்னாட்சி மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவை மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.


3. இருப்பினும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஆய்வுகள், ஆய்வுக் கூட்டங்கள், களப் பயணங்கள், காணொளி மூலமாக கலந்துரையாடல், தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் போன்றவற்றின் மூலம் பஞ்சாயத்துகளின் செயல்திறனை அவ்வப்போது மதிப்பாய்வு செய்கிறது.


காலமுறை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு.


'பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீட்டின்' (Panchayat Advancement Index (PAI)) காலமுறை ஆய்வு

1. பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வுக் குறியீடு (Panchayat Devolution Index): இது இந்தியப் பொது நிர்வாக நிறுவனம் (Indian Institute of Public Administration (IIPA)) நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இந்தக் குறியீடு கடைசியாக 2014-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில், இதன் தேசிய சராசரி மதிப்பெண் 39.92-லிருந்து 43.89-ஆக உயர்ந்துள்ளது.


கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, அலுவலர்கள், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய ஆறு அளவுகோல்களின் அடிப்படையில் பஞ்சாயத்து அமைப்பின் செயல்திறனை அளவிடுவதற்காக, இந்தியப் பொது நிர்வாக நிறுவனம் அமைப்பு இந்தியா முழுவதும் 68 மாவட்டங்களில் உள்ள 172 பஞ்சாயத்துகளை ஆய்வு செய்தது. இது மாநில அளவிலான மதிப்பீட்டை 0 முதல் 100 வரை வழங்குகிறது.


கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்தக் குறியீட்டில் முதலிடம் பிடித்தன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்தன. பெண் பிரதிநிதிகளின் தேசிய சராசரி விகிதம் 46.44%-ஆக உள்ளது. இது 2013-14-ஆம் ஆண்டில் இருந்த 45.9% என்ற அளவை விட சிறிதளவு அதிகரித்துள்ளது.


2. இ-கிராம்ஸ்வராஜ் (eGramSwaraj): இது ஒரு பயனர்-நட்பு இணைய அடிப்படையிலான வலைத்தளம் ஆகும். பரவலாக்கப்பட்ட திட்டமிடல், முன்னேற்ற அறிக்கையிடல், நிதி மேலாண்மை, பணி சார்ந்த கணக்கியல் மற்றும் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்கள் ஆகியவற்றில் சிறந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு (PRIs) ஒன்றிய நிதி ஆணையத்தின் நிதிகளை இணையவழியில் மாற்றுவதற்கும், பஞ்சாயத்துகள் விற்பனையாளர்கள்/சேவை வழங்குநர்களுக்கு நிகழ்நேரத்தில் பணம் செலுத்துவதற்கும் பொது நிதி மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


3. ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (Rashtriya Gram Swaraj Abhiyan (RGSA)): இது ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்குத் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து, அதன்மூலம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் கிராமப் பஞ்சாயத்துகள் திறம்படச் செயல்பட வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும்.

Original article : What does the Panchayat Advancement Index reveal?

Share: