ராணுவ தளபதி ஜெனரல் நரவணேவின் புத்தகம் எதைப் பற்றியது? மூத்த அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அலுவர்களால் எழுதப்படும் புத்தகங்களுக்கு என்ன விதிகள் பொருந்தும்?
திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் M. M. நரவணே (ஓய்வு) எழுதிய வெளியிடப்படாத நினைவுக் குறிப்பு நூலிலிருந்து மேற்கோள் காட்டியதே இதற்கு முக்கிய காரணமாகும். அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாசித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தப் புத்தகம் எதைப் பற்றியது, அதன் வெளியீடு ஏன் இரண்டு ஆண்டுகளாகத் தாமதமாகி வருகிறது? மூத்த அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அலுவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை நிர்வகிக்கும் விதிகள் என்ன?
ஜெனரல் நரவணேயின் புத்தகம் எதைப் பற்றியது?
‘Four Stars of Destiny’ என்ற தலைப்பில் உள்ள அந்தப் புத்தகம், முதலில் ஜனவரி 2024-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. டிசம்பர் 2023-ல், PTI செய்தி நிறுவனம் அதிலிருந்து சில பகுதிகளை வெளியிட்டது. அதன் பிறகு, ராணுவம் அந்தப் புத்தகத்தை மறுஆய்வு செய்யத் தொடங்கியது.
அந்தப் பகுதிகள், 2020-ல் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பதற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடிக்கு இந்திய அரசு அளித்த பதில் குறித்தும், 2023-ல் தொடங்கப்பட்ட முப்படைகளுக்கான அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த விவாதங்கள் குறித்து இதுவரை தெரியாத விவரங்களை வெளிக்கொண்டு வந்தன.
அந்தப் புத்தகம் ஏன் ராணுவத்தால் மறுஆய்வு செய்யப்படுகிறது?
1954-ஆம் ஆண்டு ராணுவ விதிகளின் பிரிவு 21-ன் கீழ், பணியில் உள்ள வீரர்கள் "எந்தவொரு அரசியல் கேள்வி அல்லது சேவை சார்ந்த விவகாரம் அல்லது எந்தவொரு சேவைத் தகவலையும் கொண்ட எந்தவொரு விவகாரத்தையும் எந்த வடிவத்திலும் வெளியிடவோ அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவோ" அனுமதிக்கப்படுவதில்லை என்று தெளிவாக கூறுகிறது.
மேலும், "ஒன்றிய அரசின் முன் அனுமதி இல்லாமல், அத்தகைய கேள்வி அல்லது விவகாரம் அல்லது அத்தகைய தகவல்களைக் கொண்ட எந்தவொரு புத்தகம் அல்லது கடிதம் அல்லது கட்டுரை அல்லது பிற ஆவணத்தை வெளியிடவோ அல்லது வெளியிடச் செய்யவோ" தடை விதிக்கப்பட்டுள்ளது.
பணியில் உள்ள அலுவர்கள், முன் அனுமதி இல்லாமல் அரசியல் கேள்வி தொடர்பான ஒரு விவகாரம் அல்லது சேவை சார்ந்த விவகாரம் அல்லது எந்தவொரு சேவை விவகாரம் குறித்த தகவல்கள் அல்லது கருத்துக்களைக் கொண்ட ஒரு விரிவுரை அல்லது வானொலி உரை நிகழ்த்தவோ முடியாது.
இந்த விதிகள், ‘சேவைத் தகவல்’ மற்றும் ‘சேவைப் பொருள்’ என்பவை, “ஒன்றிய அரசின் படைகள், பாதுகாப்பு அல்லது வெளி உறவுகள் தொடர்பான தகவல்கள் அல்லது விவகாரங்களை உள்ளடக்கியது” என்று விளக்குகின்றன.
இந்த விதிகள் ஜெனரல் நரவணே போன்ற ஓய்வுபெற்ற அதிகாரிக்கும் பொருந்துமா?
ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஒரு புத்தகத்தை வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய செயல்முறை குறித்து இந்த விதிகள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
ஆயுதப்படை வீரர்களால் வெளியிடப்படும் புத்தகங்களுக்கான மறு ஆய்வு செயல்முறையானது, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (Department of Personnel and Training (DoPT)) ஜூன் 2021-ல் திருத்தப்பட்ட மத்திய குடிமைப் பணிகள் ஓய்வூதிய விதிகள் (Central Civil Services (Pension) Rules), 1972-லிருந்து பெறப்படலாம் என்று சில அதிகாரிகள் முன்னதாக Indian Express-யிடம் தெரிவித்தனர்.
இந்த விதிகள் ஆயுதப்படைகளின் வரம்பிற்குள் வராத போதிலும் இந்த நிலை உள்ளது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, உளவுத்துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஓய்வுக்குப் பிறகு முன் அனுமதி இல்லாமல் ஆயுதப்படை தொடர்பான எந்த ஒரு தகவலையும் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் சாராத ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புத்தகம் வெளியிட அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பும் மற்ற இராணுவ அதிகாரிகள் புத்தகங்கள் எழுதியுள்ளார்களா?
ஆம், கடந்த காலத்தில் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற பல இராணுவ அதிகாரிகள் பல்வேறு இராணுவம் தொடர்பான தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளனர்.
முன்னாள் ராணுவத் தளபதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களில், ஓய்வு பெற்ற ஜெனரல் வி.பி. மாலிக் எழுதிய 'Kargil: From Surprise To Victory' மற்றும் ஓய்வு பெற்ற ஜெனரல் வி.கே. சிங் எழுதிய 'Courage and Conviction: An Autobiography' ஆகியவை அடங்கும்.
முன்னாள் தலைமை ஜெனரல் கே. சுந்தர்ஜி, "Blind Men of Hindoostan: Indo-Pak Nuclear War and Of Some Consequence: A Soldier Remembers" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.