தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்த வரைவுத் திருத்தங்கள் ஆரோக்கியமான போட்டிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. -மேக்னா பால் மற்றும் அவ்னீத் ஓபராய்

 டிஜிட்டல் உலகம் தற்போது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது: அதன் பரந்த தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல், அடிக்கடி மாற்றப்படும் விதிமுறைகளைக் கொண்டு மட்டும் இதை நிர்வகித்துவிட முடியாது என்கின்றனர். எனவே, முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள், டிஜிட்டல் நிர்வாகத்தின் சிக்கலான தன்மைகளை மிகவும் அவசரமாகவும், அதே சமயம் தீவிரமாகவும் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.


மார்ச் மாதம் 30-ஆம் தேதி அன்று, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) தகவல் தொழில்நுட்ப விதிகளில் (Information Technology Rules) புதிய வரைவுத் திருத்தங்களை வெளியிட்டது. இதன் மூலம், டிஜிட்டல் இடைநிலை தளங்கள் (digital intermediary platforms) அவ்வப்போது அமைச்சகம் வெளியிடும் விளக்கங்கள் அல்லது ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, புதிய தொழில்நுட்பங்களால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் இந்த 'ஆலோசனைகள்' ஒரு புதிய நிர்வாகக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. 


உதாரணமாக, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் ‘Deepfakes’ மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) தொடர்பான சிக்கல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இத்தகைய ஆலோசனைகள் பெரும்பாலும் ஒரு பிரச்சனை நடந்த பிறகு அதற்கு எதிர்வினையாக உருவாக்கப்படுவதால், அவை முறையான ஒழுங்குமுறைக்குப் பதிலாக விரைவான அமலாக்கத்திலேயே கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக, மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆலோசனை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உரிம முறையைப் (Licensing system) பரிந்துரைத்தது; இது நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியையே முடக்கும் அபாயத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


சட்டப்பூர்வமான விதிகள் மற்றும் சட்டங்களைப் போலன்றி, ஆலோசனைக் குறிப்புகள் பொதுவாக முன்கூட்டியே கலந்தாலோசித்தல், தெளிவான வரையறை மற்றும் குறிப்பிட்ட காலக்கெடு போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதில்லை. இதனால் இவற்றை மிக விரைவாக வெளியிட முடிகிறது. வேகமாக மாறிவரும் டிஜிட்டல் சூழலில் இத்தகைய கருவிகள் பயனுள்ளதாகத் தெரிந்தாலும், அவை வணிக நிறுவனங்களுக்கு ஒருவித நிச்சயமற்ற நிலையை உருவாக்குகின்றன. இதன் காரணமாக, நிறுவனங்கள் வரவிருக்கும் ஒழுங்குமுறை மாற்றங்களைக் கணிப்பதிலும், இணக்கத் தேவைகளைப் புரிந்து கொள்வதிலும், முதலீடுகளைத் திட்டமிடுவதிலும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. ஒட்டுமொத்தமாக, நிர்வாகத்திற்கு இது போன்ற ஆலோசனைக் குறிப்புகளை மட்டுமே நம்பியிருப்பது ஒழுங்குமுறை ரீதியான குழப்பங்களுக்கு வழிவகுப்பதோடு, கடுமையான பொருளாதார சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.


பொருளாதார ஆய்வுகளின்படி, இணையதள விதிமுறைகளில் நிலவும் தெளிவற்ற தன்மை, செயல்பாட்டுத் திறனைக் குறைப்பதோடு பணப்பரிமாற்றச் செலவுகளையும் அதிகரித்து ஒருவிதத் தடையை உருவாக்குகிறது. இந்தத் தாக்கம் டிஜிட்டல் சந்தையோடு மட்டும் நின்றுவிடாமல், அதோடு நெருங்கிய தொடர்புடைய  உலகப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உலகளாவிய பல வணிகங்கள் இன்று தங்கள் பொருட்களை இணையதளம் வாயிலாகவே விற்பனை செய்கின்றன.


 ‘Boston Consulting Group’ நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு அறிக்கைப்படி, சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் படைப்பாளிகள் (Digital creators), ஆண்டுதோறும் 350 முதல் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டு உபயோகச் செலவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


 மேலும், ‘Esya Centre’ நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs), உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் வருவாயைப் பெருக்கவும் நிர்ணயிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களையே (Targeted digital advertising) பெரிதும் நம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தகவல் தொழில்நுட்ப விதிகளில் (Information Technology Rules (IT Rules)) கொண்டுவரப்பட உள்ள வரைவுத் திருத்தங்கள், இணைய நிர்வாகத்தில் ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற முறையை அறிமுகப்படுத்துகின்றன. மேலும், இவற்றின் பரந்த பொருளாதாரத் தாக்கம் குறித்து முழுமையாக ஆலோசிக்கப்படவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. டிஜிட்டல் மற்றும் நேரடிப் பொருளாதாரத்திற்கு இடையே உள்ள தொடர்பைப் புறக்கணிப்பது, டிஜிட்டல் சந்தைகளையும் தாண்டி ஒழுங்குமுறைப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைச் சான்றுகள் காட்டுகின்றன. ‘Esya Centre’ ஆய்வின்படி, தரவு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பாரம்பரியத் துறைகள் ஆகிய இரண்டிலுமே கணக்கெடுக்கப்பட்ட 85% நிறுவனங்கள், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (Digital Personal Data Protection Act, 2023 (DPDP Act)) ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளால் ஏற்படும் இணக்கச் செலவுகள் தங்கள் வருவாயைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வு, குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பொம்மைகள் மற்றும் பொழுதுபோக்குத் தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்  என்றும் கண்டறிந்துள்ளது.


தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளின் திருத்தங்களில் முன்மொழியப்பட்டுள்ள நிர்வாக முறை, வெறும் ஆலோசனைகள் வழங்குவது போல் காட்டப்பட்டாலும், நடைமுறையில் அது நேரடி உத்தரவு பிறப்பிக்கும் ஆட்சியைப் போலவே செயல்படக்கூடும் என்கின்றனர். இம்முறையில், குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எந்தவொரு முன் அறிவிப்புமின்றி மிக விரைவாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நிச்சயமற்ற சூழல், சந்தை நிலவரங்களைக் கண்டறியவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டிஜிட்டல் தளங்களைச் சார்ந்திருக்கும் வணிகங்களுக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கும் என்கின்றனர். மேலும், பரிவர்த்தனைச் செலவுகள் அதிகரிப்பது இணையவழி சந்தைப்படுத்தல் செலவையும் உயர்த்தும் என்றும் கூறப்படுகிறது. காலப்போக்கில், இது முதலீட்டையும் உற்பத்தியையும் குறைப்பதோடு, ஒழுங்குமுறை சார்ந்த இடர்பாடுகளைத் துல்லியமாகக் கணிக்க முடியாத சிறு நிறுவனங்கள், சந்தையை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.


பரந்த அளவிலான தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல், அடிக்கடி மாற்றப்படும் விதிமுறைகளால் டிஜிட்டல் உலகத்தை ஒருபோதும் திறம்பட நிர்வகிக்க முடியாது. டிஜிட்டல் சந்தைகளின் தொழில்நுட்பத் தன்மை, அதன் வேகமான மாற்றம் மற்றும் அவை சாதாரண சந்தைகளுடன் கொண்டுள்ள தொடர்பு போன்ற டிஜிட்டல் நிர்வாகத்தின் சிக்கல்களை முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த காரணிகளைப் புறக்கணிப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையை ஒட்டுமொத்த பொருளாதாரச் சிக்கலாக மாற்றக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். 


மேக்னா பால் என்பவர் இயக்குநராகவும், ஓபராய் என்பவர் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘Esya Centre’ என்ற சிந்தனைக் குழுவில் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றுகின்றனர்.


Original article : Draft amendments to IT Rules threaten healthy competition. -Meghna Bal and Avneet Oberoi

Share: