இந்திய ரிசர்வ் வங்கியின் நிறுவன நாள் சிறப்புப் பதிவு: அதன் வரலாறு, புதிய திட்டங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து… -குஷ்பூ குமாரி

 ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) நிறுவனம் நிறுவப்பட்டது. இந்தத் தருணத்தில், அதன் வரலாறு, பணிகள் மற்றும் புதிய முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். மேலும், மேற்கு ஆசியப் போரின் போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்வோம். 


ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டு, 1934-ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India Act, 1934) சட்டத்தின்கீழ் இந்த வங்கி நிறுவப்பட்டது. இது நாட்டின் பணவியல் உறுதித்தன்மையை நிர்வகித்தல், பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல், வங்கிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்தல் போன்ற முக்கியப் பணிகளைச் செய்து வருகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. 1926-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஹில்டன் யங் ஆணையம் (Hilton Young Commission) என்று அழைக்கப்படும் இந்திய நாணயம் மற்றும் நிதி குறித்த ராயல் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிறுவப்பட்டது. இந்த ஆணையம் 'இந்திய ரிசர்வ் வங்கி' என்ற பெயரில் ஒரு மத்திய வங்கியை உருவாக்கப் பரிந்துரைத்தது.


2. ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை முறைப்படுத்துதல், பணவியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இருப்புகளைப் பராமரித்தல், நாட்டின் கடன் மற்றும் நாணய முறையை நிர்வகித்தல் போன்ற பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.

3. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சர் ஆஸ்போர்ன் ஆர்க்கெல் ஸ்மித் ஆவார். இவர் இந்திய இம்பீரியல் வங்கியின் (Imperial Bank of India (IBI)) மேலாண்மை ஆளுநர்களில் ஒருவராகவும் பணியாற்றியவர். அவருக்குப் பிறகு, சர் சி. டி. தேஷ்முக் இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய ஆளுநராகப் பொறுப்பேற்றார்.


4. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் முதன்முதலில் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. பின்னர் 1937-ஆம் ஆண்டில் அலுவலகம் நிரந்தரமாக மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த அலுவலகத்தில்தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பணியாற்றுவதாகவும் நாட்டின் முக்கிய நிதி சார்ந்த கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


5. இந்திய ரிசர்வ் வங்கி, 1948-ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (பொது உடைமைக்கு மாற்றுதல்) ((Transfer to Public Ownership) Act, 1948)) சட்டத்தின்கீழ், 1949-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தேசியமயமாக்கப்பட்டது. இதன்படி, வங்கியின் அனைத்துப் பங்குகளும் உரிய இழப்பீட்டுடன் ஒன்றிய அரசிற்கு மாற்றப்பட்டன.


6. இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மத்திய இயக்குநர்கள் குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த குழுவில் ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள் வரை, பல்வேறு துறைகளிலிருந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பத்து இயக்குநர்கள், இரண்டு அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி வாரியங்களிலிருந்து நான்கு இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.


7. இந்திய ரிசர்வ் வங்கி மேற்கத்திய, கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு உள்ளாட்சி வாரியங்களைக் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு வாரியத்திலும் ஒன்றிய அரசால் நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். இருப்பினும், 2022-ஆம் ஆண்டு முதல், போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை (Quorum) இல்லாத காரணத்தால் இந்த வாரியங்கள் செயல்படவில்லை. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த உறுப்பினர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில், உள்ளாட்சி வாரியங்களுக்குப் பதிலாக மத்திய வாரியத்தின் நிலைக்குழு (Standing Committee of the Central Board) அந்த விவகாரங்களைக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.


8. இந்திய ரிசர்வ் வங்கி விலை நிலைத்தன்மையை பராமரித்தல், ரூபாய் நோட்டுகளை வெளியிடுதல் மற்றும் அரசுக்கும் பிற வங்கிகளுக்கும் ஒரு வங்கியாகச் செயல்படுதல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, இன்றைய காலக்கட்டத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பை (Foreign Exchange Reserves) நிர்வகிப்பது ரிசர்வ் வங்கியின் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துதல்களை ஆதரிப்பதற்கும், அந்நியச் செலாவணி சந்தையைச் சீரான முறையில் மேம்படுத்தி பராமரிப்பதற்கும், ரிசர்வ் வங்கியானது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999-ஐ (Foreign Exchange Management Act - 1999) நடைமுறைப்படுத்துகிறது.





இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்முயற்சிகள்:


ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன: பாதுகாப்பை மேம்படுத்தவும், மோசடிகளைக் குறைக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி இரண்டு அடுக்கு அங்கீகாரம் (Two-Factor Authentication) கட்டாயமாக்கப்படும். எனவே வெறும் ஒற்றை கடவுச்சொல் (One-Time Password (OTP)) மட்டும் போதுமானதாக இருக்காது. பணப் பரிவர்த்தனைகளை நிறைவு செய்ய, கடவுச்சொல்லை (Personal Identification Number (PIN)) உள்ளிடுவது அல்லது கைரேகை மற்றும் முக அங்கீகாரம் (Face scan) போன்ற கூடுதல் படிநிலை அவசியமாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளின் பொறுப்புணர்வையும் ரிசர்வ் வங்கி (RBI) அதிகரித்துள்ளது. எனினும் பாதுகாப்பு குறைபாட்டினால் மோசடி நடந்தால், வங்கிகளே வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மின்-காசோலைகள் (E-cheques): இந்தியாவின் பணப்பரிமாற்ற முறையை நவீனப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி மின்-காசோலைகளை (e-cheques) அறிமுகப்படுத்த உள்ளது. இவை காகிதக் காசோலைகளின் நம்பகத்தன்மையையும், டிஜிட்டல் பரிமாற்றங்களின் வேகம் மற்றும் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கின்றன. மின்-காசோலை என்பது காகிதக் காசோலையின் டிஜிட்டல் வடிவமாகும், இது இணைய வழியாக உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. பணம் செலுத்துபவர் (Payer) விவரங்களைப் பூர்த்தி செய்து, டிஜிட்டல் கையொப்பமிட்டு (Digital Signature), அதைப் பெறுபவருக்கோ அல்லது வங்கிக்கோ அனுப்ப வேண்டும். வங்கி இதனை ஒரு சாதாரண காசோலையைப் போலவே சரிபார்த்து அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளும் என்றும் ஆனால் இது காகிதக் காசோலையைவிட அதிக பாதுகாப்புடன் கூடிய முறையாகவும் காகிதமற்ற மற்றும் எளிதாகக் கண்காணிக்கக் கூடிய பரிவர்த்தனை முறையாகவும் இருக்கும் என்கின்றனர்.


வங்கிகள் எதிர்கொண்டு வரும் "mule" வங்கிக் கணக்குகள் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதன் மூலம் டிஜிட்டல் மோசடிகளைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி  உருவாக்கியுள்ள ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) கருவிதான் MuleHunter.AI ஆகும். "mule" கணக்கு என்பது பணமோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகக் குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் ஒரு வங்கிக் கணக்காகும். பொதுவாக, குறைந்த வருமானம் கொண்டவர்கள் அல்லது தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களிடமிருந்து இந்தக் கணக்குகளைக் குற்றவாளிகள் அபகரித்துத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.


மேற்கு ஆசியப் போர் நெருக்கடிக்கு மத்தியில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னால் உள்ள முக்கியமான பணிகள்:


1. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் மேற்கு ஆசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பணவீக்கச் சிக்கல்கள் போன்றவற்றால் இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய நிகர அந்நியச் செலாவணி கையிருப்பு வரம்பை (Net Open Position Limit (NOPL)) 100 மில்லியன் டாலராகக் குறைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வணிகர்கள் (Authorized Dealers) அனைவரும் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதிக்குள் இந்த விதியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


2. இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தவும், ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய மோதலால் குறைந்து வரும் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Forex Reserves) பாதுகாக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வங்கிகள் உள்நாட்டில் எவ்வளவு அந்நியச் செலாவணியை வைத்திருக்கலாம் என்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இதற்கு முன்பு, வங்கிகள் தங்களின் மொத்த மூலதனத்தில் 25% வரை நிகர திறந்த நிலைகளை (Net Open Positions - NOP) வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. இது தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய வரம்பைவிட அதிகம் என்கின்றனர். 


3. ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததால், அதன் மதிப்பை நிலைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பிலிருந்து டாலர்களைப் பயன்படுத்தியது. இதனால், போர் தொடங்கியதில் இருந்து கையிருப்பு 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் குறைந்து, தற்போது 698.34 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) நான்கு பகுதிகளைக் கொண்டது: அந்நிய நாட்டுச் செலாவணி சொத்துக்கள், தங்கம், சிறப்பு வரைதல் உரிமைகள் (Special Drawing Rights (SDRs)) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் (International Monetary Fund (IMF)) உள்ள இருப்பு நிலை (Reserve Tranche Position) ஆகியவையாகும்.


4. இருப்பினும், இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு 95 ரூபாயைத் தாண்டிய நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு பலன் அளிக்கின்றன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சித்தார்த் உபாசனியுடனான நேர்காணலில் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் மைக்கேல் பாத்ரா, சந்தையில் அமெரிக்க டாலர் தடையின்றி புழக்கத்திலிருப்பதை உறுதி செய்ய, ரிசர்வ் வங்கி அமெரிக்காவின் வெளிநாட்டு மற்றும் சர்வதேச பணவியல் அதிகாரிகளுக்கான ரெப்போ வசதியை (Foreign and International Monetary Authorities Repo Facility (FIMA Repo Facility)) பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


5. வெளிநாட்டு மற்றும் சர்வதேச பணவியல் அதிகாரிகளுக்கான ரெப்போ வசதியின் கீழ் (FIMA), இந்திய ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகள் தங்களிடம் உள்ள அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை (US Treasury holdings), ஒன்று அல்லது ஏழு நாட்களுக்கு அமெரிக்காவின் மத்திய வங்கிக்கு (Federal Reserve) அடமானமாக வழங்கி, அதற்குப் பதிலாக டாலர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்றனர். இந்த காலக்கெடு முடிந்ததும், வாங்கிய டாலர்களைச் சிறு வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டு, அடமானம் வைத்த பத்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் மத்திய வங்கி அதிகாரியின் கருத்துப்படி, இந்த வசதியைப் பயன்படுத்துவது சந்தையை நிலைப்படுத்தவும், ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், அவற்றை மீண்டும் சேமிப்பதற்குத் தேவையான கால அவகாசத்தைப் பெறவும் உதவும் என்கின்றனர்.


6. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் ஏற்படும் தாக்கம்: இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது, நாட்டின் இறக்குமதிச் செலவு முதலில் பாதிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய், மின்னணு உதிரிபாகங்கள், உரங்கள் மற்றும் தொழில்முறை இயந்திரங்கள் போன்ற டாலர் மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படும் பொருட்கள் அதிக விலையுயர்ந்ததாக மாறுகின்றன. இந்த விலையேற்றம் வணிக நிறுவனங்களையும் பொதுமக்களையும் நேரடியாகப் பாதிப்பதோடு, பணவீக்கத்தை (Inflation) அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தியை (Purchasing Power) குறைத்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


7. கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தால், இந்தியாவின் ஆண்டு இறக்குமதிச் செலவு (இறக்குமதி அளவைப் பொறுத்து) சுமார் 1.5 முதல் 2 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கிறது. இது நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (Current Account Deficit (CAD)) நேரடியாக உயர்த்துகிறது. எளிமையாகச் சொன்னால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) என்பது இந்தியா ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக இறக்குமதி செய்வதைக் குறிக்கிறது. இதனால், இந்திய ரூபாயைவிட அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Original article : RBI Foundation Day Special: History, new initiatives, and rupee stabilisation. -Khushboo Kumari

Share: