மத்திய-மாநில நிதிப் பரிமாற்றங்களுக்கான அளவுகோலாக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) பங்கு -கே.ஆர். சண்முகம், சங்கர்கணேஷ் கருப்பையா

மாநில அளவில் மத்திய வரிகள் எவ்வாறு திரட்டப்படுகின்றன என்பதன்  அடையாளமாக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) பங்கு உள்ளது.


மத்திய அரசு அதன் மொத்த வரி வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. இது தொடர்ச்சியான நிதி ஆணையங்களின் (Finance Commissions (FC)) பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கான ஒட்டுமொத்த பங்கையும் வரிப் பகிர்வுக்கான விதிமுறையையும் தீர்மானிக்கிறது. மானிய உதவி மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்கள் (centrally sponsored schemes (CSS)) மூலமாகவும் மத்திய அரசு வளங்களை மாற்றுகிறது. 15-வது நிதி ஆணையங்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டாலும், 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.


மத்திய அரசின் நிதிப் பரிமாற்றங்கள் தீவிர விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாக மாறியுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களின் நிதி தன்னாட்சிக் குறைப்பு, GST விகிதக் குறைப்புகளால் ஏற்படும் வருவாய் இழப்புகள், மாநில அளவிலான செலவின நெகிழ்வுத்தன்மையைக் கட்டுப்படுத்தும் மத்திய நிதியுதவி திட்டங்களின் (CSS) அதிகரித்துவரும் ஆதிக்கம், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத மத்திய அரசின் வளர்ந்துவரும் செஸ் மற்றும் கூடுதல் வரிகள் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட மாநிலங்களின் அதிகாரப் பகிர்வுக்கான பங்குகள் குறைந்து வருவது ஆகியவை முக்கியக் கவலைகளாகும். மேலும், பெரும்பாலான நிதி ஆணையங்கள் வருமான இடைவெளி மற்றும் மக்கள்தொகை போன்ற விவாதத்திற்குரிய அளவுகோல்களை பெரிதும் நம்பியிருப்பது, செயல்திறனைவிட சமத்துவத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. மேலும், இந்த மாற்றங்களுக்கு ஒதுக்கப்பட்ட தன்மைகளை அடிக்கடி மாற்றியுள்ளன. செலவுத் தேவைகள் மற்றும் நிதித் திறனில் மாநிலங்கள் முழுவதும் குறிப்பிடத்தக்க பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன.


வரி வசூல் vs வரிப் பங்களிப்பு


கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மத்திய வரி வருவாய்க்குத் தாங்கள் மிக அதிகப் பங்களிப்பைச் செய்வதாக வாதிடுகின்றன. ஆனால், வரிப் பகிர்வு மூலம் ஒப்பீட்டளவில் சிறிய பங்கையே பெறுவதாக அவை கூறுகின்றன. இருப்பினும், நேரடி வரி புள்ளிவிவரங்கள் முக்கியமாக வரிகள் எங்கு வசூலிக்கப்படுகின்றன என்பதையே காட்டுகின்றன என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவை வருமானம் உண்மையில் எங்கு ஈட்டப்படுகிறது என்பதை எப்போதும் காட்டுவதில்லை. தனிநபர்களும் நிறுவனங்களும் பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களிலிருந்து வேறுபட்ட இடங்களில் வரி செலுத்தலாம்.


உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள தானியங்கித்துறை உற்பத்தியாளர்கள் இந்தியா முழுவதும் வாகனங்களை விற்பனை செய்யலாம். ஆனால், அவர்களின் வரி செலுத்துதல்கள் அவர்களின் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதேபோல், கேரளாவில் உள்ள தோட்ட நிறுவனங்கள் நாடுதழுவிய அளவில் லாபம் ஈட்டுகின்றன. இருப்பினும் கேரளாவில் வரி செலுத்தப்படுகிறது.


எனவே, நிரந்தரக் கணக்கு எண் (PAN) தரவு அடிப்படையிலான அதிகார வரம்பைப் பயன்படுத்துவது, ஒவ்வொரு மாநிலமும் நேரடி வரிகளுக்கு எவ்வளவு பங்களிக்கிறது என்பதைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. இது பல நிறுவனங்கள் பல மாநிலங்களில் செயல்படுவதால் இந்தப் பிரச்சனை எழுகிறது. இது தொழிலாளர் இடம்பெயர்வு மற்றும் தற்காலிக அல்லது பல இடங்களில் பணிபுரிபவர்களாலும் ஏற்படுகிறது. மேலும், இது தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையேயான, மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் குறித்த விரிவான தரவுகளும் இல்லை. எனவே, ஒரு மறைமுக அமைப்புக்கான தேவை உள்ளது. மத்திய வரிகள் உண்மையில் வெவ்வேறு மாநிலங்களுக்கு எவ்வாறு கிடைக்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு, இந்த முறை ஒரு நம்பகமான மாற்றுவழியாகச் செயல்பட வேண்டும்.


மாநில அளவிலான வரி வருவாய்க்கான ஒரு குறியீடாக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP)


மத்திய அரசு நேரடி வரிகளை விதித்தாலும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அடிப்படை வரி அடிப்படையைக் குறிக்கிறது. வரி நிர்வாகத் திறன் மாநிலங்கள் முழுவதும் பரவலாக ஒரே மாதிரியாக இருந்தால் மற்றும் நேரடி வரி வருவாயின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு (GSDP) விகிதம் கணிசமாக வேறுபடவில்லை என்றால், தேசிய மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) ஒரு மாநிலத்தின் பங்கு மத்திய வரி வருவாயில் அதன் பங்களிப்பை நியாயமாக தோராயமாக மதிப்பிடலாம். சரக்கு மற்றும் சேவை வரி (GST) இலக்கு அடிப்படையிலானது மற்றும் மறைமுக வரிவிதிப்புக்கான முக்கிய ஆதாரமாக இருப்பதால், மாநிலங்கள் முழுவதும் ஜிஸ்டி வருவாயைப் பிரித்து ஒதுக்குவது ஒப்பீட்டளவில் எளிமையானது மற்றும் குறைந்த சர்ச்சைக்குரியது.


அனுபவப்பூர்வமான சான்றுகள் இந்த அணுகுமுறையை ஆதரிக்கின்றன. 2023-24 தரவைப் பயன்படுத்தி, மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கும் (GSDP) நேரடி வரிவசூலுக்கும் இடையிலான தொடர்பு 0.75 ஆகும். அதேநேரத்தில் GSDP-க்கும், சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலுக்கும் இடையிலான தொடர்பு 0.91 வரை அதிகமாக உள்ளது. இந்த வலுவான தொடர்புகள், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) பங்கு என்பது மாநில அளவில் மத்திய வரித் திரட்டலின் அர்த்தமுள்ள குறிகாட்டியாகும் என்பதைக் குறிக்கிறது.


2020-21 முதல் 2024-25 வரை, மத்திய அரசு அதன் மொத்த வரி வருவாயில் 41%-ஐ 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க மாநிலங்களுக்கு வழங்கியது. மேலும், மானிய உதவி மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்கள் (CSS) மூலம் கூடுதல் நிதிப் பரிமாற்றங்களும் செய்யப்பட்டன. நிதி அமைச்சகத்தின்படி (மாநிலங்களவை நட்சத்திரமிடப்படாத கேள்வி எண் 236, டிசம்பர் 2, 2025), இந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த நிதிப் பரிமாற்றங்கள் ₹75.12 லட்சம் கோடியாக இருந்தது.


உத்தரப் பிரதேசம் அதிகபட்சமாக 15.81% நிதிப் பரிமாற்றத்தைப் பெற்றது, அதைத் தொடர்ந்து பீகார் 8.65% மற்றும் மேற்கு வங்கம் 6.96% பெற்றன. இருப்பினும், இந்த மாநிலங்கள் நேரடி வரி மற்றும் ஜிஎஸ்டி வசூலில் முறையே 4.6%, 0.67% மற்றும் 3.99% மட்டுமே பங்களித்தன. இதற்கு நேர்மாறாக, மகாராஷ்டிரா அதிகபட்சமாக 40.3% வரிப் பங்களிப்பை வழங்கினாலும், மொத்த நிதிப் பகிர்வில் 6.64% மட்டுமே பெற்றது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முறையே 12.65% மற்றும் 7.61% பங்களித்து, முறையே 3.9% மற்றும் 4.66% பெற்றன. ஹரியானா (1.1%), இமாச்சலப் பிரதேசம் (1.58%) மற்றும் உத்தரகண்ட் (1.65%) ஆகியவை முறையே பங்களித்த போதிலும், நிதிப் பகிர்வில் சிறிய பங்காக 5.39%, 0.43% மற்றும் 0.81% பெற்றன.


15-வது நிதிக் குழுவின் அதிகாரப் பகிர்வுப் பங்குகள், ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட உண்மையான நிதிப் பரிமாற்றங்களுடன் ஏறக்குறைய முழுமையாகப் பொருந்துகின்றன, இதன் தொடர்பு 0.99 ஆகும். இருப்பினும், அவை வரி வசூல் பங்குகளுடன் ஒரு பலவீனமான தொடர்பைக் கொண்டுள்ளன, இதன் தொடர்பு 0.24 ஆகும். ஒப்பிடுகையில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பங்குகள் வரி வசூல்களுடன் (0.81) அதிக தொடர்பையும், அதிகாரப் பகிர்வு பங்குகளுடன் (0.58) மிதமான தொடர்பையும் காட்டுகின்றன. வரி பங்களிப்புகளை பிரதிபலிப்பதன் மூலம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) செயல்திறனுக்கும், மறுபகிர்வை அனுமதிப்பதன் மூலம் சமத்துவத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துகிறது என்பதை இது குறிக்கிறது.


ஹரியானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் மட்டுமே, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பங்கு வரி வசூல் பங்கைவிட குறைவாக உள்ளது. இதற்கு பல மாநில நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட அலுவலகங்கள் அதிக அளவில் இருப்பதாலேயே இது நிகழ்கிறது. தமிழ்நாட்டில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பங்கு வரி வசூலைவிட அதிகமாக உள்ளது. இது வேறு இடங்களில் வரி செலுத்துதல்கள் பதிவு செய்யப்பட்ட உற்பத்தி நடவடிக்கைகளை பிரதிபலிக்கிறது.


மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான விதிமுறையின்கீழ் ஆதாயம் பெறுபவர்கள், இழப்பவர்கள்


மத்திய நிதிப் பரிமாற்றங்கள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திப் பங்குகளின் அடிப்படையில் மட்டுமே விநியோகிக்கப்பட்டால், 20 முக்கிய மாநிலங்களில் ஒன்பது மாநிலங்கள் பயனடையும். மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை அதிகபட்சமாகப் பயனடையும். உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்கும். இந்த ஆதாயங்களும் இழப்புகளும் மிதமானதாகவே இருக்கும், ஏனெனில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திப் பங்குகள், தற்போதைய நிதிப் பகிர்வு முடிவுகளைவிட வரிவசூல் பங்குகளுக்கு நெருக்கமாக உள்ளன.


மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திப் பங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, மத்திய வரி வருவாய்கள் எவ்வாறு ஈட்டப்படுகின்றன என்பதைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும். இது தேசிய வருமானத்திற்கு மாநிலங்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும். இது இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பரிமாற்ற அமைப்பை மேலும் நியாயமானதாகவும் நம்பகமானதாகவும் தோற்றமளிக்கச் செய்யும்.


கே.ஆர். சண்முகம் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசகராகவும், மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநராகவும் உள்ளார். 1சங்கர்கணேஷ் கருப்பையா ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார்.

 Original Article : GSDP share as criterion for central-State transfers -K.R. Shanmugam,Sankarganesh Karuppiah 

Share: