டெல்லி ரேபிஸை ‘அறிவிக்கத்தக்க நோயாக’ பிரகனப்படுத்த உள்ளது. -ரோஷ்னி யாதவ்

 டெல்லி அரசு, தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் மனிதர்களுக்கு வரும் வெறிநாய்க்கடியை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்க உள்ளது. அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்றால் என்ன? மனிதர்களுக்கு வரும் வெறிநாய்க்கடி ஏன் கவலைக்குரிய விவகாரமாக இருக்கிறது? 


தற்போதைய செய்தி


நோய் கண்காணிப்பை வலுப்படுத்தவும், சரியான நேரத்தில் அறிக்கை அளித்தல் மற்றும் சிகிச்சையை உறுதி செய்யவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மனிதர்களுக்கு ஏற்படும் வெறிநாய்க்கடியை தொற்றுநோய்கள் சட்டத்தின் (Epidemic Diseases Act) கீழ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக டெல்லி அரசு அறிவிக்க உள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இந்தச் சூழலில், வெறிநாய்க்கடி மற்றும் அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் குறித்து அறிந்துகொள்வது முக்கியமானதாகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. நாய்களால் பரவும் வெறிநாய்க்கடியால் ஏற்படும் மனித இறப்புகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, மனித வெறிநாய்க்கடியை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிப்பது உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


வெறிநாய்க்கடி ஒரு தடுக்கக்கூடிய நோயாகும். மேலும், வெறிநாய்க்கடியால் ஏற்படும் எந்தவொரு மரணமும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மனித வெறிநாய்க்கடியை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிப்பது, கண்காணிப்பை வலுப்படுத்தும், முன்கூட்டியே கண்டறிவதை மேம்படுத்தும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் என்று டெல்லி சுகாதார அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறினார்.


2. இந்த நடவடிக்கை நோய்களின் போக்குகளைக் கண்காணிக்கவும், மனித மற்றும் விலங்கு சுகாதார அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


3. 1897ஆம் ஆண்டின் தொற்றுநோய்கள் சட்டம் (Epidemic Diseases Act) இதற்கான கட்டமைப்பை வழங்குகிறது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (Integrated Disease Surveillance Programme (IDSP)) தரவு சேகரிப்பு மற்றும் பதிலளிப்பை நிர்வகித்து, முன்கூட்டியே தலையீடு மற்றும் வள ஒதுக்கீட்டை செயல்படுத்துகிறது. இதுவரை, 20 மாநிலங்கள் மனித வெறிநாய்க்கடியை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளன என்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தேசிய வெறிநாய்க்கடி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.


4. டெல்லியில், இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனிப்பட்ட மருத்துவர்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் சுகாதார வசதிகளும், மனித வெறிநாய்க்கடி நோயின் சந்தேகத்திற்கிடமான, சாத்தியமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை நியமிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் மற்றும் புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.


அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்றால் என்ன?


1. இந்தியாவில் அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்பது, டெங்கு, காசநோய் அல்லது கோவிட்-19 போன்ற ஒரு தொற்று நோயாகும். இந்த நோய்களைக் கண்காணிப்பு, நோய் பரவலைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக, சுகாதாரப் பணியாளர்கள் பொது சுகாதார அதிகாரிகளுக்கு சட்டப்பூர்வமாகப் புகாரளிக்க வேண்டும்.


2. பொதுவாக, நோய் பரவலை ஏற்படுத்தக்கூடிய, இறப்புகளுக்கு வழிவகுக்கக்கூடிய மற்றும் பொருத்தமான பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க விரைவாக விசாரிக்கப்பட வேண்டிய நோய்த்தொற்றுகள், அறிவிக்கப்பட வேண்டிய நோய்களாக அறிவிக்கப்படுகின்றன.

3. மாநில அரசுகளே இந்த அறிவிப்புகளை வெளியிடுவதால், அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியல் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடலாம்.


வெறிநாய்க்கடி ஏன் ஒரு கவலைக்குரிய விவகாரமாக இருக்கிறது?


1. வெறிநாய் வைரஸ் (rabies virus) பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. வெளிப்புற நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்து, மத்திய நரம்பு மண்டலத்திற்கு (முதுகுத் தண்டு மற்றும் மூளை) பரவுகிறது.


2. வைரஸ் மூளையை அடையும்போது, ​​பாதிக்கப்பட்ட நபருக்கு நடத்தை மாற்றங்களும் மருத்துவ அறிகுறிகளும் தென்படுகின்றன. பொதுவாக, ஒருவருக்குத் தொற்று ஏற்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு மருத்துவ அறிகுறிகள் தோன்றும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகும் மருத்துவ அறிகுறிகள் தோன்றலாம்.


3. இது காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி போன்ற பொதுவான அறிகுறிகள் முதல், அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, தண்ணீர் அருந்த பயம், மாயத்தோற்றங்கள் மற்றும் பகுதி பக்கவாதம் போன்ற பிரத்யேக அறிகுறிகள் வரை பலவிதமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.


4. வெறிநாய்க்கடி நோயின் அறிகுறிகள் தோன்றிய பிறகு, அது உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடுகிறது. ஆனால், நோய் தொற்று ஏற்பட்ட பிறகு தடுப்பூசி மூலம் இதைத் தடுக்க முடியும். அதனால்தான், நாய்கள், பூனைகள், குரங்குகள் அல்லது வௌவால்கள் போன்ற விலங்குகளால் கடிக்கப்பட்டாலோ, கீறப்பட்டாலோ, அல்லது அந்த விலங்குகளின் உமிழ்நீர் திறந்த காயத்தில் பட்டாலோ, மக்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுவது முக்கியமானதாக மாறிவிடுகிறது.


தொற்றுநோய்கள் சட்டம் (Epidemic Diseases Act) 1897


1. 1890-களில் அப்போதைய பம்பாய் மாகாணத்தில் பரவிய பிளேக் கொள்ளைநோயைச் சமாளிப்பதற்காக காலனித்துவ அரசாங்கம் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தச் சட்டத்தின்கீழ், அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பிளேக் நோயாளிகளைக் கண்டறிய வீடுகளைச் சோதனையிடவும் பயணிகளைப் பரிசோதிக்கவும் முடியும். மேலும், அவர்கள் மக்களைத் தனிமைப்படுத்தவும், அவர்களை வேறு இடத்திற்கு மாற்றவும் அல்லது பாதிக்கப்பட்ட இடங்களை இடித்துத் தள்ளவும் கூட முடியும்.


2. இந்தச் சட்டம் நான்கு பிரிவுகளைக் கொண்டது மற்றும் அபாயகரமான தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


3. குறிப்பாக, உலக சுகாதார நிறுவனம் கொள்ளைநோய்களைப் பின்வருமாறு வரையறுக்கிறது: அதன்ப்படி ஒரு நோயோ அல்லது உடல்நலம் தொடர்பான நிகழ்வோ ஒரு சமூகம் அல்லது பிராந்தியத்தில், வழக்கத்தைவிட மிக அதிகமாக ஏற்படும்போது அதை ஒரு பெருந்தொற்று என்று வரையறுக்கப்படுகிறது. நோய்ப்பரவல் ஏற்படும் சமூகம் அல்லது பிராந்தியம் மற்றும் காலம் ஆகியவை துல்லியமாகக் குறிப்பிடப்படுகின்றன. ஒரு கொள்ளைநோயின் இருப்பைக் குறிக்கும் பாதிப்புகளின் எண்ணிக்கை, நோய்க்காரணி, பாதிக்கப்பட்ட மக்கள்தொகையின் அளவு மற்றும் வகை, அந்த நோய்க்கான முந்தைய அனுபவம் அல்லது பாதிப்பின்மை, மற்றும் நோய் ஏற்படும் நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். தொற்றுநோய்கள் (Epidemics), ஒரு குறிப்பிட்ட நோய் குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான மக்களிடையே வேகமாகப் பரவுவதைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.

Original Article : Delhi to declare rabies a ‘notifiable disease’ -Roshni Yadav

Share: