அரசியலமைப்பு நிர்ணய சபையில் குடியுரிமை பற்றிய விவாதம் நடந்தபோது, மதம், பிறப்பு மற்றும் நாட்டின் பிரிவினை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதேவேளையில், மதச்சார்பற்ற மற்றும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமைக் கோட்பாடும் முன்வைக்கப்பட்டு, இறுதியாக அதுவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
1949-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய அரசியலமைப்பு வரைவின் குடியுரிமை தொடர்பான விதிகள் குறித்து அரசியலமைப்பு நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டபோது, அரசியலமைப்பு வரைவின் பிரிவு-5 தான் வரைவுக் குழுவிற்கு "மற்ற அனைத்து விதிகளையும்விட அதிக தலைவலியைக் கொடுத்தது" என்று பி.ஆர்.அம்பேத்கர் கூறினார். இந்த விதியின்மீது சுமார் 140 திருத்தங்கள் முன்மொழியப்பட்டதால், அவை ஒரு "அடர்ந்த காட்டைப் போல சிக்கலாக உள்ளன" என்று ராஜேந்திர பிரசாத் விவரித்தார்.
இறுதியில் அம்பேத்கரின் வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், இந்த விவாதம் இந்தியக் குடியுரிமையின் உண்மையான அர்த்தம் குறித்து உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியது. சில உறுப்பினர்கள் குடியுரிமையானது மதத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று விரும்பினர். வேறு சிலரோ பிறந்த இடத்திற்குப் பதிலாக ஒருவரது வம்சாவளியின் (Ancestry) அடிப்படையிலேயே குடியுரிமை தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். அதேநேரத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிணி குமார் சௌத்ரி, அந்த மாநிலத்திற்குள் மக்கள் இடம்பெயர்வதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். இறுதியில், இந்த பல்வேறுபட்ட மற்றும் முரண்பட்ட கருத்துக்களில் ஒரே ஒரு அணுகுமுறையை மட்டுமே நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது.
குடியுரிமை தானாக வழங்கப்படக்கூடாது, அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’
மத்திய மாகாணங்கள் மற்றும் பேரார் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பஞ்சாப் ராவ் ஷாம்ராவ் தேஷ்முக், குடியுரிமை பற்றிய சட்டப்பிரிவை "முழு அரசியலமைப்பிலேயே மிகக் துரதிர்ஷ்டவசமான பிரிவு" என்று வர்ணித்தார். அம்பேத்கர் முன்மொழிந்த இந்த வரைவு இலக்கணம், இந்தியக் குடியுரிமையை உலகிலேயே மிக மலிவான ஒன்றாக மாற்றிவிடும் என்று அவர் வாதிட்டார்.
மேலும், "இந்தியாவுக்கு மனிதர்களின் குணாதிசயங்களைப் பற்றியோ அல்லது நாட்டின் நலன்களைப் பற்றியோ கவலைப்படாமல், இன்னும் கூடுதல் மனிதர்கள் தேவைப்படும் ஒரு சிறிய நாடாக இருந்திருந்தால், இத்தகைய கொள்கையை என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். ஆனால், இந்தியாவிலோ ஏற்கனவே மிக அதிக மக்கள்தொகை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியக் குடியுரிமையைப் பெறுவதை நாம் ஏன் இந்த அளவிற்கு எளிதாக்குகிறோம்?" என்று கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை பெறுவதை மேலும் கடினமானதாக மாற்ற வேண்டும் என்று தேஷ்முக் வாதிட்டார். இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் அல்லது சட்டப்படி இயல்பான குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். மேலும், வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறாத "இந்துக்கள் அல்லது சீக்கியர்கள்" இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஏனெனில், அவர்கள் தஞ்சமடைய வேறு எந்த நாடும் இல்லை என்பதையும் அவர் குறிபிட்டார்.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் வசிப்பது மட்டுமே ஒருவருக்குத் தானாகவே குடியுரிமையைப் பெற்றுத் தந்துவிடக்கூடாது என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக, சட்டப்பூர்வமாக இயல்பான குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
பிறப்பிடமா அல்லது பெற்றோர் வழி உறவா?
இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அக்குழந்தைக்கு பெற்றோரின் குடியுரிமையோடு எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும்கூட, இந்தியக் குடியுரிமை வழங்குவதை தேஷ்முக் எதிர்த்தார். இதற்கு உதாரணமாக, வெளிநாட்டுத் தம்பதி பயணிக்கும் விமானம் மும்பையில் சில மணிநேரங்கள் மட்டும் நிற்பதாக வைத்துக்கொள்வோம், அப்படியிருக்கும் போது, அந்தப் பெண் அங்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால், பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல் அக்குழந்தை தானாகவே இந்தியக் குடிமகனாகிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்குவங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நசீருதீன் அகமது இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார். குடியுரிமை என்பது வெறும் பிறந்த இடத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படாமல், பெற்றோரின் குடியுரிமையை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மிகவும் சிக்கலான ஒரு விவகாரம் என்பதால், இதனை இவ்வளவு எளிமையான முறையில் தீர்மானித்திருக்கக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதுபோன்ற குழந்தையை இந்தியாவின் குடிமகன் என்றும், அந்தக் குழந்தையின் தாயின் நாட்டின் குடிமகன் என்றும், தந்தையின் நாட்டின் குடிமகன் என்றும் ஒரே நேரத்தில் உரிமைகோர முடியும்; இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அகமது தெரிவித்தார்.
இந்தியாவில் பிறந்த காரணத்திற்காக இந்தியா அந்தக் குழந்தைக்குக் குடியுரிமை கோரும் என்றும், அதேவேளையில் தாயின் நாடு மற்றும் தந்தையின் நாடு ஆகிய இரண்டும் தங்களது தேசியக் குடியுரிமையின் அடிப்படையில் அந்தக் குழந்தைக்குக் குடியுரிமை கோரக்கூடும் என்றும் கூறினார். இதன் விளைவாக, அந்தக் குழந்தையின் குடியுரிமைக்காக இந்த மூன்று நாடுகளுமே ஒன்றோடொன்று போட்டியிடும் நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் 26-ஆம் தேதி 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகான அரசியலமைப்புச் சட்ட இடைவெளி
பெரும்பாலான விமர்சகர்களைப் போல அல்லாமல், ஐக்கிய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜஸ்பத் ராய் கபூர், கொள்கை சார்ந்த கேள்விக்கு பதிலாக நடைமுறை சார்ந்த ஒரு கவலையை எழுப்பினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம், 26-ஆம் தேதி ஜனவரி மாதம் 1950-ஆம் ஆண்டு வரையிலான குடியுரிமையை மட்டுமே வரையறுத்துள்ளது என்றும்; அந்தத் தேதிக்குப் பிறகு பிறப்பவர்கள் எவ்வாறு குடியுரிமையைப் பெறுவார்கள் என்பதை விளக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, 26-ஆம் தேதி ஜனவரி மாதம் 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இந்தியப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இதில் சேர்ப்பதற்காக, அரசியலமைப்பின் பிரிவு 5-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
“இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்ட” எவருக்கும் குடியுரிமை வழங்குவதையும் கபூர் எதிர்த்தார். அத்தகைய இடம்பெயர்வு "முழுமையான மற்றும் உறுதியான ஒன்றாகும்" என்றும், அது இந்தியக் குடியுரிமைக்கான அவர்களின் உரிமையை இல்லாமல் செய்துவிடும் என்றும் அவர் வாதிட்டார்.
பிரிவினை அகதிகளுக்கும் பரந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
கிழக்கு பஞ்சாப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூபிந்தர் சிங் மான், இந்தியப் பிரிவினையால் இடம்பெயர்ந்த அகதிகளைப் பாதுகாப்பதில் அரசியலமைப்பு வரைவு போதுமானதாக இல்லை என்று வாதிட்டார். மேலும், அரசியலமைப்பின் இந்த அணுகுமுறையை "ஒரு பலவீனமான வகை மதச்சார்பின்மை… மற்றும் நியாயமற்ற ஒருதலைப்பட்சமான செயல்" என்றும் அவர் விமர்சித்தார்.
பாகிஸ்தானில் நடந்த மதக்கலவரங்களில் இருந்து தப்பித்து ஓடிவந்து, இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த மக்களுக்கு, அவர்கள் எவ்விதப் பதிவும் செய்யாமலோ அல்லது 6 மாதங்கள் இந்தியாவில் வசித்ததாக நிரூபிக்காமலோ, தானாகவே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1948-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதியை, எல்லை நிர்ணய நாளாக மாற்றியமைத்ததையும் பூபிந்தர் சிங் மான் கேள்வி எழுப்பினார். "துரதிர்ஷ்டவசமான இந்த அகதிகள் இந்தக் குறிப்பிட்ட தேதியை முன்னரே கணித்திருக்க முடியாது; அப்படித் தெரிந்திருந்தால், அவர்கள் பாகிஸ்தானின் கத்தியால் தங்களை முன்னதாகவே காயப்படுத்திக் கொள்ள அனுமதித்திருப்பார்கள்... ஜூலை மாதம் 19-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய எல்லைகளை மூடுவது மிகவும் கொடூரமான செயல்” என்றும் அவர் வாதிட்டார்.
குடியுரிமை என்பது ஒரு மதச்சார்பற்ற, பிராந்திய ஒப்பந்தமாகும்
பிரிவினைக்குப் பிறகு பல மாதங்கள் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த வரைவு சட்டமுன்வரைவு உருவாக்கப்பட்டது என்று கூறி பிரதமர் ஜவஹர்லால் நேரு இதற்கு ஆதரவாகப் பேசினார். எந்தவொரு குடியுரிமைச் சட்டமும், நீதியை நிலைநாட்டும் அதேவேளையில் ஏற்படக்கூடிய அனைத்துச் சூழ்நிலைகளையும் முழுமையாக உள்ளடக்கிவிட முடியாது என்று வாதிட்டார். பிரிவினைப் பிரச்சனை மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலை ஆகிய இரண்டையும் கையாள வேண்டியிருந்ததால், "அரசியலமைப்பின் மற்ற எந்தப் பகுதியையும்விட இந்தக் குடியுரிமை விதிகளுக்குத்தான் அதிக யோசனையும் தீவிரப் பரிசீலனையும் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இது "திருப்திப்படுத்தும் அரசியல்" என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த நேரு, குடியுரிமை என்பது மதம் அல்லது அரசியல் லாபங்களின் அடிப்படையில் அமையாமல், நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என்றார்.
"திருப்திப்படுத்தும் அரசியல் பற்றிப் பேசும் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிக்கும் சமத்துவத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத சில விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களா?... ஒவ்வொரு தனிநபருக்கும் அல்லது குழுவிற்கும் நீதி என்று எதனைக் கருதுகிறதோ, அதிலிருந்து இந்த அரசாங்கம் ஒரு முடி இழையளவு கூட விலகிச் செல்லாது." என்றும் நேரு தெரிவித்தார்.
அம்பேத்கரின் கருத்தை ஆதரித்து, மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர், இந்தியாவின் குடியுரிமை விதிகள் அமெரிக்க நாட்டின் குடியுரிமை விதிகளைவிட ஏற்கனவே மிகவும் கடுமையானவையாகவே உள்ளன என்று வாதிட்டார். இந்தியாவில் பிறந்தார் என்ற ஒரே காரணம் மட்டும் போதுமானது அல்ல; ஒருவர் இந்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 5A-ஐ ஆதரித்துப் பேசிய அவர், அது எந்தவொரு மத சமூகத்திற்கும் இடையே பாகுபாடு காட்டவில்லை என்றும், மாறாக, அது பிரிவினையின்போது நிலவிய சூழல்களைக் கையாளவே செய்யப்பட்டது என்றும், மத அடிப்படையில் குடியுரிமையை வழங்கவில்லை என்றும் விளக்கினார். அகதிகள் இந்தியாவையே தங்களது நிரந்தர நாடாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அரசு அவர்களைக் குடியேற அனுமதித்ததால், அவர்களுக்குக் குடியுரிமையை மறுப்பது "மிகப்பெரிய அநீதியாக" அமையும் என்றும் வாதிட்டார்.
முன்மொழியப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் ஒவ்வொன்றாக நிராகரித்து, அரசியலமைப்பு நிர்ணய சபையானது அம்பேத்கரின் வரைவை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த காலத்தில், அது ஒரு மதச்சார்பற்ற மற்றும் நிலப்பரப்பு சார்ந்த குடியுரிமைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டது. அதேவேளையில், குடியுரிமைக்கான நிரந்தரச் சட்டத்தைப் பின்னர் நாடாளுமன்றமே உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் அனுமதித்தது.