உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, அசாமின் குடியுரிமைப் பிரச்சினையை அம்பேத்கர் எவ்வாறு கையாண்டார்? -ஜதின் ஆனந்த்

இந்த வாரம், உச்சநீதிமன்றம் 27 வழக்குகளை மீண்டும் புதிய விசாரணைக்காக அந்தந்த 'வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு' (Foreigners' Tribunals) திருப்பி அனுப்பியுள்ளது. இந்த முடிவு, 1949-ஆம் ஆண்டு நடந்த அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்களின்போது, அசாம் மாநிலத்தின் புலம்பெயர்ந்தோர் தொடர்பான கவலைகளை பி. ஆர். அம்பேத்கர் எவ்வாறு கையாண்டார் என்பதை நினைவுகூர்கிறது.


திங்கட்கிழமை ஜூலை மாதம் 13-ஆம் தேதி, ஒருவருடைய குடியுரிமை என்பது நியாயமான, சட்டப்பூர்வமான மற்றும் முறையான நடைமுறையின் மூலமாகவே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அசாம் மாநிலத்தில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (Foreigners' Tribunals) இந்த 27 வழக்குகளையும் மீண்டும் புதியதாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது.


1949-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்த விவாதங்களின்போது, தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய அரசியல் நிர்ணய சபை, இந்தியக் குடியுரிமையை எவ்வாறு வரையறுப்பது என்பது குறித்து விவாதித்தது. அந்தநேரத்தில், புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியா, பஞ்சாப் பிரிவினைக்குப் பிறகு கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த சிக்கலை எதிர்கொண்டிருந்தது; இது நாடு முழுவதும் அகதிகளின் பெரும் வருகைக்கு வழிவகுத்தது.



பெரும்பாலான விவாதங்கள் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு வந்த அகதிகளைக் குறித்து அமைந்திருந்தன. இருப்பினும், அசாம் மாநிலத்திற்குள் மக்கள் புலம்பெயர்ந்து வருவது குறித்த கவலைகளும் விவாதத்தில் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, குடியுரிமை தொடர்பான அரசியலமைப்பு வரைவு விதிகளில் சேர்க்கப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்களை பி. ஆர். அம்பேத்கர் ஆதரித்துப் பேசினார்.


முன்மொழியப்பட்ட சுமார் 140 திருத்தங்களை ஒரு "உண்மையான காடு" (Veritable jungle) எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பிரசாத், வரைவு அரசியலமைப்பின் குடியுரிமை தொடர்பான 5 மற்றும் 6-வது பிரிவுகளை விளக்குமாறு அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்டார். இந்த விவாதத்தின்போது பேசிய அம்பேத்கர், மற்ற எந்தவொரு விதியையும்விட 5-வது பிரிவுதான் வரைவுக் குழுவிற்கு (Drafting Committee) மிக அதிகமான சிரமங்களைக் கொடுத்தது என்று கூறினார்.


“ஐயா, வரைவு அரசியலமைப்பில் உள்ள மற்றொரு விதியைத் தவிர, வேறு எந்த ஒரு விதியும் இந்த குறிப்பிட்ட விதியைப் போல வரைவுக் குழுவிற்கு (Drafting Committee) இவ்வளவு பெரிய தலைவலியைத் தந்திருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்த விதியின்கீழ் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமானது மற்றும் விரும்பத்தக்கது என்று கருதப்பட்ட அனைத்துச் சூழல்களையும் உள்ளடக்குவதற்கு, எத்தனை வரைவுகள் தயாரிக்கப்பட்டன, எத்தனை வரைவுகள் போதிய அளவில் இல்லை என்று அழிக்கப்பட்டன என்பது எனக்கே தெரியவில்லை,” என்று அவர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது.

குடியுரிமை பற்றிய வரைவு விதிகள்


அரசியலமைப்பின் 5 மற்றும் 6-ஆவது பிரிவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட அம்பேத்கர், "இந்த அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் தேதியில்" யார் இந்தியக் குடிமகனாக இருக்க முடியும் என்பதைப் பிரிவு 5 வரையறுக்கிறது என்றார். அதன்படி: (அ) இந்தியப் பகுதிக்குள் பிறந்த ஒரு நபர், அல்லது (ஆ) அவரது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியப் பகுதிக்குள் பிறந்திருந்தால் அல்லது               (இ) இந்த அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் தேதிக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்தியப் பகுதியில் வழக்கமாக வசித்து வந்தவர்கள். அத்தகைய நபர், "அவர் தானாக முன்வந்து எந்தவொரு வெளிநாட்டுத் தேசத்தின் குடியுரிமையையும் பெறாதிருக்கும்பட்சத்தில், இந்தியாவின் குடிமகனாக இருப்பார்".

சட்டப்பிரிவு-5A பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர்களுக்கான தனி விதிகளை வகுத்துக் கொடுத்தது. அதன்படி, ஜூலை மாதம் 19-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்தவர்களில் — அவர்களோ அல்லது அவர்களின் பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டியோ பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்திருந்து, அவர்கள் குடியேறியதில் இருந்து இந்தியாவில் வழக்கமாக வசித்து வந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தத் தேதிக்குப் பிறகு வந்தவர்கள், இந்தியாவில் ஆறு மாதங்கள் வசித்த பிறகு குடியுரிமைக்காகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.


சட்டப்பிரிவு-5AA, மார்ச் மாதம் 1-ஆம் தேதி, 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தவர்களை (இந்தியக் குடியுரிமையிலிருந்து) விலக்கி வைத்தது. ஆனால், அவர்கள் நிரந்தரமாக மறுகுடியேற்றம் செய்வதற்கான முறையான அனுமதிச் சீட்டின்கீழ் மீண்டும் இந்தியா திரும்பியிருந்தால் இந்த விதிமுறை பொருந்தாது. அதேநேரத்தில், ஒரு நிரந்தரமான குடியுரிமைச் சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைப் நாடாளுமன்றத்திடமே பிரிவு-6 விட்டுவிட்டது.


அசாம் பற்றிய கேள்வி


அரசியலமைப்பு நிர்ணய சபையின் பல முக்கிய உறுப்பினர்களிடமிருந்து அம்பேத்கர் பல கேள்விகளை எதிர்கொண்டார். இவர்களில் அசாமில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரோகிணி குமார் சௌத்ரி எழுப்பிய கேள்விகள் மிகவும் முக்கியமானவையாகும்.


கிழக்குவங்கத்தில் "தங்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்து வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று சௌத்ரி கோரினார். மேற்குவங்கத்திற்கோ அல்லது அசாமிற்கோ குடிபெயர்ந்து வந்துள்ள இந்த கிழக்குவங்க மக்களின் மனதில் எந்த ஒரு அசம்பாவிதம் பற்றிய பயமும் இல்லை என்று யாராவது ஒரு கணம் கூட நினைத்துப் பார்க்க முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.



மேலும், முதலில் அசாமின் சில்ஹெட் (Sylhet) பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்து, இந்தியப் பிரிவினைக்கு நீண்டகாலத்திற்கு முன்பே ஏதோ ஒரு தொழில் விஷயமாகவோ, அரசு ஊழியர்களாகவோ அல்லது வர்த்தகர்களின் பணியாளர்களாகவோ அசாம் பள்ளத்தாக்கிற்கு வந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


ஆனால், அதேநேரத்தில் "வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்து, சட்ட மறுப்பு இயக்கத்தைத் (Civil disobedience movement) தொடங்கி, தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, மாகாணத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் ராணுவத்தின் உதவியை நாடும்படி நல்லாட்சி செய்யும் அரசாங்கத்தையே கட்டாயப்படுத்திய நபர்களைக் குடியுரிமையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் சௌத்ரி கோரினார்.


"...யார் ரகசியமாக எனது மாகாணத்திற்குள் நுழைந்து, இப்போது தங்களின் சொந்தச் சகோதரர்களுடன் தங்களைக் கலந்துகொண்டு, தங்களின் சொந்த மாகாணங்களில் எந்த ஒரு பாதுகாப்பற்ற உணர்வும் இல்லாத நிலையிலும் அசாம் மாகாணத்தை மேலும் சுரண்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு குடியுரிமை உரிமைகளைக் கேட்கிறார்களோ, அத்தகைய நபர்களை நான் இதிலிருந்து விலக்க விரும்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் அசாமில் எந்தவொரு பாதுகாப்பற்ற சூழலும் இல்லாதபோதிலும் அங்கு நுழைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரத்தில் கிழக்குவங்கத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலைமையையும் சுட்டிக்காட்ட விரும்பினார்.


"அங்குள்ள சிறுபான்மையினருக்கு எந்தவொரு அரசுப் பணியும் கிடைப்பதில்லை. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட அங்கு ஒரு சிறிய பதவியில்கூட இல்லை... அப்படியிருக்க, அனைத்து நன்மைகளையும் அனுபவித்து வரும் கிழக்குவங்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மைச் சமூக மக்கள் அசாமுக்கு வருவதற்கு என்ன காரணம்? அசாமைச் சுரண்டுவதும், சில நன்மைகளைப் பெறுவதுமே அதற்குக் காரணம். இதை நீங்கள் ஊக்குவிக்கப் போகிறீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.


மேலும், இது போன்ற ஊடுருவல்களைக் கட்டுப்படுத்துவதற்கான அனுமதிகளை வழங்கும் அதிகாரத்தைத் தங்களுக்கு வழங்குமாறு அசாம் அரசு இந்திய அரசிடம் கோரியிருந்ததாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


"ஒரு மாகாணத்தை நீங்கள் சரியாக ஆட்சி செய்ய விரும்பினால், அங்குள்ள மக்கள்தொகையின் சமநிலை எந்தவொரு பாதிப்பும் அடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றதாக இல்லாத மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு நீங்கள் குடியுரிமை வழங்கக் கூடாது. இந்த விவகாரங்களில் நான் இந்த விதியைத்தான் பின்பற்றுவேன்," என்று அவர் கூறினார்.


அம்பேத்கரின் பதில்


இறுதியாக, அரசியலமைப்பின் 5 மற்றும் 6-ஆவது பிரிவுகளில் அம்பேத்கர் முன்மொழிந்த திருத்தங்களை ஏற்றுக்கொள்வதற்காக, நிர்ணய சபையில் தேவையான எண்ணிக்கையைவிட அதிகமான வாக்குகள் செலுத்தப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. அம்பேத்கருக்குப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவு கிடைத்தது. குறிப்பாகப் பிரிவினையால் (Partition) ஏற்பட்ட சவால்கள் காரணமாக, குடியுரிமை தொடர்பான இந்தப் பிரிவுகள் "கடந்த சில மாதங்களாக இந்த அரசியலமைப்பில் உள்ள மற்ற எந்தப் பிரிவையும்விட அதிக சிந்தனைக்கும் பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கலாம்" என்று நேருவும் ஒப்புக்கொண்டார்.


இந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அம்பேத்கர், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்குச் சென்றவர்கள் மற்றும் அசாம் மாநிலம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த கவலைகளுக்குப் விளக்கமளித்தார்.


இந்த வரைவுச் சட்டம் கிழக்குவங்கத்திலிருந்து வரும் புலம்பெயர்ந்தோருக்காக "கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது" என்ற சவுத்ரியின் வாதத்திற்குப் பதிலளித்த அம்பேத்கர், சவுத்ரி இந்த விதிகளைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் என்றும், அவரது அச்சங்கள் "முற்றிலும் அடிப்படையற்றவை" என்றும் கூறினார்.


“அவர் இந்த விதிமுறைகளை மீண்டும் வாசித்துப் பார்த்தால், 1948-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதிக்கு முன்னர் அசாமிற்குள் நுழைந்தவர்கள் மட்டுமே, அவர்கள் இந்தியப் பகுதிக்குள் வசித்திருந்தால், தானாகவே அசாமின் குடிமக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் அறிந்துகொள்வார்,” என்றும் தெளிவுபடுத்தினார்.


1948-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதிக்குப் பிறகு, இந்து வங்காளிகளாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அசாமில் நுழைந்தவர்கள் குறித்து அம்பேத்கர், குடியுரிமை என்பது "எந்த வகையிலும் தானாகக் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல" என்று அம்பேத்கர் கூறினார். இந்தத் தேதிக்குப் பிறகு அசாமிற்குள் நுழைந்தவர்களுக்கு மூன்று நிபந்தனைகளை அவர் பட்டியலிட்டார்: முதலாவதாக, அந்த நபர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்; இரண்டாவதாக, அவர் அந்த மாநிலத்தில் ஆறு மாதங்கள் வசித்திருப்பதை நிரூபிக்க வேண்டும்; இறுதியாக, "இந்திய டொமினியன் (Dominion of India) அரசால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியால் அவர் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த மூன்றாவது நிபந்தனையை மிகவும் கடுமையானது மற்றும் முழுமையான அதிகாரம் (Plenary power) கொண்டது என்று குறிப்பிட்ட அவர், ஒரு விண்ணப்பதாரரைப் பதிவு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் அரசு அதிகாரிக்கு "போதிய விருப்ப அதிகாரம்" (Enough discretion) உள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.


“வேறுவிதமாகச் சொல்வதானால், அந்த நபர் இந்தியாவுக்கு வந்ததன் நோக்கம் என்ன என்பதைத் தீர்மானிக்க, அங்குள்ள ஆதாரங்களை அந்த அதிகாரி ஆய்வு செய்யலாம். அதாவது, அந்த நபர் உண்மையிலேயே இந்தியாவின் நிரந்தரக் குடிமகனாக மாற வந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக வந்துள்ளாரா என்பதை அவர் ஆராயலாம்," என்று அவர் கூறினார்.


Original Link: Long before Supreme Court ruling, how Ambedkar grappled with Assam’s citizenship question.


Share: