அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அர்த்தமுள்ள பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டுறவு ஒத்துழைப்பு தொடர்ந்து கைக்கு எட்டாமல் உள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, லட்சியமிக்க அரசியல் அறிவிப்புகளை வெளியிட்டு, அவை தொழில்துறை விளைவுகளாக மாறத் தவறுவதால், இராஜதந்திர வட்டாரங்களில் ஒரு விரும்பத்தகாத பெயரைப் பெற்றுள்ளது. கடந்த இருபதாண்டுகளாக, புது தில்லி மற்றும் வாஷிங்டனில் அடுத்தடுத்து வந்த நிர்வாகங்கள், இருதரப்பு இராணுவ உறவுகளை மாற்றியமைக்கும் என்று உறுதியளித்து பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டமைப்புகளையும் தொழில்துறை ஒத்துழைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால் அவை நீடித்த பேச்சுவார்த்தைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், தொழில்நுட்பப் பரிமாற்றத் தகராறுகள் மற்றும் மாறுபட்ட வர்த்தக எதிர்பார்ப்புகளில் சிக்கித் தவிக்கின்றன.
இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒட்டுமொத்த உறவு கணிசமாக விரிவடைந்துள்ளது. 2002-ம் ஆண்டு முதல், இந்தியா 22 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்கப் பாதுகாப்பு கருவிகளை வாங்கியுள்ளது. இதில் அப்பாச்சி (Apache) மற்றும் சினூக் (Chinook) ஹெலிகாப்டர்கள், C-17 மற்றும் C-130J சரக்கு போக்குவரத்து விமானங்கள், P-8I கடல்சார் ரோந்து விமானங்கள் மற்றும் M777 ஹோவிட்சர் பீரங்கிகள் ஆகியவை அடங்கும். அமெரிக்கா ஒரு முக்கிய பாதுகாப்பு விநியோகராக மாறியிருந்தாலும், அர்த்தமுள்ள கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவை எட்டாக்கனியாகவே உள்ளன.
ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric’s (GE)) இன்ஜின் விவகாரம்
ஒரு காலத்தில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் மையப் புள்ளியாகப் போற்றப்பட்ட ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric’s (GE)) நிறுவனத்தின் F414 போர் விமான இன்ஜின் தொடர்பான சமீபத்திய கட்டுப்பாடானது, அரசியல் அறிவிப்புகளுக்கும் தொழில்சார் விளைவுகளுக்கும் இடையிலான இடைவெளியின் மிகச் சமீபத்திய மற்றும் மிக முக்கியமான எடுத்துக்காட்டு ஆகும். ஒவ்வொரு F414 இன்ஜினின் மதிப்பிடப்பட்ட விலையானது, சுமார் ₹70 கோடி முதல் ₹80 கோடி என்ற நிலையிலிருந்து ₹200 கோடிக்கும் மேலாக, கிட்டத்தட்ட மும்மடங்காக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பிரத்யேக உற்பத்தி வரிசையை நிறுவுவதற்காக, ஜிஇ நிறுவனம் சுமார் $800 மில்லியன் (₹7,576 கோடி) இந்திய முதலீட்டையும் கோரியுள்ளது.
தொழில்நுட்பப் பரிமாற்றம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன. தேஜஸ் மார்க்-II விமானத்திற்கான F414 இன்ஜினை கொள்முதல் செய்வதற்கும், உரிமம் பெற்று உற்பத்தி செய்வதற்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (Hindustan Aeronautics Limited (HAL)) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே சமயம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) மற்றும் வானூர்தி மேம்பாட்டு முகமை (Aeronautical Development Agency (ADA)) ஆகியவை, முன்மொழியப்பட்ட மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (Advanced Medium Combat Aircraft (AMCA)) மற்றும் இந்திய கடற்படையின் இரட்டை இன்ஜின் தள அடிப்படையிலான போர் விமானம் ஆகியவற்றுக்காக அதே இன்ஜின் குறித்து ஜி.இ (GE) நிறுவனத்துடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதன் விளைவாக, ஒரே நேரத்தில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால், இவற்றில் ஒரு முடிவை எட்டுவது சவாலாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 2023 வாஷிங்டன் பயணத்தின்போது, முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மீதான முன்முயற்சியின் (Initiative on Critical and Emerging Technologies (iCET)) முதன்மைச் சாதனையாக F414 திட்டம் வெளியிடப்பட்டது. இது வாங்குபவர்-விற்பவர் உறவிலிருந்து உண்மையான பாதுகாப்பு-தொழில்துறை ஒத்துழைப்பை நோக்கிய ஒரு மாற்றத்தை அடையாளப்படுத்தும் நோக்கம் கொண்டது. மாறாக, இது அரசியல் லட்சியத்திற்கும் தொழில்துறை யதார்த்தத்திற்கும் இடையிலான நீடித்த இடைவெளியின் மற்றொரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வும் அல்ல.
தொலைநோக்குப் பார்வையிலிருந்து தேக்க நிலை வரை
பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குவதற்கான முதல் தீவிர முயற்சி 2012-ல் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி (Defence Technology and Trade Initiative (DTTI)) மூலம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட இது, பல ஆண்டுகால சந்திப்புகளுக்கு வழிவகுத்தது. இருப்பினும், அது எந்தவொரு குறிப்பிடத்தக்க இராணுவத் திறனையும் வழங்கவில்லை. காலப்போக்கில், அது தனது முக்கியத்துவத்தை இழந்தது.
அதன் தொடர்ச்சியான iCET (2022), குறைமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், தொலைத்தொடர்பு, விண்வெளி, உயிரி தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் மற்றும் மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள் வரை அதன் செயல்திட்டத்தை விரிவுபடுத்தியது. அதன் முக்கிய பாதுகாப்பு முன்னெடுப்புகளில் ஒன்றான ஜிஇ எஃப்414 திட்டத்தின் தீர்க்கப்படாத பேச்சுவார்த்தைகள், அரசியல் லட்சியங்களை தொழில்துறை விளைவுகளாக மாற்றுவதில் உள்ள பரந்த சிரமத்திற்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளன.
பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள், கல்வித்துறை மற்றும் தொழில்துறையை இணைப்பதற்காக 2023-ல் தொடங்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு முடுக்கச் சூழலமைப்பு (India-United States Defence Acceleration Ecosystem (INDUS-X)) திட்டமும் இதேபோல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் குறிப்பிடத்தக்க கூட்டு மேம்பாட்டு விளைவுகளை இன்னும் உருவாக்கவில்லை. மற்ற வருங்கால ஒத்துழைப்புகளின் நிலையும் இதைவிடச் சிறப்பாக இல்லை. ஜாவலின் டாங்கெதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையை (Javelin anti-tank guided missile) இணைந்து தயாரிப்பது குறித்த விவாதங்கள் ஒரு பத்தாண்டிற்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. அதே நேரத்தில், ஜெனரல் டைனமிக்ஸ் ஸ்ட்ரைக்கர் காலாட்படைப் போர் வாகனம் (General Dynamics Stryker infantry combat vehicle) குறித்த முன்மொழியப்பட்ட ஒத்துழைப்பும் இதேபோன்ற தாமதங்களைச் சந்தித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் தற்போது யாருக்கும் தெரியாமல் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.
அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு இராணுவ விற்பனை வழிமுறையின் மூலம், ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பில் 31 MQ-9B ஸ்கைகார்டியன் (SkyGuardian) மற்றும் சீகார்டியன் (SeaGuardian) தொலைவிலிருந்து இயக்கப்படும் விமானங்களை இந்தியா 2024-ல் வாங்கியது கூட, முதலில் திட்டமிடப்பட்ட தொழில்துறை ஒத்துழைப்பைப் போலன்றி, ஒரு கொள்முதல் போலவே அமைந்துள்ளது. உள்ளூர் ஒருங்கிணைப்பு, பகுதி உற்பத்தி மற்றும் உள்நாட்டுப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்புச் சூழலமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக உறுதியளிக்கப்பட்ட அதன் தொகுப்பு இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த முடிவுகள் புறக்கணிக்க முடியாத ஒரு போக்கைக் காட்டுகின்றன. அடுத்தடுத்து வரும் இந்தியா-அமெரிக்கப் பாதுகாப்பு முயற்சிகள் "வரலாற்றுச் சிறப்புமிக்கவை", "மாற்றத்தை ஏற்படுத்துபவை" அல்லது "ஆட்டத்தையே மாற்றக்கூடியவை" என்று போற்றப்பட்டாலும், அவற்றின் செயலாக்கம் தொடர்ந்து சொல்லப்பட்ட அளவிற்கு வெகு தொலைவில் பின்தங்கியே உள்ளது.
தொழில்நுட்பப் பரிமாற்றப் பிளவு
இந்த இடைவெளியின் மையத்தில், இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு அடிப்படையாக உள்ள முற்றிலும் மாறுபட்ட தத்துவங்களே அமைந்துள்ளன. மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான சார்பைக் குறைப்பதற்கும் ஒரு வழியாகவே இந்தியா பாதுகாப்புக் கூட்டாண்மைகளைக் கருதுகிறது.
இதற்கு மாறாக, அமெரிக்கா மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை, கடுமையான ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால், குறிப்பாக சர்வதேச ஆயுதப் போக்குவரத்து விதிமுறைகளால் (International Traffic in Arms Regulations (ITAR)) நிர்வகிக்கப்படும் இராஜதந்திர வளங்களாகக் கருதுகிறது. இந்த விதிமுறைகளின் கீழ், தொழில்நுட்பத் தரவுகள் மற்றும் உற்பத்தித் திறன்களை வெளியிடுவது பரந்த பாதுகாப்பு நோக்கங்களுக்கு இரண்டாம் பட்சமாகவே உள்ளது.
F414 தொடர்பான இன்னும் முடிவாகாத பேச்சுவார்த்தைகள், அணுகுமுறையில் உள்ள இந்த வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன. நீண்டகால உள்நாட்டுத் திறனை வளர்ப்பதற்காக இந்தியா உற்பத்தி சார்ந்த நிபுணத்துவத்தையும் அறிவுசார் சொத்துரிமையையும் நாடியுள்ளது. அதேசமயம் வாஷிங்டனின் பரந்த இராஜதந்திரமுறையில் பரந்த நோக்கங்களைப் பொருட்படுத்தாமல், அமெரிக்கா ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டே உள்ளது. இதன் விளைவாக, பாதுகாப்பு உறவானது ஒரு கொள்முதல் சார்ந்த கூட்டாண்மையாகவே வளர்ந்துள்ளது. ஆனால், திறனைப் பரிமாற்றம் செய்வதற்கும் இந்தியாவின் 'ஆத்மநிர்பர்தா' (சுயசார்பு) நிலையை வலுப்படுத்துவதற்குமான ஒரு செயல்முறையாக மிகக் குறைவாகவே உள்ளது.
மேலும் தொடர்ந்து அதிநவீன இராணுவப் பயிற்சிகள், தளவாட ஒப்பந்தங்கள் மற்றும் மேம்பட்ட ஒருங்கிணைப்புத் திறன் ஆகியவற்றால் குறிக்கப்படும் இந்தியா-அமெரிக்க இராஜதந்திர உறவுகளின் மறுக்க முடியாத விரிவாக்கம் இருந்தபோதிலும், இந்த உறவின் தொழில்துறைப் பரிமாணம் இன்னும் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை. பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி(DTTI), முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான முன்முயற்சி (iCET) மற்றும் இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு முடுக்கச் சூழலமைப்பு (INDUS-X) போன்ற முன்முயற்சிகள் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன. இதன் விளைவாக, இரு நாடுகளின் அதிகாரிகளும் முன்மொழியப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தை (Reciprocal Defence Procurement Agreement (RDPA)) தொழில்துறை ஒத்துழைப்பின் அடுத்த சோதனையாகக் கருதுகின்றனர்.
இரு நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் சந்தைகளுக்கு பரஸ்பர அணுகலை வழங்குவதன் மூலம், முன்மொழியப்பட்ட பரஸ்பர பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தம் (RDPA) இருதரப்பு பாதுகாப்பு வர்த்தகத்தை மறுவடிவமைக்க முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. இருப்பினும், அந்தப் பரஸ்பரத்தன்மை, இந்தியாவின் இன்னும் வளரும் நிலையில் உள்ள பாதுகாப்பு உற்பத்தியாளர்களை, அமெரிக்காவின் பெரிய, செல்வந்த மற்றும் தொழில்நுட்பரீதியாக மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களுடன் நேரடிப் போட்டிக்கு உள்ளாக்கக்கூடும். இது உண்மையான சமநிலையை உருவாக்குகிறதா அல்லது சமமற்ற போட்டியை நிறுவனமயமாக்குகிறதா என்பது முற்றிலும் வேறொரு விஷயம்.
ராகுல் பேடி, புது தில்லி மற்றும் சண்டிகரைச் சேர்ந்த ஒரு பாதுகாப்புத் துறை செய்தியாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.
Original Link : India-U.S. defence technology ties — big ambitions, little delivery