காலநிலை இலக்குகளில் இந்தியாவின் முன்னேற்றம் -தீபன்சு மோகன்,நாகப்பன் அருண்,சக்ஷம் ராஜ்

நாடு கார்பன் உமிழ்வுவைக் குறைத்து, புதைபடிவமற்ற மின்சார உற்பத்தித் திறனை அதிகரித்திருந்தாலும், மொத்த உமிழ்வை உண்மையாகக் குறைப்பதில் இன்னும் சிரமப்படுகிறது. இந்த இடைவெளியை நிரப்பி, நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்த வரும் ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.


சமீபத்தில் வெளியான ஆரவல்லி தீர்ப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பசுமைப் பகுதியில் உள்ள சுரங்க நடவடிக்கைகளில் அதன் தாக்கம், மேலும் சுற்றுச்சூழல் தரநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளைப் பாதுகாப்பது குறித்த அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளில் அதன் தாக்கம் ஆகியவை கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.


பாரிஸ் உச்சிமாநாட்டில், “பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள்” என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா நான்கு அளவிடக்கூடிய காலநிலை உறுதிமொழிகளை வழங்கியது. தற்போது உலக அளவில் இந்தியா மூன்றாவது பெரிய மாசு வெளியேற்ற நாடாக இருந்தாலும், அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளைவிட இந்தியாவின் தனிநபர் மாசு வெளியேற்றம் (per capita emissions) வரலாற்றில் எப்போதும் மிகக் குறைவாகவே உள்ளது என்பதை இது காட்டுகிறது. பிரதமர் மோடியின் முக்கிய வாக்குறுதிகள்: 2005 ஆம் ஆண்டின் அளவிலிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்ற அளவைக் 33-35% குறைப்பது, அத்துடன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சாரத் திறனை (non-fossil power capacity) 40% ஆக அதிகரிப்பது, 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைவது, மற்றும் காடுகள் மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் சேமிப்பகங்களை (carbon sinks) உருவாக்குவது ஆகியவை ஆகும்.


இப்போது, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இந்தக் உறுதிபாடுகள் உண்மையாகவே நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பிட வேண்டியது அவசியமாகிறது.


முழுமையற்ற துண்டிப்பு


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (Gross Domestic Product (GDP)) ஏற்ப கார்பன் உமிழ்வு அளவு குறைந்திருப்பது ஒரு முக்கிய கொள்கை வெற்றியாகக் கருதப்படுகிறது. 2005-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு யூனிட்டுக்கு உண்டாகும் கார்பன் உமிழ்வு அளவானது 2020-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 36% குறைந்துவிட்டது. இதனால், இந்தியா திட்டமிட்ட 33-35% குறைப்பு இலக்கை 2030-ஆம் ஆண்டுக்கு முன்பே அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


இந்தப் போக்கிற்கு மூன்று முக்கிய கட்டமைப்பு சார்ந்த காரணங்கள் உள்ளன.


முதலாவதாக, இந்தியா சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி போன்ற புதைபடிவமற்ற எரிசக்தித் திறனை வேகமாக அதிகரித்தது. இது மின்சாரப் பயன்பாட்டின் கார்பன் செறிவைக் குறைத்தது. 2023-ஆம் ஆண்டளவில், புதைபடிவமற்ற எரிசக்தித் திறன் சுமார் 43%-ஐத் தாண்டியது, மேலும் 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் இது சுமார் 50% ஆக அதிகரித்தது.


இரண்டாவதாக, இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக குறைந்த உமிழ்வுகளை உருவாக்கும் சேவை சார்ந்த மற்றும் டிஜிட்டல் துறைகளை நோக்கி மாறியது. இந்த மாற்றத்தின் காரணமாக, ஒவ்வொரு அலகு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உருவாக்கப்படும் உமிழ்வுகளின் அளவு குறைந்தது.


மூன்றாவதாக, 'செயல்படுத்து, அடைந்து வர்த்தகம் செய்' (PAT) மற்றும் உஜாலா போன்ற தேசிய எரிசக்தித் திறன் திட்டங்கள், தொழில்துறைகள் மற்றும் வீடுகளில் எரிசக்தித் தேவையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவின. 2020-21 நிதியாண்டிற்கான அரசாங்க மதிப்பீடுகள், தெளிவான மின்சார சேமிப்பையும் உமிழ்வுகளில் குறைப்புகளையும் காட்டுகின்றன.


இந்த முன்னேற்றங்கள் இருந்தாலும், இந்தியாவின் மொத்த பசுமை இல்ல வாயு உமிழ்வு இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. 2020-ல் சுமார் 2,959 மில்லியன் டன் CO₂ சமநிலையாக (MtCO₂e) இருந்த இந்த உமிழ்வு, அதற்குப் பிறகும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


இதற்குக் காரணம் பகுதி விலக்கம் (Partial Decoupling): அதாவது, பொருளாதார வளர்ச்சி கார்பன் உமிழ்வு வளர்ச்சியைவிட வேகமாக உள்ளது. இது மொத்த கார்பன் உமிழ்வு அளவுகளைக் குறைக்காமல் அடர்த்தியைக் (Intensity) குறைக்கிறது. இதன் விளைவாக, தேசிய சராசரிகள் துறைசார் வேறுபாடுகளை மறைக்கின்றன. மின் உற்பத்தித் துறையின் உமிழ்வு வளர்ச்சி 2024-25-ஆம் ஆண்டில் குறைக்கப்பட்டாலும், சிமென்ட், எஃகு மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் கார்பன் உமிழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


கிளைமேட் டிரான்ஸ்பரன்சி (Climate Transparency) மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (International Energy Agency) ஆகியவற்றின் ஆய்வுகள், இந்தியாவின் கார்பன் உமிழ்வு-அடர்த்திக் குறைப்பு பல G20 நாடுகளை விட வேகமாக உள்ளதாகக் காட்டுகின்றன. இருப்பினும், நிலக்கரியின் அதிகப்படியான பங்கு, ஒரு அலகு மின்சாரத்திற்கான மொத்த உமிழ்வை உயர்வாகவே வைத்திருக்கிறது. இந்தியாவின் 2070-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் உறுதிமொழி நம்பகத்தன்மையுடன் இருக்க, எஞ்சியிருக்கும் தீவிரம் சார்ந்த ஆதாயங்கள் வெளிப்படையான நிலக்கரியை படிப்படியாகக் குறைக்கும் கால அட்டவணை மற்றும் தொழில்துறை கார்பன் நீக்கத்திற்கான திட்டங்கள் மூலம் முழுமையான கார்பன்  உமிழ்வு குறைப்புகளுக்கு வழிவகுக்க வேண்டும்.


தலைமுறை இடைவெளி


இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை வேகமாக அதிகரித்துள்ளது, ஆனால் தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்காக புதைபடிவ எரிபொருட்களை முழுமையாக மாற்றுவதில் இன்னும் வெற்றிபெறவில்லை. புதைபடிவமற்ற எரிசக்தித் திறன் 2015-ல் சுமார் 29.5%-லிருந்து ஜூன் 2025-க்குள் சுமார் 51.4% ஆக அதிகரித்துள்ளது.


இந்த வளர்ச்சியில் பெரும்பாலான பகுதிக்கு சூரிய சக்தி முக்கிய காரணமாக இருந்துள்ளது. நிறுவப்பட்ட சூரிய சக்தித் திறன் 2014-ல் சுமார் 2.8 ஜிகாவாட்டிலிருந்து 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 110.9 ஜிகாவாட்டாக உயர்ந்தது. போட்டித்தன்மை வாய்ந்த கட்டணங்கள் மற்றும் உள்நாட்டு சூரிய மின் தகடு உற்பத்தியின் வளர்ச்சி ஆகியவை இந்த விரிவாக்கத்திற்கு உதவியுள்ளன. காற்றாலை மின்சாரமும் அதிகரித்தது, ஆனால் அதே காலகட்டத்தில் சுமார் 21 ஜிகாவாட்டிலிருந்து சுமார் 51.3 ஜிகாவாட்டாக மெதுவான வேகத்தில் அதிகரித்தது. நிலம் கிடைப்பதில் உள்ள வரம்புகள், மின்கட்டமைப்பு இணைப்புகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் மாநில அளவிலான ஒழுங்குமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றால் காற்றாலை மின்சார விரிவாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


மொத்தத் திறனில் பாதிக்கும் மேற்பட்டவை புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து வந்தபோதிலும், 2024-25 நிதியாண்டில் உண்மையான மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சுமார் 22% மட்டுமே பங்களித்தது. ஏனெனில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் குறைந்த திறன் காரணிகளுடன் செயல்படுகின்றன மற்றும் ஆற்றல் சேமிப்பில் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக, முக்கியமாக நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின்சாரம், 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 240 ஜிகாவாட்டாக நீடித்ததுடன், பிரதான அடிப்படை மின்சார விநியோகத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.


இந்தியா, 2022-ஆம் ஆண்டிற்கான 175 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடையத் தவறியது. 2030-ஆம் ஆண்டிற்கான 500 ஜிகாவாட் இலக்கு தொழில்நுட்ப ரீதியாக அடையக்கூடியதாக இருந்தாலும், நிறுவப்பட்ட திறனை நம்பகமான மின்சார உற்பத்தி திறனாகவும், உண்மையான உமிழ்வுக் குறைப்புகளாகவும் மாற்றுவதற்கு, சேமிப்பகத்தை விரைவாக விரிவுபடுத்துதல், வலுவான மின் விநியோக அமைப்புகள் மற்றும் சிறந்த திட்ட அமலாக்கம் ஆகியவை தேவைப்படுகிறது.


இந்தியா 2030-ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து 40% மின்சார உற்பத்தித் திறனை அடைவதற்கான இலக்குகளை நிர்ணயித்தது, பின்னர் இதை 2030-ஆம் ஆண்டிற்குள் 50% ஆக உயர்த்தியது. இந்த இலக்குகள் முதல் பார்வையில் வெற்றிகரமாகத் தோன்றினாலும், அவை ஒரு முக்கியமான சிக்கலை மறைக்கின்றன. நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனும் உண்மையான மின்சார உற்பத்தியும் மிகவும் வேறுபட்டவை. ஏனெனில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ஒருங்கிணைப்பதில் வரம்புகள் உள்ளன மற்றும் அவை தொடர்ச்சியற்ற முறையில் செயல்படுகின்றன.


ஜூன் 2025ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் மொத்த 495 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 51% புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. அதாவது முதல் இலக்கு அடையப்பட்டுவிட்டது. இருப்பினும், இதன் பொருள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் பெரும்பாலான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன என்பதல்ல. உண்மையில், நிறுவப்பட்ட திறனில் 51% புதைபடிவமற்ற எரிபொருட்களைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் மின்சாரத்தில் 70% க்கும் அதிகமானவை இன்னும் நிலக்கரியிலிருந்தே வருகின்றன.


சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யாததே இதற்குக் காரணம். சூரியன் பிரகாசிக்கும்போதும் அல்லது காற்று வீசும்போதும் மட்டுமே அவை செயல்படுகின்றன. எனவே, அவற்றின் உண்மையான உற்பத்தி குறைவாகவே உள்ளது. மறுபுறம், நிலக்கரி மின் நிலையங்கள் தொடர்ச்சியாக இயங்கி, நிலையான 'அடிப்படைச் சுமை' மின்சாரத்தை வழங்குகின்றன.


மத்திய மின்சார ஆணையம், 2029–30-ஆம் ஆண்டுக்குள் 336 ஜிகாவாட் (GWh) சேமிப்பகத்திற்கான தேவை இருக்கும் என்று மதிப்பிடுகிறது. ஆனால், 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, சுமார் 500 மெகாவாட்  (Mega Watt) MWh)) சேமிப்பகம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.


தேசிய சூரிய சக்தி இயக்கம் (National Solar Mission), சூரிய சக்தி பூங்காக்கள் (Solar Parks), ஒளிமயமான (உஜ்வல்) மின் விநியோக நிறுவன உறுதி திட்டம் (Ujwal DISCOM Assurance Yojana (UDAY)), பிரதம மந்திரி விவசாயிகள் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் உயர்வு மகா இயக்கம் ((Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan) (PM-KUSUM)), மற்றும் வீடுகளின் கூரை மேல் சூரிய சக்தி அமைப்புகள் (rooftop solar) போன்ற அரசுத் திட்டங்கள், ஆண்டுதோறும் சுமார் 25 ஜிகாவாட் (GW) அளவுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய உதவியுள்ளன. இருப்பினும், மின்கட்டமைப்பு இணைப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள், திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தொடர்ந்து குறைத்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியைக் கண்டபோதிலும், இந்தியாவின் மின் உற்பத்தி அமைப்பு இன்னமும் நிலக்கரியையே பெரிதும் சார்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ஆவணத்தில் மட்டுமுள்ள காடுகள்


2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 முதல் 3 பில்லியன் டன்  கார்பன்-டை-ஆக்ஸைட் அளவுக்குச் சமமான (CO₂ equivalent) கூடுதல் கார்பன் சேமிப்பகங்களை (carbon sink) உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிமொழி, வெறும் திட்ட அளவில் பார்க்கும்போது அடையக்கூடியதாகத் தெரிகிறது. 'இந்தியா மாநில வன அறிக்கை 2023' (The India State of Forest Report 2023), நாடு ஏற்கெனவே 30.43 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைட் சமமான மொத்த கார்பன் இருப்பை சேமித்துள்ளது. இது 2005-ஆம் ஆண்டிலிருந்து 2.29 பில்லியன் டன் அதிகமாகும். இதனால், 2030-ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடையத் தேவைப்படுவது சுமார் 0.2 பில்லியன் டன் மட்டுமே ஆகும்.


இருப்பினும், இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காடுகள் பற்றிய ஒரு பரந்த வரையறையை நம்பியுள்ளன. இந்திய வன ஆய்வுத் துறை (Forest Survey of India), ஒரு ஹெக்டேருக்கு மேல் உள்ள, 10% மர விதானம் (tree canopy) கொண்ட எந்த நிலத்தையும் வனப் பரப்பாக கணக்கிடுகிறது. இதில் இயற்கை காடுகளுடன் சேர்த்து, நீலகிரி (யூகலிப்டஸ்) தோட்டங்கள், மா மற்றும் தேயிலை தோட்டங்கள், மற்றும் சாலையோர மரங்கள் ஆகியவையும் அடங்கும். செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் 7,15,343 சதுர கிலோமீட்டர் வனப் பரப்பு இருந்தது. இது 2021 ஆம் ஆண்டிலிருந்து 156 சதுர கிலோமீட்டர் மட்டுமே அதிகரித்துள்ளது. 


கொள்கை அமலாக்கத்திலும் சில சவால்கள் உள்ளன. இழப்பீட்டு வன நிதியச் சட்டத்தின்கீழ் (2016) சுமார் ₹95,000 கோடி திரட்டப்பட்டுள்ளது. ஆனால், அதன் பயன்பாடு சீரற்று உள்ளது, உதாரணமாக டெல்லி போன்ற மாநிலங்கள் 2019-20 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நிதியில் 23% மட்டுமே பயன்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்திற்குப் பிறகு, ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திருத்தப்பட்ட பசுமை இந்தியா இயக்கம் (Green India Mission) ஆரவல்லி, மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலை போன்ற பகுதிகளில் ஐந்து மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது செயற்கை முறையில் நடப்படும் தோட்டங்களை இயற்கையான மறுசீரமைப்பிற்குச் சமமாகக் கருதுகிறது.


காலநிலை மாற்றம் மேலும் அழுத்தத்தை சேர்க்கிறது. செயற்கைக்கோள் தரவுகள் "பசுமை அதிகரிப்பை" சுட்டிக்காட்டினாலும், உண்மையான தாவர உற்பத்தி மற்றும் கார்பன் உறிஞ்சுதல் (carbon absorption) ஆகியவை உயரும் வெப்பநிலை மற்றும் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்பு குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இந்தியா தனது வன கார்பன் உறிஞ்சும் இலக்கை (forest carbon sink target) 2030-ஆம் ஆண்டுக்குள் அடையக்கூடும் என்றும் ஆனால் இது பெரும்பாலும் தோட்ட அடிப்படையிலான மற்றும் பலவீனமான நிர்வாக முறைகள் மூலமே நடக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.  அதாவது, இது உண்மையான சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை விட, கார்பன் அளவுகளின் மீது அதிக கவனம் செலுத்தும் முறையாக இருக்கக்கூடும் என்கின்றனர்.


முன்னால் உள்ள பாதை


இந்தியா சில அளவீடுகளில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இந்த முன்னேற்றங்கள் அதன் காலநிலை நடவடிக்கைகளில் உள்ள ஆழமான சிக்கல்களை மறைக்கின்றன. கார்பன் உமிழ்வின் அடர்த்தி மேம்பட்டிருந்தாலும், மொத்த உமிழ்வு இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனின் வளர்ச்சியானது, அதற்கு இணையான மின் உற்பத்தியில் இன்னும் உயர்வை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், நிலக்கரியே இன்னமும் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதோடு உண்மையான சுற்றுச்சூழல் தாக்கத்தை மறைக்கிறது.


முன்னோக்கிய பாதைக்கு, வலுவான அமைப்பு அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான நிர்வாகம் தேவைப்படும் துறைகளில் தொடர்ச்சியான முயற்சி அவசியம். மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்காக பேட்டரி சேமிப்பு வசதிகளை விரைவாக விரிவுபடுத்துதல், நிலக்கரியிலிருந்து விலகிச் செல்வதற்கான ஒரு தெளிவான செயல் திட்டத்தை உருவாக்குதல், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் கார்பன் இலக்குகளை அடைவதற்காக வன நிர்வாகத்தை மேம்படுத்துதல், மற்றும் பல்வேறு துறைகள் மற்றும் பிராந்தியங்களில் முன்னேற்றத்தைக் கண்காணிக்க தரவு வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் ஆகியவை இதில் அடங்கும். வெறும் புதிய தொழில்நுட்பத்தையும் மூலதனத்தையும் சேர்ப்பது மட்டும் இனி போதுமானதாக இருக்காது.


அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானவை. இந்தக் காலகட்டத்தில், இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். மேலும், ஆற்றல் சேமிப்பு தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும். இது தவிர, மின்கட்டமைப்பு இணைப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற துறைகளில் அரசாங்கம் ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும்.


இறுதியாக, இந்தியா தனது எண்ணிக்கை இலக்குகளை பெரும்பாலும் அடைந்திருந்தாலும், உண்மையான சவால் அந்த தலைப்புச் செய்திகளின் புள்ளிவிவரங்களைக் கடந்து உள்ளது. அதாவது, நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனை தொடர்ச்சியான மின் உற்பத்தியாக மாற்றுவதும், ஆற்றல் தீவிரத்தில் கிடைத்த முன்னேற்றத்தை உண்மையான கார்பன் உமிழ்வு குறைப்பாக மாற்றுவதே அந்தப் பெரிய சவாலாக உள்ளது.


தீபான்ஷு மோகன், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், தலைவராகவும் மற்றும் புதிய பொருளாதார ஆய்வுகள் மையத்தின் (CNES) இயக்குநராகவும் உள்ளார். அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வருகைப் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் AMES உடன் வருகைப் பணியாளராகவும் இருக்கிறார். நாகப்பன் அருண் மற்றும் சக்ஷாம் ராஜ் ஆகியோர் புதிய பொருளாதார ஆய்வுகள் மையத்தில் ஆராய்ச்சி ஆய்வாளர்களாக உள்ளனர். சிமர் கவுர் மற்றும் அன்விதா திரிபாதி ஆகியோரின் உள்ளீடுகளுடன் இது தயாரிக்கப்பட்டது.

 Original Article : India’s progress on its climate targets -Deepanshu Mohan,Nagappan Arun,Saksham Raj

Share: