சட்டமன்ற உறுப்பினர் பதவி இல்லாத முதலமைச்சர்: உச்சநீதிமன்றம் சட்டத்தை எப்படி தீர்மானித்தது? -ஷ்யாம்லால் யாதவ்

 ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக (MLA/MLC) இல்லாதபோதும், அவரை ஆறு மாத காலத்திற்கு அமைச்சராக நியமிக்க அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 164(4) வழிவகை செய்கிறது. ஆனால், அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற அந்த ஆறு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு சபையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


கடந்த வாரம், வர்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹர்ஷ்வர்தன் ஷோபா பாபராவ் கோட்பாடே, மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத்திடம் ஒரு கடிதம் அளித்தார். அதில், என்சிபி தலைவர் சுனேத்ரா பவார் மகாராஷ்டிர துணை முதலமைச்சராகப் பதவியேற்றது சட்டப்படி செல்லுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில், அவர் சட்டப்பேரவை உறுப்பினராகவோ (Member of the Legislative Assembly (MLA)) அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவோ (Member of the Legislative Council (MLC)) தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும், அவர் பதவியேற்ற போது அமைச்சரவையில் அமைச்சராகக் கூட பதவி வகிக்கவில்லை என்பதையும் அந்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தேர்ந்தெடுக்கப்படாத அமைச்சர்கள் குறித்த  சிக்கல்கள் இந்தியாவில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன, இது 1960-களின் பிற்பகுதியில் நிலவிய அரசியல் நிலையற்ற தன்மையால் உருவானது. இருப்பினும், இதற்கான சட்டரீதியான தீர்வு நீண்ட காலத்திற்கு முன்பே காணப்பட்டது: சட்டப்பிரிவு 164(4) இத்தகைய நியமனங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்கிறது. மேலும், 1971-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு, இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டதை உறுதி செய்தது.


சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரைக்கூட அமைச்சராக நியமிக்க அரசியலமைப்பின் 164(4) பிரிவு வழிவகை செய்கிறது. ஆனால், அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அவர் தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 


இருப்பினும், 1960-களின் இறுதி வரை இந்த நடைமுறை பயன்படுத்தப்படவில்லை. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து, தேர்தல் முடிவுகள் நிலையற்றதாக (யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை) மாறின. உச்சநீதிமன்றம் இது குறித்த சட்டப்பூர்வ விளக்கத்தை அளிப்பதற்கு முன்பாக, இந்த முறை முதலில் பீகாரிலும், பின்னர் உத்தரப் பிரதேசத்திலும் சோதித்துப் பார்க்கப்பட்டது.


1967-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, பீகாரில் சம்யுக்த விநாயக் தளம் (Samyukta Vidhayak Dal (SVD)) தலைமையில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. இது சோசலிஸ்டுகள், ஜனசங்கம் மற்றும் பிற காங்கிரஸ் எதிர்ப்பு குழுக்களின் ஒரு தளர்வான கூட்டணியாகும். ஜன் கிராந்தி தளத்தைச் சேர்ந்த மகாமாய பிரசாத் சின்ஹா முதலமைச்சரானார். ஆனால், உட்கட்சி பூசல்கள் மற்றும் சம்யுக்த சோசலிசக் கட்சியில் (Samyukta Socialist Party (SSP)) ஏற்பட்ட பிளவு காரணமாக SVD அரசாங்கம் கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து, ஷோஷித் தளத்தை உருவாக்கிய முன்னணி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) தலைவரான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல், காங்கிரஸ் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தார்.


சம்யுக்த விநாயக் தளம் (SVD) கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, ஜனவரி 1968-ல் முதலமைச்சர் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு, முதலமைச்சர் பதவிக்கு மண்டல் அவர்களை காங்கிரஸ் ஆதரித்தது. ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. பீகார் சட்டமன்றத்தின் எந்தவொரு அவையிலும் (சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை) மண்டல் அப்போது உறுப்பினராக இல்லை. காங்கிரஸின் உதவியுடன், அப்போது இதற்கு ஒரு புத்திசாலித்தனமான தீர்வு காணப்பட்டது.


ஜனவரி மாதம் 28-ஆம் தேதி, 1968-ஆம் ஆண்டு, மண்டலின் நண்பரான 37 வயது சதீஷ் பிரசாத் சிங் முதலமைச்சராகப் பதவியேற்றார். 1967-ஆம் ஆண்டில் பர்பட்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சம்யுக்த சோசலிசக் கட்சி (SSP) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங், பீகாரின் முதல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நபர் (OBC) முதலமைச்சர் ஆனார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, மண்டலை சட்ட மேலவைக்கு (Legislative Council) நியமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம், சிங் திட்டமிட்டபடி வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே குறுகியகால முதலமைச்சராகப் பணியாற்றினார்.


சட்டப்பிரிவு 164(4) ஏற்கனவே நடைமுறையில் இருந்ததாலும், மண்டல் முதலமைச்சராவதற்கு அரசியலமைப்பில் எந்தத் தடையுமில்லை. இருப்பினும், அந்த விதிமுறை அதுவரை சோதிக்கப்படவில்லை—குறைந்தது சில ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் வரை அது பயன்படுத்தப்படவில்லை.


1969–70-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், பலவீனம் அடைந்திருந்த காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் (O) மற்றும் இந்திரா காந்தியின் காங்கிரஸ் (R) என இரண்டாகப் பிரிந்தது. உத்திரப்பிரதேசத்தில், இந்திரா காந்தியின் காங்கிரஸ் (R) ஆதரவுடன் அமைக்கப்பட்ட சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளம் (BKD) அரசு, ஒரு முக்கிய காரணத்தால் கவிழ்ந்தது. அதாவது, மன்னர் மானியங்களை (Privy Purses) ஒழிப்பதற்காக இந்திராகாந்தி கொண்டு வந்த மசோதாவிற்கு எதிராக பாரதிய கிராந்தி தளம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால், அக்டோபர் மாதம்  1-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டு சரண் சிங் பதவி விலகினார். மேலும் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, பாரதிய கிராந்தி தளம், ஜனசங்கம், காங்கிரஸ் (O) மற்றும் சிறிய குழுக்கள் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கின. அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டு, காங்கிரஸ் (O) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான திரிபுவன் நாராயண் சிங், உத்தரப் பிரதேசத்தின் ஆறாவது முதலமைச்சராகப் பதவியேற்றார்.


ஆனால், இந்த அரசு பலவீனமாக இருந்தது, மேலும் காங்கிரஸ் (R) கட்சி இதனை எதிர்த்தது. நாராயண் தத் திவாரி, சிங் அவையின் தலைவராக இருப்பதன் சட்டப்பூர்வத்தன்மையை கேள்வி எழுப்பினார், ஆனால் சபாநாயகர் ஏ.ஆர். கெர் சிங்கிற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். சட்டமன்றத்திற்கு வெளியே, லக்னோவைச் சேர்ந்த ஹர் சரண் வர்மா என்பவர் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். சிங் சட்டமன்ற உறுப்பினராகவோ (MLA) அல்லது மேலவை உறுப்பினராகவோ (MLC) இல்லாததால், அவரது நியமனம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அவர் வாதிட்டார். உயர்நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ததை அடுத்து, வர்மா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


ஒரு நபர் சட்டமன்ற உறுப்பினராக (MLA) அல்லது மேலவை உறுப்பினராக (MLC) இல்லாமலேயே முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் இந்த விதி முதலமைச்சர்களுக்கும் பொருந்தும் என்றும் அத்தகைய நியமனம் ஆறு மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அதற்குள் அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 164(4)-ன்கீழ் மார்ச் மாதம் 16-ஆம் தேதி, 1971-ஆம் ஆண்டு, தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.


இந்தத் தீர்ப்பு சிங்கிற்கு கிடைத்த சட்டப்பூர்வ வெற்றியாகும், ஆனால் அது அவரை நீண்ட காலம் பதவியில் நீடிக்க உதவவில்லை. 


1971-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முதலமைச்சராக நீடிக்க வேண்டிய ஆறு மாத கால அவகாசத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற விதியை நிறைவு செய்ய, சிங் அவர்கள் மணிராம் சட்டமன்றத் தொகுதியில் (தற்போது கோரக்பூர் அர்பன்) நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அதில் அவர் தோல்வியடைந்ததால், அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


சில நாட்களுக்குப் பிறகு, 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, என்.டி. திவாரி கொண்டு வந்த திருத்தங்களால் அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலங்களவை உறுப்பினாராகவே பதவி வகித்தார். 


இந்த விவகாரம், மாநில சட்டமன்றத்தின் எந்தவொரு சபையிலும் (சட்டமன்றம் அல்லது மேலவை) உறுப்பினராக இல்லாதவர்கள்கூட முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது என்கின்றனர்.  


எழுத்தாளர், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த இணை ஆசிரியர் ஆவார்.


Original article : A chief minister without a House seat: How SC settled the law. -Shyamlal Yadav

Share: