ரஃபேல் பல்நோக்கு போர் விமானம் ஏன் இந்தியாவின் வான்வழி ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்கான மிக விரைவான வழியாகும்? -அனில் கோலானி

            இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் (Rafale) போர் விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. மேலும், இந்திய கடற்படை 26 ரஃபேல்-எம் (Rafale M) விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதனால், கூடுதலாக ரஃபேல் விமானங்களை வாங்குவது இந்தியாவுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமையும். ஏற்கனவே உள்ள விமானங்களுடன் இவை பல பொதுவான அம்சங்களைப் பகிர்ந்து கொள்வதால், அவற்றை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும், வணிக ரீதியாகவும் பெரும் பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 


கடந்த மே மாதம் 2025-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindhoor) மோதல், இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்தில் விமானப்படையின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் அண்டை நாடுகளின் செயல்பாடுகள் ஒரு கவலையான சூழலை உருவாக்கியுள்ளன. சீனா-பாகிஸ்தான் இடையேயான வளர்ந்து வரும் நட்பு மற்றும் பாகிஸ்தான் விமானப்படைக்கு (Pakistan Air Force (PAF)) துருக்கி அளிக்கும் ஆதரவு ஆகியவை பிராந்திய விமானப்படை வலிமையின் சமநிலையை இந்தியாவுக்கு எதிராக மாற்றியுள்ளது. இந்த மோதலில் இந்திய விமானப்படை (Indian Air Force (IAF)) தனது இலக்குகளை வெற்றிகரமாக அடைந்தாலும், அதனிடம் உள்ள போர் விமானங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது ஒரு பெரிய சிக்கலாக உள்ளது. இந்திய விமானப்படைக்கு அனுமதிக்கப்பட்ட போர் விமானப்பிரிவுகளின் (Squadrons) எண்ணிக்கை 42 மட்டுமே என்கின்றனர். ஆனால், தற்போது இந்தியாவிடம் இருப்பது வெறும் 29 பிரிவுகள் மட்டுமே உள்ளன. மறுபுறம், பாகிஸ்தானிடம் 22 பிரிவுகள் உள்ளன. மேலும், சீனாவிடமிருந்து அதிநவீன J-35 (ஐந்தாம் தலைமுறை) போர் விமானங்களை வாங்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.


இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட தேஜஸ் (Tejas) இலகுரக போர் விமானத்தின் முதல் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இது உள்நாட்டிலேயே விமானத் தயாரிப்புத் துறை வளர்ந்து வருவதை உலகுக்கு உணர்த்தியது. அதே காலகட்டத்தில், இந்திய விமானப்படை தனது போர் விமானப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, 126 நடுத்தர ரக பன்முகப் போர் விமானங்களை (Medium Multirole Combat Aircraft (MMRCA)) வாங்க முயற்சி மேற்கொண்டது. இந்த 126 விமானங்களில், 108 விமானங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited (HAL)) மற்றும் பிரான்சின் Dassault நிறுவனத்திற்கும் இடையே, தயாரிப்பு முறை மற்றும் ஒப்பந்த நிபந்தனைகளில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக, ஜூன் மாதம் 2015-ஆம் ஆண்டில் அந்தப் பழைய கொள்முதல் திட்டம் (Request for Proposal (RFP)) அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.


இந்த நீண்டகால இழுபறி நிலையினால், இந்தியாவின் எதிரி நாடுகள் அதிக அளவிலான நவீன நான்காம் மற்றும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தங்கள் படையில் சேர்த்தன. இது இந்திய விமானப்படையின் குறைந்துவரும் பலத்தினால் ஏற்பட்ட இடைவெளியை மேலும் மோசமாக்கியது. இந்த அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஏப்ரல் மாதம் 2015-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம், உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புக்கொண்டார். இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், நாட்டின் பாதுகாப்புத் தேவையைக் கருதி, ஆகஸ்ட் மாதம் 2016-ஆம் ஆண்டில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.


இதற்கு இணையாக, இலகுரக போர் விமானத் (Light Combat Aircraft (LCA)) (தேஜஸ்) திட்டமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடார் மற்றும் ஆயுதங்களை இணைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் என்ஜின் கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் காரணமாக, திட்டமிட்டபடி நடுத்தர பல்நோக்கு போர் விமானங்களுக்குப் (Medium Multi-Role Combat Aircraft (MMRCA)) பதிலாக இவற்றைப் பயன்படுத்த முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதை உணர்ந்த இந்திய விமானப்படை, 2018-ஆம் ஆண்டில் 114 பல்திறன் கொண்ட போர் விமானங்களை (MRFA) வாங்குவதற்கான முதற்கட்ட கோரிக்கையை (RFI) வெளியிட்டது. நவீன போர் விமானங்களை விரைவாகப் படைப்பிரிவில் சேர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய ஒரு அரசு குழு இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்தது. அமெரிக்காவின் F-16 மற்றும் F-18, ஐரோப்பாவின் Eurofighter Typhoon, சுவீடனின் Gripen E, ரஷ்யாவின் Su-35 மற்றும் MiG-35 ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் இதில் பரிசீலிக்கப்பட்ட முக்கிய விமானங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மேலும், அமெரிக்க விமானங்கள் சர்வதேச ஆயுதப் போக்குவரத்து விதிகளுக்கு (International Traffic in Arms Regulations (ITAR) உட்பட்டவை. இதற்கு ஏற்றுமதி அனுமதி, தொழில்நுட்பப் பரிமாற்ற உரிமங்கள் மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் போன்ற கடுமையான விதிமுறைகள் உள்ளன. சுவீடனின் Gripen: இதில் அமெரிக்காவின் GE என்ஜின் பயன்படுத்தப்படுவதால், இதற்கும் அமெரிக்காவின் அதே போன்ற கட்டுப்பாடுகள் பொருந்தும் என்கின்றனர். ரஷ்ய விமானங்கள்: இவற்றின் தொழில்நுட்பத் தரம் குறித்த சிக்கல்கள் எழுந்தன. Eurofighter: இது பல நாடுகளின் கூட்டமைப்பு என்பதால், அரசுக்கு இடையேயான ஒப்பந்தம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 


காலக்கெடு, பராமரிப்புச் செலவுகள், தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மற்றும் இந்திய விமானப்படையின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ரஃபேல் (Rafale) போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, குழு பரிந்துரைத்தது. ஏற்கனவே இந்திய விமானப்படை 36 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது, மேலும் இந்திய கடற்படை 26 ரஃபேல்-எம் (Rafale M) விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் கூடுதல் ரஃபேல் விமானங்களை வாங்குவது பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள விமானப் படைகளுடன் இவை ஒத்துப்போவதால், கூடுதல் ரஃபேல் விமானங்கள் செயல்பாட்டுரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் மற்றும் தளவாடப் பராமரிப்புரீதியாகவும் பெரும் நன்மைகளைத் தரும் என்கின்றனர். டசால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) நிறுவனம் ஏற்கனவே பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வசதிகளை வழங்கியுள்ளதால், கூடுதல் விமானங்களைச் சேர்ப்பது ஒட்டுமொத்த செலவைக் குறைக்கும் என்கின்றனர். மேலும், இது விமானப்படையின் பல்வேறு வகையான போர் விமானப் பிரிவுகளை முறைப்படுத்தவும், பராமரிப்புச் சுமையைக் குறைத்து விமானங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் உதவும் என்றும் நம்பப்படுகிறது.


புதிய விமானங்கள் படையில் சேர்க்கப்படும்போது, ரஃபேல் பல்நோக்கு போர் விமான (Multi-Role Fighter Aircraft (MRFA)) ஒப்பந்தம் அடுத்த சில ஆண்டுகளில் இந்திய விமானப்படையின் (IAF) திறனைப் பெருமளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மதிப்பில் 60% இந்தியாவிலேயே உருவாக்கப்பட வேண்டும் என்ற அரசின் நிபந்தனை, நம் நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு மிகப்பெரிய பலத்தைத் தரும் என்கின்றனர்.  ஏற்கனவே மிராஜ் (Mirage) மற்றும் ரஃபேல் விமானங்களைப் பயன்படுத்திய அனுபவம் இந்திய விமானப் படைக்கு உண்டு. மேலும், பிரான்ஸ் மற்றும் தஸால்ட் (Dassault) நிறுவனம் நம்பிக்கையான கூட்டமைப்பு நாடாக இருப்பதால், ஒரே வெளிநாட்டு நிறுவனத்தைச் சார்ந்திருக்கிறோம் என்ற சிக்கல்களையும் தாண்டி இந்த விமான தேர்வு முன்னுரிமை பெறுகிறது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியக் கூட்டமைப்பு நாட்டுடன் இணைந்து இங்கேயே போர் விமானங்களைத் தயாரித்தால், அது உண்மையான தற்சார்பு நிலையை உருவாக்கும். இது இந்தியாவின் சொந்தத் தயாரிப்புகளான இலகுரக போர் விமானம் மார்க் II (Light Combat Aircraft Mark II (LCA Mk II)) மற்றும் மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (Advanced Medium Combat Aircraft (AMCA)) ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்பன போன்ற திட்டங்கள் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகிறது. 


ரஃபேல் ஒரு 'பல்நோக்கு' (multirole) விமானம் என்று அழைக்கப்பட்டாலும், அடிப்படையில் இது ஒரு 'முழு பல்நோக்கு' (omnirole) வகை விமானமாகும். அதாவது, ஒரே ஒரு பயணத்தின் போதே, இடையில் எந்த மாற்றங்களும் செய்யாமலேயே இலக்குகளைத் தாக்குவது, வான்வழிப் போரில் ஈடுபடுவது மற்றும் உளவுத் தகவல்களைச் சேகரிப்பது என அனைத்துப் பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டது. இந்த விமானம் சிரியா, மாலி மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் நடந்த மோதல்கள் முதல், இந்தியச் சூழலில் நடந்த 'ஆபரேஷன் சிந்துார்' வரை தனது திறமையை நிரூபித்துள்ளது. இதன் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் (Dassault), இந்தியாவுக்கு வழங்கப்பட்ட F3 மாடலில் இருந்து தற்போது வழங்க முன்வந்துள்ள F5 மாடல் வரை ரஃபேல் விமானத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தற்போது வரவிருக்கும் புதிய ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை இந்த விமானத்தில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த ரஃபேல் ஒப்பந்தம் இந்திய விமானப்படைக்கும் அதன் போர் வலிமைக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையிடம் ரஃபேல் விமானங்கள் இருப்பதால், புதிதாக வரும் விமானங்களை தற்போதைய செயல்பாட்டுடன் மிக எளிதாக இணைக்க முடியும். இது நாட்டின் வான்வழி அதிகாரத்தை பெருமளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னிலையில் இருக்கவும் இந்தியாவிற்கு இலகுரக போர் விமானம் (Light Combat Aircraft (LCA))(Tejas) மற்றும் மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (Advanced Medium Combat Aircraft (AMCA)) போன்ற விமானங்கள் இன்னும் தேவைப்படுகின்றன. தற்போது  தேஜஸ் (Tejas Mk1A) (Light Combat Aircraft Mark 1A)  உற்பத்தி தொடங்கிவிட்டது. மேலும், தேஜஸ் (Tejas MkII) மற்றும் நடுத்தர போர் விமானம் (Advanced Medium Combat Aircraft (AMCA))  ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளித் துறை வளர்ச்சியில் வேகம் எடுத்து வருகிறது. திட்டமிடப்பட்டுள்ள 114 ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும்போது, இந்திய விமானப்படையின் தாரக மந்திரமான "நப: ஸ்ப்ருஷம் தீப்தம்" (வானத்தைத் தொடுவோம் புகழுடன்) என்பதற்கு ஏற்ப, முழு நம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


எழுத்தாளர், புது தில்லியில் உள்ள விண்வெளி மற்றும் உத்திசார் ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநராக உள்ளார்.


Original article : Why the Rafale Multi-Role Fighter Aircraft is India’s fastest route to air power superiority?. -Anil Golani

Share: