16-வது நிதி ஆணையத்தின் மூலம் மாநிலங்கள் பயனடைந்துள்ளனவா? -ரங்கராஜன் ஆர்.

16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன? மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே எந்தெந்த வரிகள் பகிரப்படுகின்றன? கடந்த நிதி ஆணையம் செங்குத்து வரிப் பகிர்வை (Vertical Devolution) ஏன் 41 சதவீதமாக மாற்றியது? மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற தொழில்மயமான மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?


டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதி ஆணையம், 2026-31-ஆம் ஆண்டுகளுக்கான தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஒன்றிய அரசு அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக, ஒன்றிய அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பான பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.


கடந்த காலப் பரிந்துரைகள் என்னென்ன?


இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 270, ஒன்றிய அரசு வசூலிக்கும் நிகர வரி வருவாயை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கிறது. நிறுவன வரி (Corporation tax), தனிநபர் வருமான வரி, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (Central Goods and Service Tax (CGST)) மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் மத்திய அரசுக்குச் சேரும் பங்கு ஆகியவை இதில் அடங்கும் என்கின்றனர். சட்டப்பிரிவு 280-ன்கீழ் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை அமைக்கப்படும் நிதி ஆணையம், இந்த வருவாயை எவ்வாறு பிரித்தளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ் (Cess) மற்றும் கூடுதல் கட்டணம் (Surcharge) ஆகியவை இந்தப் பகிர்வுத் தொகுப்பில் சேர்க்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கின்றனர். 


13-வது நிதி ஆணையமானது, 2010-ஆம் ஆண்டு  முதல் 2015-ஆம் ஆண்டு வரை, மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்படும் போது பல நிபந்தனைகளுடன் கூடிய 'மத்திய நிதியுதவி திட்டங்கள்' (Centrally Sponsored Schemes) மூலமாகவே நிதி கிடைத்தது. அப்போது மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கு (Vertical Devolution) 32சதவீதமாக  மட்டுமே இருந்தது. 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி 2015–ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை, இந்த நிபந்தனைகளுடன் கூடிய திட்ட அடிப்படையிலான நிதி மாற்றங்கள் நீக்கப்பட்டு, மாநிலங்களின் நேரடி வரிப் பங்கு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது நடைமுறையில் இருக்கும் 15-வது நிதி ஆணையம் (2020–26), ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களின் வரிப் பங்கைக் குறைத்து 41 சதவீதமாக  நிர்ணயித்துள்ளது.


13-வது நிதி ஆணையத்திலிருந்து, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வுக்கான அளவுகோல்கள், செயல்திறன் காரணிகளைவிட சமநிலை மற்றும் தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதாவது, வனப்பரப்பு, மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் வரிவசூல் முயற்சி போன்ற செயல்திறன் அம்சங்களைவிட வருமான இடைவெளி, மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றுக்கே நிதி ஒதுக்கீட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்கின்றனர். 

மாநிலங்களின் கோரிக்கைகள் யாவை?


முதலாவதாக, செங்குத்துப் பகிர்வு (Vertical Devolution) குறித்துப் பார்த்தால், ஒன்றிய அரசு மாநிலங்களுக்குப் பிரித்துத் தரும் நிதியானது தற்போதுள்ள 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்று 18 மாநிலங்கள் விரும்பின. ஒரு சில மாநிலங்கள் இதை 45 முதல் 48 சதவீதமாக உயர்த்தக் கோரின. மேலும், பல மாநிலங்கள் 'செஸ்' (Cess) மற்றும் கூடுதல் கட்டணங்களை (Surcharge) நிதிப் பகிர்வு தொகுப்பிற்குள் சேர்க்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு இவற்றின் மூலம் வசூலிக்கும் தொகைக்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.


இரண்டாவதாக, மாநிலங்களுக்கு இடையேயான கிடைமட்ட நிதிப் பகிர்வில் (Horizontal Devolution), சமநிலை தொடர்பான காரணிகளுக்கே தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இடையேயான வருமான இடைவெளியைக் குறைப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் பரிந்துரைத்தன. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற தொழில்மயமான மாநிலங்கள், அந்தந்த மாநிலங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கும் பங்களிப்பையும் நிதிப் பகிர்வுக்கான ஒரு அளவுகோலாகச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளன.

16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?


செங்குத்து வரிப் பகிர்வு (Vertical Devolution) தொடர்பான கோரிக்கைகள் குறித்து நிதி ஆணையம் பின்வருவனற்றைக் கூறியுள்ளது. தற்போதைய அரசியலமைப்பின்படி, செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கு உச்சவரம்பு விதிப்பதோ அல்லது அவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வரித்தொகுப்பில் சேர்ப்பதோ அனுமதிக்கப்படாது என்றும் அது பொருத்தமானதும் அல்ல என்றும் கூறியுள்ளது. அவசர காலங்களில் நிதி திரட்டுவதற்கு மத்திய அரசுக்கு இந்தக் கருவிகள் தேவைப்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.  மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை 41 சதவீதம் என்ற அளவிலேயே வைத்திருக்க நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு நாட்டின் மொத்த வரி வருவாயில் மாநிலங்கள் ஏற்கனவே பெற்று வரும் ஒட்டுமொத்தப் பங்கு மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் பெரும் தொகை, இறுதியில் மாநிலங்களுக்கே சென்றடைவது, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசுக்கு அதிக நிதி தேவைப்படுவது போன்றவை மூன்று முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன


கிடைமட்டப் பகிர்வுக்காக (Horizontal Devolution), நிதி ஆணையம் இரண்டு முக்கியக் கொள்கைகளைப் பின்பற்றியது என்கின்றனர். முதலாவதாக, மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கப்படும் நிதியில் ஏற்படும் மாற்றங்கள் படிப்படியாக நிகழ வேண்டும். இரண்டாவதாக, மாநிலங்களின் செயல்திறன் மற்றும் வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு ஆகியவை சரியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். எனவே, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்களிப்பு என்ற புதிய அளவுகோல் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பங்கில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நிதிப் பகிர்வு ஒரு புதிய திசையை நோக்கிச் செல்வதை உணர்த்தும் வகையில், இந்த அளவுகோலுக்கும் மற்றவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ரங்கராஜன். R, அவர்கள் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப்  பணி (IAS) அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். இவர் 'Officers IAS Academy'-யில் பயிற்சி அளித்து வருகிறார்.

Original article :  Have States gained from the 16th FC? -Rangarajan R.

Share: