நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) அடிப்படை திருத்தப் பணியானது, மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை அளவிடுகிறது. -சௌரப் கார்க்

 விலைகள் எவ்வாறு அன்றாட வாழ்க்கையையும் கொள்கை முடிவுகளையும் வடிவமைக்கின்றன என்பதை இது இன்னும் சிறப்பாகக் கண்டறிய உதவும்.


பணவீக்கம் என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் பொருளாதாரக் குறியீடுகளில் ஒன்றாகும். இது மக்கள் தங்கள் அன்றாட வீட்டுச் செலவுகளில் நேரடியாக அனுபவிக்கும் ஒரு விஷயமாகும். நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) என்பது, வீடுகளில் வழக்கமாக வாங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் கண்காணிப்பதன் மூலம் இதை வெளிப்படுத்துகிறது; அதாவது அன்றாடச் செலவுகளை பணவீக்கத்தின் அதிகாரப்பூர்வ அளவீடாக இது மாற்றுகிறது. சாதாரண மக்களைப் பொறுத்தவரை, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) என்பது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளின் கண்ணாடியைப் போல செயல்படுகிறது. உணவு, வீட்டு வாடகை மற்றும் பயணத்திற்கான எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்களை இது துல்லியமாக காட்டுகிறது.


வெறும் எண்கள்  மட்டுமல்ல


இது வெறும் ஒரு எண்ணாகத் தோன்றினாலும், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் பிரதிபலிக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டுப்படியாகும் விலையில் இருப்பதை உறுதிசெய்ய, வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய இது வழிகாட்டுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த முடிவுகளை எடுக்க, நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கத்தையே முக்கியக் குறியீடாகப் பயன்படுத்துகிறது. நுகர்வோர் விலைக் குறியீடு உண்மையான நிலவரத்தைப் பிரதிபலிக்கும் போது, அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களின் உண்மையான அனுபவங்களுக்கு ஏற்பச் சிறப்பாகச் செயல்படுகின்றன.


பணவீக்கம் என்பது வெறும் விலை உயர்வு சார்ந்தது மட்டுமல்ல. அந்த மாற்றங்கள் குடும்ப வரவு செலவுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றியதும் ஆகும். எனவே, விலைகளைக் கண்காணிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தற்போதைய மக்களின் செலவு முறைகளை நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பிரதிபலிக்கிறதா என்பதை உறுதி செய்வதும் முக்கியமாகிறது. இதனால்தான், இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படை ஆண்டை 2012-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் ஆண்டுக்கு மாற்றுவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


கடந்த திருத்தத்திற்குப் பிறகு, பொருளாதாரம் பெருமளவில் மாறியுள்ளது: நகரமயமாக்கல் அதிகரித்துள்ளது, சேவைத் துறைகள் வளர்ந்துள்ளன, டிஜிட்டல் தளங்கள் மக்களின் நுகர்வு பழக்கத்தை மாற்றியுள்ளன. மேலும், வீட்டுச் செலவுகள் பலதரப்பட்டதாக மாறியுள்ளதாகக் கூறப்படுகின்றன. 


எனவே, 2024-ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) வரிசையானது, 2023–24-ஆம் ஆண்டின் சமீபத்திய 'குடும்ப நுகர்வுச் செலவின ஆய்வு' முடிவுகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் செலவு செய்யும் பழக்கவழக்கங்கள் மாறியுள்ளதால், நுகர்வோர் விலைக் குறியீட்டுக் கணக்கீட்டில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


வீட்டு உபயோகத்திற்காக மக்கள் தற்போது எவற்றிற்கு அதிக பணம் செலவிடுகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவமும், குறைவாகச் செலவிடும் பொருட்களுக்கு குறைந்த முக்கியத்துவமும் அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மக்களின் வரவு செலவு முறைகளும் உண்மையாகவே பாதிப்புக்கு உள்ளாகும் விலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணக்கிட இது உதவுகிறது. மேலும், மக்களின் வருமான உயர்வு மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறையால், சேவைத் துறையில் மக்கள் அதிகம் செலவிடுவது போன்ற புதிய மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நுகர்வுப் பொருட்களின் பட்டியலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


"நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) எதைக் கணக்கிடுகிறது என்பதைப் போலவே, அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை மேம்படுத்துவதும் முக்கியமானது. மாற்றியமைக்கப்பட்ட இந்தப் புதிய முறை, இந்தியாவின் தனித்துவமான அம்சங்களைத் தக்கவைத்துக்கொண்டே சர்வதேச தரத்திற்கு நெருக்கமாகவும் உள்ளது. இது இந்தியாவின் பணவீக்கத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவதை எளிதாக்குகிறது. மேலும், இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவதுடன், உலகளாவிய பொருளாதாரச் சூழலில் விலை மாற்றங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு இது உதவுகிறது.


நுகர்வோர் விலை குறியீட்டிற்கான தரவு சேகரிப்பு முறை, இன்றைய மக்களின் ஷாப்பிங் பழக்கத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கண்டறிய வழக்கமான சந்தை ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன. அதேவேளையில், 2024-ஆம் ஆண்டின் புதிய வரைமுறைப்படி, தொலைத்தொடர்பு (Telecom), விமானப் பயணம் போன்ற சேவைகள் மற்றும் இதர சில சேவைகளுக்கான இணையப் பயன்பாடு விலைகளும் இப்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.


ஒரு விரிவான தரவுத்தளம்


புதிய தொடரில் கணினி உதவியுடன் விலைச் சேகரிப்பு முறையைப் பயன்படுத்துவது, மனிதர்களால் ஏற்படும் தவறுகளைக் குறைத்துள்ளது. மேலும், உடனுக்குடன் தரவுகளைச் சரிபார்க்க வழிவகை செய்துள்ளதால், விலைப் புள்ளிவிவரங்களின் தரம் மற்றும் வேகம் மேம்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) என்பது வங்கிக் கடன் வட்டி விகிதங்கள், சேமிப்பிற்கான ஆதாயங்கள் மற்றும் விலை உயர்வு குடும்ப வரவு செலவு முறைகளை எவ்வாறு பாதிக்கிறது போன்ற அன்றாட முடிவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


புதிய அடிப்படை ஆண்டின்படி, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ரயில் கட்டணங்கள், தபால் கட்டணங்கள், எரிபொருள் விலைகள் மற்றும் ரேஷன் கடைகள் (Public Distribution System (PDS)) மூலம் விற்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட அரசு தரவுகளை அதிகம் சார்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்த விவரங்கள் மிகவும் துல்லியமாக சேகரிக்கப்படுகின்றன. இது சந்தை ஆய்வுகளில் ஏற்படும் பிழைகளையும் ஒருதலைப்பட்சமான கருத்துக்களையும் குறைக்கிறது. கள ஆய்வுகள், அரசு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் விலை ஆதாரங்களை ஒன்றிணைப்பது முந்தைய முறைகளைவிட ஒரு சிறந்த முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது விலை மாற்றங்கள் குறித்த மிகவும் நம்பகமான  தகவல்களை வழங்குகிறது.


இந்த அளவிலான ஒரு அடிப்படைத் திருத்தப் பணியின் பின்னணியில் உள்ள பிரம்மாண்டமான நிறுவன முயற்சியைக் குறிப்பிடுவது மிகவும் அவசியமாகிறது. இதில் கள அலுவலகங்கள், புள்ளிவிவரப் பிரிவுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.


இந்த செயல்முறையானது முறையான ஆய்வு, பல்வேறு விருப்பங்களைச் சோதித்தல், மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), இந்த மாற்றங்கள் வெளிப்படையாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், மற்றும் முறையான அறிவியல் அடிப்படையில் அமைந்திருப்பதை உறுதிசெய்ய, நிபுணர் குழுக்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.


சூழலைப் பொறுத்தது


ஒவ்வொரு புள்ளிவிவரத்திற்குப் பின்னாலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார அனுபவங்கள் மறைந்துள்ளன என்பதையும், எண்கள் என்பவை வெறும் குறியீடுகள் அல்ல, அவை மனிதர்களைப் பற்றியவை என்பதையும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) நமக்கு நினைவூட்டுகிறது. விலைவாசி உயர்வு எவ்வாறு அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கிறது என்பதையும், அரசின் கொள்கை முடிவுகளில் அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் இது அமைதியாகக் கண்காணிக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 'அடிப்படை ஆண்டு மாற்றத் திருத்த' நடவடிக்கையின் மூலம், இந்த நுகர்வோர் விலை குறியீட்டுத் தரவுகள் துல்லியமாகவும், தற்காலத்திற்கு ஏற்றதாகவும், காலப்போக்கில் மாறாத நிலைத்தன்மை கொண்டதாகவும் இருப்பதை புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) உறுதி செய்துள்ளது. இதன் மூலம், நுகர்வோர் விலைக் குறியீடு என்பது வெறும் எண்ணாக மட்டும் இல்லாமல், நாட்டின் நிலையை பிரதிபலிக்கும் ஒரு உண்மையான கண்ணாடியாகத் திகழ்கிறது.


சௌரப் கார்க், இந்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக உள்ளார்.


Original article : The CPI base revision exercise measures a slice of life -Saurabh Garg

Share: