இறுதி SIR வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? -தாமினி நாத்

 சனிக்கிழமை தொடங்கி, 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தின் (Special Intensive Revision (SIR)) இறுதி வாக்காளர் பட்டியல்கள் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும்.


கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை நிறைவடையும் தருவாயில் உள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பயிற்சியின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்கள் சனிக்கிழமை (பிப்ரவரி 14) முதல் வெளியிடப்பட உள்ளன.


கடந்த இருபதாண்டுகளாக இது வழக்கமாக இருந்த வருடாந்திர மற்றும் தேர்தலுக்கு முந்தைய சிறப்பு சுருக்க திருத்தத்திற்கு (Special Summary Revision (SSR)) மாறாக, ஜூன் 2025-ல் நாட்டின் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த செயல்முறையின்கீழ், பெயர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது மட்டுமல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.


ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பீகாரில் இந்தப் பயிற்சி முதலில் மேற்கொள்ளப்பட்டது. விரைவில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் திட்டமிடப்பட்டதால் இது செய்யப்பட்டது. அக்டோபர் 27, 2025 அன்று, தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான (UT) அட்டவணையை அறிவித்தது. இது நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த நடைமுறையை உரிய நேரத்தில் தொடங்குவதாகக் கூறியது.


12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


இறுதி வாக்காளர் பட்டியல்கள் எப்போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?


பல நீட்டிப்புகளுக்குப் பிறகு, புதன்கிழமை (பிப்ரவரி 11) நிலவரப்படி இறுதி வெளியீட்டு தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவற்றிற்கான தேதிகள்,


  • பிப்ரவரி 14   : ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி.

  • பிப்ரவரி 17   : தமிழ்நாடு மற்றும் குஜராத்.

  • பிப்ரவரி 21   : அந்தமான் & நிக்கோபார் தீவுகள், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் 

                      கோவா.

  • பிப்ரவரி 23  : மத்தியப் பிரதேசம்.

  • பிப்ரவரி 28  : மேற்கு வங்கம்.

  • ஏப்ரல் 10      : உத்தரப் பிரதேசம்.




இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?


டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உங்கள் மாநிலத்தில் வெளியிடப்பட்ட வரைவு சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், நீங்கள் தொடர்ந்து பட்டியலில் இருப்பதை உறுதிசெய்ய இறுதிப் பட்டியலைச் சரிபார்க்கலாம்.


உங்களிடம் EPIC எண் இருந்தால் : உங்கள் மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், electorsearch.eci.gov.in என்று இணையதளத்தில் உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors’ Photo Identity Card (EPIC)) எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களைத் தேடுவதன் மூலம் உங்கள் பதிவைச் சரிபார்க்கலாம். உங்கள் வாக்காளர் பதிவில் முன்பு இணைத்திருந்தால் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தியோ அல்லது உங்கள் பெயர் மற்றும் உறவினரின் பெயர் (தாய் அல்லது தந்தையின் பெயர், உங்கள் வாக்காளர் பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ள எதுவாக இருந்தாலும்) போன்ற பிற விவரங்களைப் பயன்படுத்தியோ விவரங்களைத் தேடலாம். தேடல் முடிவு (search result) உங்கள் விவரங்களைக் காட்டினால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.


உங்களிடம் EPIC எண் இல்லையென்றால் : உங்களிடம் EPIC எண் இல்லையென்றால், voter.eci.gov.in என்று இணையதளத்திற்குச் சென்று “வாக்காளர் பட்டியலைப் பதிவிறக்கு” (​​download electoral roll) என்ற விருப்பத்தைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மாநிலம், தொகுதி மற்றும் வாக்குச் சாவடியின் பட்டியலைச் சரிபார்க்கலாம்.


பின்வரும் பக்கத்தில், உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் 2026-ம் ஆண்டை திருத்த ஆண்டாகவும், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) இறுதிப் பட்டியலைப் தேர்ந்தெடுக்கவும். பின்னர் நீங்கள் பதிவுசெய்யப்பட்ட மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கலாம்.


இது வாக்குச் சாவடிகளின் பட்டியலை உங்களுக்குக் காண்பிக்கும். நீங்கள் பதிவுசெய்யப்பட்ட வாக்குச் சாவடியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேடுங்கள்.


இந்த செயல்முறை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். இருப்பினும், உங்களிடம் EPIC எண் இல்லையென்றால் அல்லது அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதுதான் ஒரே வழி.


இந்த விருப்பங்கள் தேர்தல் ஆணையத்தின் ECINET செயலியிலும் கிடைக்கின்றன.


உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?


மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் (DEO) மேல்முறையீடு செய்தல் : உங்கள் பெயர் வரைவுப் பட்டியலில் இருந்து இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை என்றால், இறுதி முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மாவட்ட நீதிபதியான மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் (DEO) மேல்முறையீடு செய்ய உங்களுக்கு அவகாசம் உள்ளது.


தலைமை நிர்வாக அதிகாரியிடம் (CEO) முறையீடு : மாவட்ட தேர்தல் அதிகாரியின் (DEO) முடிவில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், அந்த முடிவை எதிர்த்து உங்கள் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்ய உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் உள்ளது. நீங்கள் voters.eci.gov.in மூலம் உங்கள் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம் அல்லது உங்கள் வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO), தேர்தல் பதிவு அதிகாரி (ERO) அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரியை (DEO) தொடர்பு கொள்ளலாம். இந்த அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன. மேலும், உங்கள் EPIC எண் அல்லது பிற தேவையான விவரங்களை உள்ளிடுவதன் மூலம் அவற்றைக் கண்டறியலாம்.


படிவம் 6 பதிவு : உங்கள் இரண்டு மேல்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டாலும், நீங்கள் தகுதியுடையவராக இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதி பெற, நீங்கள் ஒரு இந்திய குடிமகனாகவும், குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அந்தத் தொகுதியில் வழக்கமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். படிவம் 6-ஐ நிரப்புவதன் மூலம் நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். படிவத்தை ECINET தரவுத்தளம் மற்றும் மொபைல் செயலியில் இணையவழி மூலம் நிரப்பலாம். உங்கள் வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) அல்லது தேர்தல் பதிவு அதிகாரிக்கு (ERO) சமர்ப்பிக்கலாம். தேர்தல்கள் நடைபெற உள்ள மாநிலங்களில், வாக்களிக்கும் பட்டியலில் சரியான நேரத்தில் இடம் பெற, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை படிவம்-6 ஐ சமர்ப்பிக்கலாம்.


Original article : What can you do if your name is deleted from the final SIR electoral roll? -Damini Nath

Share: