16வது ஜனாதிபதி குறிப்பு மக்களின் விருப்பத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்
ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும், அரசின் அடித்தள மதிப்புகளைப் பாதுகாக்க நிறுவனங்கள் உறுதியான பாதுகாப்புத் தடுப்புகளாக நிற்க வேண்டிய ஒரு தருணம் வருகிறது. ஏனெனில், அடித்தளக் கொள்கைகள் பலவீனம் அடைய அனுமதிக்கப்பட்டால், மீதமுள்ள கட்டமைப்பும் சிதைந்துவிடும். மேலும், முக்கியக் கருத்துக்களை இழக்கும் நிறுவனங்கள், ஏறக்ககுறைய எப்போதும் ஒரே முடிவைச் சந்திக்கின்றன. ஒரு மரத்தின் கிளைகள் அது விழுந்த பிறகு வாழ முடியாதது போல, ஒரு நாடும் அதன் அடித்தளம் இல்லாமல் நிலைத்திருக்க முடியாது.
இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் குறித்து 16-வது குடியரசுத் தலைவரின் குறிப்பை விசாரித்தது. இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் ஒரு முக்கியப் பகுதியான இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் பலவீனமடைந்து வருகிறது. மாநிலங்கள் மெதுவாக உண்மையான அதிகாரத்தை இழந்து, ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் யூனியன் பிரதேசங்களைப் போல ஆகலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. கூட்டாட்சித் தத்துவம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி மட்டுமல்ல, ஒரு முக்கியமான பாதுகாப்பும் ஆகும். அதைப் பலவீனப்படுத்துவது, மத்திய அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட மற்ற நிறுவனங்கள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என்கின்றனர்.
சம பங்குதாரர்கள்
அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ், ஒன்றியமும் மாநிலங்களும் சம பங்காளிகள், இதில் இந்திய அரசாங்கம் 'சமமானவர்களில் முதன்மையானது' மட்டுமே. மாநிலங்கள் ஒன்றிய அரசாங்கத்திற்கு அடிபணிந்தவை அல்ல. மேலும், அவை இந்திய அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்ட இரண்டாம் நிலை இணைப்புகளும் அல்ல என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். உண்மையில், மாநிலப் பட்டியலில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் (நிலச் சட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு போன்றவை) அவை முழுமையான சுயாட்சியை அனுபவிக்கின்றன. இந்திய சூழலில் கூட்டாட்சியைப் பற்றிய வேறு எந்தப் புரிதலும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் கருத்தில்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திட்டத்தை சீர்குலைப்பதாகவே அமையும் என்கின்றனர்
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் மாதக்கணக்கில் தாமதப்படுத்தி, பின்னர் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பி, சட்டமன்றம் மீண்டும் ஒப்புதல் அளித்த பின்னரும்கூட அவற்றை இறுதியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உள்ளாக்குகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கு சாதகமாக அமைவது போன்ற நிலை ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது என்பதையும் தெரிவிக்கின்றனர்.
ஒன்றிய அரசால் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களைப் பின்பற்றி, அவர்களின் அரசியல் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். இந்த உண்மையை புறக்கணிக்க முடியாது என்று வாதிடுகின்றனர்.
கூட்டாட்சிக்கும் மக்களாட்சிக்கும் இடையேயான சமநிலையானது, மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் விருப்பத்திற்கு (மக்களின் ஆணை) எதிராக, மத்திய அரசின் குறிக்கோளைப் பின்பற்றக்கூடிய, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்களின் “வரையறுக்கப்படாத அதிகாரங்களைக்” கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுநர்கள் எவ்வாறு மாநிலத்தில் மக்களின் தேர்வை மீற அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியவுடன், ஆளுநர் அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் 200-ஆவது பிரிவின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுநர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதால் இது மிகவும் அவசியமானது. உச்சநீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அமர்வு தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் இதை உறுதிப்படுத்தி, ஆளுநருக்கு தெளிவான காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
உரைகல் என்றால் என்ன?
ஆளுநரின் அதிகாரம் நியாயத்தின் அளவுகோலில் சோதிக்கப்பட வேண்டும், அதாவது, ஒரு சட்டமியற்றும் விவகாரத்தை முழுமையாகச் சிந்தித்து முடிவெடுக்க அவருக்கு ஒரு நியாயமான கால அவகாசம் இருக்க வேண்டும். இந்த காலவரையறை நிர்ணயிக்கப்படாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின்மீது ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆட்சியாளரைப் போல் செயல்பட வாய்ப்புள்ளது.
சுதந்திரம், நியாயத்தன்மை மற்றும் தன்னிச்சையற்ற தன்மை ஆகியவையே நமது அரசியலமைப்பின், குறிப்பாக குடிமக்களை ஒரு வழிதவறிய அரசாங்கத்திடமிருந்து பாதுகாக்கும் பகுதி III-ன், நரம்புகளில் ஓடும் நூலிழைகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்களையோ அல்லது இந்தியக் குடியரசுத் தலைவரையோகூட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மீது கட்டுக்கடங்காத மன்னர்களாக நியமிப்பது, அரசியலமைப்பின் முழுஅமைப்பும் சிதைவதற்கான வாய்ப்புள்ளது.
"நீதிமன்ற மறு ஆய்வு" என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒரு பகுதியாகும். எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், நாடாளுமன்றம் உட்பட, அதன் நடவடிக்கைகள் நீதிமன்ற மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படாது என்று ஒருபோதும் கூற முடியாது என்று கூறுகின்றனர்
இந்தியாவின் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் ஆகியோர் நீதித்துறை மறுஆய்வு என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் பதவிகள் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல என்று தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்றமே நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதுதான். எனவே, அவர்களும் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பதால், சட்ட விலக்கு கோர முடியாது என்று தெளிவுபடுத்துகின்றனர்.
நீதிமன்றத்தின் ‘வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்’ கோட்பாடு அரசியலமைப்பு, கூட்டாட்சி, நியாயம், நீதி, நீதித்துறை மறுஆய்வு மற்றும் சட்டப்பிரிவு 14-ல் உறுதி செய்யப்பட்ட நியாயத்தன்மை ஆகியவற்றுக்கு முரணானது.
முக்கியமான சட்டங்களை நீண்டகாலத்திற்கு நிலுவையில் வைத்திருக்க, அதன் நோக்கத்தையே தோற்கடிக்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இவ்வளவு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஆளுநர்களுக்கு ஒரு 'மறைமுக தடை' (pocket veto) அதிகாரத்தை வழங்குவதற்கும், மாநிலங்களை ஆளுநர்களின் (மற்றும் குடியரசுத் தலைவரின்) விருப்பங்களுக்குக் கட்டுப்பட வைப்பதற்கும், ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க ஒரு உத்தரவைப் பெறுவதற்காக அவற்றை முடிவில்லாத நீதிமன்றப் போராட்டங்களுக்குத் தள்ளுகிறது. இறுதியில், இத்தகைய முறை அரசியலமைப்பு முறைக்கு எதிரானது மற்றும் ஜனநாயகமற்றது என்று தெரிவிக்கின்றனர்.
கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்துதல்
இந்தக் கருத்தில் உள்ள மற்றுமொரு சிக்கல் என்னவென்றால், அண்மைக் காலத்தில் மத்திய அரசு கூட்டாட்சி முறையைத் தாக்கும் பரவலான போக்கைப் புறக்கணிக்கிறது. உதாரணமாக, சரக்கு மற்றும் சேவை வரியை இழந்ததற்காக மாநிலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இது செயல்திறன், வருவாய் வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரண்டாவது, ஒன்றிய அரசால் பிரத்தியேகமாக வசூலிக்கப்படும் செஸ் வரியானது மாநிலங்களுடன் அதன் வருவாயைப் பகிர்ந்துகொள்ள மறுக்க ஒரு காரணாமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மூன்றாவது, நிதி ஆணையம் பரிந்துரைத்த நிதிப் பகிர்வுகளை முழுமையாகச் செயல்படுத்த ஒன்றிய அரசு தொடர்ந்து கருப்பு தெரிவிப்பது போன்றன ஆகும்.
நான்காவதாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநிலங்கள் ஒரே மாதிரியான நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், செலவுகளில் 50 சதவீதம் வரை பங்களிக்க வேண்டும் என்றும் கோருவது, ஏற்கனவே சிரமத்திலுள்ள மாநில நிதிநிலையின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஐந்தாவது, ஆளும் கட்சியின் கொள்கைக்கு ஆதரவு திரட்ட ஒன்றிய அரசின் நிதிகளை அரசியல் கருவியாகப் பயன்படுத்துதல் சுட்டிக்காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2025-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்றுமுன், பீகாரில் உள்ள 1.21 கோடி பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டது. மேலும். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒரு சிறப்பு நிதித் தொகுப்பு வழங்கப்பட்டது போன்றவை ஆகும்.
ஆறாவது, மத்திய புலனாய்வுப் பிரிவு/அமலாக்க இயக்குநரகம்/வருமான வரித் துறையை சோதனையிடவும், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைக் கைது செய்யவும், எதிர்க்கட்சி அரசாங்கங்களை வீழ்த்தவும் தவறாகப் பயன்படுத்துகிறது.
இறுதியாக, இவை அனைத்திற்கும் மேலாக, ஆளுநரின் உத்தரவுகளின் மூலம் வரும் ஒன்றிய அரசின் கட்டுப்பாடு, கூட்டாட்சி தத்துவத்திற்கு பலமான அடியாக இருக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
கூட்டாட்சித் தத்துவமானது இவ்வாறு தீவிரமாக வலுவிழக்கும்பட்சத்தில், ஒன்றிய அரசாங்கத்திற்குத் தடையற்ற அதிகாரம் கிடைத்துவிடும் என்கின்றனர். மேலும், மாநிலங்கள் வெறும் நிர்வாகப் பிரிவுகளாக மாறிவிடும் ஆபத்தும் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள் மக்களின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தும்போது ஜனநாயகம் நிலைக்க முடியாது சூழல் உருவாகும். குடிமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், அமைப்புகள் ஆழமாக சிந்திக்க வேண்டும், உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பது என்பது இந்தியாவையே பாதுகாப்பதாகும்.
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, நாடாளுமன்ற உறுப்பினர் (இந்திய தேசிய காங்கிரஸ்), மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.