ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் நோக்கம் என்ன? -ரோஷ்னி யாதவ் மற்றும் குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:


— பிரதமரின் வழிகாட்டுதலின்படி, மத்திய நோடல் அதிகாரிகளால் (Central Nodal Officers (CNO)) சமர்ப்பிக்கப்பட்ட கள ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில், முக்கியமான அவதானிப்புகள் மற்றும் செயலாக்க இடைவெளிகளை நிவர்த்தி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


—  அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தமிழ்நாடு, திரிபுரா, குஜராத், அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஒப்பந்தக்காரர்கள் மீது அபராதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விதித்துள்ளன. இதில் ₹12.95 கோடி ஏற்கெனவே மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


— அந்த அதிகாரியின் கூற்றுப்படி, மத்திய அரசு இப்போது நிதியுதவி முறையை மாற்ற முடிவு செய்துள்ளது. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் அடுத்த கட்டத்தில்,

விரைவில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு இனி திட்ட வாரியாக நிதியை வெளியிடும் என்றும் மாநிலங்களுக்கு மொத்தமாக எந்தப் பணமும் வழங்கப்படாது என்று அந்த அதிகாரி கூறினார்.


— மே மாதம் 21-ஆம் தேதி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) நாளிதழில், ஜல் ஜீவன் திட்டத்தின் (Jal Jeevan Mission - JJM) இணையதள பக்கத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பதிவேற்றப்பட்ட தரவுகள் குறித்த தனது விசாரணையின் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் எவ்வாறு செலவினங்கள் மீதான ஒரு முக்கியமான சோதனையை நீக்கி, அதனால் செலவுகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்பதைக் காட்டியது. 


— ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தை 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டம் 2024-ஆம் ஆண்டில் நிறைவடைந்தாலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தனது நிதிநிலை அறிக்கையில், அதிகரித்த நிதி ஆதரவுடன் 2028-ஆம் ஆண்டு வரை இத்திட்டம் தொடரும் என்று அறிவித்தார். இருப்பினும், இந்த முடிவு மத்திய அமைச்சரவையால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


உங்களுக்குத் தெரியுமா?


— இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் (பட்டியல் II) உள்ள விதி 17 இவ்வாறு கூறுகிறது: “நீர், அதாவது, நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய்கள், வடிகால் மற்றும் கரைகள், நீர் சேமிப்பு மற்றும் நீர் சக்தி ஆகியவை பட்டியல் I-ல் உள்ள விதி 56-ன் விதிகளுக்கு உட்பட்டது.” இதன் பொருள் என்னவென்றால், மாநிலங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கால்வாய்கள் மற்றும் கரைகள் போன்ற நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் பெற்றுள்ளன என்பதாகும்.


— இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. உலகின் மக்கள் தொகையில் 18 சதவிகிதம் இருந்தும், உலகின் நன்னீர் வளங்களில் 4 சதவிகிதம் மட்டுமே உள்ளதால், காலநிலை மாற்றத்தின் இடைவிடாத தாக்கங்களால் மேலும் தீவிரமடைந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை இந்தியா எதிர்கொள்ள உள்ளது என்று நீரஜ் சிங் மன்ஹாஸ் குறிப்பிடுகிறார். 


— நிதி ஆயோக்கின் 2018-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீடு (Composite Water Management Index) அளித்த எச்சரிக்கையின்படி, 600 மில்லியன் இந்தியர்கள் கடுமையான முதல் அதீத அளவில் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றும் மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள், நீருக்கான தேவை விநியோகத்தைவிட இருமடங்காக அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


— உலக வளங்கள் நிறுவனமானது, (World Resources Institute) உலகளவில் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவை 13-வது இடத்தில் வைத்துள்ளது. இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான வேகத்தில் குறைந்து வருகிறது. நாட்டின் நீர்ப்பாசன விவசாயத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமாகவும், குடிநீரில் 85 சதவீதமும் நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன


—2024-ஆம் ஆண்டின் வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை (Annual Groundwater Quality Report) வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவின் 70 சதவீத நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது ஆரோக்கியத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.



Share: