எத்தியோப்பியாவில் ஹய்லி குபி (Hayli Gubbi) எரிமலை வெடிப்பு -அமிதாப் சின்ஹா

எத்தியோப்பியாவில் ஹய்லி குபி (Hayli Gubbi) எரிமலை வெடிப்பு: வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹய்லி குபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்தது. அனைத்து கணக்கீடுகளின் படியும் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது. எரிமலைக்குழம்பு அல்லது மாக்மா ஓட்டம் எதுவும் இல்லை. ஆனால், எரிமலை வெடிக்கும்போது அதிக அளவு வாயு மற்றும் புகைமூட்டம் வெளியேறியது.


எத்தியோப்பியாவில் ஹய்லி குபி எரிமலை வெடிப்பு: எத்தியோப்பியாவிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் எரிமலை சாம்பல் அதிக உயர மேகமாக (high-altitude cloud) இந்தியாவை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை, எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில், செங்கடல் கடற்கரைக்கு அருகில் உள்ள Hayli Gubbi எரிமலையின் அரிய வெடிப்பிலிருந்து வெளியேறிய எரிமலை சாம்பல் அது.


பல நீண்டதூர விமானங்கள் பறக்கும் அதே உயரத்தில் எரிமலை சாம்பல் மேகம் நகர்ந்து கொண்டிருந்தது. இது ஆபத்தானது. ஏனெனில், இது பார்வை நிலையைக் குறைக்கும் மற்றும் சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களைக் கொண்டுள்ளது. இவற்றைத் தவிர்க்க விமான நிறுவனங்களின் அட்டவணையை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஹய்லி குபி எரிமலை வெடிப்பு என்றால் என்ன?


வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹய்லி குபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது. அது எரிமலைக்குழம்பு அல்லது மாக்மாவை உருவாக்கவில்லை. மாறாக, பெரிய அளவிலான வாயு மற்றும் புகைமூட்டம் எரிமலை வெடிப்பில் வெளியேறியது. தீங்கு விளைவிக்கும் சாம்பல் துகள்கள் எரிமலைக்கு அருகில் விழுந்தன. ஆனால், மிகவும் நுண்ணிய துகள்களும், சல்பர்-டை-ஆக்சைடு அல்லது கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்களும் வளிமண்டலத்தில் அதிக உயரத்தில், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15-40 கிலோமீட்டர் உயரத்தில் செல்லக்கூடியத்தன்மை கொண்டவை.


எரிமலையைச் சுற்றியுள்ள காற்று கடுமையாக வெப்பமடைந்து, இலகுவாகி, மேலே எழுவதால் இது நிகழ்கிறது. அது மேலே எழும்போது, ​​அது மெல்லிய சாம்பல் துகள்கள் மற்றும் வாயுக்களையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது.


அந்த உயரத்தில், காற்று நீரோட்டங்கள் மிகவும் வலுவாக இருக்கும். மேலும், எரிமலை புகை காற்று நீரோட்டத்தின் திசையில் பயணிக்கிறது. எத்தியோப்பியன் எரிமலை வெடிப்புகளிலிருந்து வெளியேறிய புகை விவகாரத்தில் இது போன்று நடந்தது.


காற்று நீரோட்டங்களைத் தொடர்ந்து, எரிமலை சாம்பல் மற்றும் வாயுக்கள் மேற்கு நோக்கி இந்தியாவை நோக்கி பயணித்து. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் நுழைந்து, பின்னர் தென்மேற்கு இருந்து வடகிழக்கு திசையில் டெல்லி மற்றும்

உத்தரபிரதேசம் நோக்கி நகரும். அதே பாதையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் இந்த சாம்பல் மேகங்கள் முழுமையாக சீனாவிற்குள் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அது ஆபத்தானதா?


எரிமலை வெடிப்புகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் அதிக அளவு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் புகைமூட்டம் மிக அதிக உயரத்தில் நகர்ந்து கொண்டிருந்ததால் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், அவை பெரும்பாலும் இந்த உயரங்களில் பயணிக்கும் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தின. தொலைதூர சர்வதேச வழித்தடங்களில் பறக்கும் வணிக விமானங்கள் பொதுவாக பூமியிலிருந்து 10-14 கிலோமீட்டர் உயரத்தில் செல்கின்றன. இது எரிமலை சாம்பல் மேகம் சென்று கொண்டிருந்த பகுதியாகும்.


எரிமலை சாம்பல் மேகம் பார்வை திறனில் பாதிப்பை ஏற்படுத்தி, விமானப் போக்குவரத்தைப் பாதிக்கும் திறன் கொண்டது. மிக நுண்ணிய துகள்கள் விமான எஞ்சின்களுக்குள் நுழைந்து உருகக்கூடும். இதனால் என்ஜின்கள் செயலிழக்கக்கூடும். விமானங்களில் வலுவான சுத்திகரிப்பு அமைப்புகள் இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், இந்த சுத்திகரிப்பு அமைப்புகள் மற்றும் உணர்விகள் சாம்பலால் தடுக்கப்பட்டு சரியாக வேலை செய்வதை நிறுத்தக்கூடும். சில தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் இன்னும் சுத்திகரிப்பு அமைப்புகள் வழியாக செல்ல வாய்ப்புள்ளது.


ஆபத்து முக்கியமாக விமானத்தின் இயந்திரங்களும் மற்ற இயந்திரப் பாகங்களுக்கும் தான் உள்ளது. இதனாலேயே விமான நிறுவனங்கள் எரிமலை சாம்பல் பயணிக்கும் பகுதிகளைத் தவிர்க்கின்றன. உலகம் முழுவதும் எரிமலை வெடிப்புகளைக் கண்காணித்து, ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச மையங்களின் வலைப்பின்னல் ஒன்று உள்ளது. விமானப் போக்குவரத்து நிர்வகிக்கப்படும் அடிப்படையில், பயணிகள் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு நிகழ்நேரத்தில் தெரிவிக்கப்படுகிறது.



அது எப்படி முடிகிறது?


எரிமலைத் தூண்களின் இயக்கம் ஒரு குறுகியகால நிகழ்வாகும். அவற்றின் தாக்கம் அடுத்த சில நாட்களுக்குள் முற்றிலுமாக நின்றுவிடும். காலப்போக்கில், சிறிய சாம்பல் துகள்கள் பரவி, சிக்கல்களை ஏற்படுத்த முடியாத அளவுக்கு மெல்லியதாகின்றன. மேகங்களும் மழையும் இந்தத் துகள்களில் பலவற்றை காற்றில் இருந்து அகற்ற உதவுகின்றன. இதனால் அவற்றின் தாக்கத்தை பெரிதும் குறைத்துவிடும்.


சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் காற்றில் நீண்டகாலம் தங்கியிருக்கும். ஆனால், அவை ஏற்கனவே வளிமண்டலத்தில் உள்ளன. வளிமண்டலத்தில் அவற்றின் தற்போதைய செறிவில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு புகைமூட்டத்தில் உள்ள இந்த வாயுக்களின் அளவு அதிகமாக இல்லை.


Orginal Article: Hayli Gubbi volcanic eruption in Ethiopia

Share: