இந்தியாவின் நகரங்களுக்கு இன்னும் தேவைப்படும் முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் -சந்தோஷ் நர்குந்த்

இந்த நடவடிக்கைகள், இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு இணையான அதிக வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை அடைய அத்தியாவசியமானவை.


அரசியலமைப்புச் சட்ட தினமானது  (நவம்பர் 26), 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வலுவான ஆட்சி அமைப்பையும், காலப்போக்கில் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது 100-க்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை கடமைகளைச் (பிரிவு 51A) சேர்ப்பது, கல்வியை அடிப்படை உரிமையாக்குவது, கட்சித்தாவல் தடை விதிகளை உருவாக்குவது, மற்றும் ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து அளித்த 73வது மற்றும் 74வது திருத்தங்கள் போன்ற ஒரு சில மாற்றங்கள் மட்டுமே முக்கியமானவையாக இருந்தன. இந்த மாற்றங்கள் ஜனநாயகத்தையும் வளர்ச்சியையும் வலுப்படுத்தின. இருப்பினும், 73-வது திருத்தம் உள்ளாட்சி அமைப்புகளை (panchayati raj) மேம்படுத்திய போதிலும், 74-வது திருத்தம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதில் முழுமையாக வெற்றிபெறவில்லை என்கின்றனர். 


இந்திய நகரங்கள் இன்னமும் நீர்ப் பற்றாக்குறை, குடிசைப்பகுதிகள், போக்குவரத்து நெரிசல், மாசுபாடு மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகளை எதிர்கொள்கின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மூன்றில் இரண்டு பங்கையும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலேயும் நகரங்கள் அளித்தாலும், அவற்றுக்கு உண்மையான சுயாட்சி இல்லாதது, பலவீனமான தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், மோசமான நிதி நிலைமை மற்றும் துண்டு துண்டான சேவைகள் ஆகியவற்றால் அவை பலவீனமாகவே இருக்கின்றன. 74-வது திருத்தம் ஒரு அடிப்படை கட்டமைப்பை அளித்தது, ஆனால் முக்கியமான முடிவுகளை மாநிலங்களின் வசம் விட்டுவிட்டது, இது அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரும்பாலான மாநிலங்கள் இன்னமும் நகர அரசாங்கங்களுக்கு போதுமான அதிகாரங்கள், செயல்பாடுகள் அல்லது நிதி ஆதாரங்களை வழங்குவதில்லை. இத்தகைய பலவீனமான நகர்ப்புற அமைப்புகளுடன் எந்த நாடும் வளமான நாடாக மாறியதில்லை. எனவே, வலுவான நகர நிர்வாகத்திற்காக இந்தியாவுக்கு அவசரமாக இரண்டாவது சுற்று அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்துகின்றனர். 


மேயர்கள் மற்றும் குறுகிய பதவிக்காலங்கள் தொடர்பான சிக்கல்


மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்களுக்குத் தெளிவான மற்றும் நிலையான ஐந்து வருட பதவிக் காலம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்திய அரசியலமைப்பின் 243R(2)(b) சட்டப்பிரிவானது ஒவ்வொரு மாநிலமும் பதவிக் காலத்தை முடிவு செய்ய அனுமதிக்கிறது. எனவே, இது மாநிலத்திற்கு மாநிலம் பெரிதும் மாறுபடுகிறது. சில மாநிலங்கள் ஐந்து ஆண்டுகள் வழங்குகின்றன, டெல்லி ஒரு வருடம் மட்டுமே வழங்குகிறது. மேலும், மும்பை மற்றும் பெங்களூரு இரண்டரை ஆண்டுகள் வழங்குகின்றன. இந்த குறுகிய பதவிக் காலங்கள் மேயர்களை நீண்ட காலத் திட்டமிடல் அல்லது மாற்றங்களைச் செய்ய முடியாத வெறுமனே அடையாளத் தலைவர்களாகக் குறைக்கின்றன. உண்மையான நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய முழு ஐந்து வருட பதவிக் காலம் நகரங்களுக்குத் தேவையான உறுதித்தன்மையையும் பொறுப்புணர்வையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. 


மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு இடையில் அதிகாரங்கள் பிளவுபட்டுள்ள, பழைய காலனித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவருவது முக்கியம். பெரும்பாலான மாநிலங்களில், மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் ஆணையர், தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை விட அதிகாரம் கொண்டவராக உள்ளார், இது உள்ளாட்சி அமைப்புகளைப் (local self-government) பயனற்றதாக்குகிறது. மாநகர நிர்வாகத்தில் மேயரும், நிலைக்குழுக்களுக்குப் (Standing Committees) பதிலாக மேயர் தலைமையிலான ஆட்சிக்குழுவும் (Mayor-in-Council) உச்சபட்ச முடிவெடுப்பவர்களாக மாறுமாறு அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆணையர்கள், கேரளாவைப் போலவே, மாநகராட்சி செயலாளர்கள் எனப் பெயர் மாற்றப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தலைமைச் செயலாளர்கள் அறிக்கை அளிப்பது போல, மேயருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்கின்றனர்.

மூன்றாவது சீர்திருத்தம் என்னவென்றால், 12-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுவதை மாநிலங்கள் கட்டாயமாக்க வேண்டும். இப்போதெல்லாம், உறுப்பு 243W இந்த மாற்றத்தை விருப்பத் தேர்வாக ஆக்குகிறது. எனவே, திட்டமிடல், பொது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிசை மேம்பாடு போன்ற முக்கிய பகுதிகளை மாநிலங்கள் இன்னும் கட்டுப்படுத்துகின்றன. 2024 CAG அறிக்கையின்படி, தணிக்கை செய்யப்பட்ட 18 மாநிலங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட 18 செயல்பாடுகளில் 22 சதவீதம் மட்டுமே உண்மையில் மாற்றப்பட்டுள்ளன. மாநிலத் துறைகள் மற்றும் துணை-அரசு அமைப்புகள் இன்னும் பெரும்பாலான திட்டமிடல் மற்றும் சேவைகளைக் கட்டுப்படுத்துகின்றன, மேலும் சில மாநிலங்களில் அவை நகர்ப்புறத் துறை நிதிகளில் 60 சதவீதம் வரை பெறுகின்றன. முறையான ஜனநாயகக் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க, நகர எல்லைகளுக்குள் செய்யப்படும் எந்தவொரு விஷயத்திற்கும் இந்த அனைத்து அமைப்புகளும் மேயர் தலைமையிலான குழுவுக்கு பதிலளிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 

சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்துதல்


நான்காவது சீர்திருத்தம் என்னவென்றால், நகராட்சித் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெறுவதையும், மாநகராட்சி மன்றங்கள் முழுமையாக ஐந்து ஆண்டு காலத்திற்குப் பணியாற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டும். இந்தியா முழுவதும், இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் பெரும்பாலும் வார்டு மறுவரையறை சீரற்று அல்லது முழுமையடையாமல் இருப்பது, இடஒதுக்கீடு மாற்றங்கள் அல்லது மாநில அரசுகளின் தலையீடு காரணமாகத் தாமதமாகின்றன. வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு திருத்தங்கள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை போன்ற நிலையான இடைவெளியில் நடக்க வேண்டும் என்று அதிகாரங்கள் 243R மற்றும் 243T திருத்தப்பட வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையங்களுக்கு வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மீது தெளிவான அதிகாரம் இருப்பதற்கும், மாநில அரசுகள் தங்களுக்கு விருப்பமான போதெல்லாம் நகராட்சி எல்லைகளை மாற்றாமல் இருப்பதற்கும் அதிகாரம் 243ZA பலப்படுத்தப்பட வேண்டும்.


தேர்தல்கள் முடிந்த 15 நாட்களுக்குள் மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சியின் விதிகளுக்கு ஏற்றவாறு, நிர்வாகிகளை நியமிக்கும் அல்லது நகராட்சிகளைக் கலைக்கும் முன் மாநில அரசுகள் சட்டமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அதிகாரம் 243U கட்டாயப்படுத்த வேண்டும். இறுதியாக, அதிகாரம் 243K பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அது வெளிப்படையான மாநிலத் தேர்தல் ஆணைய நியமனங்கள், மாநில அரசுகளிடமிருந்து நிதிச் சுதந்திரம் மற்றும் ஆளுநர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு கட்டாய வருடாந்திர அறிக்கைகள் சமர்ப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஐந்தாவது திருத்தமாக, நகராட்சிகளுக்கு நிலையான மற்றும் போதுமான நிதி தேவை. இப்போது, நகர்ப்புற உள்கட்டமைப்புச் செலவுகள் அனைத்திலும் ஏறக்குறைய முக்கால் பகுதியை மாநில மற்றும் மத்திய அரசுகளே கட்டுப்படுத்துகின்றன. சில மாநிலங்கள் முத்திரைத் தீர்வை போன்ற சில வருவாய்களைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் மோட்டார் வாகன வரி, பதிவு கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற முக்கிய வரிகளில் ஒரு உத்தரவாதமான பங்கு தேவை. மாநில நிதி ஆணையங்கள் (State Finance Commissions (SFCs)) கூட சரியாகச் செயல்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு ஐந்து ஆண்டு மானியக் காலத்திற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட வேண்டும், மற்றும் 243I மற்றும் 243Y ஆகிய சட்டப்பிரிவுகளைப் புதுப்பிப்பதன் மூலம் ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் போன்ற சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள  வலியுறுத்தப்படுகின்றனர். மாநில நிதி ஆணையங்கள் அமைப்பது பொதுவாக 400 நாட்களுக்கு மேல் தாமதமாகிறது என்றும், அவற்றின் பரிந்துரைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன என்பதும் தலைமைத் தணிக்கை அதிகாரியின் (Comptroller and Auditor General(CAG)) அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. 


ஆறாவது சீர்திருத்தம் நகராட்சித் திறனை வலுப்படுத்துவதாகும். பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (Urban Local Body (ULB)) திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் போன்ற முக்கிய பணியாளர்கள் இல்லை. காலியிடங்கள் கேரளாவில் 13 சதவீதம் முதல் உத்தரகண்டில் 64 சதவீதம் வரை உள்ளன. பல நிதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கான திறன் இல்லை என்று ஒரு பாராளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. நகரங்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில், குறுகியகால நிபுணர்கள் உட்பட, பணியாளர்களை நியமிக்கும் அதிகாரம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், முறையான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பதும் அவசியமாகிறது. 


சமூகத்தை ஈடுபடுத்துதல்


ஏழாவதாக, குடிமக்கள் பங்கேற்பு என்பது அமைப்பின் ஒரு வழக்கமான பகுதியாக மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் சமூக ஈடுபாடு இல்லாமல் நியாயமான மற்றும் நிலையான நகர்ப்புற மேம்பாடு நடக்க முடியாது என்பதையும் தெரிவிக்கின்றனர். சட்டப்பிரிவு 243S-ன் கீழ் உள்ள ‘வார்டு’ குழுக்களுக்கான விதியானது, உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்த 30 நாட்களுக்குள் வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள் அமைக்கப்பட வேண்டும் மற்றும் அவற்றுக்கு வரவுசெலவுத் திட்டங்கள் மற்றும் மேற்பார்வைக்கான தெளிவான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற முறையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அனைத்து குடிமக்களும் கலந்து கொள்ளும் இத்தகைய குழுக்கள் இல்லையெனில், நகராட்சி நிர்வாகம் மக்களிடம் இருந்து தூரமாகவும், வெளிப்படையாக இல்லாததுபோலும், மக்களுக்கு சரியான பதில் அளிக்காததுபோலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


எட்டாவது, பெரிய நகரங்களுக்கு சிறிய நகரங்களைவிட மாறுபட்ட நிர்வாக அமைப்புசீர்திருத்தமாக தேவை என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பாலான பங்களிப்பையும், நகர்ப்புற மக்கள்தொகையில் பெரும்பான்மையையும் கொண்டிருந்தாலும், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இன்னும் வலுவான நிர்வாக மாதிரி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நகரங்களுக்கு தனித்தனி நிர்வாக மாதிரிகளை உருவாக்க, சட்டப்பிரிவுகள் 243Q மற்றும் 243ZE ஆகியவை முழுமையாக திருத்தப்பட வேண்டும் என்கின்றனர். 


ஒன்பதாவது சீர்திருத்தமாக, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்க வேண்டும், அதே நேரத்தில் மாநகராட்சிகள் அவற்றின் அன்றாட முடிவுகளில் தலையிடுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகராட்சி மன்றங்களில் சேர அனுமதிக்கும் பிரிவு 243R(2) நீக்கப்பட வேண்டும். நகர்ப்புற மன்ற உறுப்பினர்கள் தங்கள் நகரங்களில் முழுமையாக கவனம் செலுத்த, ஒரே நேரத்தில் மாநில அல்லது தேசிய சட்டமன்றப் பதவிகளை வகிக்கக் கூடாது போன்ற வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர். 


இறுதியாக, பத்தாவது முக்கியமான சீர்திருத்தம் என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் மற்றும் தேசிய அளவிலும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும் அல்லது வலுப்படுத்த வேண்டும். இந்தத் துறைகள் நகர்ப்புற வளர்ச்சித் துறைகளைப் போன்று உள்கட்டமைப்பு விஷயங்களில் கவனம் செலுத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.


இவற்றில் சில சீர்திருத்தங்களின் பகுதிகளைச் சில மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன, ஆனால் இப்போதுள்ள பணி என்னவென்றால், அவற்றை சுமார் 5,000 நகராட்சிகளில் நடைமுறைக்குக் கொண்டு வருவதுதான். இந்தியா அதிக வளர்ச்சியையும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய வாழ்க்கைத் தரத்தையும் அடைய வேண்டுமானால், அதன் நகரங்கள் அரசியலமைப்பின்படி முழுமையாக அதிகாரமளிக்கப்பட வேண்டும்.


சந்தோஷ் நர்குந்த், ஜனாக்ரஹா குடிமக்கள் மற்றும் ஜனநாயகம் மையத்தின் கொள்கை ஈடுபாட்டு இயக்குநராக உள்ளார். மான்சி வர்மா, ஜனாக்ரஹாவின் கொள்கை ஈடுபாட்டு மேலாளராக உள்ளார்.


Original Article: Key constitutional fixes that India’s cities still need 

Share: