இந்தியாவின் கார்பனை உறிஞ்சும் (carbon sink) திறன் பலவீனமடைந்து வருகிறது - காலநிலை கொள்கை இனி அதைப் புறக்கணிக்க முடியாது. -சுவஜித் பானர்ஜி

புதிய ஆய்வின்படி, காடுகள், ஈரநிலங்கள் மற்றும் கடலோரச் சூழல் அமைப்புகள் அதிக வெப்பத்தில் மிகக் குறைவாகவே CO₂-ஐ உறிஞ்சுகின்றன. இது இந்தியாவின் நிகர-பூஜ்ய இலக்குகளுக்குப் பாதகமாக அமையக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. 


நாடுகள் தங்களின் காலநிலை முன்னேற்றத்தை அளவிடும்போது, ​​காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளால் உறிஞ்சப்படும் கார்பனைக் கொண்டு பெரும்பாலும் தங்கள் கார்பன் உமிழ்வை ஈடுசெய்கின்றன. அதிக மரங்களை நடுங்கள், அதிக கார்பனைப் பிடியுங்கள், மற்றும் சுத்தமான எரிசக்தி மாற்றத்திற்கு நேரம் கொடுங்கள் என்கிற இந்த யோசனை எளிமையானதாகத் தோன்றுகிறது. ஆனால், புதிய ஆராய்ச்சி ஒரு சிக்கலைக் காட்டுகிறது. 'Nature Ecology & Evolution' இதழில் வெளியான உலகளாவிய ஆய்வு ஒன்றின்படி, தீவிர வெப்பத்தின்போது, ​​தாவரங்களின் சுவாசம் குறையும் வேகத்தைவிட அவற்றின் ஒளிச்சேர்க்கை (photosynthesis) வேகமாக குறைவதால், அவை மிகக் குறைந்த கார்பனை உறிஞ்சுகின்றன. சுருக்கமாக, வெப்ப அலைகள், வறண்ட மண் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை தாவரங்கள் சேமித்து வைக்கக்கூடிய கார்பனைக் குறைக்கின்றன. 


2023-ஆம் ஆண்டில், ஆய்வுகள் மூலம் நிலப்பரப்பும் கடல்களும் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே கார்பன்-டை-ஆக்ஸைட் (CO₂) வாயுவை  உறிஞ்சின என்று தெரிய வந்தது. இது பல ஆண்டுகாலாக கார்பன்-டை-ஆக்ஸைட் (CO₂) அளவை நிலையாக வைத்திருந்த இயற்கையான அமைப்பை பலவீனப்படுத்தியது. இது காலநிலை திட்டமிடலை மாற்றியமைத்தது, இதனால் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வேகத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு திடீரெனக் குறைந்துவிட்டது என்கின்றனர்.


இந்தியாவின் காடுகள் வெளியேற்றப்பட்ட கார்பனை உறிஞ்சுவதில் பெரிய பங்கு வகிக்கின்றன. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture Organization (FAO)) 2025 உலகளாவிய வன வளங்கள் மதிப்பீட்டின்படி, 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் அதன் காடுகள் ஆண்டுக்கு சுமார் 150 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, கார்பன் உறிஞ்சுதலில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது மரம் நடும் திட்டங்களின் வெற்றியைக் காட்டுகிறது. இருப்பினும், செயற்கைக்கோள் படங்கள் அதிக பசுமைப் போர்வையைக் காட்டினாலும், இந்தக் காடுகள் தொடர்ந்து கார்பனை திறம்பட உறிஞ்சுவதற்கு முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெறுமனே மரங்களைச் சேர்ப்பது மட்டும் போதாது. 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய (Net Zero) இலக்கை அடைய முயற்சிக்கும் ஒரு நாட்டிற்கு, இயற்கையான கார்பன் உறிஞ்சிகளை (carbon sinks) ஒரு உறுதியான தீர்வாக நம்பியிருப்பது, உமிழ்வு குறைப்பு பற்றிய தவறான மதிப்பீடுகளுக்கு, வரையறுக்கப்பட்ட வளங்களை வீணடிப்பதற்கு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்து வாழும் சமூகங்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என்கின்றனர். 


IIT கரக்பூர் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, சூரிய ஒளியையும் கரியமில வாயுவையும் (CO₂) பயன்படுத்தி உயிர்ப்பொருளாக (biomass) மாற்றும் காடுகளின் திறன் குறைந்து வருகிறது. வெப்பம், வறட்சி, மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் காடுகள் துண்டாடப்படுதல் (fragmentation) ஆகியவற்றின் காரணமாக, ஒரு ஹெக்டேர் காடு இப்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு உறிஞ்சியதைவிடக் குறைவான கார்பனை உறிஞ்சுகிறது என்று கூறப்படுகிறது. தற்போதைய தேசிய கார்பன் கணக்கீடு, காடுகள் உறிஞ்சும் உண்மையான கார்பனை கணக்கில் கொள்ளாமல், காடுகளின் பரப்பளவை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. இது தவறான வழிமுறைகளுக்குக் காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர்.


ஈரநிலங்கள் மற்றும் கடற்கரை சார்ந்த “நீல கார்பன்” பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. அசாம் மற்றும் இந்தியாவின் மாங்குரோவ் காடுகள் மற்றும் கடல் புல்வெளிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் அவற்றின் மண் சில சமயங்களில் ஒரு ஹெக்டேருக்கு பல்லாயிரக்கணக்கான கிலோகிராம் அளவிலான கார்பனை சேமித்து வைத்திருப்பதை காட்டுகின்றன. இருப்பினும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பொதுவாக காலநிலைக் கணக்கீட்டில் புறக்கணிக்கப்படுகின்றன. சரியாகக் கண்காணிக்கப்படுவதில்லை மற்றும் போதிய நிதியுதவி பெறுவதில்லை

என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியாவின் பலவீனமான நிறுவன அமைப்புகள், இந்த ஆற்றலை நம்பகமான காலநிலை வரவுகளாக (climate credits) மாற்றுவதை கடினமாக்குகின்றன.


கொள்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் நிகர-பூஜ்ஜிய அபாயங்கள்


கொள்கை, பொருளாதாரம் மற்றும் மாதிரியாக்கம் (modelling) ஆகியவற்றிற்கு இதன் பொருள் சிக்கலானது மற்றும் முக்கியமானது ஆகும்.


முதலாவதாக, இந்தியாவின் காலநிலை இலக்குகள், இயற்கையான கார்பன் உறிஞ்சிகள் (sinks) எப்போதும் நன்றாகச் செயல்படும் என்று ஊகிக்க முடியாது. இந்த உறிஞ்சிகளை நிலையானதாகக் கருதும் மாதிரிகள், எவ்வளவு உமிழ்வுகளைக் குறைக்க முடியும் என்பதை மிகை மதிப்பீடு செய்து, செலவுகளைக் குறைத்து மதிப்பிடும். வெப்பம் அல்லது வறட்சி காரணமாக சில பகுதிகளில் உறிஞ்சும் திறன் 10-20 சதவீதம் குறைந்தால் இது ஒரு இயல்பான சாத்தியம் என்கின்றனர். உமிழ்வு இலக்குகள் மற்றும் கார்பன் விலை நிர்ணயம் ஆகியவை பெரிய அளவில் சரிசெய்யப்பட வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள், பலவீனமான உறிஞ்சிகளுக்கான திட்டங்கள் மற்றும் தீ, பூச்சிகள் மற்றும் வறட்சி போன்ற அபாயங்களைச் சோதிக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் சூழலியல் மாதிரிகளை உருவாக்குபவர்களுக்கு, இந்த அழுத்தச் சோதனையைச் சேர்ப்பது இப்போது அத்தியாவசியமானதாக உள்ளது. 


இரண்டாவதாக, சரியான கொள்கை கலவை என்பது "அதிகமாக நடுவது" மட்டுமல்ல. இந்தியாவுக்கு மூன்று பகுதிகள் கொண்ட (Avoid, Restore, Measure (ARM)) கட்டமைப்பு தேவைப்படுகிறது:


  • Avoid (தவிர்க்க): பாதுகாப்பு: ஆரோக்கியமான காடுகளைப் பாதுகாத்து, நிர்வகித்து, அவை சிதையாமல் முழுமையாக இருக்கச் செய்தல்.


  • Restore (மீட்டெடுக்க): சீரமைப்பு: சேதமடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை (ecosystems) மீண்டும் மீட்கவும், அவை உறுதியுடன் நிலைத்திருக்கவும் உதவும் முறைகளைப் பயன்படுத்திச் சரிசெய்தல்.


  • Measure (அளவிட): கண்காணிப்பு: எவ்வளவு கார்பன் (carbon) உண்மையில் உறிஞ்சப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவும், அறிக்கை அளிக்கவும் வலுவான அமைப்புகளை உருவாக்குதல்.


இந்தியாவும் சூழல் மண்டல சேவைகளுக்கான கொடுப்பனவுகள் (payments for ecosystem services) போன்ற கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், சீரமைப்புக்கான நிதி 'காலநிலை-உறுதிப்படுத்தப்பட்டதாக’ (climate-proof)' இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது, ஒருமுறை நடப்பட்ட மரங்களை மட்டும் கணக்கிடாமல், கார்பன் இழப்பின் (மீட்சி) (carbon loss (reversal)) உண்மையான அபாயத்தின் அடிப்படையில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


மூன்றாவதாக, இந்தியாவின் காலநிலை கொள்கைகளில் சதுப்பு நிலங்கள்  மற்றும் "நீலக்கரிமம்" ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மாங்குரோவ் காடுகள், கடற்புற்கள் (seagrasses) மற்றும் சதுப்பு நில மண் ஆகியவை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் அதிக அளவு கரியமிலத்தை சேமித்து வைக்கின்றன. ஆனால், சந்தைகளும் கொள்கைகளும் இந்த மதிப்பை அரிதாகவே அங்கீகரிக்கின்றன. கார்பன்-டை-ஆக்ஸைடை அளவிடுவதற்கான வலுவான அமைப்புகளை உருவாக்குதல், உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நீலக்கரிமத் திட்டங்களை (verified blue-carbon projects) உருவாக்குதல் ஆகியவை கடலோர மற்றும் ஆற்றோரப் பகுதிகளுக்கு ஒரு சிறந்த மற்றும் குறைந்த ஆபத்துள்ள முதலீடாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 


நான்காவதாக, இயற்கை கார்பன் தாங்கிகள் (காடுகள் மற்றும் கடல்கள் போன்றவை) அவற்றின் செயல் திறனை இழந்து வருவதால், கார்பனை அகற்ற இந்தியா மேலும் பல வழிகளை ஆராய வேண்டும். நேரடி காற்று பிடிப்பு (direct air capture) போன்ற சோதனைத் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட காலநிலைத் தாக்கம் குறித்த ஆராய்ச்சி போன்ற நடைமுறைத் தொழில்நுட்பங்களை இது விரைவுபடுத்த வேண்டும், அதே சமயம் பல்லுயிர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு உதவுதல் போன்ற கூடுதல் நன்மைகளுக்காக, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளையே (வன மறுசீரமைப்பு போன்ற) பிரதானமாக நம்பியிருக்க வேண்டும். முடிவுகள் செலவு-திறனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வெவ்வேறு அபாயங்களின் கீழ் கார்பனை அகற்ற ஒவ்வொரு முறைக்கும் எவ்வளவு செலவாகும் என்பதை ஒப்பிட்டு, அகற்றப்பட்ட கார்பனின் அளவை மட்டும் பார்க்காமல், பரந்த சமூக நன்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


இந்தியா காடுகளையும் கடலோரங்களையும் அத்தியாவசியமான, உயிருள்ள உள்கட்டமைப்பாகக் கருதி, அவற்றுக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்டும். மரங்கள் ஒருமுறை முதலீடு அல்ல, அவற்றுக்குத் தொடர்ச்சியான வாழ்விடங்கள், தீயிலிருந்து பாதுகாப்பு, போதுமான நீர் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கான ஆதரவு தேவை. எனவே, சில காலநிலை நிதிகள் வெறும் மரம் நடுதலில் இருந்து விலகி, நீண்ட காலத்திற்கு அவற்றைப் பராமரித்தல், அவற்றின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் மற்றும் அவற்றை தகவமைப்புடன் நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு மாற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மாறிவரும் உலகளாவிய சூழல்


பிரேசிலில் நடந்த காலநிலை மாநாடுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு நாடுகள் தங்கள் நிகர-பூஜ்ய (net-zero) திட்டங்களைப் புதுப்பித்தன. இந்த பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் உமிழ்வைக் குறைப்பது மற்றும் காலநிலை நிதி ஆகியவற்றில் கவனம் செலுத்தின. ஆனால், இயற்கையான கார்பன் உறிஞ்சும் திறன் (natural carbon sinks) நிலையாக இருக்கும் என்று இன்னும் கருதுகின்றன. உலகளாவிய காலநிலை திட்டங்கள் இயல்பாக இருக்க வேண்டுமானால், இந்த அனுமானத்தை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. பூமியின் கார்பனை உறிஞ்சும் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ஏற்படும் ஆபத்தை தங்கள் ஆய்வுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும், நிலம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகக் கணிக்கும் மாதிரிகளை (land-use models) உருவாக்க வேண்டும், எதிர்காலத்தில் இயற்கை கார்பனை குறைவாக உறிஞ்சினால், அதை ஈடுசெய்ய எவ்வளவு கூடுதல் முயற்சியோ அல்லது பணமோ செலவழிக்க வேண்டும் என்பதை உணர்திறன் சோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும் என்பன இந்தியாவின் காலநிலை வல்லுநர்களும் பொருளாதார நிபுணர்களும் செய்யவேண்டிய முக்கியமான வேலைகளாகக் கருதப்படுகின்றன. 




முன்னோக்கிச் செல்லுங்கள்


இந்தச் செய்தியானது பேரழிவைப் பற்றியதல்ல. ஆனால், தெளிவான உண்மையைப் பற்றியது. இயற்கையானது நமக்குச் சற்றுக் கூடுதல் கால அவகாசத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால், அது வரம்பற்றதல்ல. இந்தியாவுக்கு உண்மையான பலங்கள் உள்ளன — அதிக அளவிலான நிலம், வலிமையான உள்ளூர் சமூகங்கள், மற்றும் கார்பனை உறிஞ்சும் கடலோரச் சூழல் அமைப்புகளில் (மாங்குரோவ்கள் போன்றவை) வளர்ந்துவரும் வாய்ப்புகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்தியா தனது பொருளாதாரத் திட்டங்களில் இயற்கையை வலிமையானதாகவும், அதே சமயம் எளிதில் சேதமடையக்கூடியதாகவும் கருதினால், கார்பனை அகற்றுவதற்கான ஒரே ஒரு வழியை அதிகம் நம்பாமல், உமிழ்வைக் குறைக்கும் வலுவான திட்டங்களை இந்தியாவால் உருவாக்க முடியும். இல்லையெனில், எண்களின் கணக்குத் தவறாகிவிட்டது என்பதை நாம் மிகத் தாமதமாக உணரும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், அதைச் சரிசெய்வதற்கு செலவு மிக அதிகமானதாக இருக்காலம் என்றும் கணிக்கப்படுகிறது. 


ஆசிரியர், National Council of Applied Economic Research (NCAER), புது டெல்லியில் Computable General Equilibrium (CGE) மாதிரி உருவாக்கம் மற்றும் கொள்கை பகுப்பாய்வுக்கான ஆராய்ச்சியாளராக உள்ளார். 


Original Article: India’s carbon sink is weakening — climate policy can no longer ignore it.

Share: