இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு, ஒரு கட்டமைப்பு மறுசீரமைப்பு தேவைப்படுகிறது -மு.க.ஸ்டாலின்

 தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்கள், ஒன்றியம் மற்றும் பொறுப்புணர்வுள்ள நிர்வாகம் போன்ற வடிவங்களில் சமநிலையான கூட்டாட்சி (balanced federalism) தேவைப்படுகிறது.


இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சி கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், அது ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்திலிருந்து அதிகளவில் எடுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, ஒன்றிய அரசுக்கு முக்கிய அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களுக்கு குறிப்பிட்ட சில அதிகாரத்தை மட்டுமே வழங்கியுள்ளது. இந்த அமைப்பு அதன் தோற்றத்திலிருந்து எழுந்தது. பிரிவினையின் அதிர்ச்சி, 14 மாகாணங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சுதேச அரசாங்கங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகள் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற அச்சங்கள் எழுந்தன. அந்த சூழலில், மையப்படுத்தல் விவேகமானது மட்டுமல்ல, அவசியமானதும் என்று தோன்றியது. அப்போதைய சூழலில், ஒன்றிய அரசு புத்திசாலித்தனமாக மட்டுமல்லாமல் முக்கியானதாககவும் தோன்றியது.


இருப்பினும், அந்த பதட்டமான விவாதங்களில்கூட, தெளிவான குரல்கள் எழுந்தன. ஒன்றிய அரசின் வலிமை, ஒவ்வொரு செயல்பாட்டையும் கைப்பற்றுவதிலிருந்து அல்ல, மாறாக வேறு இடங்களில் உள்ள பொறுப்புகளை புத்திசாலித்தனமாக மறுப்பதிலிருந்து வருகிறது என்று K. சந்தானம் அரசியலமைப்பு சபையை எச்சரித்தார். "இந்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான அதிகார வரம்புகளில்தான் ஒரு உண்மையான கூட்டாட்சி அமைப்பு தங்கியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.


அந்த ஒற்றை சூத்திரத்தில் இரண்டு நீடித்த கொள்கைகள் உள்ளன: முதலாவதாக, அறிவு மற்றும் பொறுப்புணர்வை ஒன்றாக பயன்படுத்தும்போது அதிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டாவதாக, அதிகமாக ஒன்றிய அரசை சார்ந்திருத்தல் என்பது ஒரு அதிகாரத்தால் திறமையாக நிறைவேற்ற முடியாத பணிகளைச் செய்வதன் மூலம் பலவீனத்தை உருவாக்குகிறது. விண்வெளி ஆராய்ச்சி முதல் கிராம சுகாதாரம் வரை அனைத்தையும் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒரு அரசாங்கம், அதன் எல்லைகளை விரிவுபடுத்தக்கூடும். ஆனால், இது பொதுவாக குறைவான செயல்திறன் கொண்டதாக ஆக்குகிறது.


ஆதிக்கத்தை வலுப்படுத்துதல்


வரலாறு காட்டுவது என்னவென்றால், தேவை என்ற பெயரில் ஏற்கப்பட்ட அதிகாரம், தேவை மறைந்து போன பின்னரும் அரிதாகவே பின்வாங்குகிறது. அதற்குப் பின்னர் வந்த பத்தாண்டுகளில், ஒன்றிய மற்றும் மாநில அளவில் ஒரே தேசியக் கட்சியின் ஆதிக்கத்தால் மையமயமாக்கும் போக்குகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன. இது "உயர் தலைமை" (high command) கலாச்சாரத்தை வளர்த்தது; அது மாநிலத் தலைமையின் சுயாட்சியைக் குறைத்தது. பின்னர், ஒன்றியில் கூட்டணி அரசுகளின் எழுச்சியும், மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் உயர்வும் ஒரு சமநிலையான கூட்டாட்சி ஒழுங்குக்கு வழிவகுத்தது—அது ஒற்றுமையை ஆபத்தில் ஆழ்த்தாமல். இன்றைய அரசியல் முதிர்ச்சி பெற்று, மொழிரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்கள் 1950-ல் இருந்திருந்தால், அரசியலமைப்பு வடிவமைப்பு மிகவும் பரவலாக்கப்பட்ட (decentralised) பாதையில் பரிணமித்திருக்கலாம் என்று நியாயமாக ஊகிக்கலாம்.


ஒரு நபர் குழந்தைப் பருவ பயங்களில் என்றென்றும் சிக்கிக் கொள்ள முடியாதது போல, அதைப் போலவே ஒரு தேசமும் அதன் ஆரம்ப காலத்தின் கவலைகளுக்குக் கீழ் என்றும் உழன்று கொண்டிருக்க முடியாது. இந்தியாவின் ஒற்றுமை இப்போது பலவீனமானதல்ல; இந்தியா என்ற கருத்து இப்போது உறுதியானதும் நீடித்ததுமான அடித்தளங்களின் மீது நிலைத்துள்ளது. ஆயினும், 76 ஆண்டுகள் கழித்தும், அரசியலமைப்பு நடைமுறை இன்னும் 1940களின் பிற்பகுதியின் எதிர்வினைகளையே (reflexes) பிரதிபலிக்கிறது. ஒருகாலத்தில் தேவையாகக் கருதப்பட்ட மையப்படுத்தல் (Centralisation), இப்போது ஒரு பழக்கமாகிவிட்டது.


தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், ஒருங்கிணைந்த பட்டியல் (Concurrent List) விஷயங்களில் விரிவான ஒன்றிய சட்டமியற்றல், நிபந்தனைக்குட்பட்ட நிதி ஆணையம் பரிமாற்றங்கள், மற்றும் கடுமையான மாதிரிகளுடன் கூடிய ஒன்றிய நிதியுதவித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம், அதிகார சமநிலை ஒன்றிய அரசின் பக்கம் இன்னும் அதிகமாகச் சாய்ந்துள்ளது. புது தில்லியில் பெரிய அமைச்சகங்கள் உள்ளன; அவை மாநிலங்களின் பணிகளை நகலெடுப்பதோடு, பெரும்பாலும் மைக்ரோ மேலாண்மை மற்றும் நடைமுறை கண்காணிப்பு மூலம் மாநிலங்களின் முன்னுரிமைகளைத் திசைதிருப்ப முயல்கின்றன. ஜனநாயக அடுக்கமைப்புக்கு மாற்றமாக, ஒருங்கிணைந்த பட்டியல் விஷயங்களில் மாநிலங்களின் முழுமையான சட்டங்களை ஒன்றிய நிர்வாகம், துணைச் சட்டங்கள் மூலம் மீற முயற்சிக்கிறது.


இது ஒரு கொள்கை


இந்தப் போக்கு அரசியலமைப்பு கோட்பாடுகளுடன் (constitutional doctrine.) மோதுகிறது. 1994-ஆம் ஆண்டு S.R. பொம்மை vs இந்திய ஒன்றியம் வழக்கில், உச்சநீதிமன்றம் கூட்டாட்சி முறையை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக தீர்ப்பளித்தது. மாநிலங்கள் ஒன்றிய அரசின் கீழ்நிலை அதிகாரிகள் அல்ல. ஆனால், அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் அவை உயர்ந்தவை என்பதை உறுதிப்படுத்தியது. கூட்டாட்சி (Federalism) என்பது இந்தியாவின் வரலாறு மற்றும் பன்முகத்தன்மையில் (diversity) வேரூன்றிய ஒரு கொள்கையாகும். நிர்வாக வசதிக்கான விவகாரம் அல்ல என்று நீதிமன்றம் கூறியது. நீதித்துறை உறுதிப்பாடு இருந்தபோதிலும், மாநில சுயாட்சி சட்டமன்ற விரிவாக்கம், நிர்வாகத்தின் எல்லை மீறல் மற்றும் சூழ்நிலை பன்முகத்தன்மையைவிட சீரான தேசிய தீர்வுகளுக்கு சலுகை அளிக்கும் பிற நீதித்துறை விளக்கங்கள் மூலம் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகிறது.


இந்தப் போக்குக்கு அடிப்படையில், ஒன்றியம் வலுவாக இருக்க மாநிலங்களை பலவீனப்படுத்த வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. ஆனால் உண்மை இதுதான் : ஒன்றியமும் மாநிலங்களும் ஒருவருக்கு எதிரான போட்டியில் இல்லை. இரண்டும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பை நடத்தும் கூட்டாளிகள். இந்தியா மிகப் பெரியது, மிகவும் வேறுபாடுகள் நிறைந்தது. அதனால் எல்லாவற்றையும் டெல்லியிலிருந்து ஒரே மாதிரி திட்டமிட முடியாது. புது தில்லியில் எவ்வளவு திறமையானவர்கள் இருந்தாலும், ஒவ்வொரு மொழிப் பகுதி, விவசாய நிலம், தொழில் பகுதி, வேலை சந்தை ஆகியவற்றுக்கும் சரியாகப் பொருந்தும் கொள்கையை உருவாக்க முடியாது.


அதிகாரப் பரவலாக்கம் (Decentralisation) மாநிலங்கள் சிறிய அளவில் கொள்கைகளை முயற்சிக்க அனுமதிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறது. தேசிய அளவில் எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் தோல்விகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும், வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் பக்கவாட்டில் (horizontally) பரவ அல்லது தேசிய அளவில் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கலாம். இந்தியாவின் மிகவும் பயனுள்ள திட்டங்கள் பலவும் இந்த பாதையை துல்லியமாக பின்பற்றின. தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் கல்வியறிவில் கேரளாவின் சாதனைகள் மற்றும் மகாராஷ்டிராவின் வேலைவாய்ப்பு உத்தரவாத முயற்சி அனைத்தும் தேசியக் கொள்கையைத் தெரிவிப்பதற்கு முன்பு மாநில அரசுகள் செயல்படுத்த தொடங்கி விட்ட திட்டங்கள். புதிய யோசனைகள் மற்றும் புதுமைகளுக்கு வழிவகுக்கும் பல்வேறு அணுகுமுறைகள் அதிகமாக ஒன்றிய அரசை சார்ந்திருப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.


மாநிலங்களுக்கு நிர்வாக அல்லது தொழில்நுட்ப திறன் இல்லை என்றும், எனவே ஒன்றிய அரசு தலையீடு தேவை என்றும் ஒன்றிய அரசில் உள்ளவர்கள் பெரும்பாலும் வாதிடுகின்றனர். இருப்பினும், அத்தகைய தலையீடு அது சரிசெய்வதாகக் கூறும் திறனை முடக்கி, தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ளும் சார்பு சுழற்சியை (self-perpetuating cycle) உருவாக்குகிறது. தங்கள் குழந்தைகளிடம் பொறுப்பை ஒப்படைக்காத பெற்றோர்களும், அதிகாரத்தை ஒப்படைக்க மறுக்கும் தலைவர்களும், தவிர்க்க முடியாமல் சார்புநிலையை வளர்க்கிறார்கள். அரசாங்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.


பொறுப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் தவறுகளைச் செய்து சரிசெய்யும் சுதந்திரம் இருப்பதன் மூலம் திறமை (Capacity) வெளி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள்-இறையாண்மை கொண்ட நாடுகளை போன்றவை. இயல்பாகவே திறமையற்றவை என்றும், எனவே, ஊடுருவும்  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறுவது தேசிய சுயமரியாதைக்கு (national self-respect) முரணானது.


மையப்படுத்தல் (Centralisation) சிறந்த விளைவுகளை வழங்கியிருந்தாலும் அதை இன்னும் பாதுகாக்க முடியும். ஆனால் பரவலாக்கப்பட்ட கூட்டமைப்புகள், உலகளாவிய அளவுகோல்கள் அல்லது இந்தியாவின் சொந்த தேவைகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் பதிவு நம்பத்தகாததாக உள்ளது. மையப்படுத்தப்பட்ட மாதிரி  (centralised model) உலகளாவிய அணுகல், நிலையான தரம், உண்மையான சமத்துவம் அல்லது உலகளாவிய போட்டித்தன்மையை வழங்க போராடியுள்ளது. அதற்குப் பதிலாக, அது ஒழுங்குமுறை சிக்கலான தன்மை, வளங்கள் விரிவடையும் கட்டளைகளில் நீட்டிக்கப்படுவதால் நாள்பட்ட நிதிப் பற்றாக்குறை, பலவீனமடையும் பொறுப்புணர்வு மற்றும் மாநிலத் திறனின் படிப்படியான குறைப்பு போன்ற சூழலை உருவாக்கியுள்ளது.


தமிழ்நாடு இந்த ஆபத்துகளை ஆரம்பக் கட்டத்திலேயே அங்கீகரித்தது. 1967-ஆம் ஆண்டில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க ஒன்றிய அரசு போதுமானதாக இருக்க வேண்டும் என்று சி.என். அண்ணாதுரை குறிப்பிட்டார். ஆனால், தேசிய பாதுகாப்புடன் நேரடி தொடர்பு இல்லாத சுகாதாரம் அல்லது கல்வி போன்ற ஒவ்வொரு விவகாரத்திலும் ஒன்றிய அரசு விதிக்கும் கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும் என்று அர்த்தமாகிவிடாது.


அவரை பின்பற்றிய கலைஞர் மு. கருணாநிதி, "மாநிலங்களுக்கு சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி" (Autonomy to the States, Federalism at the Centre) என்பதன் மூலம் இந்தத் தத்துவத்தை முன்வைத்தார். மேலும் 1969-ஆம் ஆண்டில் நீதிபதி P.V. ராஜமன்னார் தலைமையில் ஒன்றிய-மாநில உறவுகள் (independent Committee on Union-State Relations) குறித்த முதல் தன்னாட்சிக் குழுவை நிறுவினார். குழுவின் 1971-ஆம் ஆண்டு அறிக்கை இந்தியாவின் கூட்டாட்சி விவாதத்தில் முக்கியமானதாக மாறியது. பின்னர், வந்த தேசிய ஆணையங்கள் - சர்க்காரியா (1983-88) மற்றும் புஞ்சி (2007-10) - சமநிலையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தன. இருந்தபோதிலும், கட்டமைப்பு மாற்றங்களை பரிந்துரைக்க தவறி விட்டன.


சரியான நேரம்


இந்தியா இப்போது அரசியலமைப்புச் சட்டத்தில் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டத்தில் உள்ளது. இது ஒன்றிய அரசை பலவீனப்படுத்துவது அல்ல. மாறாக மாநிலங்களுக்குத் தேவையான சுதந்திரத்தை வழங்கி, உண்மையான தேசியப் பணிகளில் கவனம் செலுத்துவதே இதன் குறிக்கோள் ஆகும். இந்த மாற்றம் தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்காது. அதிகாரத்தையும் பொறுப்பையும் இணைப்பதன் மூலம் கூட்டாட்சியை வலுப்படுத்தும்.


இந்த உணர்வில், தமிழ்நாடு அரசு ஏப்ரல் 2025-ல் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்  தலைமையில் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை அமைத்தது. இதில் கே. அசோக் வர்தன் ஷெட்டி (ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி) மற்றும் டாக்டர் எம். நாகநாதன் (முன்னாள் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர்) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு பாரபட்சமற்ற பயிற்சியாகக் கருதப்பட்ட இந்தக் குழு, தற்போது உள்ள கூட்டாட்சி சவால்கள் குறித்த விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டது.


பிப்ரவரி 16, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அதன் அறிக்கையின் பகுதி-I, ஆளுநர்கள் மற்றும் மொழிக் கொள்கையின் பங்கு முதல் எல்லை நிர்ணயம், தேர்தல்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி வரையிலான பிரச்சினைகளை சுட்டிக்காட்டியது.


அறிவார்ந்த விவாதத்தைத் தூண்டவும், ஒன்றிய-மாநில உறவில் சமநிலையை மீட்டெடுக்கவும், ஒன்றிய அரசும் கவனம் செலுத்துவதன் மூலம் வலுவாகவும், மாநிலங்கள் நம்பிக்கையின் மூலம் வலுவாகவும் வளரும் ஒரு அரசியலமைப்பு ஒப்பந்தத்தை உருவாக்க உதவுவதற்காகவும் தமிழ்நாடு அரசு இந்த அறிக்கையை பொது வெளியில் பகிர்ந்து கொள்கிறது.


மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்.


Original article : India’s federalism is in need of a structural reset -M K  Stalin

Share: